search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழைநீரில் எண்ணெய் கழிவு கலப்பு: கண் எரிச்சல், சுவாச பிரச்சனையால் 25 ஆயிரம் குடும்பங்கள் அவதி
    X

    மழைநீரில் எண்ணெய் கழிவு கலப்பு: கண் எரிச்சல், சுவாச பிரச்சனையால் 25 ஆயிரம் குடும்பங்கள் அவதி

    • வீட்டுக்குள் தண்ணீர் நின்ற பகுதியில் இருந்த பொருட்கள் மீதும் எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்பட்டது.
    • எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மழைநீரோடு எண்ணெய் கழிவுகள் கலந்து வந்ததால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் ஒட்டிக்கொண்டன.

    திருவொற்றியூர்:

    சென்னையில் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்குள்ள வீடுகளில் சுமார் 6 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வெள்ளம் வடிந்ததால் பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக சென்றனர். அப்போது வீடுகளின் சுவர்களில் எண்ணெய் கழிவுகள் கறை போல படிந்து காணப்பட்டது. மேலும் வீட்டுக்குள் தண்ணீர் நின்ற பகுதியில் இருந்த பொருட்கள் மீதும் எண்ணெய் கழிவுகள் படிந்து காணப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தன.

    எண்ணூர், மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் உள்ள சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த எண்ணெய் கழிவு படிந்துள்ளது. திருவொற்றியூரில் உள்ள ஜோதி நகர், கலைஞர் நகர், சடையங்குப்பம், பர்மா நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ளன. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சுவர்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களில் படிந்த எண்ணெய் கழிவுகளை துடைத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த எண்ணெய் கழிவுகள் பொருட்களின் மீது நன்றாக படிந்துள்ளதால் அதை துடைத்து எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். எண்ணெய் கழிவுகள் படிந்த துணிமணிகள், புத்தகங்களை பயன்படுத்த முடியாததால் அதை வீடுகளுக்கு வெளியே குவித்து வருகிறார்கள். மேலும் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளன. எண்ணெய் கழிவுகள் வாகனங்களில் உள்ள பேட்டரிகளில் முழுவதும் படிந்திருப்பதால் வாகனங்களில் பழுது ஏற்பட்டுள்ளன. இதனால் ஏராளமான வாகனங்கள் பழுது பார்ப்பதற்காக கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

    சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஸ்டீல் யார்டில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த லாரிகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதால் அவை பழுதடைந்துள்ளன. மேலும் அந்த பகுதிகளில் உள்ள நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளன. இதனால் அங்குள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    இந்த எண்ணெய் கழிவுகள் சாலையில் படிந்துள்ளதால் நடக்கும்போது கால்களில் ஒட்டிக் கொள்கின்றன. சில நேரங்களில் வழுக்கியும் விடுகின்றன. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மழைநீரோடு எண்ணெய் கழிவுகள் கலந்து வந்ததால் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் ஒட்டிக்கொண்டன. இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சடையங்குப்பம் முதல் எண்ணூர் முகத்துவாரம் வரை உபரிநீர் கால்வாயில் 5 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் கழிவுகள் கலந்து இருப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் எண்ணெய் கழிவுகள் படர்ந்திருப்பதால் திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு, தலை சுற்றல், சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் துர்நாற்றமும் வீசத் தொடங்கியுள்ளது. துர்நாற்றம் மூக்கை துளைப்பதால் கடந்த 4 நாட்களாகவே பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எண்ணூர், திருவொற்றியூர், மணலி பகுதிகளில் ஏராளமான எண்ணெய் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்தே எண்ணெய் கழிவுகள் கசிந்து கொசஸ்தலை ஆற்றில் கலந்துள்ளது. மேலும் மழைநீருடன் இந்த எண்ணெய் கழிவுகள் கலந்ததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் பகுதியில் உள்ள சிற்றோடையிலும் கலந்துள்ளது. எண்ணூர் முகத்துவாரத்திலும் எண்ணெய் கழிவுகள் கலந்ததால் அவை மீன்களின் தலையில் ஒட்டிக்கொள்கின்றன. எனவே கொசஸ்தலை ஆற்று மீனை சாப்பிட்டால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எண்ணெய் கழிவுகள் கசிந்ததாக கூறப்பட்ட தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த தொழிற்சாலைகளில் உள்ள குழாய்களில் எண்ணெய் கழிவுகள் கசியவில்லை என்று அதன் நிர்வாகத்தினர் கூறி விட்டனர். எனவே எண்ணெய் கழிவுகள் கசிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள வீடியோ காட்சிகளை அங்குள்ள பொதுமக்கள் சமூக வலைதளம் மூலம் பரப்பி மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரியின் கவனத்துக்கு கொண்டு சென்று புகார் அளித்துள்ளனர்.

    Next Story
    ×