search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thamirabarani river"

    • வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.
    • தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.

    திருச்சி:

    பெரியார் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் பெரியார். சனாதானத்தை நமது பகை தொடர்ந்து வேரறுப்பது மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகுக்கு உணர்த்திய அவரது அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதான சக்திகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

    தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை, அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது.

    மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். வருகிற 29-ந் தேதி தமிழக, முழுவதும் ஏ.வி.எம். எந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.


    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு திருச்சியில் நடைபெற இருந்த 'வெல்லும் சனநாயக மாநாடு' தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.

    முதலமைச்சரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம். அமைச்சர் பொன்முடி வழக்கை முனைப்போடு எதிர்கொள்வதற்கு தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள்.

    பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சி.ஏ.ஜி. மெகா ஊழல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் இந்த ஆட்சி ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது.

    ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய 900 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி. ஆனால் பாதிப்புக்கு ஏற்றார் போல புயல் மழைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

    அதை பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவே இல்லை. ரூ.21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி ஒரு பைசா காசு கூட வழங்கவில்லை.

    வழக்கம் போல ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்வது போன்ற முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல தொணியை ஏற்படுத்துகிறார். எந்த வகையில் ஏற்புடையது அல்ல.

    இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
    • தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் ஒரு வேளை உணவு, குடிநீர், பால், உறைவிடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நானும், அ.ம.மு.க. நிர்வாகிகளும் அவர்களை தினசரி சந்தித்து எங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.

    கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் இது. வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை எடை போட்டு பார்க்க கூடாது.

    அரசு தான் நிவாரண பணிகளை செய்ய வேண்டும். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை விட அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நெல்லை வந்தார்.

    அவர் பாளை வெள்ளகோவில் பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுக்கக்கூடிய 6000 ரூபாயை ரேசன் கார்டு அடிப்படையாகக் கொண்டு கொடுக்காமல் கியாஸ் சிலிண்டர் முகவரிகளை கணக்கில் கொண்டு அதன்படி கொடுக்க வேண்டும்.

    மேலும் நிவாரணமாக கொடுக்கக்கூடிய ரூ.6 ஆயிரம் என்பது பொதுமக்களுக்கு போதாது. எனவே அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் நேரடியாக சென்று விசாரித்து பாதிப்பை அறிந்து பொதுமக்களிடம் கேட்டு கொடுக்க வேண்டும். வானிலை மையத்தை தமிழக அரசு குறை சொல்லக்கூடாது. உலக அளவில் சவால் விடும் வகையில் இந்தியாவின் வானிலை மையம் நவீன கருவிகள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது.
    • வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதத்தை விளைவித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை பெய்து ஏற்பட்ட வெள்ளம் கடந்த ஒரு வாரமாகியும் இதுவரை பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. இன்றளவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அங்கு படிப்படியாக குறைந்து தற்போது முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

    மாவட்டத்தில் நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி பிரதான சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களாக பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் இந்த வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதுதவிர திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆழ்வார்தோப்பு, ஏரல், பழைய காயல், புன்னக்காயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் தனித்தீவுகளாக காட்சியளித்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


     அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கிராம சாலைகள், நகர்ப்புற சாலைகள், ஆற்றுப்பாலங்கள் உள்ளிட்ட வைகளும் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அவற்றை கணக்கெடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதன்பின்னர் பாலங்கள், சாலைகளை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. ஒரு சில கிராமங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு வாரமாகியும் இதுவரையிலும் பொதுமக்கள் இருளில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் வரையிலும் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்டவைகளும் கடுமையான வெள்ளத்தினால் நாசமாகி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்து முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டத்தில் ஆய்வு செய்து வெள்ள நிவாரணமும் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொன்னன்குறிச்சி, வல்லநாடு, முறப்பநாடு, அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மின்மோ ட்டார்கள் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனால் காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தாண்டி பல்லாயிரம் கன அடி நீர் வீணாக ஆற்றில் கலக்கும் சூழ்நிலையிலும் அப்பகுதி மக்கள் குடிக்க ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காத நிலை இருந்து வருகிறது.

    இதனால் ஆற்றில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்யும் பணி, கோரம்பள்ளம் ஆறு, சிற்றாறு பகுதிகளில் பாதிப்பை சரி செய்யும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக திருச்சி, கோவை, மதுரை மண்டலங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 12 செயற்பொறியாளர்கள், 20 உதவி செயற்பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    படிப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அங்கு முழுமையாக இயல்புநிலை ஏற்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 67 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள், இது தவிர களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை உள்ளிட்டவைகள் வெள்ளத்தால் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2 நாட்களாக வெள்ள சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையான கணக்கெடுப்பு முடிந்த பின்னர் கலெக்டரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன்பின்னரே வீடு, நெல் பயிர்கள், கால்நடைகள் சேத விபரம் தெரியவரும்.

    இதற்கிடையே வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த கிராமங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்பட்டு விநியோகம் சீரடைந்துள்ளது. மாவட்டத்தில் இன்று சுமார் 110 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    • பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது.
    • பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்களாக விடாமல் பெய்த பெரு மழையால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் தூத்துக்குடி மாநகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டது.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக மாறின. மழை ஓய்ந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏரல் பகுதியில் பாலம் உடைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    அங்கு தற்காலிகமாக மாற்று சாலை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதே போல ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில், 84 இடங்களில் சாலைகள் செப்பனிடபட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு உள்ளது.


    திருச்செந்தூர், பாளையங்கோட்டை சாலையில் 3 இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து இருந்தன. தற்போது 2 இடங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தில் 3 மீட்டர் நீளத்திற்கு சாலை உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இதனை சீரமைக்க பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி முடிவடைந்ததும் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெறும்.

    ஏரல் பாலமும், ஆத்தூர் பாலமும் ரூ.19.94 கோடி ரூபாய் மதிப்பில் அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன. அணுகு சாலை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு விட்டது. அப்பகுதியில் தரைப்பாலம் உறுதியாக இருக்கிறது.

    நெல்லை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாலம் தேசிய நெடுஞ்சாலை பிரிவை சேர்ந்தது. அதில், ஒரே ஒரு தூண் மட்டுமே கீழே இறங்கி உள்ளது. என்ஜினீயர்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப குழுவை உடனடியாக வரவழைத்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தரைப்பாலம் வழியே வாகனங்கள் செல்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு தூத்துக்குடியில் 95 சென்டி மீட்டர் மழை பெய்ததால் சாலைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் 46, தூத்துக்குடி மாவட்டத்தில் 112, தென்காசி மாவட்டத்தில் 13, விருதுநகர் மாவட்டத்தில் 13, நாகர்கோவிலில் 5 சாலைகள் என நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரை ரூ.1000 கோடி அளவுக்கு சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 65 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
    • வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிகன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    6 நாட்கள் ஆகியும் இன்று வரை சில பகுதிகள் இன்னும் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீளவில்லை. அதில் புன்னக்காயல் கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலுக்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி கரையோர கிராமமான இங்கு கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.

    கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புன்னக்காயல் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 அடிக்கும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் தற்போதும் சில பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் புன்னக்காயலில் மட்டும் இன்று வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.


    இதனால் அங்கு செல்ல முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்ல முடியாமல் புன்னக்காயல் தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    பலத்த சேதம் அடைந்துள்ளதால் இன்று வரை அங்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் கடந்த 6 நாட்களாகவே இருளில் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் பல வீடுகள் முழுவதும், பகுதியாகவும் இடிந்து உள்ளது. தற்போது வெள்ள நீர் குறிப்பிட்ட அளவு வடிந்து இருந்தாலும் பொதுமக்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

    வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு அருகில் உள்ள திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியன் பட்டிணத்தில் இருந்து படகுகள் மூலம் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    வெள்ளம் வடிந்த பகுதியில் வீடுகளில் சேறும், சகதிமாக காணப்படுகிறது. எனவே வீடுகளை பாராமரிப்பு செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    10 அடி மட்டத்திற்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த டி.வி. மிக்சி, கிரைண்டர் என அனைத்து பொருட்களும் நாசமாகின. இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, கன மழை எங்கள் கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது. தனித்தீவில் இருப்பது போல் நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எனவே மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி நாங்கள் மீண்டும் வீடுகளில் குடியேற வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது. எங்கள் வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்து விட்டது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது.
    • இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். மழை வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் தி.மு.க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை.

    மொத்தத்தில் தி.மு.க அரசு வெள்ள பாதிப்பை சரியாக கையாளவில்லை என்றே கூற வேண்டும்.

    தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவித்து கொண்டிருந்த போது, முதலமைச்சர் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார்.

    மத்தியக்குழு கடந்த 20-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து நெல்லையிலும் ஆய்வு பணி மேற்கொண்டனர். ஆய்வு பணியை முடித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுக்கும் பணியை மத்திய குழு செய்து வருகிறது.


    மத்திய அரசு ஆய்வு மேற்கொண்ட பின்னர் கடந்த 21-ந் தேதி தான் முதலமைச்சர் வெள்ள பாதிப்பை பார்வையிட தூத்துக்குடி செல்கிறார். தமிழக முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.

    மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மழை வெள்ள பாதிப்பு பணியில் அவர்கள் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். அதனை விடுத்து, உதயநிதி, மத்திய அரசுடன் வம்புக்கு இழுத்து வருகிறார்.

    மக்களை காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதிலேயே தி.மு.க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    மேலும் மழை பாதிப்பு ஏற்பட்ட போது நெல்லை மாநகராட்சி மேயர் கூட அங்கு இல்லை. அவர் சேலத்தில் மாநாடு பணிகளை கவனித்து கொண்டிருந்தார். தி.மு.கவினருக்கு மக்களை விட சேலத்தில் நடைபெற உள்ள மாநாடும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதும் தான் முக்கியமாக இருக்கிறது.

    மழை பாதிப்புகளை தமிழக அரசு முறையாகவும், சரியாகவும் செய்யாத காரணத்தினாலேயே மத்திய அரசு அந்த பணிகளை பொறுப்பெடுத்து செய்து வருகிறது.

    சென்னை வெள்ளத்திற்கு ரூ.450 கோடியும், பிறகு ரூ.550 கோடி என மொத்தம் ரூ.ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழக அரசு கொடுத்துள்ளது. தென் மாவட்ட வெள்ளத்தை ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை கொடுத்த பின்னர், அதற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கும்.


    அதற்குள்ளாகவே மழை பாதிப்புக்கு நாங்கள் கேட்ட நிதியை விட குறைவாகவே தந்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் புயல் ஏற்பட்ட போது அந்த மாநில அரசு ரூ.9 ஆயிரத்து 836 கோடி மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு உடனடி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி மட்டுமே கொடுத்தது.

    மேலும் 2020-21-ல் கொரோனா காலகட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள குஜராத்திற்கு ரூ.304 கோடியும், தமிழகத்திற்கும் ரூ.868 கோடியும் கொடுக்கப்பட்டது. அந்த நிதி தொடர்பாக தமிழக அரசு இன்னும் ஏன் கணக்கு கொடுக்கவில்லை.

    இப்படி ஒவ்வொன்றாக கணக்கெடுத்து சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் தி.மு.கவின் பொய்யை தோலுரிக்க விரும்பவில்லை.

    அவர்கள் தங்கள் மீது உள்ள தவறை மறைக்க மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தான் வானிலை மையத்தின் மீது பழியை தூக்கி போட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் கொடுத்து இருந்தது. ஆனால் அப்போது அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை. இப்போது வானிலை மையத்தின் மீது குறை சொல்லி வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்டுள்ளது. அந்த நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என நம்புகிறேன். நாளை மறுநாள் தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தென் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மத்திய அரசிடம் தெரிவித்து, நிதியை பெற்றுத்தருவார்.

    பொருளாதார மாநிலத்தில் தமிழகத்தை உத்தரபிரதேசம் முந்தி விட்டது. உத்தரபிரதேசம் முதல் இடத்தையும், தமிழகம் 3-வது இடத்திலும் உள்ளது.

    தமிழகத்திற்கு புதிதாக தொழில் தொடங்க எந்த நிறுவனம் முன்வரவில்லை. காரணம் தி.மு.க அரசு அவர்களிடம் லஞ்சம், கமிஷன் போன்றவற்றை கேட்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்திற்கு முதல் முதலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பாலும் மாநிலத்திற்கு வரக்கூடிய வருவாயில் இழப்பு ஏற்படும்.

    உதயநிதி ஸ்டாலின் சனதானத்தை பற்றி தப்பாக பேசவில்லை என்றார். மேலும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக கூறி வந்தனர். ஆனால் தி.மு.க.வினருக்கு பாடம் எடுக்கும் வகையில் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என முதல்வர் இருந்த போதே கூறிவிட்டார். தி.மு.க.வை மூட்டை கட்டி கடலில் போடும் வேலையை தான் உதயநிதி செய்து வருகிறார். அவர் வடிவேலு காமெடியை போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஏழை என்ற சாதியே இருக்க கூடாது என்பது தான்.

    கம்யூனிஸ்டு கட்சி என்பது மக்களுக்கான கட்சி இல்லை. அது தி.மு.கவிற்கான கட்சியாக மாறி விட்டது. அவர்களுக்காக தான் கட்சி நடத்துகிறார்கள். பொன்முடி தீர்ப்பு விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது கேவலமான விஷயம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது.
    • தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் நெல்லை-திருச்செந்தூர் ரெயில்வே தண்டவாளம் பல்வேறு இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து செல்லப்பட்டு சேதமடைந்தது.

    இதனால் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடத்திலும், தாதன்குளம் பகுதியில் ஒரு இடத்திலும், ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் வரையிலான ரெயில்வே தண்டவாளம் பகுதியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.


    இந்த பகுதியில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது. தண்டவாளத்தை ஒட்டியுள்ள மின் கம்பிகள் அனைத்துமே சாய்ந்து வயல்வெளிகளில் கிடக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக ரெயில்வே அதிகாரிகள் செய்துங்கநல்லூர் மற்றும் தாதன்குளம் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் நெல்லை-திருச்செந்தூர் வரையிலான அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களும் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அங்கு சிக்கியவர்களுக்கும், சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர்கள், நர்சுகள் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலும், நேற்று நெல்லை அரசு மருத்துவ மனையில் வெள்ளம் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்த பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.


    இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் இன்று தனியார் மருத்துவ மனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அவர் கீதா மெட்ரிக் பள்ளி, டி.எம்.சி. காலனி, கோரம்பள்ளம், முத்தையாபுரம், புன்னக் காயல், முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல் பஸ் நிலையம், ஏரல் காந்தி சிலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாம்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில் 31 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் ஒரு நாளைக்கு 3 இடங்களுக்கு சென்று முகாம் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் 93 இடங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் 4 பேர் கொண்ட ஒரு மருத்துவ குழுவும் தினமும் 3 இடங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன் மூலம் 12 பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இன்று நெல்லை மாவட்டத்தில் மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் 4 குழுக்களும், புறநகர் மாவட்ட பகுதிகளில் ஒரு குழுவும் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    • தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது.
    • கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    தற்போது மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் குறைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் மீண்டும் ஆற்றில் குளிக்க தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் ஆங்காங்கே நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர் நிலைகளில் சகதி அதிகமாக உள்ளது.

    எனவே தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளுக்குள் இறங்கினால் இதுபோன்ற புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் மீட்பது மிகவும் கடினமாகும்.

    எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளுக்குள்ளும் இறங்க வேண்டாம். மேலும் கால்நடைகளையும் நீர்நிலைகளில் இறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இதேபோல், பெருமழை வெள்ள காலத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நீர் வடிந்துள்ள இடங்களில் வீடுகளுக்கு செல்லும் மக்கள் மின் இணைப்புகளை முறையாக பரிசோதித்த பிறகு அவற்றை கையாள வேண்டும். இல்லாவிட்டால் மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது.

    விவசாய நிலங்கள், மரங்கள் ஆகிய பகுதிகளில் மின்கம்பிகள் ஏதேனும் உரசிக்கொண்டு உள்ளதா?, அறுந்துள்ளதா என்பதை எல்லாம் கவனமாக பார்த்த பிறகே மக்கள் செல்ல வேண்டும்.

    இது தொடர்பாக புகார்கள், தகவல்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 'மின்னகம்' உதவி மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.
    • கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மழை தண்ணீர் வடியவில்லை. இதனால் குக்கிராமங்களில் சிக்கி இருக்கும் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 400 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் சென்று கிராம மக்களை மீட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இன்று 60 படகுகளுடன் மீனவர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் பிற்பகல் முதல் கிராமங்களுக்குள் சென்று தண்ணீரில் தவித்துக் கொண்டு இருக்கும் மக்களை மீட்க உள்ளனர்.

    • ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.
    • ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழையில் விவசாயிகள் வரலாறு காணாத இழப்புக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முந்தைய காலங்களில் ஆடி மாதத்தில் காற்று அடித்தால் வாழைகள் சரிந்து இழப்பு ஏற்படும்.

    ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அந்த இழப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வாழைகள் வேரோடு சரிந்து விட்டன. இன்னும் சில மாதங்களில் குலைதள்ளி பலன் கொடுக்க வேண்டிய வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் கண்ணீர் மல்க கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார்கள்.

    ×