search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water opening"

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
    • உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன.அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்து உதவவில்லை.இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.அத்துடன் அமராவதி ஆறு,பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 பழைய வாய்க்கால் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1503.36 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

    நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதனால் அமராவதிஆறு மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்ற புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி)கிர்திகா,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன்,தெற்கு மாவட்ட அவைத்தலைவர், ஜெயராமகிருஷ்ணன் உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி,செந்தில்குமார்,மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி,உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார்,திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன்,பிஏபி பாசன பாசனசங்க தலைவர் மொடக்குப்பட்டி ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து,சௌந்தர்ராஜன், ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம்,செயற் பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன்,உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது.
    • 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் முழுக் கொள்ளலவான 46 அடியில் 44 அடி நிரம்பியது. சம்பா போகத்திற்கு நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும், அணை நீரை திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் விநாடிக்கு 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 55 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிக்கம், மண்மலை, கரடிசித்தூர், சாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 65 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், அம்மாப்பேட்டை, செம்படாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விநாடிக்கு 100 கன அடிநீர் மழைநீர் கோமுகி அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நடப்பு சம்பா போகத்திற்கு தேவையான பாசன நீர் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைநதுள்ளனர். இந்த நீர் திறப்பு விழாவில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவண்குமார் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
    • நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    இதனால் பாலாறு அணைக்கட்டில் நீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல்காட்சி அளிக்கிறது.

    நீர் வரத்து அதிக ரித்துள்ளதை தொடர்ந்து பாலாறு அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 268 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 2 மாதம் ஆகிறது.

    டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும்.

    • 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • பரிசல்கள் இயக்கத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் பரிசல்துறை அருகே பரிசல்கள் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்து வந்தது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    • காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார்.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 17-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 126 கனஅடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று மதியம் வரை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது, காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் முதல், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தண்ணீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.32 அடியாக சரிந்து உள்ளது.

    • மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
    • இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கு கிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    குறுவை பாசனத்துக்கு

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி(நாளை) டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர்

    அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்க ளில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    19-வது முறையாக

    இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்க ளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட

    வைகளை தூர்வா

    ரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ந் தேதியான நாளை(திங்கட்கிழமை) அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவ

    சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சராசரி

    யாக டெல்டா மாவட்டங்க ளில் 3.5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முன்கூட்டியே திறந்ததாலும், பருவமழை கைக்கொடுத்ததாலும், கடைமடை வரை நீர் பாய்ந்து, 4.26 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது.நடப்பாண்டிலும், இதேபோல், அதிக சாகுபடிக்கு திட்டமிட்டு, 80 கோடி ரூபாய் மதிப்பில், டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன. மொத்தம், 120 அடி கொண்ட மேட்டூர் அணையில், 103.48 அடி நீர் மட்டம் இருப்பதால், குறிப்பிட்டபடி நாளை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சராக பெறுப்பேற்ற பின், ஸ்டாலின் தொடர்ந்து 3-வது முறையாக நாளை காலை, மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உள்ளார்.இதன் மூலம், 4 லட்சம் ஏக்கருக்கு மேலாக குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக, விவசாயிகளும், வேளாண்துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 6857 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 265 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி ஆகும். இதில் 693மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் வெப்பத்தின் காரணமாக வீணாவதை தடுக்கும் வகையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2173 மி.கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 2268 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த அளவில் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7768 மி.கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 6875மி.கன அடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனினும் இப்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது.
    • நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் - ஆழியாறு 3ம் மண்டல பாசனத்திற்கு ட்பட்ட 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்தா ண்டு டிசம்பர் 28ல் நீர் திறக்கப்பட்டது. 4 சுற்றுக்கள் நீர் வழங்கப்பட்டு வருகிற 22ல் நிறைவு செய்ய ப்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில் நீர் கசிவை தடுக்க ரூ. 72 கோடி செலவில் நடப்பாண்டு பணி மேற்கொள்ள ப்படுகிறது.பாசனம் நிறைவு பெற்றதும் உடனடியாக பணியை துவக்கவும், வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் நிறைவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பயன்பெறும் 5 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தினமும் 21 மில்லியன் கன அடி நீர் தேவை உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில் 28.69 அடி நீரும், மொத்த கொள்ளளவான 1,337 மில்லியன் கனஅடியில் 802.86 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது.நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பராமரிப்பு பணி முடிய 4 மாதமாகும். குடிநீர் மற்றும் அணை உயிரினங்கள், வன விலங்குகளுக்கு தேவையான அளவு நீர் இருப்பு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமி கூறுகையில், தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக ஏப்ரல் 30ந் தேதி வரை தண்ணீர் பெறப்படும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. விவசாயி கள் கோரிக்கை அடிப்ப டையில், பாசன காலம் இரு நாட்கள் நீட்டிக்கப்ப ட்டுள்ளது என்றார்.

    • அணையின் நீர்மட்டம் 89.63 அடியாக குறைந்து உள்ளது.
    • அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.63 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,156 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேபோல் காளிங்கராயன் பாசனத்தி ற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.
    • இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீர்மட்டம் 52.55 அடியாக உயர்ந்து, 141.81 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில், 2 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, பிப்ரவரி 23-ந் தேதி காலை முதல் தொடர்ந்து 16 நாட்களுக்கு தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம் ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்காக வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் வினாடிக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தண்ணீரை திறந்து வைத்தார். இவ்விழாவில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சக்கரவர்த்தி, ஏற்காடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணை செயலாளர் குறிச்சி பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அத்தனூர்பட்டி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் புழுதிக்குட்டை அறிவழகன், குறிச்சி கலா பெரியசாமி மற்றும் தி.மு.க பிரமுகர்கள் குறிச்சி சடையன், கனகராஜ், பேளூர் நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைமடைக்கு வரை சென்று சேருவதில் தாமதம் ஆகும் நிலை உள்ளதால் விசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    பூதலூர்

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கல்லணையில் இருந்து கடந்த 27ம் தேதி மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை சென்றடைந்த பின்னர் கிளை வாய்க்கால்கள் திறக்கப்படும். முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி செய்ய எண்ணி இருந்த விவசாயிகள் பருவமழை துவங்குவதற்கு முன்பாக அறுவடை செய்து விடலாம் என்று எண்ணினர்.

    ஆனால் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. இன்று காலை நிலவரப்படி காவிரியில் 2820 கன அடியும், வெண்ணாற்றில் 810 கன அடியும், கொள்ளிடத்தில் 411 கன அடியும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்வள ஆதார துறை தெரிவித்துள்ளது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மிக குறைந்த அளவு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கடை மடைக்கு தண்ணீர் சென்று சேருவது தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் முழு அளவில் தண்ணீர் திறப்பது எப்போது? கிளை வாய்க்கால்கள் தண்ணீர் திறப்பு எப்போது? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×