search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் அவதி"

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
    • சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு மழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலைகளை மழைநீர் அடித்து சென்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக, பள்ளமாக உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் மழை நின்று பல வாரங்கள் கடந்த நிலையிலும் இந்த சாலை இன்னும் சீரமைக்கப்பட வில்லை. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சாலையில் வாகனம் ஓட்டவே திணறுகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறியதாவது:-

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் தொடங்கி செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை வரை 4 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் சுங்க கட்டணம் செலுத்தி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது.

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழை நின்ற பகுதிகளிலாவது போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களால் விபத்து நிகழும் ஆபத்து உள்ளது. அதனை கவனத்தில் கொண்டு சாலை பள்ளங்களை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

    எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது. இதனால் இந்த பகுதியில் 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. எனவே தமிழக அரசு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்து பணிகளை உடனே தொடங்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.
    • மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சமீபத்தில் சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு நாளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    அரிசி, பெட்ஷீட் மற்றும் நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட செயலாளர் அசோக், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.முல்லை செல்வம், சா.சங்கர் வட்டச் செயலாளர் கே.ஆர்.மணி, ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர், குட்டி உள்பட ஏராளமான பகுதி வட்ட நிர்வாகிகள், மகளிரணி, வடிவேலு, ஜிம்பாபு, ஆறு, மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயலினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எண்ணூர் முகத்து வாரம் பகுதியில் எண்ணெய் கழிவுகள் கலந்தது. இதில் மீனவர்களின் படகுகள் வலைகள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம், நல்ல தண்ணி ஓடை குப்பம், திருவொற்றியூர் குப்பம், பலகை தொட்டி குப்பம், கே.வி.கே.குப்பம், பெரிய காசி கோவில் குப்பம், இந்திரா காந்தி குப்பம்.

    புதுநகர் குப்பம், நடுக்காசி கோவில் குப்பம், ஓடை குப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பட்டினத்தார் கோவில் அருகில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர் சிதம்பர முருகேசன், போக்குவரத்து உதவி கமிஷனர் சீனிவாசன், தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. இப்ராஹிம், மீன்வளத்துறை இணை இயக்குனர் இந்திரா, திருவொற்றியூர் தாசில்தார் சவுந்தர்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் எண்ணூர் முகத்துவார கடல் பகுதியில் மீன் பிடித்து வரும் நெட்டுக்குப்பம், தாளங்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், காட்டுக்குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி போதாது, கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஆண், பெண் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மீன்பிடி படகுகளுக்கு ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் இன்று காலை பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். அப்போது எண்ணெயில் சேதம் அடைந்த படகு மற்றும் வலைகளை சாலையின் நடுவே போட்டனர்.

    மறியல் போராட்டம் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் சரக்குகளோடு விரைவுச் சாலையில் வரிசையாக நிற்கின்றன. மேலும் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூரில் இருந்து எண்ணூர் வரை செல்லும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    • கோவில்பட்டி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.
    • தடை செய்ய மத்திய, மாநில, அரசுகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பகுதியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளச் சேதங்களால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக கோவில்பட்டி நகரின் பிரதான தொழிலான தீப்பெட்டிதொழில் கடும் பாதிப்படைந்து தீப்பெட்டி பண்டல்கள் முடக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் வெளி நாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பெண் பணியாளர்களை வைத்து கோவில்பட்டி பகுதியில் ஏராளமான தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தீப்பெட்டி ஆலைகளுக்கு ஏற்கனவே கடும்நெருக்கடி உள்ளது. குறிப்பாக சீனாவிலிருந்து வரக்கூடிய சிகரெட்லைட்டர்கள் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தீப்பெட்டிகள் ஏற்றுமதியில் பல்வேறு சிரமங்களும் தடைகளும் ஏற்பட்டு வருகிறது.

    மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, போன்ற இடங்களில் இருந்து தீப்பெட்டிக்கு தேவையான அல்சிசயா என்ற வெள்ளைகுச்சி மரங்கள் கப்பல் மூலமாக தூத்துக்குடியில் கொண்டு வரப்பட்டு தூத்துக்குடியில் இருந்து லாரிகள் மூலம் கோவில்பட்டிக்கு கொண்டு வரப்படும்.

    தற்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அப்படி வரக்கூடிய மரத்தடிகள் கோவில்பட்டி கொண்டுவர முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் வெள்ளபெருக்கு காரணமாக கோவில்பட்டி அருகே உள்ள திட்டக்குளம் தொழில்பேட்டையில் உள்ள சிப்காட் பகுதியில் உள்ள அனைத்து தீப்பெட்டிகுச்சி தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கமுடியாத சூழ்நிலைகள் உள்ளது. மேலும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த ரூ.100 கோடி தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையால் தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டமும் சிறு மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் தீப்பெட்டிதொழில் மிக மிக பாதிப்படைந்துள்ளது.

    அது மட்டுமல்ல கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டிஆலைகள் அதிகம் வருவதற்கு காரணமே கந்தகபூமி என கோவில்பட்டி அழைக்கப்படுவதால் கடுமையான வெயில் காரணமாக தீப்பெட்டிகளில் குச்சிகளில் மருந்துகள் முக்கபட்டு அதை காயவைக்கும் வசதி, தீப்பெட்டி அட்டைப்பெட்டிகள் ஒட்டி அதை காயவைக்கும் வசதி, எந்த ஒருஹீட்டர் வசதியும் இல்லாமல் சர்வசாதாரணமாக செய்யமுடிந்தது.

    தற்போது கோவில்பட்டி பகுதி கொடைக்கானல், ஊட்டி, போன்ற வானிலையில் உள்ளதால் குச்சியை காயவைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரசு போர்க்கால நடவடிக்கையாக தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்னர்.

    இது குறித்து தமிழ்நாடு தீபெட்டிஉற்பத்தியாளர் சங்கதலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் கூறும் போது, ஏற்கனவே எங்களுக்கு அடிமேல் அடிவிழுகின்றது. சிகரெட்லைட்டர் சீனாவிலிருந்து மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் தீப்பெட்டி பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    அதை தடை செய்ய மத்திய, மாநில, அரசுகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இருப்பினும் கூட சீனசிகரெட் லைட்டர்கள் மிகமலிவான விலையில் சட்டவிரோதமாக மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் மேலும் இப்பொழுது இந்த கோவில்பட்டி பகுதியில் உள்ள வானிலை காரணமாக தயார் செய்யப்பட்ட தீப்பெட்டிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்பமுடியாமல் மிகசிரமம் அடைந்து வருகின்றோம் என்றார்.

    • கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளிலும் எண்ணெய் படலம் படர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.

    அவர் எண்ணூர் சிவன் படை குப்பம், கமலாம்பாள் நகர் பகுதிகளில் எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
    • கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும்.

    தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல், விளைபொருட்கள் அழிந்துவிட்டன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    எனவே, தயவு செய்து மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்ய ஆய்வுக் குழுவை அனுப்பவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி மற்றும் நிவாரணங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது.
    • நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.

    இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை அமைச்சர் உதயநிதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதன், கலாநிதி வீராசாமி எம்.பி., கே.பி.சங்கர் எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ராதாகிருஷ்ணன், மண்டலக் குழு தலைவர் தனியரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் எப்படி நடைபெற்று வருகிறது? பணிகள் முடிய இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி உதயநிதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மீனவர்கள் அமைச்சர் உதயநிதியிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி முறையிட்டனர்.

    எண்ணெய் கழிவுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளை விரைந்து சரி செய்து விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் முறையிட்டனர். கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்கள்.

    மீனவர்களின் குறைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் உதயநிதி அரசு நிச்சயம் உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்தார்.

    ×