search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murder"

    • வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள்.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது28). பெண் தகராறு காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு யுவராஜ் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன், தங்கராஜ், ராமச்சந்திரன், ராம மூர்த்தி, ஸ்ரீராமலு, சண்முகம், மணி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே முருகன், சண்முகம் ஆகியோர் இறந்து போனார்கள். இதைத்தொடர்ந்து மற்ற 5 பேர் மீது வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இறந்து போன முருகன், சண்முகம் ஆகியோரை தவிர்த்து தங்கராஜ், ராமச்சந்திரன், ராமமூர்த்தி, ஸ்ரீராமலு, மணி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு சார்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.ஆர் லாசர் ஆஜரானார்.

    • திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

    பழனி:

    பழனி அடுத்துள்ள மானூர் ஆற்றுப்பாலத்தில் இன்று காலை ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி சரவணன் தலைமையில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    திண்டுக்கல்-கோவை செல்லும் சாலையில் ஆற்றுப்பாலத்தில் தலையில் கல்லைபோட்டு ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பழனி மானூர் அண்ணாநகரை சேர்ந்த காளிமுத்து மகன் சிவா(23) என தெரியவந்தது.

    கூலிவேலை பார்த்து வந்த இவர் அவ்வப்போது இரவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு வீட்டைவிட்டு சென்றவர் இன்று காலை ஆற்றுப்பாலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார்.
    • வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ஏ.கே. மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். ஜமுனா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (60). கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

    சிலம்பரசன் வீட்டில் 3 வாத்துகளை வளர்த்து வந்தார். இதே போல் வெங்கடேசனும் வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார்.

    வாத்துகள் வெங்கடேசன் வளர்க்கும் கோழிகளை கொத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சிலம்பரசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை கோழி, வாத்துகள் சம்பந்தமாக மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் சிலம்பரசனும், வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    ஆத்திரமடைந்த வெங்கடேசன் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சிலம்பரசன் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாத்து, கோழி தகராறில் நடந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
    • குடிப்பழகத்தை நிறுத்துமாறு தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் குடியிருந்து வருபவர் கணபதி. இவருக்கு கந்தசாமி என்ற சசிகுமார் (வயது 28), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    அத்துடன் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனால் சசிகுமார் தினமும் இரவு, பகல் பாராமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். குடிப்பழகத்தை நிறுத்துமாறு அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் பலமுறை அறிவுரை கூறியும் அதனை சசிக்குமார் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை சசிகுமார் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டின் பின்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணபதி எழுந்து வந்து பார்த்தபோது சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் குடும்ப பிரச்சனை காரணமாக உடன்பிறந்த சகோதரரே இந்த கொலையை செய்தாரா அல்லது மது அருந்தும் தகராறில் வேறு யாராவது மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீட்டில் வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லை வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சி முத்துவுடன் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கும்பல் பணகுடி அருகே வைத்து மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு கார்த்திக்கை காரில் கடத்தி சென்றது.

    இந்நிலையில் நேற்று மதியம் ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் அவர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லையை அடுத்த பேட்டையை சேர்ந்த மதன்(23), கோபால சமுத்திரத்தை சேர்ந்த தளவாய்பாண்டி(23), மானூரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோர் சேர்ந்து அல்லல்காத்தான் என்ற கார்த்திக்கை காரில் கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்புரத்தை சேர்ந்தவர் பிச்சைராஜ். அ.தி.மு.க. வட்ட செயலாளராக இருந்த இவர், அப்பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடையவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் பிச்சை ராஜை கொன்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்று அவரது மனைவி பொன்செல்வி புலம்பி வந்துள்ளார். இதைக்கண்ட பிச்சை ராஜின் அண்ணன் மகன் மதன், தங்கை மகன் கார்த்திக் ஆகியோர் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது பிச்சை ராஜை கொலை செய்தவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை பார்ப்பதற்காக அவர்களது நண்பர் அல்லல்காத்தான் என்ற கார்த்திக் நாகர்கோவில் சென்றுள்ளதை மதனும், கார்த்திக்கும் அறிந்துள்ளனர்.

    இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திரும்பி வரும்போது அந்த நபரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு காரில் 2 பேரும் புறப்பட்டுள்ளனர். அப்போது மதன் தனது அக்காள் கணவரான கோபாலசமுத்திரத்தை சேர்ந்த தளவாய் பாண்டியையும் அழைத்துள்ளார். பின்னர் 3 பேரும் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் பணகுடியில் வைத்து கடத்தி சென்றுள்ளனர்.

    இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் கார்த்திக்குடன் வந்த பேச்சிமுத்து தப்பியோடி பணகுடி போலீசில் நடந்த சம்பவங்களை கூறியதன்பேரில் போலீசார் நான்குவழிச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை நேற்று ஆய்வு செய்தபோது தான் அவர்களுக்கு ஏர்வாடி பகுதியில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    மேலும் அவர்களை கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழத்திடியூரை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24).

    இவர் நேற்று இரவு 9 மணி அளவில் பணகுடியில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலை அருகே உள்ள பிலாக்கொட்டை பாறை பகுதியில் வந்த போது எதிரே வந்த ஒரு கார் அவர் மீது மோதியது.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கி, அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

    இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மட்டும் சாலையில் கிடந்தது.

    எனவே அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கார்த்திக்கை மர்ம கும்பல் தாக்கி காரில் கடத்தி சென்றது பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் ஏர்வாடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று தலைதுண்டிக்கப்பட்ட உடலை கைப்பற்றினர். அங்கிருந்து சற்று தொலைவில் துண்டிக்கப்பட்ட தலையும் கிடந்தது. அதனை வைத்து நடத்திய தொடர் விசாரணையில் அவர் நேற்று காரில் கடத்தி செல்லப்பட்ட கார்த்திக் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து, கார்த்திக்கை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை பேட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார் உரிமையாளர் பிச்சைராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான முயற்சியில் கார்த்திக் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனேவே பிச்சை ராஜ் கொலை வழக்கில் பழிக்குப்பழியாக கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் வந்திருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கீழையூரைச் சேர்ந்த அவரது நண்பரான ஜெயராமன் (வயது 42) என்பவரும் கலந்து கொண்டார். பின்னர் ஜெயராமன் மட்டும் அட்டப்பட்டியில் உள்ள வெங்கடேசனின் சமத்துவபுரம் வீட்டிற்கு வந்தார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பரமேஸ்வரியின் வீட்டின் முன்பு கட்டிலை போட்டு தூங்கினார்.

    இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    காலையில் இதைப் பார்த்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ச்சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் மற்றும் பெண் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    • இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் சென்று நடனம் ஆடிக்கொண்டிருந்த 3 பேரிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தகவல் அறிந்த அஜய் உறவினர்கள் பாஸ்கர், அவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது திடீரென்று பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 பேரை சுத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அதிரடியாக தாக்கினார்கள். பின்னர் இரு தரப்பினருக்குள் கடும் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் பாஸ்கர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

    இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் சிவகுரு, சத்யா, அகிலாண்டம், அருண் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
    • விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 27). இவரது மனைவி யாமினி (22). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    தம்பதியினருக்கு குழந்தை இல்லை. விக்னேஷ் தனது மனைவி யாமினியுடன் மாமனார் ஒலிச்சந்திரன் வீட்டில், வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு விக்னேஷ், யாமினி அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனி குடித்தனம் சென்றனர்.

    விக்னேஷ் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு விக்கி மற்றும் யாமினி ஆகியோர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நண்பர் அழைப்பதாக செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    பொழுது விடிந்த பின்பும் விக்னேஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன யாமினி மற்றும் அவரது உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர்.

    அப்போது சித்தேரி ரெயில்வே கேட் அருகே மாந்தோப்பில் கிணற்றின் அருகே விக்னேஷ் கழுத்து அறுத்து ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.

    அவரது உடலை பார்த்து யாமினி கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவில் விக்னேசை அழைத்து கொன்றது யார்? முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகாரின் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.
    • கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. மகன் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கார் டிரைவராக மாரிச்சாமி வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக காரியாபட்டியிலிருந்து தனது வீட்டினை சிவரக்கோட்டை சூர்யா நகருக்கு மாற்றி குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாரிச்சாமி மாட்டுப்பண்ணைக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றார். வழக்கமாக இரவு 8 மணிக்கு வீடு திரும்பிவிடுவார். ஆனால் நள்ளிரவு 12 மணி வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி மாரிச்சாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மாரிச்சாமியின் மனைவி கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.

    பின்னர் சந்தேகமடைந்து அவர் வேலை பார்த்து வந்த மாட்டுப்பண்ணையில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த இரவு நேர காவலாளி, இந்த பண்ணையில் பால்கறவை செய்யும் ஆறுமுகம் மூன்று வாலிபர்களுடன் வந்து சென்றதாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பண்ணையில் உள்ளே சென்று தேடிபார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார்.

    போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிணமாக கிடந்த மாரிச்சாமியின் நெற்றியில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த கள்ளிக்குடி போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    அதில் கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த ஆறுமுகம் இதே பண்ணையில் பால் கறவை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பதும், அவருக்கும் மாரிச்சாமிக்குக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிந்தது.

    அதனால் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகளை கள்ளிக்குடி போலீசார் தேடிவருகின்றனர். மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
    • மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிட்டிக்கோடு கோலயம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ(வயது30). இவர் கடந்த வாரம் கல்லம்பலம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்பு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி ராஜூ இறந்திருக்கிலாம் என்று முதலில் கருதப்பட்டது.

    ஆனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை யாரேனும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆகவே தங்களின் விசாரணையை துரிதப்படுத்தினர். ராஜூவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது ராஜூ இறந்து கிடந்த தினத்தன்று, அவரது நண்பரான சிட்டிக்கோடு வலிகாவு பகுதியை சேர்ந்த சுனில்(41) என்பவருடன் இருந்ததை பார்த்ததாக சிலர் தெரிவித்தனர். இதனால் சுனிலை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்த சுனில், பின்பு ராஜூவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

    அவர் குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவத்தன்று ராஜூவும், சுனிலும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது சுனில் வைத்திருந்த மதுபான கோப்பையை ராஜூ தெரியாமல் தட்டி விட்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சுனில், ராஜூவுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்பு இருவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். ராஜூ அந்த பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றிருக்கிறார்.

    அவரை பின்தொடர்ந்து சென்ற சுனில், குளத்தின் கரையில் வைத்து ராஜூவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ராஜூவை தண்ணீரில் மூழ்கடித்து சுனில் கொலை செய்துள்ளார். அவர் இறந்ததை உறுதிசெய்த பிறகு சுனில் அங்கிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார்.

    நண்பரை கொன்ற சுனில், கடந்த ஒரு வாரமாக வழக்கம்போல் இருந்துள்ளார். இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக் கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுனிலை போலீசார் கைது செய்தனர்.

    மதுபான கோப்பையை தட்டிவிட்ட வாலிபரை அவரது நண்பரே தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (35). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், வெங்கடேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது தெரிகிறது.

    இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவினர் மகனான ஹரீஷ் (23) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.

    அப்போது அந்த பெண்ணுக்கும் , வெங்கடேஷூக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு குறித்து அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேட்டு ஹரீஷ் அந்த பெண்ணை கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு வெங்கடேஷ் வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஹரீஷ், எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் ஹரீஷ் அவரை சரமாரியாக கைகளாலும், கட்டையாலும் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிறிது நேரத்தில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரீஷை கைது செய்தனர்.

    ×