search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை தொகுதி"

    • தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை.
    • நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வந்துள்ளேன். முருகப்பெருமான் எப்படி பாசிச சக்திகளை சூரசம்காரம் செய்தாரோ அதேபோல் சூரசம்காரம் செய்ய வேண்டி தரிசனம் செய்து முடித்துள்ளோம்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை 4 மணி முதல் 4.50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கோவை செல்கிறார். அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சேர்ந்து பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார்.

    இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி எழுச்சி மிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தினந்தோறும் 25, 50 என வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே போகிறது என்று மாம்பழத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த பேச்சு எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதிகாரிகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களே அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை. ரூ.4 கோடி பிடிபட்ட பிறகும் ஒரு வாரம் கடந்த நிலையிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    எங்கள் வேட்பாளரிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. மக்கள், தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக வண்டி கூட இல்லை.

    ரஜினிகாந்த் கர்நாட காவில் பிறந்து தமிழகத்தில் வந்து நடித்து வருகிறார். பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து போட்டியிடுபவரை இறக்குமதி வேட்பாளர்கள் என்கிறீர்கள். அவர் இறக்குமதி வேட்பாளர் இல்லை. அவர் தென் இந்தியா முழுவதும் மிகவும் பரிச்சயமான வேட்பாளர்.

    அவர் ஒரு மத போதகர். இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்பவர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான தேர்தல் இப்போது நடக்கிறது.

    நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம். அவரது வருகை மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து வந்தனர். ஏற்கனவே 16 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பல்வேறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனுவை தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகேயனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் ஜெகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு புறப்பட்டனர்.

    அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் வெளியே வந்த ராமசுப்பு, 'காங்கிரஸ் கட்சி சார்பில் நான் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தது அங்கு பரபரப்பை உருவாக்கியது.

    இந்நிலையில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்.

    காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன் என்று கூறினார்.

    • அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
    • சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் சிம்லா முத்துச்சோழன்.

    மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக தனது முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இதில், நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், நெல்ல தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டு அதிமுக அறிவித்துள்ளது.

    அதன்படி, சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக இணை செயலாளரான ஜான்சிராணி வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

    ஜான்சிராணி தற்போது திசையான்விளை பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.

    திமுக வில் இருந்து அதிமுகவில் இணைந்த 15 நாட்களில் வேட்பாளராக சிம்லா அறிவிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகரில் செயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டவர்.

    ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என எதிர்ப்பு எழுந்த நிலையில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நெல்லை பாராளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
    • 2019-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 3 முறையும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1952, 1957, 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தாணுபிள்ளை பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி 2004-ம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டு வெற்றி கண்டார். இதேபோல் 2009-ம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் ராமசுப்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார்.

     

    நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்த படம்.

    நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது எடுத்த படம்.

    2019-ம் ஆண்டு நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் ஞானதிரவியம் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது.

    2014-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போட்டியிடுகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    • சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதி நெல்லை, பாளை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

    இந்த பாராளுமன்ற தொகுதியில் நாடார் சமுதாயத்தினரின் வாக்கு சதவீதம் அதிகம் என்பதால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அதிக அளவில் வழங்கப்படும்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கூட்டணி பலத்தை அதிகரிக்க ஒவ்வொரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்களது கட்சிகளை முன்னிறுத்தி கூட்டணியில் சேர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

    அந்த வகையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

    அவர் பா.ஜனதா கூட்டணியில் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி, கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி என 2 தொகுதிகள் கேட்டதாகவும், இது தவிர ஒரு ராஜ்ய சபா பதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களில் நெல்லை தொகுதியை சரத்குமார் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த தொகுதியில் நாடார் சமுதாய ஓட்டுக்கள் வெற்றியை தீர்மானிக்கும் என்பதாலும், ஏற்கனவே இங்கு கடந்த தேர்தல்களில் அவர் களம் கண்டுள்ளார் என்பதாலும் அவருக்கு நெல்லை தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை மனதில் வைத்தே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரத்குமார் நெல்லையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளையும் தேர்தலுக்கு தயாராகுமாறு முடுக்கி விட்டுள்ளார்.

    இன்னும் ஓரிரு நாட்களில் சரத்குமார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிந்துவிடும். ஆனாலும் அவர் நெல்லை தொகுதியை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை நெல்லை தொகுதி கிடைக்காத பட்சத்தில், அவர் விருதுநகர் தொகுதியை பா.ஜனதா கூட்டணியில் கேட்டு பெறுவதற்கு ஆயத்தமாகி உள்ளார். மேலும் காமராஜரின் சொந்த மாவட்டமான விருதுநகர் தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அங்கு தனது மனைவியான ராதிகா சரத்குமாரை நிறுத்தலாமா? என்று அவர் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

    ஏற்கனவே சரத்குமார் விருதுநகரில் சுமார் 12 ஏக்கர் இடத்தில் தனது சொந்த செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்துள்ளார்.

    மேலும் அங்கு வருங்காலத்தில் பள்ளிக்கூடம் கட்டி இலவச கல்வி வழங்க எதிர்கால திட்டத்தையும் வைத்துள்ளார்.

    இதன் காரணமாக பா.ஜனதா கூட்டணி சார்பில் ஒரு தொகுதி மட்டும் வழங்கப்பட்டால், விருதுநகரை கேட்டு பெற்று அங்கு ராதிகாவை போட்டியிட வைப்பதோடு, ராஜ்ய சபா எம்.பி. பதவியை சரத்குமார் கேட்டு பெற முனைப்புடன் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இது ஒருபுறம் இருக்க, சரத்குமாரின் முதல் விருப்ப தொகுதியாக இருக்கும் நெல்லை தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    நெல்லை தொகுதி தனக்கு தான் என்று முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பா.ஜனதாவின் நெல்லை பாராளுமன்ற அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.

    சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை அவர் முன்னின்று நடத்தி தனக்கு தான் நெல்லை சீட் என்று மேலும் பிடிவாதத்தை அதிகப்படுத்தி உள்ளார்.

    ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருக்கும் சூழ்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட பல வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர் விட்டு கொடுக்க வேண்டியது தானே என்று சொந்த கட்சியினரே ஆதங்கப்படுகின்றனர்.

    இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் வேட்பாளர்கள் குறித்த கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

    இதில் சுமார் 170 நிர்வாகிகள் கலந்து கொண்டு விருப்ப வேட்பாளர்களை எழுதி கொடுத்தனர்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட சிலரது பெயர்கள் எழுதி கொடுக்கப்பட்ட நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு அதிகமாக இல்லை என்றாலும் அவர் எம்.பி. சீட்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையே தென் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிர்வாகிகளை இன்று சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னரே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எத்தனை? வேட்பாளர் சரத்குமாரா? அல்லது ராதிகா சரத்குமாரா என்பது தெரியவரும் என நிர்வாகிகள் கூறினர்.

    ×