search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oman"

    • ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
    • ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மஸ்கட்:

    மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

    இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

    மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    அமீரகம்-ஓமனில் இருந்து பாகிஸ்தானின் பைசலாபாத், முல்தான், சியால்கோட், கராச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. #IndiaPakistanWar
    துபாய்:

    சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தன. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்தன. இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தனது நாட்டின் வான்வழியாக விமானங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக துபாயில் இருந்து இயக்கப்பட்டு வரும் பிளை துபாய் விமான நிறுவனம் பாகிஸ்தானின் பைசலாபாத், முல்தான், சியால்கோட், கராச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகளை நேற்று முதல் 2 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. இதேபோல் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    ஓமனில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்களும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளன.  #IndiaPakistanWar 
    ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #SCOTvOMAN
    ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ரன்களை தாண்டியது.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.

    ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது.
    இதையடுத்து, 93 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமன்.

    ஓமன் அணி சார்பில் மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #SCOTvOMAN
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் ஓமனை வீழ்த்திய ஜப்பான் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. #AsianChampionsTrophy2018
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் உள்ளூர் அணியான ஓமனை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் 5 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்த சுற்று முடிவடைவதற்கு முன்னதாகவே புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின்னர் லீக் சுற்று முடிந்ததும் அரையிறுதியில் விளையாடும் அணிகள் முடிவு செய்யப்பட்டன.



    அதன்படி நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. #AsianChampionsTrophy2018 #HockeyIndia #IndianHockey
    ஓமனில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவித்தது.
    சென்னை:

    கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமம், புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி சேவியர். இவருக்கு சொந்தமான ‘கவின் பிறைட்’ என்ற மீன்பிடி விசைப்படகில் அவருடன் சேர்த்து 10 மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது இயற்கை சீற்றத்தினால் விசைப்படகு இழுத்து செல்லப்பட்டு, ஓமன் கடல்பகுதிக்கு சென்றது. இதையடுத்து விசைப்படகையும், அதில் இருந்த 10 தமிழக மீனவர்களையும் ஓமன் கடற்படையினர் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி சிறைப்பிடித்தனர். கடற்படையினரிடம் தமிழக மீனவர்கள் இயற்கை சீற்றத்தினால் இந்த பக்கம் வந்துவிட்டோம் என்று விளக்கமாக எடுத்துச்சொல்லியும் அவர்களை விடவில்லை.

    இந்த நிலையில் மீனவர்கள் குடும்பத்தினரிடன் வேண்டுகோளுக்கிணங்க, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி, மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதர், தொழிலாளர் நல அதிகாரி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    அதன் அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஓமனில் இருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களின் விடுதலைக்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கும், ஓமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நன்றியை தெரிவிக்கிறது. #tamilnews
    ஓமன் நாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதால் இந்திய சுற்றுலாத்துறைக்கு ஓமன் சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
    மஸ்கட்:

    ஓமன் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் சுற்றுலாத்துறை தங்களது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக ஓமன் நகருக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 210 ஆகும். இந்த எண்ணிக்கையானது 2016-ம் ஆண்டு 2 லட்சத்து 97 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்தியாவை சேர்ந்தவர்களில் பலபேர் தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சிகளை ஓமனில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் ஓமன் செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்திய சுற்றுலாத்துறை சிறப்புடன் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக இந்திய சுற்றுலாத்துறைக்கு, ஓமன் சுற்றுலாத்துறையின் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு துறைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×