search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veeraraghava perumal temple"

    • 19-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் சித்திரை ஆகிய இரு மாதங்களில் பிரம்மோற்சவ விழா நடைபெறும். தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை மாத பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவ விழா நடை பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு தை மாத  பிரம்மோற்சவ விழா இன்று காலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தங்கச் சப்பரம் வீதி உலா நடை பெற்றது. இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.

    பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான வருகிற 19-ந் தேதி காலை 5மணிக்கு கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் 7-ம் நாளான வருகிற 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டமும், 26-ந்தேதி இரவு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.

    பிரம்மோற்சவ நாளில் தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதிஉலா வருகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். கொரோன கட்டுப்பாடுகள் தற்போது முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது.

    திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா வருகின்ற 17-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் சப் கலெக்டர் மகாபாரதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

    அப்போது தேர் செல்லும் நான்கு மாட வீதிகளில் சாலை வசதி, மின் கம்பங்கள் சரியான உயரத்தில் இருக்கிறதா, மின் வயர்கள் உரசாத அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறதா, சாலையோர கடைகள் இருந்தால் அதை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் போது உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்தர் சுக்லா, நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜே.தஸ்நேவிஸ் பெர்னாண்டோ, மின்வாரிய அதிகாரிகள் யுவராஜ், தட்சிணாமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ, டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, வருவாய் ஆய்வாளர் கணேஷ் வீரராகவர் கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • 19-ந்தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை மற்றும் சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரம்மோற்சவம் நடைபெற்றது.

    கொரோனா தொற்று நீங்கிய நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம், வருகிற 17-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.

    இதனால் வீரராகவப் பெருமாள் எழுந்தருளும் திருத்தேர் உள்பட பல்வேறு வாகனங்களை கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

    அதைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான 19-ந்தேதி காலை கருட சேவையும் கோபுர தரிசனமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 5-வது நாளான 21-ந் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையையொட்டி ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான 23-ந் தேதி (திங்கள்கிழமை) காலை தேரோட்டம் நடைபெறும். 10-வது நாளான 26-ந் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.

    • விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.
    • தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.

    மூலவர்:வீரராகவப் பெருமாள்

    தாயார்:கனக வல்லித் தாயார் (வசுமதி).

    தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.

    இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இங்குள்ள கல்வெட்டுகள் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.

    தல வரலாறு

    புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்குப் படைத்த பின்பு உண்பவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாகப் பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.

    ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் தல வரலாறு.

    அதன் பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அது வரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கியத் திருப்பெயராக விளங்கிற்று.

    இக்கோவிலின் இறைவன் "வைத்திய வீரராகவர்" என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.

    ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோவிலில் வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காணப்படும் வகையில் காணப்படுகிறார். மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

    மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கனகவல்லி தாயார் சன்னதி அருகில் ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதிகளும் அமைந்துள்ளன.

    இக்கோவிலில் இடம்பெற்றுள்ள சாலி கோத்திர மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

    சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தலத்துப் பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. இது தவிரப் பிரம்மோற்சவம், சித்திரை உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டுத் தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தவச்சத பெருமாளுக்கும் கண்ண மங்கை தாயாருக்கும் தினசரி ஆறு கால பூஜை பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

    • முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும்.
    • 1-ந்தேதி 2023 வரை தைலக்காப்பு நடைபெறுகிறது.

    108 வைணவ திருத்தலங் களில் ஒன்றாக திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.

    தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அமாவாசை நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி விட்டு சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்வது விஷேசம் ஆகும்.

    ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க கவசமும் தைலக் காப்பும் சாற்றுவது வழக்கம்.

    இந்நிலையில் மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளுக்கு 6-ம்தேதி முதல் 8-ந் தேதி (இன்று) வரை தங்க கவசமும் சாற்றப்படுகிறது. வருகிற 9-ந்தேதி முதல் ஆங்கில வருட பிறப்பு 1-ந்தேதி 2023 வரை தைலக்காப்பு நடைபெறுகிறது.

    இந்த தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும் முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசித்துச் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில் சிறப்பு வழிபாடு.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 108 திவ்ய தேசங்களில் உள்ள திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவர் பெருமாள் கோவில், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியில் கடைசி சனிக்கிழமையான இன்று அதிகாலை முதலே ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் குவிந் தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    இதேபோல் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்க டேச பெருமாள் கோவிலும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
    • நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது.

    இதற்காக கோவிலுக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.

    மேலும் நவராத்திரி விழா காலத்தில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதேபோல் ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் தினசரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • மூலவர் வீரராகவரை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    • கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவே சென்னை, காஞ்சீபுரம், மற்றும் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவர்கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் கோவில் குளக்கரை அருகேயும், காக்களூர் பாதாளவிநாயகர் கோவில் அருகேயும் புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் நிரம்பி வழிந்ததால் மூலவர் வீரராகவரை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ரூ.250 கட்டணத்தில் சிறப்பு தரிசனமும் அனுமதிக்கப்பட்டது.

    கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள் கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இன்று மாலை வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
    • நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் அமா வசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கோவில் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவ பெருமாள், மூலவர் வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் நாளை மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
    • வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது.

    திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் வசந்த விழா தொடங்குகிறது.

    மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருள்வார்.

    அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார்.

    வசந்த உற்சவம் விழா வருகிற 10-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனத்தில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ம் நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட தேரோட்டம் நடைபெற்றது.

    திருத்தேரில் காலை 7மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 9ம் தேதி இரவு 8மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா நடைபெற உள்ளது.

    துணை சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஆய்வு செய்தார். கோயில் வளாகம் பராமரிப்பு குறித்து அவர் பார்வையிட்டார். #VeeraraghavaPerumalTemple
    திருவள்ளூர்:

    தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில், பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, கோயில் வளாகம் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு நடத்த வேண்டும்.

    வரும் 30ம் தேதிக்குள் இதற்கான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி அகோபில மடத்துக்கு சொந்தமான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் ஆய்வு செய்தார். அப்போது கோயில் வளாகம் பராமரிப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் எச்சரிக்கை அலாரம், ஊழியர்களின் வருகை பதிவேடு, வரவு செலவு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதை நேரில் பார்வையிட்டார்.

    கோயிலின் முன்பாக உள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த நீதிபதி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் சிலரிடம் கோயிலில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் நீதிபதி செல்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 752 திருக்கோயில்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே திருவேற்காடு, திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் ஆய்வு செய்துள்ளோம்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்திற்கு வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை அனுப்பி வைக்க இருக்கிறோம்.

    இவ்வறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத், தேவஸ்தான ஊழியர்கள் உடன் இருந்தனர். #VeeraraghavaPerumalTemple

    ×