search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டத்தால் மக்கள் பாதிப்பு
    X

    கொடைக்கானலில் கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் இன்று காலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.

    கொடைக்கானலில் சாரல் மழையுடன் கடும் பனிமூட்டத்தால் மக்கள் பாதிப்பு

    • பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர்.
    • கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 15 நாட்களாக கடும் குளிருடன் உறைபனி பொதுமக்களை வாட்டி எடுத்தது. கொடைக்கானல் நகர் மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் கடும் உறைபனி நிலவியதால் பொதுமக்களின் அன்றாடப்பணிகள் பாதிப்படைந்தது.

    அதிகாலை நேரங்களில் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாத விவசாயிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வந்தனர். மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. ஏரிச்சாலை பகுதியில் கடும் உறைபனி நிலவியதால் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. முழுமையான பனிமூட்டம் நிலவியது.

    இதன் காரணமாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மாலை வேளையில் திடீர் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. விட்டு விட்டு பெய்த சாரல் மழை இரவு 12 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக உறைபனி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இன்னும் ஓரிரு நாட்கள் மழை தொடர்ந்தால் பனிக்காலம் குறைந்து இதமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்றும் காலையில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் காலை நேரங்களில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர்.

    பனிமூட்டத்துக்கிடையே பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். பனிக்காலம் ஓரளவு குறைந்தாலும் கடும் பனிமூட்டமும், சாரல் மழையும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.

    இருந்தபோதும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    Next Story
    ×