search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனுஷ்கோடி அருகே ரோந்து படகு மூலம் மோதி நாட்டுப்படகை சேதப்படுத்திய இலங்கை கடற்படை
    X

    சேதமான நாட்டுப்படகை காணலாம்.

    தனுஷ்கோடி அருகே ரோந்து படகு மூலம் மோதி நாட்டுப்படகை சேதப்படுத்திய இலங்கை கடற்படை

    • மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.
    • இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அந்தோணி அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் மண்டபம் கடலோர பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அந்த படகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அந்தோணி அடிமை, லிவிங்ஸ்டன், திருமன், சபரி உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே இந்திய கடல் பகுதியில் நாட்டுப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ரோந்து படகு மூலம் நாட்டுப்படகு மீது மோதி உள்ளனர். இதில் நாட்டுபடகின் முன்பகுதி இரண்டாகப் பிளந்தது.

    இதனையடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் 4 மீனவர்களும் நடுக்கடலில் குதித்து தப்பி உள்ளனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் இனி இந்த பகுதியில் மீன் பிடிக்க வரக்கூடாது என தெரிவித்து சென்றதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறினர்.

    இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய மீனவர்கள் தாங்கள் அணிந்திருந்த கைலிகள், சட்டை, பனியன் உள்ளிட்ட வகைகளை வைத்து படகின் உடைந்த பகுதியை அடைத்து தண்ணீரை வெளியேற்ற முயற்சித்து உயிருக்கு போராடி வந்த நிலையில், இதுபற்றி அறிந்த சக மீனவர்கள் ஒரு விசைப்படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த 4 மீனவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

    இலங்கை கடற்படை மோதியதால் ரூ.2 லட்சம் மதிப்பிலான நாட்டு படகு மற்றும் மீன் பிடி சாதனங்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டதாகவும், இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

    Next Story
    ×