search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் வாலிபர் கொலை: 4 பேர் அதிரடி கைது
    X

    கடலூரில் வாலிபர் கொலை: 4 பேர் அதிரடி கைது

    • இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 34). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவில் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் சென்று நடனம் ஆடிக்கொண்டிருந்த 3 பேரிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தகவல் அறிந்த அஜய் உறவினர்கள் பாஸ்கர், அவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது திடீரென்று பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 பேரை சுத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் அதிரடியாக தாக்கினார்கள். பின்னர் இரு தரப்பினருக்குள் கடும் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் பாஸ்கர் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் மற்றும் சிவகுரு தரப்பை சேர்ந்த திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பரண்டு பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாஸ்கர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் நவநீதம் நகர் மற்றும் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

    இதற்கிடையில் இறந்த பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் இறந்த பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் சிவகுரு, சத்யா, அகிலாண்டம், அருண் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×