search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuzvendra Chahal"

    • தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
    • உலகக்கோப்பை தொடர் முழுவதும் யஷ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

    இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி விரைவில் தலைமை மாற்றத்துக்கு ஆளாகலாம் என சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் யஷ்வேந்திர சாஹல் ஒரே ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் சஹாலோ அல்லது ஹர்ஷல் படேலோ தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி அடையவில்லை. ஏனென்றால் தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அணியில் எடுப்போம். இல்லை என்றால் கடினம்தான் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி தங்களது சிறப்பானதைக் கொடுக்க முடியும் என்று காத்திருந்தனர் என்று கூறியுள்ளார்.

    • பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை
    • இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம் என சேவாக் கருத்து

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அரையிறுதியில் இந்திய அணி மோசமாக தோற்றது குறித்து தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப்சிங் கூறியதாவது:-

    லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகப்பெரிய தவறாகும்.

    குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். இதே போல ரிஷப் பண்டுக்கு சரியான முறையில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. அடுத்த உலக கோப்பைக்கான அணியை இப்போதே திட்டமிட வேண்டும். ரோகித் சர்மா, வீராட் கோலி, அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது:-

    இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே அச்சம் இல்லாமல் விளையாடவில்லை. பயப்படாமல் களத்தில் ஆடவில்லையென்றால் போட்டியை விட்டு வெளியேற வேண்டிய நிலைதான் ஏற்படும். அச்சமற்ற கிரிக்கெட் இப்போது காணாமல் போய் விட்டது. தோற்றாலும் குறைந்தபட்சம் போராடி இருக்கவேண்டும்.

    பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு துறைக்கு எதிராககூட சவால் கொடுக்கவில்லை. இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம்.

    கடந்த உலக கோப்பையில் இருந்த அதே அணுகுமுறை தான் தற்போதும இருக்கிறது. நெருக்கடியான போட்டியில் வீராட் கோலி மட்டுமே ரன்களை எடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், 'இந்திய அணியின் இந்த தோல்வியால் அதிகமாக விமர்சிக்க வேண்டாம். இந்திய அணி மோசமாக ஆடியதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு ஆட்டத்தின் அடிப்படையில் அதிகமாக விமர்சிக்க முடியாது. இங்கிலாந்து அணி நிலைமையை சிறப்பாக கையாண்டு இந்தியாவை முற்றிலும் வெளியேற்றியது' என்றார்.

    'ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அணியின் வெற்றியை சொந்த வெற்றியை போல் கொண்டாடினால், தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.

    • யுஸ்வேந்திர சாஹல் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார்.

    லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 1983-ம் ஆண்டு 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இந்திய வீரர்களின் சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக ஆஷிஸ் நெக்ரா 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது.
    • ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் சாஹல் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் 61 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்டும் டி20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சாஹல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். ஐபிஎல் 2022 சிறந்த பந்து வீச்சாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். தற்போது விளையாடி வரும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்நிலையில் சாஹல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஸ்வான் கூறியதாவது:-

    ஸ்வான்

    ஸ்வான்

    சாஹாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விருப்பம் என்றால் உடனடியாக சேர்த்துக் கொள்வேன். இதை நான் சாஹலுடன் அமர்ந்து கேட்க வேண்டும். ஏனென்றால் அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் உலகின் சிறந்த ஸ்பின்னர் என்று நான் நம்புகிறேன். கடினமான சூழ்நிலைகளில் லெக்-ஸ்பின் வீசும்போது குறிப்பாக பனி மற்றும் ஈரமாக இருக்கும் போது அவர் சிறப்பாக செயல்படுவார்.

    டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுவாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.

    டெஸ்ட் போட்டிகள் விறு விறுப்பாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பதால் டெஸ்ட் மீதான ஆர்வம் மீண்டும் எழுகிறது. இங்கிலாந்து பரபரப்பான கிரிக்கெட் விளையாடி வருகிறது. மெக்கலத்தின் நெறிமுறைகள் இந்திய அணியிலும் உலகெங்கிலும் உள்ள மற்ற அணிகளிலும் பரவியிருக்கும் என்று நம்புகிறேன். இது பார்வையாளர்களை மீண்டும் ஈர்க்கும் ஒரு முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 வது ஓவருக்கு பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசவில்லை.
    • பேட்டிங் செய்யும் போது, 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

    கட்டாக்:

    இந்தியாவிற்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அந்த அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று கேப்டன் ரிஷப் பண்ட் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சாஹல் 49 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். மற்றொரு சூழற்பந்து வீச்சாளர் அக்சர் ஒரே ஒரு ஓவர் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா வீசிய 3 ஓவர்களில் 31 ரன்கள் அடிக்கப்பட்டன.

    இது குறித்து போட்டி நிறைவுக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாகத் தொடங்கினர், ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு, நன்றாகப் பந்து வீசவில்லை, அங்குதான் ஆட்டம் மாறியது என்றார்.

    சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும், இனி வரும் போட்டிகளில் இது போன்ற விசயங்களை சரி செய்வோம் என்றும் அவர் கூறினார்.

    பேட்டிங் செய்யும் போது 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக அடித்து விட்டதாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை போட்டியில் விளையாடுகையில் நிச்சயம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எனக்கும், குல்தீப் யாதவுக்கும் இடையிலான நம்பிக்கை பெரிய விஷயமாகும். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக நம்புகிறோம். இருவரும் கூட்டாக கலந்து ஆலோசித்து செயல்பட்டு வருகிறோம்.

    விராட் கோலி, டோனி மற்றும் சீனியர் வீரர்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். உலக கோப்பை போட்டியிலும் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு செயல்படுவோம். நான் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அதனால் அங்குள்ள சூழ்நிலை எனக்கு தெரியும்.

    கடந்த முறை நான் இங்கிலாந்தில் விளையாடுகையில் அங்குள்ள சூழ்நிலை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் இந்தமுறை நிச்சயம் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை கடினமானதுதான். உலக கோப்பை போட்டியில் முதல்முறையாக பங்கேற்க இருப்பதால் நான் இந்த போட்டியை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

    உலக கோப்பையில் இருக்கும் நெருக்கடியை சந்தித்து எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். சுழற்பந்து வீச்சாளர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். நமது பந்துவீச்சு சிறப்பாக அமையாவிட்டாலும் பயமின்றி செயல்பட வேண்டியது முக்கியம். அப்படி செயல்படாவிட்டால் நமது திட்டங்கள் அனைத்தும் தவறாக அமைந்துவிடும்.

    உலக கோப்பை போட்டிக்கான நமது அணி வலுவானதாகும். நம்மைத்தவிர இங்கிலாந்தும் வலுவானதாகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் சவால் அளிக்கும். என்னை பொறுத்தமட்டில் இந்திய அணிதான் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி பேட்டிங் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, டோனி ஆகியோர் இருப்பதால் நாம் நிச்சயம் உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #YuzvendraChahal
    துபாய்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம் உள்பட 453 ரன்கள் குவித்து சாதனை படைத்த விராட் கோலி கூடுதலாக 15 புள்ளிகள் பெற்று தனது தரவரிசை புள்ளி எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தியுள்ளார். இதே தொடரில் 2 சதம் உள்பட 389 ரன்கள் சேர்த்த, இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 29 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை ஆகும். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-வது இடமும் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4-வது இடமும் (803 புள்ளி), பாகிஸ்தானின் பாபர் அசாம் 5-வது இடமும் (798 புள்ளி) வகிக்கிறார்கள்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 4 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே சமயம் அம்பத்தி ராயுடு 72-வது இடத்தில் இருந்து 48-வது இடத்துக்கு வந்துள்ளார். விக்கெட் கீப்பர் டோனி 21-வது இடத்தில் இருக்கிறார்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கணிசமான ரன்கள் திரட்டிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் ஷாய் ஹோப், ஹெட்மயர் ஏற்றம் கண்டுள்ளனர். இந்த தொடரில் 250 ரன்கள் எடுத்த ஷாய் ஹோப் 22 இடங்கள் எகிறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனின் சிறந்த தரவரிசை இது தான். சதம் உள்பட 259 ரன்கள் சேர்த்த ஹெட்மயர் 31 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 841 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும் (788 புள்ளி), 3-வது இடத்தில் இந்தியாவின் குல்தீப் யாதவும் (723 புள்ளி) உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 ஆட்டத்தில் ஆடி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 3 இடங்கள் உயர்ந்து 8-வது இடத்தை (683 புள்ளி) பிடித்துள்ளார். சாஹல் டாப்-10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். ரவீந்திர ஜடேஜா 16 இடங்கள் அதிகரித்து 25-வது இடத்தை பெற்றுள்ளார்.

    ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தும் (126 புள்ளி), 2-வது இடத்தில் இந்தியாவும் (121 புள்ளி) தொடருகின்றன. 3 முதல் 6-வது இடங்களில் முறையே நியூசிலாந்து (112 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), பாகிஸ்தான் (101 புள்ளி), ஆஸ்திரேலியா (100 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. #YuzvendraChahal
    இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் சஹால், டோனி அவரிடம் தன்னை சார் என்று கூப்பிட வேண்டாம் என செல்லமாக கூறியதாக என தெரிவித்துள்ளார். #YuzvendraChahal #MSDhoni

    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால். கடந்த 2016-ம் ஜிம்பாப்வே தொடரின்போது இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்களது சுழற்பந்துவீச்சு எதிரணிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக மாறியுள்ளனர். 

    இந்நிலையில், ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாஹல், டோனியுடன் பழகிய அனுபவங்கள் குறித்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் கடந்த 2016-ம் ஆண்டு, ஜிம்பாப்பே அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வாகி இருந்தேன். டோனி தான் எனக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புக் கொடுத்தார். அவருடன் முதல்முறையாக இணைந்து விளையாடுவதை எண்ணி மகிழ்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது. இதனால், டோனிக்கு எதிராக நின்று பேசுவதற்குக்கூட நான் பயந்தேன். எப்போதாவது அவருடன் பேச நேர்ந்தால், ‘டோனி சார்’ என்றுதான் அழைப்பேன். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிகள் அனைத்திலும் டோனியை ‘டோனி சார்’ என்றே அழைத்தேன். 



    ஒருநாள் என்னிடம் பேசிய டோனி, நீ என்னை மகி, டோனி, மகேந்திர சிங் டோனி, அல்லது பாய் (அண்ணா) என எப்படி வேண்டுமோ அப்படிக் கூப்பிடு, ஆனால், தயவு செய்து சார் என்று மட்டும் கூப்பிடாதே என்று கூறினார். இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிப்பதை பார்த்து டோனியும் சிரித்தார். அன்றுமுதல் டோனியை நான் மகி பாய் (மகி அண்ணா) என்று அழைத்து வருகிறேன்.

    இவ்வாறு சாஹல் தெரிவித்தார். #YuzvendraChahal #MSDhoni
    இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒருமாதம் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போவதாக சாஹல் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அதன்பின் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் என்ற இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இடம்பிடித்தார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அஸ்வின், ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    சாஹல் 23 ஒருநாள் போட்டியில் 43 விக்கெட்டுக்களும், 21 டி20 போட்டியில் 35 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து, இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த மாதம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் சுமார் ஒருமாதம் இடைவெளி உள்ளது. சாஹல் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது.

    இதனால் இந்த ஒருமாதமும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், சாஹல் அவருடைய பயிற்சியாளராக நரேந்த்ர ஹர்மானி உடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கு முன் நாங்கள் அயர்லாந்து சென்று விளையாட இருக்கிறோம். இங்கிலாந்து சிதோஷ்ண நிலைதான் அயர்லாந்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஒருமாதம் இடைவெளி உள்ளது. அப்போது பயிற்சிக்காக தேசிய அகாடமி செல்ல இருக்கிறேன். அங்கே என்னுடைய பயிற்சியாளர் ஹிர்மானியுடன் ஆலோசனை நடத்துவேன்.

    ஹர்மானி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். ஆகவே, இங்கிலாந்து குறித்த சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்து கொள்வேன். இந்தியா ‘ஏ’ அணி முன்னதாக அங்கு செல்கிறது. என்னுடைய ஏராளமான நண்பர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களிடம் இருந்து கேட்டறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்’’ என்றார்.
    ×