என் மலர்
நீங்கள் தேடியது "Public suffering"
- பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
- குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்தது. இதன் காரணமாக தற்போது அணை, ஏரி, குளங்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.
இந்த நிலையில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்தே சேலம் மாவட்டத்தில் பனி, குளிரின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிர், பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் குளிர், பனி மறுநாள் காலை 11 மணி வரை நீடிப்பதால் அந்த நேரத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர்ந்து பனி, குளிரின் தாக்கத்தால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரும்பலால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் இந்த குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து செல்கிறார்கள். மேலும் பனியின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.
இன்று காலையும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் காலை நேரத்தில் குளிரில் இருந்து தப்பிக்க சிலர் சாலையோரங்களில் தீமூட்டி குளிர் காய்ந்தனர்.
மேலும் மலைப்பாதையில் சென்று வந்த வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றன. மேலும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது.
குடியிருப்புகள் மற்றும் சுற்றுலாதலங்களை பனிமூடி மறைத்துள்ளது. எதிரில் யார் நிற்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள மற்ற சமவெளி பகுதிகளிலும் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கம்பளி ஆடைகள், குல்லா அணிந்து சென்றனர்.
- அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. துறையூரில் பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி அருகில் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்கிறது.
பச்சமலையில் பெய்த மழையால் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டதால், திருச்சி-துறையூர் சாலைகளில் இருந்து அம்மாபட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இந்த சாலையானது சிங்களாந்தபுரம் ஏரிக்கு அருகில் உள்ளது. இதனால் சிங்களாந்தபுரம் ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அப்பகுதிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறுக்கு சாலையில் உள்ள தண்ணீர் அளவானது தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழையால் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அதிக கன மழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தின சாமி உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
ஜெயங்கொண்டம் 205, செந்துறை 195.4, அரியலூர் 179, சுத்தமல்லி டேம் 152, குருவாடி 115, ஆண்டிமடம் 111.2, திருமனூர் 90, தா.பழூர் 39.4.
எரையூர்-166, அகரம் சீகூர் 140, லெப்பைக்குடிக்காடு 139, வேப்பந்தட்டை-127, தலுதலை-122, கிருஷ்ணாபுரம்-111, வி.களத்தூர்-95, பெரம்பலூர்-94, படுவேட்டைக்குடி 71, செட்டிகுளம் 75, பாடாலூர் 21.
ஆவுடையார்கோவில் 143, மணமேல்குடி 135, மீமிசல் 67, விராலிமலை 63, நாகுடி 66.20, கீழாநிலை 63.90, ஆயின்குடி 57.20, அறந்தாங்கி 56.40, கீரனூர் 50.40, இலுப்பூர் 48.80, ஆதன கோட்டை 48, திருமயம் 46.70, கந்தர்வகோட்டை 45.40, புதுக்கோட்டை 44.10, பெருங்களூர் 40.60, மழையூர் 40.60, உடையாளிபட்டி 39, அன்னவாசல் 35.60, ஆலங்குடி 35, குடுமியான் மலை 34.50, கரையூர் 30.80, பொன்னமராவதி 25.40, கறம்பக்குடி 27, அரிமளம் 20.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 1264.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 52.67 ஆகும்.
- பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன.
தஞ்சாவூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதற்கு முன்னர் கனமழை கொட்டியது. அதன்பிறகு ஒரு வாரமாக மழை இன்றி காணப்பட்டது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இரவிலும் இதே நிலை நீடித்தது. ஆனால் இன்று அதிகாலையில் இருந்து கனமழையாக மாறி கொட்டியது. நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை கனமழையாக வெளுத்து வாங்கியது.
தஞ்சையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நெய்வாசல்தென்பாதி, கும்பகோணம், திருவிடைமருதூர், கீழணை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 73.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 795.80 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்திருந்தன.
அதன் பின்னர் மழை ஓய்ந்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை 24 மணி நேரத்தை கடந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக திருவாரூர், கமலாபுரம், வடபாதிமங்கலம், மாங்குடி, நன்னிலம், குடவாசல், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக விக்கிரபாண்டியம். புழுதிகுடி. கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொறையாறு, திருக்கடையூர், செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது.
நேற்று இரவு விடிய,விடிய பரவலாக மழை பெய்த நிலையில் அதிகாலை முதல் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
கடலோர பகுதி பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி பழையாறு துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை மீன் பிடித்துறை முகம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 10,000 க்கு மேற்பட்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சாட்டியக்குடி, திருக்குவளை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாகை நகராட்சிக்குட்பட்ட வடக்கு பால் பண்ணை சேரி வாட்டர் டேங்க் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் இருப்பதுடன், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மின்வளத்துறையினர் எச்சரிக்கை காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க செல்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர்படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இடைவிடாது பெய்து வரும் கனமழையால் தஞ்சை பெரியகோவில், சிவகங்கைபூங்கா, மனோரா, வேளாங்கண்ணி கடற்கரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை, முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று வழக்கத்தை விட குறைந்தளவே சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டதால் அவைகள் வெறிச்சோடின.
- சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.
- வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், வேப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர், வடலூர், காட்டுக் கூடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.

கடலூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.
- கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
- அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.
தருமபுரி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக பெஞ்சல் புயல் உருவாகி தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் நகர பகுதியில் நேற்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. வெயிலே தெரியாமல் காலை முதல மதியம் வரை குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. மதியம் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை இரவு விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால், அத்திவாசிய பொருட்கள் கூட வாங்க வெளிவர முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.

நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், 4ரோடு, பச்சையம்மன் கோவில் தெரு, சேலம் மெயின்ரோடு, மதிக்கோண்பாளையம், முகமதுஅலி கிளப்ரோடு, குமாரசாமிப்பேட்டை, மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழையால் தருமபுரி நகரில் கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த புளியமரம் இன்று காலை சாய்ந்து விழுந்தது.
இதில் அந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால் வண்டியின் முன்பு சேதமாகி இருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
மரம் சாய்ந்து விழுந்தால் தருமபுரி நகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. உடனே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், அனுமந்தபுரம், பொம்மஅள்ளி, கெரகோடஅள்ளி, நாகணம்பட்டி, திண்டல், தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதியில் இரவு தொடங்கி காலை வரை பலத்த மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், பெரும்பாலை, பாலக்கோடு, அரூர், கம்பை நல்லூர், பாப்பிரெட்டிப் பட்டி, தொப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை கனமழை கொட்டியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பொதுமக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:
தருமபுரி-30மி.மீ, பாலக்கோடு-15மி.மீ, மாரண்டல்-6மி.மீ, பென்னாகரம்- 12 மி.மீ, ஒகேனக்கல்- 3 மி.மீ, அரூர்- 91.4 மி.மீ, பாப்பிரெட்டிப் பட்டி-75மி.மீ, மொரப்பூர்- 86 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 318.4 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெஞ்சல் புயல் எதிரொலியால் இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது.
இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், லண்டன்பேட்டை, சேலம் மெயின்ரோடு, பெங்களூரு சாலை, சப்-ஜெயில் ரோடு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
இதேபோன்று மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாம்பாறு, பாரூர், கிருஷ்ணகிரி டேம், உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்தது.
தொடர்ந்த பெய்து வரும் மழையின் தாக்கம் காரணமாக, பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பம்பாறு அணையில் 95 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் 71 மி.மீ, போச்சம்பள்ளி தாலுகாவின் பெணுகொண்டபுரத்தில் 46.4 மி.மீ மற்றும் பாரூரில் 37.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதிகளில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- களக்காடு தலையணையில் இன்று 9-வது நாளாக குளிக்க தடை.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்ததை தொடர்ந்து இன்று காலையிலும் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
காலையிலும் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். பணிக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் என பலதரப் பட்டவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.
அதிகபட்சமாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9.20 மில்லி மீட்டரும், அம்பையில் 8 மில்லி மீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவி, மூலைக் கரைப்பட்டி பகுதிகளில் தலா 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மாநகரில் டவுன், பேட்டை, சந்திப்பு, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, சமாதானபுரம், பாளை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை மீண்டும் மழை தொடர்ந்து வருகிறது.
தொடர் மழை காரணமாக களக்காடு தலையணையில் இன்று 9-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கடனா அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 14 மில்லி மீட்டரும், ராமநதி அணை பகுதியில் 12 மில்லி மீட்டரும், குண்டாறு அணையில் 15 மில்லி மீட்டரும், கருப்பா நதி அணையில் 11.5 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் லேசான சாரல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
அதிகபட்சமாக செங்கோட்டையில் 17 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.தென்காசியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. காலையில் தொடரும் மழை காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், பணிக்கு செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகர பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல தேங்கியது. அங்கு அதிகபட்சமாக 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தை பொறுத்த வரை கடம்பூர், காடல்குடி, வைப்பார், சூரங்குடி ஆகிய இடங்களில் கனமழை இரவு முழுவதும் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூரங்குடி 34 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளிலும் விடிய விடிய சாரல் மழை பெய்தது. திருச்செந்தூர், சாத்தான்குளம், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களிலும் சாரல் அடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
- அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
சென்னை:
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் ரெயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக கடற்கரை-பல்லாவரம் இடையே 45 நிமிட இடைவெளியில் மட்டும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகுதான் வழக்கமாக ரெயில் சேவை ஞாயிறு கால அட்டவணை அடிப்படையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வயதான முதியோர் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி சானடோரியம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஆதங்கத்துடன் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களாகவே தாம்பரம்-கடற்கரை ரெயில் மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
பராமரிப்பு பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து இரவு-பகலாக சரி செய்ய வேண்டியது தெற்கு ரெயில்வேயின் பொறுப்பாகும். ஆனால் இதை தெற்கு ரெயில்வே கடைபிடிப்பதில்லை.
பல மாதங்களாக பகல் நேரத்தில் ரெயில்களை ரத்து செய்கின்றனர். எத்தனை மாதத்துக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதை பொது மக்களுக்கு தெற்கு ரெயில்வே அறிவிக்க வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு ரெயில்களை ரத்து செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே பராமரிப்பு பணிகள் எவ்வளவு நடந்து உள்ளது? என்பதை மக்களுக்கு விளக்குவதுடன் இந்த பணிகள் இன்னும் எத்தனை மாதத்துக்கு நடைபெறும் என்பதையும் தெற்கு ரெயில்வே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று அம்பை, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. அம்பை, ராதாபுரம் பகுதிகளில் பிற்பகலில் தொடங்கி இரவு வரை பரவலாக மழை பெய்தது.
ராதாபுரத்தில் அதிகபட்சமாக 19 மில்லிமீட்டரும், அம்பையில் 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், திருக்குறுங்குடி உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மலை பெய்த வண்ணம் இருந்தது. இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது.
பாபநாசத்தில் 23 மில்லிமீட்டரும், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் பகுதிகளில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
நம்பியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 17 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, பாளையங்கோட்டையில் நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்தது.
சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டையில் 13.20 மில்லிமீட்டரும், நெல்லையில் 8.20 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
இன்று காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டதால் கடும் அவதிக்கு இடையே மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டி னம், சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.
திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினத்தில் இன்று காலையிலும் மீண்டும் மழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.
காலை நிலவரப்படி அதிகபட்சமாக திருச்செந்தூரில் 6 சென்டிமீட்டரும், குலசேகரன்பட்டினத்தில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியிருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
திருச்செந்தூரில் சாக்கடை மற்றும் மழைநீர் கலந்து வடிகாலில் அதிகமான தண்ணீர் கடலுக்கு சென்றது. திருச்செந்தூரில் பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மழை பெய்த நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் குடை பிடித்தும், சில மாணவிகள் மழையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கு சென்றனர்.
குலசேகரன்பட்டினம் பகுதியில் விடிய, விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்சி அடைந்தனர். பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் உட்பட 18 ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 9 மணியை கடந்தும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடன்குடி, குலசை, பரமன்குறிச்சி பஜார் பகுதியில் மழைநீர் பல இடங்களில் தேங்கி கிடந்ததால் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்தது. தென்னை, பனை மர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ராமநதி, கடனாநதி மற்றும் கருப்பாநதி, குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
ராமநதியில் 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீர் கலந்து சென்றது.
- மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.
- மக்கள் கடும் பாதிப்பு
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பயோ டீசல் உற்பத்தி செய்யப்படும் ஆலையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் இருந்து தினமும் அடர்ந்த கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு மூச்சு திணறல், தும்மல், அலர்ஜி ஏற்படு வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர் அதிகாரிக்கு தகவல் அளித்தும் கண்டு கொள்ள வில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் ஏழு திங்கள்பட்டி, வாய்ப்பாடி, ஈங்கூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மிக அதிக அளவாக அடர் கரும்புகை கடும் துர்நாற்றத்துடன் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அளிப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சுவிட்ச் ஆப் என்று வந்து உள்ளது.
இதனால் கொதிப்படைந்த மக்கள் நேற்று காலை அந்த பயோடீசல் உற்பத்தி ஆலையை முற்றுகையிட்டனர்.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மூச்சுத் திணறலும் மயக்கமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆலையை மூடி புகை வெளியேற்று வதை தடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் கூறும் போது, புதிதாக தொடங்கப்பட்டு உள்ள இந்த பயோ டீசல் ஆலையில் இருந்து வெளி யேறும் கரும்புகையால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைகின்றனர். ஏற்கனவே இங்குள்ள ஆலைகளால் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதித்துள்ளன.
தற்போது புதிதாக தொடங்கியிருக்கும் பயோடீசல் ஆலையால் காற்றும் மாசுபடுகிறது. இந்த ஆலை தொடர்ந்து இயங்கினால் பெருந்துறை சுற்று வட்டார மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகையை பில்டர் செய்யாமல் அப்படியே வெளியேற்றுவதால் தான் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
இது குறித்து பலமுறை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. நேற்று இரவில் இருந்து மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி உள்ளது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையி ட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆலை நிர்வாகத்தினர் இப்போதைக்கு ஆலையை மூடி விடுவதாகவும் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திய பிறகே ஆலையை இயக்குவதாகவும் மக்களுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
- மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
- மூச்சு திணறல் உள்ளதா? என்று சுகாதார துறையினர் ஆய்வு.
தஞ்சாவூர்:
தஞ்சை ஜெபமாலை புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் காரணாக மளமளவென தீ பரவி பற்றி எரிந்தன.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஆணையர் மகேஸ்வரி விரைந்து சென்று தீ அணைக்கும் பணியை துரிதப்படுத்தினார்.
இந்த தீ விபத்து காரணமாக புகை மண்டலமாக மாறியதால் ஜெபமாலைபுரம் மற்றும் சுற்றியுள்ள சீனிவாசபுரம், மேலவீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதி மக்கள், மாணவர்கள் அவதியடைந்தனர்.
மேலும் துர்நாற்றத்துடன் கூடிய புகை பரவியதால் வாகன ஓட்டிகள் முகத்தை மூடியப்படி சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். புகைமூட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக முகக்கவசம் வழங்கப்பட்டது.
மேலும் யாருக்காவது மூச்சு திணறல் உள்ளதா? எனவும் வீடு வீடாக சென்று சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த காற்றால் குப்பை கிடங்கில் தீ பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கிரீன்பீல்டு, லோயர்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதுமட்டுமின்றி அங்குள்ள கடைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு கடைகளில் புகுந்த வெள்ளநீரை வியாபாரிகள் வெளியேற்றினர்.
ஊட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பாலத்தின் அடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
இதில் அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மேலும் படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.
ஊட்டி கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இருப்பினும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழையை ரசித்தபடி செல்போனில் வீடியோ பதிவுசெய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் தென்படுவதால் அங்குள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரமிட்டு பராமரிக்க தயாாராகி வருகின்றனர். மேலும் அங்குள்ள காய்கறி தோட்டங்களில் தற்போது விதைப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஊட்டியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே நிரம்பி வழிந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடைக்குள் விட வேண்டாம்.
மேலும் ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிடம் மற்றும் வளாகத்தில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்குள் பொருத்தி இருக்கக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் கட்டிடத்தில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சொர்க்க பூமியாக அம்பத்தூர் தொழில் நகரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
- எதிர்பாராத விபத்துக்கள் நேரிட்டால் பரவாயில்லை. ஆனால் விபத்துக்களை உருவாக்குவது பராமரிப்பில்லாத சாலைகள்தான்.
சிறு தொழில் வளர்ச்சி நாட்டுக்கு தேவை. அதுவே வீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் உருவாவதை அதிகாரிகள் அனுமதிக்கலாமா? என்று ஒருவருக்கொருவர் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு நடுவில் ஒருவர் அணிந்திருந்த பேன்ட் கால் மூட்டு பகுதியில் கிழிந்தும் சட்டை தோற்பட்டையில் கிழிந்தும் இருந்ததை பார்த்தும் ஏதோ விபத்தில் சிக்கி இருக்கிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.
அந்த கூட்டத்தின் அருகில் சென்ற நாரதர் காதை அவர்கள் பக்கம் திருப்பினார். என்னதான் நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள காதை கூர்மையாக்கி கொண்டார்.
தொழிற்சாலைகள் பெருகுது! தொழில்கள் வளருகிறது! என்று பெருமைப்படு கிறார்கள். அதற்காக மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கவனிக்க வேண்டும் அல்லவா?
சென்னையை அடுத்துள்ள தொழில் நகரம். இரை தேடி வரும் பறவைகள் போல் வேலை தேடி தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள்.
தேடி வந்தவர்களை வாழ வைக்கும் சொர்க்க பூமியாக அம்பத்தூர் தொழில் நகரம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்கள், மறைமுக வேலை பெறுபவர்கள் என லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை அம்பத்தூரை நம்பியே இருக்கிறது.
இதனால் குடியிருப்புகளும் பெருகிவிட்டன. அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி முதல் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலை, வாவின் சாலை, தொழிற் பேட்டை பிரதான சாலை, முகப்பேர் மேற்கு நெடுஞ்சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா (ஐ.டி.பார்க்) மற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கெமிக்கல் இரும்பு துணி ஏற்றுமதி தொழிற்சாலை என பல்வேறு தொழிற் சாலைகள் நிறைந்து உள்ளன. திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி பொன்னேரி போன்ற பகுதியில் இருந்து பஸ்கள் மூலம் ஊழியர்கள்அழைத்து வரப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, போன்ற மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் தினமும் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் இரும்பு ராடுகள் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை நடைபெறுகின்றன.
இதனால் இந்த கனரக வாகனங்கள் காலை முதல் இரவு வரை மேற்கண்ட சாலைகள் வழியாக சென்று வருவதால் தார் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது இதன் காரணமாக முகப்பேர், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனி, திருமங்கலம் போன்ற பகுதியில் இருந்து சென்னைக்கு பணிக்கு சென்று வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளார்கள். இந்த பகுதியை சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது இந்த குண்டும் குழியுமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதுடன் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் கடந்த மாதம் கூட பெண் ஒருவர் தனது தம்பியை அங்குள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது லாரி மோதி விழுந்து உயிரிழந்தார் அந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் இதே போன்று பள்ளிக்கு பெற்றோரடன் சென்ற மாணவன் பள்ளத்தில் கீழே விழுந்து இரண்டு கால்கள் முறிந்து போனது.
எதிர்பாராத விபத்துக்கள் நேரிட்டால் பரவாயில்லை. ஆனால் விபத்துக்களை உருவாக்குவது பராமரிப்பில்லாத சாலைகள்தான். மனித தவறுகளால் அரங்கேறும் இந்த ஆபத்துக்களை தவிர்க்க முடியும். அதற்கு சிட்கோ அதிகாரிகள் மனம் வைக்க வேண்டுமே என்கிறார்கள்.
எத்தனையோ பேர் இந்த சாலைகளால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி முறையிட்டும் "குறை ஒன்றும் இல்லை கண்ணா..." என்பது போல் அதிகாரிகள் பாராமுகமாக சென்று வருகிறார்கள்.
ஒரு பகுதி சாலைகள் அடுத்த வாரத்துக்குள் சீரமைக்கப்படும் என்றும் அம்பத்தூர் 2-வது மெயின் ரோடு, அம்பத்தூர் வடக்கு பகுதியில் உள்ள சாலைகளும் சீரமைக்கப் படும் என்றும் சர்வ சாதாரணமாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் உட்புற சாலைகள் நடந்து செல்லக்கூட தகுதியற்ற சாலைகளாகவே உள்ளன. இந்த சாலைகளை அவசர கோலத்தில் சீரமைத்தால் சரி வராது.
கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டியது அவசியம்.
தொழில் வளர்ச்சியால் மக்கள்.... மக்கள் வளர்ச்சியால் தொழில்கள் வளர்ச்சி.... என்பதை பொறுப்பானவர்கள் உணர்ந்து செயல்பட்டால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது.