search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "valentines day"

    • ஸ்டோய்னிஸ் கன்னத்தில் ஜாம்பா முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    • ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர்.

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கெளரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜாம்பா ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது. 

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை ஒட்டி கூடுதல் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • புதிய அறிவிப்பின் கீழ் மூன்று பிரீபெயிட் சலுகைகளில் முன்பை விட கூடுதல் பலன்களை வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி காதலர் தின ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. இதில் ரூ. 121 மதிப்புள்ள 12 ஜிபி கூடுதல் டேட்டா, வேலிடிட்டி மற்றும் கூப்பன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதல் பலன்கள் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 விலை சலுகைகளில் மட்டும் வழங்கப்படுகிறது.

    காதலர் தின ஆஃபர் விவரங்கள்:

    ரூ. 349, ரூ. 899 மற்றும் ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் சலுகைகளில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் 75 ஜிபி + 12 ஜிபி டேட்டாவும், ரூ. 899 மற்றும் ரூ. 349 சலுகைகளில் 12 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. வேலிடிட்டியை பொருத்தவரை ரூ. 2 ஆயிரத்து 999 சலுகையில் வழக்கமாக வழங்கப்படும் 365 நாட்களுடன் 23 நாட்கள் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இதர பலன்களை பொருத்தவரை மூன்று சலுகைகளுடன் மெக்டொணால்டு-இல் ரூ. 199 மற்றும் அதற்கும் அதிக விலையில் பொருட்களை வாங்கும் போது ரூ. 105 மதிப்புள்ள மெக் ஆலூ டிக்கி / சிக்கன் கேபாப் பர்கர் இலவசமாக பெறலாம்.

    இத்துடன் ஃபெர்ன் அண்டு பெட்டல்ஸ்-இல் ரூ. 799-க்கு வாங்கும் போது ரூ. 150 தள்ளுபடியும், இக்சிகோவில் விமான முன்பதிவு ரூ. 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமாக மேற்கொள்ளும் போது ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    காதலர் தின சலுகைகள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. இதற்கு பயனர்கள் ரூ. 239 அல்லது அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய பிரீபெயிட் சலுகை ஜியோ வலைதளம், மைஜியோ செயலி மற்றும் மூன்றாம் தரப்பு ரிசார்ஜ் செக்பாயிண்ட்களில் கிடைக்கிறது.

    • காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

    காரைக்குடி:

    உலகமெங்கும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதற்கு சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருடந்தோறும் நூதன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள 2 தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர்.

    அப்போது காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் கோஷமிட்டனர்.

    காதலர் தினமென்ற பேரில் பொது இடங்களில் சில காதலர்கள் தகாத செயல்களை செய்கின்றனர். இதனை கண்டித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

    • அமேசான் வலைதளத்தில் காதலர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • ஸ்மார்ட்வாட்ச், இயர்போன், டேப்லெட், என ஏராளமான பிரிவுகளில் மின்சாதனங்கலுக்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    காதலர் தினத்தை ஒட்டி அமேசான் வலைதளத்தில் Fab Phones Fest Sale அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மற்றும் தள்ளுபடிகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல் ரூ. 77 ஆயிரத்து 899 முதல் கிடைக்கிறது. இதில் அனைத்து சலுகை மற்றும் வங்கி தள்ளுபடிகள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அமேஸ்ஃபிட் GTS 2 மினி ஸ்மார்ட்வாட்ச் வங்கி தள்ளுபடி மற்றும் சலுகைகளை சேர்த்து ரூ. 4 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. நாய்ஸ்ஃபிட் ஃபோர்ஸ் ரக்கட் மாடல் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

     

    ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் வயர்டு இயர்போன்கள் பிரிவில் போட் ஏர்டோப்ஸ் 141 மாடல் ரூ. 1,099 விலையிலும், ஜெபிஎல் வேவ் 200 மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையிலும், நாய்ஸ் பட்ஸ் VS201 V2 மாடல் ரூ. 999 விலையிலும் சென்ஹெய்சர் IE 100 ப்ரோ இன்-இயர் வயர்டு இயர்போன் ரூ. 6 ஆயிரத்து 900 விலையில் கிடைக்கிறது. சியோமி பேட் 5 மாடல் ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் ரியல்மி பேட் வைபை 4ஜி டேப்லெட் மாடல் ரூ. 17 ஆயிரத்து 189 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வங்கி சலுகைகள்:

    ரூ. 4 ஆயிரத்து 999 மதிப்புள்ள பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ மேக்ஸ் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளில் பத்து சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீத தள்ளுபடி அல்லது அதிகபட்சம் ரூ. 1250 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    வங்கி தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகளில் சேர்க்கப்படுகிறது. விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    Source: fonearena

    • பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனினும் உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டம் மாறுபடுகிறது. சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு தேதியில் கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் காதலர் தினத்தை வேறொரு பெயரில் கொண்டாடி மகிழ்கிறார்கள். காதலர் தின பரிசு பொருட்களும் வித்தியாசப்படுகிறது. அத்தகைய காதலர் தின கொண்டாட்டம் பற்றி பார்ப்போம்.

    சீனா

    சீனாவில் கொண்டாடப்படும் `கியூஸி' திருவிழா காதலர் தினத்திற்கு இணையாக கருதப்படுகிறது. அதனையே அந்நாட்டு மக்கள் காதலர் தினமாக கொண்டாடுகிறார்கள். இது அந்நாட்டு காலண்டரில் சந்திர மாதத்தின் ஏழாவது நாளில் வருகிறது. அதாவது ஆகஸ்டு மாதம் சீனாவின் காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் இளம் பெண்கள் ஜினு என்னும் தெய்வத்திற்கு பழங்களை பிரசாதமாக படைத்து, தனக்கு நல்ல துணைவனை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகிறார்கள். திருமணமான தம்பதியர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள்.

    இங்கிலாந்து

    பிப்ரவரி 13-ந் தேதி இரவு இளம் பெண்கள் தலையணையின் நான்கு மூலைகள் மற்றும் மத்திய பகுதி என ஐந்து பிரியாணி இலைகளை வைத்தபடி தூங்குவார்கள். தங்கள் வருங்கால கணவனைப் பற்றிய கனவுகள் வருவதற்காக இந்த முறையை பின்பற்றுகிறார்கள். திருமணமான தம்பதியர் பிப்ரவரி 14-ந் தேதி ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறி காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்வார்கள். இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டபடி தங்கள் காதல் உணர்வுகளை பரிமாறிக்கொள்வார்கள்.

    பிரேசில்

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பாரம்பரிய திருவிழா நடத்தப்படுவதால் அங்கு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதில்லை. அதற்கு மாற்றாக ஜூன் 12-ந் தேதி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அப்போது சாக்லெட்டுகள், வாழ்த்து அட்டைகள், பூக்கள் போன்றவற்றை பரிமாறிக்கொள்கிறார்கள்.

    கானா

    கோகோ ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பதால் காதலர் தினத்தை சாக்லெட்டுடன் தொடர்புபடுத்திவிட்டார்கள். 2005-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 14-ந் தேதி அங்கு சாக்லெட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு சாக்லெட் மற்றும் கோகோ பொருட்களை பரிமாறி மகிழ்கிறார்கள்.

    இத்தாலி

    இத்தாலியர்கள் காதலர் தினத்தை பரிசு பரிமாற்றங்களுடன் கொண்டாடுகிறார்கள். அங்கு பிரபலமான காதலர் தின பரிசுகளில் ஒன்று பாசி பெருகினா. இதுவும் ஒருவகை சாக்லெட்தான். அதில் சில நட்ஸ் வகைகள், பால் பொருட்கள் கலந்திருக்கும். அதனுடன் காதல் வாசகங்கள் அச்சிட்டப்பட்ட வாழ்த்து அட்டையை பரிசாக வழங்குகிறார்கள்.

    அர்ஜெண்டினா

    இங்கு வசிப்பவர்கள் பிப்ரவரியில் காதலர் தினத்தை பாரம்பரியமாக கொண்டாடு வதில்லை. அதற்கு பதிலாக, ஜூலை மாதம் கடைப்பிடிக்கப்படும் `சுவீட் வீக்' எனப்படும் இனிப்பு வாரத்தில் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பரிசுப் பொருட்கள் மற்றும் சாக்லேட்டுகளை காதலர்கள் பரிமாறிக்கொள்கிறார்கள்.

    தைவான்

    தைவானில், பிப்ரவரி 14-ந் தேதி மட்டுமின்றி ஜூலை 7-ந் தேதியும் ஆண்கள் பெரிய பூங்கொத்துகளை காதல் பரிசாக வழங்குவார்கள். இளம் பெண் ஒருவர் 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை பரிசாக பெற்றால் அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார் என்று அர்த்தம்.

    பின்லாந்து

    பின்லாந்தின் காதலர் தினம் ஆண்-பெண் இருபாலருக்கானது அல்ல. தங்கள் நண்பர்களுடன்தான் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாட்டு மொழியில் இந்த நாள் நண்பர்களின் தினம் என்று அழைக்கப்படுகிறது.

    ஜப்பான்

    ஜப்பானிய இளம் பெண்கள் பிப்ரவரி 14 அன்று தங்களுக்கு பிடித்தமான ஆண் தோழர்களுக்கு பரிசுகள் மற்றும் சாக்லெட்டுகளை வழங்குகிறார்கள். அதன் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தோழமையுடன் பழகும் ஆண் நண்பர்களிடத்தில் தங்களுக்கு காதல் இல்லை என்பதை உணர்த்தும் வகையிலான சாக்லெட்டுகளும் பரிமாறப்படுகின்றன. அன்றைய தினம் ஆண்கள் பரிசு பொருட்கள் எதுவும் வழங்குவதில்லை. ஒரு மாதம் கழித்து மார்ச் 14-ந் தேதியை ஜப்பானிய ஆண்கள் காதலர் தினமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    தென் ஆப்பிரிக்கா

    உலகின் பல பகுதிகளைப் போலவே, தென் ஆப்பிரிக்காவில் அன்பின் அடையாளமாக மலர்களை பரிசளித்து காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். பெண்கள் தங்கள் காதலர்களின் பெயர்களை தாங்கள் அணியும் ஆடையில் பதிக்கும் வழக்கமும் இருக்கிறது.

    பிலிப்பைன்ஸ்

    இங்கு பிப்ரவரி 14-ந்தேதி காதலர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாளாக அமைந்துவிடுகிறது. காதலர் கள் அனைவரும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒன்றாக திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.

    அமெரிக்கா காதலர்கள், திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டிப்போட்டு பரிசுகள் வழங்கி காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், சாக்லெட்டுகள், மலர்கள் என இவர்களின் காதல் கொண்டாட்டம் முடிந்துவிடுவதில்லை. நகைகளை பரிசளிக்கும் வழக்கமும் இருக்கிறது. அதனால் அமெரிக்காவில் காதலர் தினத்தன்று சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அங்கு பணம் புழங்குகிறது.

    ஜெர்மனி

    ஜெர்மனியில் பன்றிகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றன. எனவே காதலர் தினத்தில் பன்றி சிலைகளை பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு பன்றி உருவம் பொறித்த பொம்மைகள், சிற்பங்களை வழங்குவதுடன் சாக்லெட்டுகள் மற்றும் மலர்களையும் பரிமாறுகிறார்கள்.

    சென்னையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டி நூதன போராட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #ValentinesDay

    ராயபுரம்:

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா தளங்களில் காதல் ஜோடிகள் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டத் தில் ஈடுபட்டன.

    கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் தர்ம ரக்ஷா சபா சார்பில் அதன் மாநில தலைவர் செல்வம் உள்பட 3 பேர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். அப்போது நாய் ஒன்றுக்கு செல்வம் தாலி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அவர் தாலி கட்டியது ஆண் நாய் என்பதை தெரிந்ததும் அப்பகுதி மக்கள் இடையே சிரிப்பலை எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து செல்வம் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    காதலர் தினத்துன்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் எறும்புக்காடு சந்திப்பில் இந்து மகா சபா சார்பில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    நாற்காலிகளில் 2 நாய்களை அமர வைத்து அதற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் திருமணம் போலவே புது ஆடைகள், வளையல்கள், பூக்களை தட்டில் வைத்திருந்தனர். மாலை மாற்றி நாய்களுக்கு திருமணம் செய்ததும், பூக்களை தூவினார்கள். மேலும் நாய்களுக்கு பால், பழமும் ஊட்டப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வரும் காதல் ஜோடிகளை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம். காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர். #ValentinesDay

    கோபியில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து முன்னணியினர் ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணத்தை நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #ValentinesDay
    கோபி:

    இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

    இந்த காதலர் தினத்துக்கு இந்து முன்னணி சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு நூதனப்போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு காதலர் தினத்தன்று ஏராளமான காதலர்கள் ஜோடி-ஜோடியாக வருவார்கள்.

    அவர்களை தடுக்கும் வகையில் கொடிவேரி அணையில் நுழைவு பகுதியில் இன்று காலை இந்து முன்னணியினர் சிலர் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் ஒரு ஆட்டுக்கும்- நாய்க்கும் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அவர்கள் “காதலர் தினத்தை வெறுப்போம் காதலர்களை விரட்டுவோம்”என்று கோ‌ஷமிட்டனர்.

    இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்து முன்னணியினரின் போராட்டத்தால் கொடிவேரி அணைக்கு வந்த காதல் ஜோடியினர் ஜகா வாங்கினர். அவர்கள் சென்ற பிறகு இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு சென்றனர். காதல் மொழி பேசி மகிழ்ந்தனர். #ValentinesDay
    காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம். #ValentinesDay
    இன்று (பிப்ரவரி 14-ந் தேதி) உலக காதலர் தினம்.

    காதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை காதலைப் பற்றி எழுதப்படாத இலக்கியங்கள் இல்லை. திருக்குறளின் இன்பத்துப்பாலை விட யாரால் காதலை உயர்வாகச் சொல்லிவிட முடியும்?

    தலைவன் தலைவியைப் பார்த்து, யான் நோக்கும் போது நிலம் நோக்குகிறாய், நான் நோக்காத போது நீ எனை நோக்குகிறாய் என்று சொன்னார் வள்ளுவர். அன்புடைய நெஞ்சங்கள் ஒன்றாகக் கலப்பதை செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல என்று குறுந்தொகை இலக்கியம் முன்வைத்தது. மகாகவி பாரதி, “உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்று சொல்லி, “காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்” என்று பாடினார்.

    சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியாரின் அற்புத வரிகள் தமிழ்க் காதலின் சான்றுகள், தமிழின் அடையாளமாகத் திகழும் தொல்காப்பியம், தமிழரின் வாழ்வை களவு வாழ்க்கை என்றும், கற்பு வாழ்க்கை என்றும் அழகாகப் பிரித்துக்காட்டுகிறது. ஆனால் இன்று காதல் அதே உன்னதத்தோடு இருக்கிறதா? அன்பர்கள் தினம் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பிப்ரவரி 14-ந் தேதியை வேலன்டைன் தினம் எனும் காதலர் தினமாக உலகநாடுகள் கொண்டாடத் தொடங்கின. உலகநாடுகள் முழுக்க வாழ்த்து அட்டைகளால் தங்கள் அன்பைத் தெரியப்படுத்தியதைப் பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. வெளிநாடுகளைப் பார்த்து எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நாம், எது உண்மைக் காதல் என்று வரையறுக்காமல் காதலர் தினத்தையும் அப்படியே இறக்குமதி செய்துகொண்டோம்.

    கண்டதும் காதல், வாட்ஸ்-அப் காதல், முகநூல் காதல், டுவிட்டர் காதல், பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு காதல்களாய் உருப்பெற்று ஒரு பிப்ரவரியில் மலர்ந்து, அடுத்த பிப்ரவரியில் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று விவாகரத்து மனுவைத் தந்துகொண்டிருக்கும் நிலையைக் கண்டுகொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பின் ஆதாரமாகத் திகழும் காதல், வேறுவேறு வடிவங்களில் இன்று விஸ்வரூபம் எடுத்து நம் குடும்பங்களைக் கண் எதிரே குலைத்துக் கொண்டிருப்பதை அன்றாடச் செய்தித்தாள்களின் செய்திகளிலிருந்து கண்கூடாய்க் கண்டுகொண்டிருக்கிறோம்.

    இருவரின் மனம் தொடர்பான காதல் இன்று சமூகத்தின் போக்கால் மடைமாற்றம் செய்யப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்படும் கொண்டாட்டச் செய்தியாய் மாறியுள்ளது. தங்க ஊசி கையில் இருக்கிறது என்பதற்காக நம் கண்களைக் குத்திக்கொள்ள முடியுமா? எனும் கேள்வி எழுந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பதின் பருவத்து பிள்ளைகள் காதலர் தினம் என்ற பெயரில் படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து தங்கள் எதிர்கால வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    வீக்கத்தை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள இயலுமா? எது காதல்? எது காதல் இல்லை என்பது பெரும்பாலும் வாழ்வைத் தொலைத்த பின் தான் இருபாலருக்கும் தெரிகிறது. காதல் தோல்விகள் இளையோரின் உயிரைக் குடிக்கும் செயலாக மாறும்போது சமூகம் சங்கடப்படுகிறது. ஒன்றுபட்ட அன்புடைய இரு உள்ளங்கள் கலப்பதை சங்கத்தமிழர்கள் அகம் என்று சொன்னார்கள், அதாவது இருவரின் உள்ளம் சார்ந்த செயல் என்று சொன்னார்கள். ஆனால் காதல் என்ற பெயரில், சம்பந்தமே இல்லாத பெண்களின் வாழ்வில் விளையாடும் கொடூரங்களைக் கண்டபின்னும் காதலர் தினக் கொண்டாட்டங்கள் இனியும் நம் தமிழ் மண்ணில் நிகழவேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது.



    உலகம் வாழ்த்து அட்டைகளால் காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன்னால், தமிழ் மண்ணில் காதலே பூக்கவில்லையா? எல்லாவற்றையும் இலைமறை காயாய் கற்றுத்தந்த மண் தமிழ்மண். எல்லாருக்கும் தெரிய வெளிப்படையாகச் சொல்வதா காதல்? பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன், “பட்டணத்துக் காதலப்பா பாதியிலே மறையுமப்பா! பட்டிக்காட்டுக் காதலுக்குக் கெட்டியான உருவமப்பா” என்று பாடியதை மனம் நினைத்துப் பார்க்கிறது.

    எல்லோர் முன்னிலையிலும் விரும்பவில்லை என்று சொன்னதற்காக முகத்தில் அமிலம் வீசிக் கொல்லப்பட்ட இளம்பெண்களின் வரலாறுகள், தான் காதலித்த பெண் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாள் என்பதற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்களின் இறப்புகள் நம்மை வெகுவாகச் சங்கடப்படுத்துகின்றன. ஏதோவொரு திரைப்படத்தில் வந்துவிட்டது என்பதற்காகத் திரைப்படத்தின் மாய பிம்பங்களைப் போல் தன்னையும் மாற்றிக்கொண்டு தொடர்பே இல்லாத அப்பாவிப் பிள்ளைகளின் வாழ்வை அவர்களின் எதிர்காலத்தை நசுக்கிப் போடுவோரை காதலர் தினம் என்ற பெயரில் ஏன் நாம் கொண்டாடவேண்டும்?

    எதிர்பாலினத்தைக் காதலுக்குரிய பிம்பமாக மட்டும் அறிவார்ந்த சமூகம் பார்க்கவேண்டுமா? ஆண்,பெண் அன்பின் உன்னத அடையாளமாய் திகழ்ந்த காதல் இன்று தடம்மாறி சமூகத்தின் குடும்ப உறவுகளைக் குலைக்கும் அளவு செல்லும் நாளில் அதை நேர்வழிப்படுத்துவது கடமையாகும்.

    மிக நளினமாக இலைமறை காயாய் வெளிப்படுத்தப்பட்ட காதல் இன்று அப்பட்டமாய் பொதுவெளியில் வெளிப்படையாக வெளிப்படுத்தப்படுகிறது. உள்ளத்தின் அன்பு காதல், மாசுமருவற்ற பாசம் காதல், எதிர்பாலினத்தை மதிப்பது காதல், செய்யும் தொழிலை நேசிப்பது காதல், அழகு பார்த்து மட்டும் வருவதல்ல காதல், மனதின் உண்மை முகம் பார்த்து வருவதுதான் உண்மைக் காதல்.

    கண்டதே காதல் கொண்டதே கோலம் என்பதல்ல காதல், ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின் வருவதே உண்மைக்காதல். மோதலில் தொடங்கி காதலில் நிறைவுற வாழ்க்கை ஒன்றும் மூன்று மணிநேரத் திரைப்படம் இல்லை. காதல் தியாகத்தின் அடையாளம், விட்டுக்கொடுத்தலின் அடையாளம். உயர்ந்த இல்லறத்தின் அடையாளம். உள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைத்து உயர்ந்த காதலை அவரவர் உள்ளங்களில் கொண்டாடுவோம்.

    முனைவர் சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.
    காதலர் தினத்தை முன்னிட்டு 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ. 100 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார். #ValentinesDay
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, பேரிகை, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பசுமை குடில் அமைத்து ரோஜா சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக பேரிகை பகுதியில்தான் அதிகளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல கர்நாடக விவசாயிகளும் நிலங்களை குத்தகைக்கு எடுத்து ரோஜா சாகுபடி செய்தனர்.

    இந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் ரோஜா உற்பத்தியில் ஆர்வம் காட்டினர். இந்த தொழிலில் 2 லட்சம் பேர் ஈடுபட்டனர்.

    சாகுபடி செய்யப்பட்ட ரோஜாக்களை அந்தந்த நிலங்களுக்கே வந்து தனியார் நிறுவன அதிகாரிகள் கொள்முதல் செய்து சென்றனர். இதனால் இந்த ஆண்டு ரோஜா ஏற்றுமதி அதிகளவில் இருந்தது.

    துபாய், குவைத், ஆஸ்திரேலியா, லெபனான், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ரோஜா பூக்கள் அனுப்பப்பட்டன. குறிப்பாக காதலர்கள் விரும்பிய தாஜ்மகால் என்று அழைக்கப்படும் சிகப்பு ரோஜா சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டினர்.

    தாஜ்மகால், டோராக்ஸ், நோப்ளாஸ், கார்னியா, பர்னியர், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலாஞ்ச், கார்பெட், டிராபிக்கள் அமேசான், பர்ஸ்ட்டு ரெட், கிராம் காளா உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜா மலர்கள் காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.

    இந்த ஆண்டு பனியின் தாக்கம் அதிகம் இருந்தாலும், பசுமை குடிலை சுற்றி பனி பெய்யாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் 2½ கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் ரூ. 100 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

    வழக்கமாக மற்ற நாட்களில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ரூ. 20 முதல் ரூ. 50 வரை விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு உள்ளூரிலேயே 20 ரோஜா மலர்கள் கொண்ட பஞ்ச் ரூ.300 வரை விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு அனுப்பிய ரோஜாக்களால் இந்த ஆண்டு கூடுதல் விலை கிடைத்ததாகவும், ஒரு ரோஜா பூ ரூ. 25 வரை விலை போனதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கும் இந்த ஆண்டு ரோஜா அனுப்பி அதன் மூலம் ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். #ValentinesDay
    வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. #ValentinesDay
    ஓசூர்:

    வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்துக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த ரோஜாவுக்கு அதிக கிராக்கி உண்டு. குறிப்பாக சிவப்பு நிற ரோஜாக்களை வெளிநாட்டு காதலர்கள் வாங்கி தங்களது காதலிகளுக்கு கொடுப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு ஒரு கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டப்பயிர்கள் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுமைக்குடிலில் விளையும் ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

    தாஜ்மகால் எனப்படும் சிவப்பு ரோஜா மலருக்கு அரபு நாடுகளில் அதிக வரவேற்பு காணப்படுகிறது.

    இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளிநாடுகளுக்கு 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மலர் சாகுபடி நடைபெற்றது. ஆனால் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு காரணமாக ரோஜா உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால், ஏற்றுமதி இலக்கு ஒரு கோடியாக குறைந்துவிட்டது.

    பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்துக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி பணிகள் கடந்த மாதம் (ஜனவரி) 25-ந் தேதி தொடங்கியது. வரும் 10-ந்தேதி வரை பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    ஓசூரில் இருந்து ரோஜா மலர்கள் பேக்கிங் செய்யப்பட்டு பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இன்றுவரை 60 சதவீதம் ஏற்றுமதி பணிகள் முடிந்து உள்ளன.

    ஒரு ரோஜா மலரின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓசூரில் இருந்து ரோஜாக்கள் ஏற்றுமதி செய்வது போல ஊட்டியில் இருந்து கார்னேசன் மலர்கள் காதலர் தினத்துக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த திருச்சிகடி, கக்கூஜி, தும்மனட்டி, மைநிலை, கொடநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், தர்புரா, அஷ்டமரியா ஆகிய மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடு களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.



    குறிப்பாக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற மலர்கள் தான் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. காதலை சொல்லும் நிறமாக இந்த 3 நிறங்களும் இருப்பதால் இந்த மலர்களுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது.

    இதுகுறித்து மலர் உற்பத்தியாளர் அனுசியா சுந்தர் கூறியதாவது:-

    சிவப்பு நிற கார்னேசன் மலர் காதலை சொல்வதற்கு ஒரு சிறந்த மலர் ஆகும். இதனால் அதற்கு மிகுந்த கிராக்கி உண்டு. மிகக்குறைந்த விலையில் அந்த கர்னேசன் மலர் கிடைப்பதால் காதலர்கள் இந்த மலரை வாங்கி காதல் பரிசாக அளிக்கிறார்கள். இந்த கார்னேசன் மலர்கள் ஊட்டியில் இருந்து சென்னை, பெங்களூரு, பூனே ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த கார்னேசன் மலர் ஊட்டியில் அதிக அளவில் பயிரிடப்படுவதால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ValentinesDay
    ×