ஓமனில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி மாணவர்கள் உள்பட 17 பேர் பலி

ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓமனில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி மாணவர்கள் உள்பட 17 பேர் பலி
Published on

மஸ்கட்:

மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.

இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.

மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com