search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஆர்.பாலு"

    • யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி
    • திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம்.

    "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

    ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

    மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம். யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார்.

    தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார்.

    மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

    திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான்.

    பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி?

    இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி?. தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்!

    அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?

    'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

    நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?" என்று அவர் தெரிவித்துள்ளார்

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
    • விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

    முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து, திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது " மக்களவை தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. 20 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி முதல்வரிடம் தெரிவிப்பேன்" எனக் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, "தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது. வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம். திமுக-விடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதுவும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ் விடுத்துள்ளார்.
    • சொத்துப் பட்டியல் தொடர்பாக 48 மணி நேரத்தில் பதிலளிக்கும் படி கோரியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துப் பட்டியல் குறித்து வீடியோ வெளியிட்டார்.

    இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் விடுத்துள்ளார்.

    அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது வழக்கு தொடரப்படும்.

    மேலும், இழப்பீடு தொகையாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, அண்ணாமலை மீது தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நோட்டீஸ் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை.
    • எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் நேற்று காலை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வளாகத்துக்கு வெளியே விஜய் சவுக் பகுதிக்கு வந்தனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    அதானி பிரச்சினையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கவேண்டும் என கடந்த 2 வாரங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து பதில் இல்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பெரும்பான்மையாக இருப்பது பா.ஜனதா உறுப்பினர்கள்தான். இருந்தும் அதை அவர்கள் அமைக்க மறுக்கிறார்கள். தேர்தல் வர இருக்கும் நேரத்தில் உண்மை வெளியே தெரிந்துவிடும் என கூட்டுக்குழுவை அமைக்கவில்லை.

    இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ராகுல்காந்திக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகம் மீண்டும் தழைத்து வரவேண்டுமானால் இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தேடிக்கொள்ளவேண்டும். நாங்கள் தீர்ப்புக்கு எதிராகப் போராடவில்லை. பிரதமர் மோடிக்குத்தான் கண்டனம் தெரிவிக்கிறோம்.

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும். ஏன்? என்று கேட்டீர்கள் என்றால், எல்லோருமே ஒத்த கருத்து உள்ளவர்களாக இருக்கிறார்கள். மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. ஆட்சியும் நடத்தமுடியாது. மாநிலக்கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வழிநடத்தும் என்பதுதான் எங்கள் எண்ணம். மாநிலக் கட்சிகளின் உதவி தேவை என்று அவர்களே பலமுறை சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×