search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆளில்லா குட்டி விமானம்"

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
    புதுடெல்லி:

    மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.



    எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

    சேலம்-சென்னை 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. #GreenWayRoad

    சேலம்:

    சேலம்-சென்னைக்கு 8 வழி விரைவு சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் 277 கி.மீ. தூரத்திற்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் இதற்கான நில அளவீடு கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது. 70 அடி அகலத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைய உள்ள இந்த சாலைக்கு 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    அதிகாரிகள் நில அளவீடு செய்த போது விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆச்சாங் குட்டப்பட்டி, குப்பனூர், உடையாப்பட்டி எருமாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் நேற்று வீடியோ எடுக்கப்பட்டது.

     


    இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று ஆள் இல்லாத குட்டி விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கியவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் சொல்லாததால் அந்த பகுதி விவசாயிகளும், பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் எவ்வளவு தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் மற்றும் மாமரங்கள் உள்ளது என்பது குறித்தும், விவசாய பயிர்கள், தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் வீடியோ எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இந்த வீடியோ பதிவுகள் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் இந்த இடங்களில் எவ்வளவு மரங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர்.
    மசினகுடி:

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோவையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினகுடிக்கு வந்துள்ளார். மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து வந்து உள்ளனர். புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர்மின்நிலையத்தையும் வீடியோ எடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 10 பேரையும் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சேர்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு சிறிய தொகையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோசுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சிறந்த சுற்றுலா தலமாகவும், வனவிலங்குகளின் புகலிடமாகவும் விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் பெருந்தொகை அபராதமாக விதிக்காமல் 1 ரூபாயை மட்டும் அபராதம் விதித்து உள்ளனர். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தது கண்டனத்துக்குரியது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தவறான முன் உதாரணமாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ×