search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN fishermen"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 5-ந்தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது. அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 22 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
    • ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது வழக்கம்போல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியான இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கி விரட்டியடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படை எச்சரித்தது.

    இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். இவ்வாறு அவசர கதியில் திரும்பும்போது மீனவர்களின் படகுகள் ஒன்றொடு ஒன்று மோதி சேதமடைந்தன.

    இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகுகளுக்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்த போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
    • மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோடியக்கரை தென்கிழக்கே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராஜ்குமார் (வயது40) என்பவரது விசைப்படகில் அவருடன் தங்கவேல் (48), ஆறுமுகம் (47), பிரபு (42), மணிவேல் (50), மதன் (27) மற்றும் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள், கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று காலை கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக துப்பாக்கி முனையில் 11 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவகிராம பஞ்சாயத்தார், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினரின் தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு.
    • பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாகை:

    நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தனர்.

    பின்னர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு நாகை மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது.
    • இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர்.

    ராமேசுவரம்:

    இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள கடல் பரப்பில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அதாவது தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டி அடிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாமல் போவது மட்டுமின்றி, லட்சக்கணக்கில் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் வெகுநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிலையில் நேற்று எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 524 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.‌ அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களின் 8 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த படங்களில் ஏறிய இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரையும் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி கம்பு மற்றும் கற்களால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியது குறித்து சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.

    அதனைக்கேட்டு மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

    தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து மத்திய மற்றும் மாநில உளவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது.
    • இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கொழும்பு:

    புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 5 விசைப் படகுகளை பறிமுதல் செய்து, 24 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து 24 பேரும் சிறையிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து ஊர் காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வர தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்களும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • மீனவ சமுதாய மக்களுக்கு தமிழக பாஜக என்றும் அரணாக இருக்கும்.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப் பட்டினத்தில் இருந்து கடந்த 28ந் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக சொல்லி 24 மீனவர்களையும், 5 விசை படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து இலங்கை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    உடனடியாக இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மத்திய இணை மந்திரி முருகனிடமும் தெரிவிக்கப்பட்டது. நமது மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைந்து மீட்க தமிழக பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இலங்கையில் உள்ள நமது இந்திய தூதரக அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட 24 மீனவர்களை பிணையில் விடுவிக்கவும், 5 படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சிறைப்பிடிக்கப்பட்ட நமது மீனவர்கள் தாயகம் திரும்ப துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முருகனுக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக பாஜக மீனவ சமுதாய மக்களுக்கு என்றும் அரணாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

    • மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.
    • இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்டபம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அந்த படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்தோணி அடிமை, லிவிங்ஸ்டன், திருமன், சபரி உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே இந்திய கடல் பகுதியில் நாட்டுப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து படகு மூலம் நாட்டுப்படகு மீது மோதி உள்ளனர். இதில் நாட்டுபடகின் முன்பகுதி இரண்டாகப் பிளந்தது.

    இதனையடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் இனி இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர்.

    இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய மீனவர்கள் தாங்கள் அணிந்திருந்த கைலிகள், சட்டை, பனியன் உள்ளிட்ட வகைகளை வைத்து படகின் உடைந்த பகுதியை அடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், இதுபற்றி அறிந்த சக மீனவர்கள் ஒரு விசைப்படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

    இலங்கை கடற்படை மோதியதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான நாட்டு படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    • 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
    • சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டில் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது

    சென்னை:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 16-11-2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உள்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது என்றும், இந்திய தரப்பில் இருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டபின்னரும் 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

    தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

    சென்னை:

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. பாக். ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

    தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×