search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thailand"

    தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #Thailand #TouristBus #Accident
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு மாடி பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இந்த பஸ் கோலோங் லுவாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த பஸ் கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 50 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  #Thailand #TouristBus #Accident 
    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இது பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
     
    இதில் அபுதாபியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்தின் டீராசில் டங்டா 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

    ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இறுதியில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
    பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகினர். மேலும், 34 ஆயிரம் பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். #CyclonePabuk #Thailand
    பாங்காங்:

    தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு ‘பபுக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

    இந்நிலையில், பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டின் பத்தானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.

    இதேபோல், தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் இறந்தனர். இதன்மூலம் பபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த புயலால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பத்தானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.

    புயல் தாக்கத்தை தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #CyclonePabuk #Thailand
    தாய்லாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ள நிலையில், பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு விதித்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கியது. #Thailand #ElectionCommission #MilitaryGovernment
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது.

    கடந்த ஆண்டு புதிய அரசியல் சாசனத்தை ராணுவ அரசு இயற்றியது. அதன்மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்கள் புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.

    இந்த நிலையில் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ளது. அங்கு பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அந்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கி விட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கு தேர்தல் மூலம் ஜனநாயகம் மலருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால், புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்ற பின்னரும் ராணுவம் செல்வாக்குடன் திகழ முடியும். செனட் சபை நியமனங்களை ராணுவம் செய்ய முடியும். இதன் மூலம் பிரதமர் யார் என்பதை ராணுவம் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும்.

    இப்போது பிரசார தடை நீக்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வழி பிறந்துள்ளது.

    தாய்லாந்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யிங்லக் ஷினவத்ராவுக்கு முன்பாக பிரதமராக இருந்த தக்‌ஷின் ஷினவத்ராவும் அரசியல் செல்வாக்குடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் தாய்லாந்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் மலைப் பாம்புடன் விளையாடினார். #KajalAggarwal
    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படம் மட்டுமே உள்ளது. 

    இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் நடித்து முடித்துவிட்ட காஜல் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்குள்ள வனஉயிரியல் பூங்காவிற்கு சென்ற காஜல் அங்குள்ள விலங்குகளுடன் விளையாடினார். அப்போது மலைபாம்பு ஒன்றை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்ட காஜல், அந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாம்பு இருப்பதை உங்களால் உணர முடிகிறதா? என்று ஒருவர் கேட்க, காஜல் கூறியதாவது,

    `ஆமாம் என்னால் உணர முடிகிறது. இந்த உணர்வு அற்புதமாக இருக்கிறது. பாம்பின் தசைகள் அசைவதை என்னால் தெளிவாக உணர முடிகிறது. பாம்பின் மெல்லிய சத்தமும் எனக்கு கேட்கிறது. இது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்'. என்று கூறினார். #KajalAggarwal

    புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #puducherryAirport

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் சிறிய நகரங்களில் விமான சேவை செய்யும் விமான நிறுவனங்களுக்கு 50 சதவீத கட்டணத்தை மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    புதுவையில் தடைபட்டிருந்த விமான சேவை மீண்டும் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கியது. புதுவையில் இருந்து ஐதராபாத்துக்கும், புதுவையில் இருந்து பெங்களூருக்கும் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த 2 விமானங்களும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பெங்களூருவுக்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் விமான சேவையை விரிவு படுத்தும் வகையில் புதுவையில் இருந்து சென்னை, சேலம், கோவை, கொச்சின் நகரங்களுக்கு விமான சேவை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்டமாக சென்னை, சேலம் நகரங்களுக்கு கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் விமானங்களை இயக்க ஏர் ஒடிசா நிறுவனம் அறிவித்தது. இதற்கான முன்பதிவும் தொடங்கியது. ஆனால், திடீரென இந்த விமான சேவை கிடப்பில் போடப்பட்டது.

    இந்த நிலையில் ஐதராபாத்துக்கு செல்லும் விமான சேவையை விரிவு படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவை விமான நிலையத்தின் ஓடு தளம் விஸ்தாரமாக இல்லாததால் நேரடியாக வெளி நாடுகளுக்கு விமானத்தை இயக்க முடியாது.


    இதனால் புதுவையில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தின் சேவையை விரிவுபடுத்தி ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காங்கிற்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.

    இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி உள்ளது. காலை 11.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் ஐதராபாத் விமானம் அங்கு பேங்காக் செல்லும் விமானத்துடன் நேரடி இணைப்பை ஏற்படுத்தி கொடுக்கும். அந்த விமானம் இரவு 9.40 மணிக்கு பேங்காங் சென்று அடையும்.

    அதே போல் இரவு 10.40 மணிக்கு பேங்காங்கில் இருந்து புறப்பட்டு ஐதராபாத் வந்து, அங்கிருந்து மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுவை வந்தடையும். உணவில்லா பயணத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500-ம், உணவுடன் கூடிய பயணத்துக்கு ரூ.13 ஆயிரத்து 200 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக சென்ற பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன், அந்நாட்டு பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #PrayutChanocha #Thailand
    பாங்காக்:

    அரசுமுறை பயணமாக நேற்று தாய்லாந்து நாட்டுக்கு சென்ற இந்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை துணை மந்திரி ரவுங்ரோஜனா சும்ராஸ்ரோம்ருன் அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

    அதைத்தொடர்ந்து, இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தாய்லாந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு மந்திரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #NirmalaSitharaman #PrayutChanocha #Thailand
    ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்தியா அணி இன்று தாய்லாந்தை எதிர் கொள்கிறது. இந்திய அணி 4-வது வெற்றியை பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. #AsianGames2018
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவையும், 2-வது ஆட்டத்தில் 21-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும், 3-வது போட்டியில் 4-1 என்ற கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தியது. இதன்மூலம் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தாய்லாந்தை இன்று சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. கோல் மழை பொழிவதால் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் ஏற்கனவே தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. இந்தோனேசியாவை 17-0 என்ற கணக்கிலும், ஆங்காங்கை 26-0 என்ற கணக்கிலும், ஜப்பானை 8-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 5-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கையை நாளை சந்திக்கிறது. 5-வது வெற்றி வாய்ப்பு இந்தியா அணிக்கு இருக்கிறது. #AsianGames2018
    தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. #Thailand #WirapolSukphol
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

    அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

    இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Thailand #WirapolSukphol #tamilnews
    தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். #ThaiCaveBoys
    பாங்காக் :

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

    குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #ThaiCaveBoys
    தாய்லாந்து குகையில் சிக்கித்தவித்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ காட்சிகள் முதன் முறையாக வெளியானது.
    பாங்காக்

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது.

    கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் சோர்ந்திருந்த அவர்கள் அனைவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்நிலையில், அவர்கள் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் முதன் முறையாக வெளியாகியுள்ளது. சிறுவர்கள் கட்டிலில் படுத்திருக்ப்பதை அவர்களின் உறவினர்கள் கண்ணாடி தடுப்புக்கு வெளியே இருந்து பார்த்து கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான  காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
    தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

    கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.


    இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue #Thailandcave #ThailandCaveKids #ThaiNavySEAL
    ×