search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கோர்ட்"

    • கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 17-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

    மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஆரோக்கிய சுகந்தன், இஸ்ரோல் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த ஆரோக்கிய சுகந்தன் (38), டிக்சன் (18), சாமுவேல் (19), அந்தோணி, சுப்பிரமணி, பூமிநாதன், ராஜ், சுந்தரபாண்டியன், சீனிப்பாண்டி, பாலு, ராயப்பு லியோனார் (32) உள்பட 21 மீனவர்களை கைது செய்தனர். இவர்கள் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோல் கடந்த மாதம் 13-ந்தேதி இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் டாடா நகரை சேர்ந்த சேகர், மயிலாடுதுறை புதுக்கோட்டையை சேர்ந்த சந்துரு, மோகன், காரைக்கால் முருகானந்தம், இரும்பன், பாபு உள்பட 15 பேரை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கைதான ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்கள் கைதான வழக்கு இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 36 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் 33 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மீதமுள்ள 3 மீனவர்கள் ஏற்கனவே ஒருமுறை கைதானதால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஓரிரு நாளில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.
    • கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேர் பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் கடந்த 9-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அதேபோல் காரைக்காலை சேர்ந்த செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மேட்டை சேர்ந்த கந்தசாமி, கிழிஞ்சல் மேட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி, தரங்கம்பாடி சேர்ந்த ஆனந்தாபால், புதுப்பேட்டையை சேர்ந்த கிஷோர், ராஜ்குமார், அன்புராஜ், மதன் நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 15 பேர், கடந்த 6-ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

    கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் கைது செய்தனர்.

    கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் மீதான வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் 19 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். படகோட்டிகள் 3 பேருக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார். 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் மாதம் 7-ந்தேதி விசாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 3-ந்தேதி காலை 492 விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ராபர்ட் (வயது 40), பெஸ்கர் உள்பட 23 பேரை சிறைப்பிடித்தனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று 23 மீனவர்களும் ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் மீதமுள்ள 3 பேரில் ராபர்ட், பெஸ்கர் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனையும், மற்றொருவர் இரண்டாவது முறையாக எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அதேபோல் விடுதலையான 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
    • எல்லைதாண்டி மீன்பிடித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த மாதம் 22-ந்தேதி மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியதோ அடுத்தடுத்த சிறைப்பிடிப்பு சம்பவங்களும், தாக்குதலும் தான்.

    முதன்முறையாக கடந்த மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 22 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் 15 பேரை இன்று இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர்.

    ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கியராஜ் (45), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன் (40), பிரபு (36), மெல்டன் (45) ஆகிய 8 பேரும் மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ் (44), கார்ச் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (25), ஜான் (30), ஜனகர் (32) ஆகிய 7 பேர் என மொத்தம் 15 பேர் மீன்துறை அலுவலக அனுமதியுடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அதிகவேகமாக வந்தது.

    அவர்களை பார்த்ததும் ராமேசுவரம் மீனவர்கள் அச்சத்தில் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதற்குள் அந்த 2 படகுகளையும் சிங்கள கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்ட தோடு, எல்லை தாண்டி வந்ததாக கூறி படகில் இருந்த 15 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களையும், மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாளை இலங்கை சிறையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்ற விபரம் தெரியவரும்.

    இதற்கிடையே ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவித்த இலங்கை நீதிமன்றம், இனிமேலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 2 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று 15 பேர் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
    • விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், பல நேரங்களில் சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 22 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 5-ந்தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டுமென மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இது தொடர்பாக ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    இதற்கிடையே நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் இன்று காலை கைதான 22 மீனவர்களும் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கைதானவர்கள் இனிமேல் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது. அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் 22 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். விடுதலையான மீனவர்கள் இன்னும் சில நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×