என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One Day Cricket"

    • கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.

    கராச்சி:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. குறுகிய காலத்தில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.

    கடைசியாக 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நிறுத்துவதாக அறிவித்த ஐ.சி.சி., ஓரிரு ஆண்டுக்கு பிறகு சில நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை மீண்டும் நடத்தும் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி தற்போது நடத்தப்பட உள்ளது. இதன்படி 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று முதல் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அதுவும் துபாயிலேயே நடத்தப்படும். மாறாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வராவிட்டால் இறுதிப்போட்டி லாகூரில் அரங்கேறும்.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் ஒவ்வொரு அணியினரும் நீயா-நானா? என்று வரிந்து கட்டி நிற்பார்கள்.

    சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்திய இந்தியா, பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு தொடரில் வாகை சூடிய நியூசிலாந்து மற்றும் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இடம்பெறவில்லை. ஆனாலும் பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகிறது.

    முதல் நாளான இன்று (புதன்கிழமை) கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த வாரம் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானை இரண்டு முறை தோற்கடித்து மிரட்டியது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், வில் யங், டிவான் கான்வே, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், சான்ட்னெர், பிரேஸ்வெல், மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்கே உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் வலுசேர்க்கிறார்கள். பந்து தாக்கி நெற்றியில் காயமடைந்த ரச்சின் ரவீந்திரா உடல்தகுதியை எட்டும்பட்சத்தில் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலிமையடையும்.

    உள்ளூர் சூழல் பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சமாகும். முத்தரப்பு தொடரில் சோபிக்காத முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இந்த போட்டியிலும் அவர் தொடக்க வீரராக இறங்குவதை கேப்டன் ரிஸ்வான் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் காயத்தில் இருந்து மீண்டு முழு உடல்தகுதியை எட்டி விட்டதாகவும் ரிஸ்வான் கூறினார். மற்றபடி ரிஸ்வான், சல்மான் ஆஹா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இவ்விரு அணிகள் இதுவரை 118 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 53-ல் நியூசிலாந்தும், 61-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கராச்சி ஆடுகளம் பவுலிங்கை விட பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 353 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது நினைவு கூரத்தக்கது.போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்திரா அல்லது வில் யங், வில்லியம்சன், டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, ஜேக்கப் டப்பி, வில்லியம் ஓ ரூர்கே.

    பாகிஸ்தான்: பாபர் அசாம், பஹர் ஜமான், சாத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் ஆஹா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

    போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும். இதில் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.19½ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.9¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #SCOTvOMAN
    ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ரன்களை தாண்டியது.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.

    ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது.
    இதையடுத்து, 93 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமன்.

    ஓமன் அணி சார்பில் மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #SCOTvOMAN
    பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. #SAvPAK #ImamUlHaq
    செஞ்சூரியன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல் ஹக், பகர் சமான் ஆகியோர் களமிறங்கினர்.

    பகர் சமான் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய பாபர் அசாம் இமால் அல் ஹக்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தனர். 

    பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த பாபர் அசாம் 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய மொகமது ஹபீசும் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இமாம் உல் ஹக் நிலைத்து நின்று ஆடி ஐந்தாவது சதத்தை பதிவுசெய்தார். அவர் 116 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் அதிரடியாக ஆட பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. வாசிம் 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஸ்டெயின், ரபடா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்தது. 

    தென் ஆப்ரிக்க அணி 33 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தபோது பலத்த மழை பெய்தது. அப்போது ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 102 பந்தில் 131 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை நீடித்ததால் அத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொள்ள நடுவர்கள் முடிவு செய்தனர். பின் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்ரிக்க அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த ரீஸா ஹென்றிக்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். #SAvPAK #ImamUlHaq
    மவுண்ட் மவுங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #NZvSL #ThisaraPerera
    மவுண்ட் மவுங்கானுய்:

    நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
     
    கொலின் முன்றோ சிறப்பாக ஆடி 87 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 90 ரன்னில் அவுட்டானார். கடைசி வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீசம் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
     
    இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.



    அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் திசாரா பெரேரா வெற்றிக்காக போராடினார். அவர் அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார். #NZvSL #ThisaraPerera
    பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். #PAKvNZ #NZvPAK #TrentBoult
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். 34 ஓவர் முடிந்திருந்த போது அந்த அணி 6 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.



    ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 3-வது நியூசிலாந்து வீரர் போல்ட் ஆவார். டேனி மோரிசன் (இந்தியாவுக்கு எதிராக, 1994-ம் ஆண்டு), ஷேன் பான்ட் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2007) ஆகியோர் ஏற்கனவே நியூசிலாந்து அணியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தவர்கள் ஆவர். #PAKvNZ #NZvPAK #TrentBoult


    அபுதாபியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்கள் விளாசினார். லாதம் 68 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். குறிப்பாக மூன்றாவது ஓவரில் பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் வரிசையாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

    அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான், ரன் குவிக்க திணறியது. கடுமையாக போராடிய சர்பிராஸ் அகமது 64 ரன்களும், இமாத் வாசிம் 50 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 47.2 ஓவர்களில் 219 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இதனால், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. #PAKvNZ    
    ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். #YuzvendraChahal
    துபாய்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம் உள்பட 453 ரன்கள் குவித்து சாதனை படைத்த விராட் கோலி கூடுதலாக 15 புள்ளிகள் பெற்று தனது தரவரிசை புள்ளி எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தியுள்ளார். இதே தொடரில் 2 சதம் உள்பட 389 ரன்கள் சேர்த்த, இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 29 புள்ளிகளை கூடுதலாக சேகரித்து மொத்தம் 871 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கை ஆகும். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 3-வது இடமும் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 4-வது இடமும் (803 புள்ளி), பாகிஸ்தானின் பாபர் அசாம் 5-வது இடமும் (798 புள்ளி) வகிக்கிறார்கள்.

    வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத மற்றொரு இந்திய வீரர் ஷிகர் தவான் 4 இடங்கள் சரிந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே சமயம் அம்பத்தி ராயுடு 72-வது இடத்தில் இருந்து 48-வது இடத்துக்கு வந்துள்ளார். விக்கெட் கீப்பர் டோனி 21-வது இடத்தில் இருக்கிறார்.

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கணிசமான ரன்கள் திரட்டிய வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் ஷாய் ஹோப், ஹெட்மயர் ஏற்றம் கண்டுள்ளனர். இந்த தொடரில் 250 ரன்கள் எடுத்த ஷாய் ஹோப் 22 இடங்கள் எகிறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனின் சிறந்த தரவரிசை இது தான். சதம் உள்பட 259 ரன்கள் சேர்த்த ஹெட்மயர் 31 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 841 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருகிறார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும் (788 புள்ளி), 3-வது இடத்தில் இந்தியாவின் குல்தீப் யாதவும் (723 புள்ளி) உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 ஆட்டத்தில் ஆடி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 3 இடங்கள் உயர்ந்து 8-வது இடத்தை (683 புள்ளி) பிடித்துள்ளார். சாஹல் டாப்-10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். ரவீந்திர ஜடேஜா 16 இடங்கள் அதிகரித்து 25-வது இடத்தை பெற்றுள்ளார்.

    ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தில் இங்கிலாந்தும் (126 புள்ளி), 2-வது இடத்தில் இந்தியாவும் (121 புள்ளி) தொடருகின்றன. 3 முதல் 6-வது இடங்களில் முறையே நியூசிலாந்து (112 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), பாகிஸ்தான் (101 புள்ளி), ஆஸ்திரேலியா (100 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. #YuzvendraChahal
    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் விலகியுள்ளார். #evinlewis #indvswi
    கவுகாத்தி:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். 

    ஏற்கனவே கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத நிலையில் லீவிஸ் விலகல், வெஸ்ட் இண்டீசுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் போட்டி அணிக்கு கீரன் பவெலும், 20 ஓவர் போட்டி அணிக்கு நிகோலஸ் பூரானும் சேர்க்கப்பட்டுள்ளனர். #evinlewis #indvswi
    ×