search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய் கழிவு"

    • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
    • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

    எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

    மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.
    • காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையின் காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது. அப்போது மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. மேலும் எண்ணை படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்து இருந்தது. இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதியிலும் அதிக அளவு எண்ணை கழிவுகள் கடலில் கலந்து படர்ந்து உள்ளன. இதனால் கடல் நீர் மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதோடு கச்சா எண்ணை படலம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.

    இந்த பகுதி மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெறும் என்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கடலில் பரவி உள்ள எண்ணை கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.


    இதுதொடர்பாக கடலோர காவல்படை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், மிச்சாங் புயலுக்கு பின் ஏற்பட்ட வெள்ளத்தில் எண்ணெய் கசிவு கலந்தது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 கி.மீட்டர்வரை எண்ணெய் கசிவு படர்ந்து உள்ளது. இந்த கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் எனும் எண்ணெய் கரைப்பான் நேற்று தெளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே இன்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள 9 பேர் கொண்ட குழுவினர் எண்ணூரில் எண்ணை படர்ந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மிச்சாங் புயல் காரணமாக பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆரணி ஆறு உடைந்தது. புயல் காற்று மழையால் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோர் மீனவர்களுக்கு நிவாரண உதவிகளான அரிசி, பருப்பு, போர்வை ஆகியவற்றை வழங்கினர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மீனவ மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் பழவேற்காட்டில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 53 மீனவ கிராமங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எண்ணூரில் எண்ணெய் கசிவு தொடர்பாக துறை அமைச்சர் ஆய்வு செய்வார். அது தொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.


    புயலால் சேதமடைந்த படகுகள், வலைகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்று முடிவடையும். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், மிச்சாங் புயலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திர சேகர், டிஜே.கோவிந்த ராஜன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வீட்டுக்குள் தண்ணீர் நின்ற பகுதியில் இருந்த பொருட்கள் மீதும் எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்பட்டது.
    • எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மழைநீரோடு எண்ணெய் கழிவுகள் கலந்து வந்ததால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் ஒட்டிக்கொண்டன.

    திருவொற்றியூர்:

    சென்னையில் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள வீடுகளில் சுமார் 6 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வெள்ளம் வடிந்ததால் பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக சென்றனர். அப்போது வீடுகளின் சுவர்களில் எண்ணெய் கழிவுகள் கறை போல படிந்து காணப்பட்டது. மேலும் வீட்டுக்குள் தண்ணீர் நின்ற பகுதியில் இருந்த பொருட்கள் மீதும் எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தன.

    எண்ணூர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த எண்ணெய் கழிவு படிந்துள்ளது. திருவொற்றியூரில் உள்ள ஜோதி நகர், கலைஞர் நகர், சடையங்குப்பம், பர்மா நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுவர்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களில் படிந்த எண்ணெய் கழிவுகளை துடைத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த எண்ணெய் கழிவுகள் பொருட்களின் மீது நன்றாக படிந்துள்ளதால் அதை துடைத்து எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். எண்ணெய் கழிவுகள் படிந்த துணிமணிகள், புத்தகங்களை பயன்படுத்த முடியாததால் அதை வீடுகளுக்கு வெளியே குவித்து வருகிறார்கள். மேலும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளன. எண்ணெய் கழிவுகள் வாகனங்களில் உள்ள பேட்டரிகளில் முழுவதும் படிந்திருப்பதால் வாகனங்களில் பழுது ஏற்பட்டுள்ளன. இதனால் ஏராளமான வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

    சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஸ்டீல் யார்டில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த லாரிகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதால் அவை பழுதடைந்துள்ளன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளன. இதனால் அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    இந்த எண்ணெய் கழிவுகள் சாலையில் படிந்துள்ளதால் நடக்கும்போது கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. சில நேரங்களில் வழுக்கியும் விடுகின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மழைநீரோடு எண்ணெய் கழிவுகள் கலந்து வந்ததால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் ஒட்டிக்கொண்டன. இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சடையங்குப்பம் முதல் எண்ணூர் முகத்துவாரம் வரை உபரிநீர் கால்வாயில் 5 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் கழிவுகள் கலந்து இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் எண்ணெய் கழிவுகள் படர்ந்திருப்பதால் திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு, தலை சுற்றல், சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது. துர்நாற்றம் மூக்கை துளைப்பதால் கடந்த 4 நாட்களாகவே பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதிகளில் ஏராளமான எண்ணெய் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்தே எண்ணெய் கழிவுகள் கசிந்து கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ளது. மேலும் மழைநீருடன் இந்த எண்ணெய் கழிவுகள் கலந்ததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் பகுதியில் உள்ள சிற்றோடையிலும் கலந்துள்ளது. எண்ணூர் முகத்துவாரத்திலும் எண்ணெய் கழிவுகள் கலந்ததால் அவை மீன்களின் தலையில் ஒட்டிக்கொள்கின்றன. எனவே கொசஸ்தலை ஆற்று மீனை சாப்பிட்டால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணெய் கழிவுகள் கசிந்ததாக கூறப்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த தொழிற்சாலைகளில் உள்ள குழாய்களில் எண்ணெய் கழிவுகள் கசியவில்லை என்று அதன் நிர்வாகத்தினர் கூறி விட்டனர். எனவே எண்ணெய் கழிவுகள் கசிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள வீடியோ காட்சிகளை அங்குள்ள பொதுமக்கள் சமூக வலைதளம் மூலம் பரப்பி மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரியின் கவனத்துக்கு கொண்டு சென்று புகார் அளித்துள்ளனர்.

    ×