search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
    X
    உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட காட்சி. 

    உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
    • உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன.அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்து உதவவில்லை.இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.அத்துடன் அமராவதி ஆறு,பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 பழைய வாய்க்கால் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1503.36 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

    நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதனால் அமராவதிஆறு மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்ற புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி)கிர்திகா,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன்,தெற்கு மாவட்ட அவைத்தலைவர், ஜெயராமகிருஷ்ணன் உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி,செந்தில்குமார்,மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி,உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார்,திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன்,பிஏபி பாசன பாசனசங்க தலைவர் மொடக்குப்பட்டி ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து,சௌந்தர்ராஜன், ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம்,செயற் பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன்,உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×