search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளி வேடம்"

    • தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.
    • அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள்.

    குலசை தசரா-நேர்த்திக் கடன்

    நேர்த்திக் கடனில், மாவிளக்கு பூஜை செய்வதும் ஒன்று. இது அனைத்து ஆலயங்களிலும் செய்வது போன்றே பக்தர்கள் அம்பாளுக்கு நேர்த்தி கடனாக மாவிளக்கு ஏற்றி வணங்கி வருகின்றனர்.

    அங்கப்பிரதட்சனம் செய்வதாக வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அதனை நிறைவேற்றுகிறார்கள்.

    விசேஷ நாட்களில் ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு வந்து பிரகாரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலைப் பூர்த்தி செய்கின்றனர்.

    தீச்சட்டி ஏந்தி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறவர்களும் உண்டு.

    இவர்கள் குளித்து முடித்து விட்டு, ஈரத் துணியுடன், சந்தனம் பூசிய உடம்போடு, தீச்சட்டியைக் கைகளில் ஏந்தி, ஓம் சக்தி தாயே என்று பக்திப்பரவசத்தோடு கோவிலை வலம் வருகிறார்கள்.

    அலகு குத்துதல் என்ற வேண்டுதலையும் பக்தர்கள் முத்தாரம்மனுக்கு செலுத்துகிறார்கள். மேலும் சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்கின்றனர்.

    இங்கு இன்னுமொரு வேண்டுதல், அன்னதானம் செய்வது மற்றவர்களின் வயிற்றுப் பசியைப் போக்குவது என்பது ஒரு மிகப் பெரிய சேவையாகும்.

    பசியால் துடிக்கும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற தொண்டு வேறு எதற்கும் ஈடாகாது என்பார்கள்.

    குலசை ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாக ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

    இது போன்று அருள்மிகு முத்தாரம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சகல சவுபாக்கியங்களையும் பக்தர்கள் பெற்றுச் செல்கின்றனர்.

    • குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும்.
    • குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    குலசை முத்தாரம்மன்-50

    1. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

    2. தமிழ்நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விழாக்கள் ஆன்மீக விழாக்களாக இருக்கும். ஆனால் குலசையில் நடக்கும் தசரா திருவிழா கிராமிய கலை விழா போல நடைபெறுகிறது.

    3. குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயம் தவிர சிதம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் ஆலயம் என இரண்டு சிவாலயங்கள் உள்ளன.

    4. குலசையில் உள்ள விண்ணவரம் பெருமாள் கோவிலில் வழிபட்டால் திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பலன்கள் கிடைக்கும்.

    5. குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.

    6. குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

    7. குலசை முத்தாரம்மன் கோவிலில் சமீபகாலமாக சிவாகமம், காமிகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    8. குலசை தசரா காரணமாக சென்னை, மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கை நிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.

    9. பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் உள்ளது.

    10. குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பிரமாண்டமான மாவிளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500&க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

    11. மாவிளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    12. குலசையில் சித்திரை மாதம் 1&ந் தேதி அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    13. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1&ந் தேதி குலசை கோவிலில் லட்சார்ச்சனை, 508 பால்குடம், அன்னதானம் ஆகிய மூன்றும் சிறப்பாக நடைபெறும்.

    14. புத்தாண்டு சிறப்பு பூஜைகளை ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள காமதேவன் குழு பொறுப்பு ஏற்று செய்கிறது. இந்த பூஜைக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது.

    15. சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

    16. ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.

    17. தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடைபெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

    18. அம்மை போட்டவர்கள் இத்தலத்தில் அம்மனை சுற்றி நீர் கட்ட செய்வார்கள். உடனே அம்மை இறங்கி விடும்.

    19. குலசை முத்தாரம்மனுக்கு மிகவும் பிடித்தது சிவப்பு சேலை, செவ்வரளி பூ மற்றும் எலுமிச்சை பழம் மாலை.

    20. நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த குறவர் இனத்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கடந்த ஆடி மாதம் முதல் குலசையில் தங்கியுள்ளனர். குலசை முத்தாரம்மனை அவர்கள் தங்கள் குல தெய்வமாக கருதுகிறார்கள்.

    21. குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

    22. தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக்கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

    23. குலசை கோவிலுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன.

    24. குலசையில் உள்ள நாடார் தசரா குழு தனித்துவம் கொண்டது. அந்த குழுவில் தான் எல்லா கடவுள்களின் வேடம் அணிந்தவர்களை காண முடியும்.

    25. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.

    26. தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

    27. மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சி கோவில் முன்பு உள்ள குறுகலான தெருவில் தான் நடந்து வந்தது. கே.பி.கந்தசாமி அறநிலைத்துறை அமைச்சராக இருந்தபோது சம்ஹார நிகழ்ச்சி கடற்கரைக்கு மாற்றப்பட்டது.

    28. விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.

    29. சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    30. திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் அமைதியாக நடைபெறும். ஆனால் குலசையில் மகிஷனை அம்பாள் வதம் செய்யும் சம்ஹாரம் பக்தர்களின் ஆடல், பாடலுக்கிடையே ஆரவாரமாக நடைபெறும்.

    31. விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள்.

    32. மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

    33. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12&வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.

    34. காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

    35. நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம்.

    36. திருப்பதி கோவிலில் பணக்கட்டுகளும், தங்க நகைகளும் உண்டியலில் போடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் குலசை கோவிலில் 90 சதவீத உண்டியல் வருவாய் சில்லறை நாணயங்களாகவே உள்ளது.

    37. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக உண்டியல் வருமானத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் 2&வது இடத்தில் உள்ளது.

    38. அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

    39. தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்ற வற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

    40. குலசை முத்தாரம்மனுக்கு ரூ.1500 பணம் கட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தலாம்.

    41. புதிதாக கடை தொடங்கும் போதும், கிரக பிரவேசம் நடத்தும் போதும் முத்தாரம்மனுக்கு ஜவுளி எடுத்து கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். அதன்படி அம்பாளுக்கு 12 முழ சேலை, ஈசுவரனுக்கு 8 முழ வேட்டி எடுத்து காணிக்கையாக செலுத்துவார்கள்.

    42. குலசேகரப்பட்டினத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் மற்றும் விண்ணவரம் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 35 அரிய சிலைகள் முத்தாரம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த 35 சாமி சிலைகளுக்கும் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    43. தண்டுபத்தை சேர்ந்த ஒரு பக்தர் குலசை முத்தாரம்மன் கோவிலில் நவக்கிரக சன்னதி அமைத்து கொடுத்துள்ளார்.

    44. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோவில் தட்டாங்குடி கோவில் என்றழைக்கப்பட்டது.

    45. தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

    46. சமீப காலமாக குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.

    47. குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    48. கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    49. விரதம் இருந்து குலசைக்கு வரும் பெண்கள் அருள் வந்து கோவில் பிரகாரத்தில் ஆடுவதை பார்க்கலாம். அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வமாக குறி கேட்பார்கள்.

    50. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள்.
    • அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும்,எந்த பாதிப்பும் ஏற்படாது.

    இரும்பு ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது

    குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்துக்கு பல்வேறு வேடம் அணிந்து வரும் பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் ஏற்பட்டபடி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆடை, அலங்காரத்துக்கு பக்தர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

    அதன்பிறகு அட்டைகள், கலர் தாள்களினால் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் பழக்கம் பக்தர்களிடம் ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நிஜ பொருட்களையே பலரும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

    அதாவது ஒருவர் சூலாயுதம், வேலாயுதம் ஏந்தி வரும் வகையில் வேடம் போட்டால், உண்மையான இரும்பு சூலாயுதம், வேலாயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

    குலசேகரப்பட்டினம் ஆலயத்தை பொருத்தவரை வேடம் அணிந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஆக்ரோஷமாக ஆடியபடிதான் வருவார்கள். அப்படி வரும் போது உண்மையான இரும்பு ஆயுதங்கள் மற்றவர்களை பாதித்து விடுகிறது.

    அட்டையில் செய்த கருவிகளை வைத்து ஆடினால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே வேடம் அணிந்து வருபவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஒலி பெருக்கி குழாய் வேண்டாம்

    குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் வந்து மகிஷனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த சூரசம்ஹாரத்தை காண குலசேகரன்பட்டினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அன்றிரவு குலசையில் திரும்பிய திசையெல்லாம் தசரா குழுக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அமர்க்களப்படும். அந்த சமயத்தில் தசரா குழுவினர் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்ஹாரம் தொடங்குவதற்கு முன்பு கோவிலில் இருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்படும். எல்லா தசரா குழுவினரும் ஒலிபெருக்கி குழாய்களை பயன்படுத்தினால், ஆலயத்தில் இருந்து வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் பக்தர்களுக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

    எனவே தசரா குழுவினர் ஒலி பெருக்கி குழாய்களுக்கு பதில், ஒலிபெருக்கி பெட்டிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். 

    • காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
    • ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

    கஷ்டங்களைப் போக்கும் காளி வேடம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவுக்கு வேடமணியும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. தசரா வழிபாட்டு சடங்கின் ஒரு பகுதியாக ஆண்கள் காளிவேடமிட்டு வருவதை குலசேகரன்பட்டினம் கோவிலில் காணலாம்.

    காளிவேடம் போட்டு இருப்பவர்கள் மேளதாளங்களுக்கேற்ப ஆடிக்கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். காளி இல்லாத தசரா குழுக்கள் இருக்காது.  சூரசம்ஹாரத்தன்று காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர் மண்டபத்துக்கு வந்து, அம்மனை சூழ்ந்து நிற்பார்கள்.

    அம்மன் மகிசனைக் கொல்லை புறப்படுகையில் இவர்கள் அனைவரும் ஓங்காரக் கூச்சலிட்டபடி அம்மனைப் பின் தொடருவார்கள். அம்மன் சூரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிசனைக் குத்துவார்கள்.

    இந்நிகழ்ச்சியின் போது சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காளிவேடம் அணிந்து இருப்பவர்கள், அம்மனை சூழ்ந்து நிற்பார்கள், இது தமிழ் நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

    காளி வேடம் போடுவது மிகக் கடுமையான விரதத்துக்கு உரியதாகக் கருதப்படுகிறது. இவர்கள் தசரா விழாவுக்காக நாற்பத்தொரு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள்.

    தூய்மையைக் கடைப்பிடித்து, அவரவர் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில்களில் தங்கி, தாமே சமைத்து காலை, மாலை இரு நேரமும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொண்டோர் கொடியேற்றத்திற்குப் பின் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற நாள்கணக்கில் காளிவேடம் ஏற்று ஊர், ஊராக சென்று வருவார்கள்.

    தலையில் பின்புறம் தொங்குமாறு கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும் அட்டையாலும் செய்யப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்கத்தக்கவாறு சிறுதுளையிடப்பட்டு தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகிக் கொள்ளத்தக்க வீரப்பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்புப் பூச்சு, மரப்பட்டையாலும் இரும்புத் தகட்டாலும் அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் எட்டுக்கைகள், சிவப்புப்புடவை, மனிதத்தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, உருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சதங்கைகள், கையில் இரும்பாலான கனத்த வாள் & இவையே காளிவேடம் அணிதலுக்கு உரிய பொருட்களாகும்.

    இப்பொருட்களின் மொத்த எடை அளவு இருபது முதல் முப்பது கிலோ வரை இருக்கும். கடும் விரதம் மேற்கொண்டு, கடினமான இவ்வேடத்தை போடுபவர்களை மக்கள் காளியாகவே கருதுகின்றனர்.

    காளிவேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே வந்ததாக பக்தர்கள் எண்ணுவதும் வழிபடுவதும் காணிக்கை அளிப்பதும் அருள்வாக்குப் பெறுவதும் வழக்கமாகி உள்ளது. இதனால் இவ்வேடத்திற்கு மிகுந்த மரியாதை நிலவுகிறது.

    எனவே, இவ்வேடம் புனைவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிக அதிகமாகி விட்டது. காளி வேடத்தை முதன் முதலில் போட்டவர் யார் என்று பல்வேறு தசரா குழுவினரிடமும் கேட்டு ஆய்வு செய்த போது, குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செட்டியார் என்பவர்தான் முதன் முதலாக முத்தாரம்மன் ஆலயத்தில் விரதம் இருந்து காளி வேடம் போட்டதாக தெரிய வந்தது.

    அவரைத் தொடர்ந்து சேது பிள்ளை என்பவர் காளி வேடம் அணிந்ததாக கூறப்படுகிறது. குலசேகரன்பட்டினம், சிறு நாடார் குடியிருப்பு, பெரியபுரம், மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, உடன்படி சந்தையடியூர், சுண்டங்கோட்டை ஊர்களைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல ஆண்டுகள் காளி வேடமிட்டு சாதனை படைத்துள்ளனர்.

    உடன்குடி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. உறுப்பினரும் பெரியபுரம் அம்பாள் தசரா குழுவின் செயலாளருமான எஸ்.பிரபாகர் முருகராஜ் 30 ஆண்டுகள் பல்வேறு வேடங்கள் அணிந்து முத்தாரம்மனுக்கு சேவை செய்தவர். இதில் 7 ஆண்டுகள் அவர் காளி வேடம் ஏற்றார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், "காளி வேடம் போடுபவர்கள் மிக, மிக பயபக்தியுடன் விரதம் இருக்க வேண்டும். அம்மன் அவர்கள் மூலம் நிறைய வாக்குகள் சொல்வாள். இது முத்தாரம்மனின் மகிமைகளில் ஒன்று" என்றார்.

    கொழும்பில் தொழில் புரியும் இவர் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தசரா குழுவினரை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறார். அதோடு குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சேவைகளையும் செய்து வருகிறார்.

    குலசை வரும் பக்தர்கள் வசதிக்காக இன்னும் நிறைய திருப்பணிகள் செய்ய வேண்டும் என்கிறார் இவர். தனது வேண்டுகோளை ஏற்று குலசையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் வடக்கு கடற்கரை சாலை அமைத்து தந்ததை பெருமையுடன் கூறினார்.

    காளி வேடம் போடுபவர்கள் நேர்ச்சையின் பொருட்டு அவ்வேடத்தைப் போடுவதாகத் தாமே முடிவு செய்து கொள்கின்றனர். ஆனால் பிற வேடங்களைப் போடுபவர்கள் தம் ஊர்களில் உள்ள கோவில் பூசாரிகளிடமோ சாமி ஆடுபவரிடமோ கணக்குக் கேட்டு, போட வேண்டிய வேடம் குறித்து முடிவு செய்கின்றனர்.

    இதுவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபாகும். ஆனால் இம்மரபு கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. தற்போது பெரும்பாலான பக்தர்கள் தாம் விரும்பிய வேடத்தை யாரிடமும் கேட்காமல் தாமே தேர்வு செய்து போட்டு கொள்கின்றனர்.

    எந்த வேடத்தை ஏற்றாலும் விரதம் இருக்க வேண்டியது என்பது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். காளி வேடம் தவிர, பிற வேடங்களைப் போடுபவர்கள் கொடியேற்றத்திற்குப் பின், பத்துநாள், ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் என்ற கணக்கில் அவரவர் வசதிக்கேற்ப விரதம் இருக்கின்றனர்.

    இவர்கள் தங்கள் ஊர்களில் தசராக் குழுக்களை அமைத்துக் கொள்வார்கள். கிருஷ்ணன், பரமசிவன், இந்திரன, சூரியன், யமன், சந்திரன், இராமர், ஆஞ்சநேயர், பஞ்சபாண்டவர், அரசன், அரசி, குறவன், குறத்தி, காவலர், மோகினி, அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள், கரடி, குரங்கு, புலி, போன்ற ஏராளமான வேடங்களைத் தசரா நாட்களில் காணமுடியும்.

    சிலர் ஆண்டுதோறும் ஒரே வேடத்தைத் தொடர்ந்து போடுவார்கள். வேறு சிலர் தாம் விரும்பிய பலவித வேடங்களை ஆண்டுதோறும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்கின்றனர். எந்த வேடம் போடுவதற்கும் யாருக்கும் தடை இல்லை என்பதால், எல்லா வேடங்களையும் பக்தர்கள் போட்டுக் கொள்கின்றனர்.

    வேடம் போடத் தொடங்கும் நாளன்று குழுவில் உள்ள அனைவரும் குலசேகரன்பட்டினம் சென்று, கடலில் குளித்து விட்டு, கோவிலுக்கு சென்று காப்புக் கட்டிக் கொள்கின்றனர். பின் குழுவாக ஊருக்குத் திரும்பி வேடம் போடத் தொடங்குவார்கள்.

    வேடம் போட்டதும் தம் இருப்பிடத்தில் அல்லது கோவிலில் உள்ள அம்மனுக்குப் பூசை செய்து, தமது ஆட்டத்தைத் தொடங்குவார்கள். சூரசம்ஹாரம் வரை இவர்கள் குழுவாகவே செயல்படுவார்கள்.

    வேடம் அணிவதற்குப் பயன்படுத்தும் பொருட்களை யாரும் தொடாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்வார்கள். தீட்டு எனக் கருதப்படும் இடங்களுக்கு இவர்கள் செல்வதில்லை.

    தசராக் குழுக்களின் தேவையை உணர்ந்து அந்தந்த ஊர்மக்களும் நடத்துகொள்வதுண்டு. அவர்களுக்கு இடையூறு நேராத வகையிலும் அவர்களின் பக்திக்கு ஏற்ற முறையிலும் ஊர்மக்களின் நடவடிக்கைகள் காணப்படும்.

    தசரா குழுவினர் நோன்பு தொடங்கிய நாள் முதல் வேடம்போடுதல், ஊர் ஊராக செல்லுதல், காணிக்கை வசூலித்தல், அருள் வாக்கு கூறுதல், மேளதாளங்களுடனும் கலைஞர்களுடனும் இணைந்து ஆட்டங்களை நிகழ்த்துதல் போன்றவற்றை செய்வார்கள். இதனால் தசரா குழுவினர் எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக மாறிவிடும்.

    இந்த கிராமியத் திருவிழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் அற்புத திருவிழாவாகும். மற்ற மாவட்டத்துக்காரர்கள் இந்த வித்தியாசமான திருவிழாவின் மகத்துவத்தை ரசித்து பார்க்க வேண்டுமானால்  குலசேகரன் பட்டினத்துக்கு சென்றால் பார்க்கலாம். இது அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருவிழாவாக இருக்கும். 

    • அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும்.
    • நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள்.

    திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.

    இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.

    கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !

    வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.

    சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.

    ×