search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்ஹாசன்"

    • திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன்- 2’.
    • இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.




    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.




    இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் ஆஸ்கர் வென்ற மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இந்தியன் மற்றும் தசாவதாரம் படத்தில் இருவரும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'.
    • இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே' (Project K). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். 





    மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.




    'புராஜெக்ட் கே' படத்தின் தீபிகா படுகோனேவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனான பிரபாஸின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


    இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

     


    விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

    பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கமல்ஹாசன்

    சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் வெளியீடு பற்றி குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், கமல்ஹாசன், மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குநர் மகேஷ் நாராயணன் விஸ்பரூபம் 2 படத்தின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி அரசியல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

    கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பெற்றனர்.

    இது கமல்ஹாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் இறங்கியது. உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொண்டது. இந்த 2 தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன், குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார். மற்ற வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதனால் எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றியை ருசிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி அரசியல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் நிர்வாகிகள் சேவை முகாம்களை நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை கட்சியினக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் கட்சியினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் இதனை வைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    விக்ரம் திரைப்படம்

    இதற்கிடையே கமல்ஹாசன் சென்னை சத்யம் தியேட்டரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் விக்ரம் படத்தை பார்த்து ரசித்தார். அப்போது கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் கமல்ஹாசனை பாராட்டினார்கள். அப்போது தொடர்ந்து விக்ரம் போன்று சமூக அக்கறையுடன் கூடிய திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவர்கள் கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டனர்.

    இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், சினிமா, அரசியல் இரண்டுமே எனக்கு முக்கியம். இரண்டிலும் வெற்றிகரமாக பயணிப்போம் என்று கூறியுள்ளார். இது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விக்ரம் படம் திரைப்படம் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை, கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.
    மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘விக்ரம்’. கமல்ஹாசனால் ஈர்க்கப்பட்டு சினிமாத்துறைக்குள் வந்த லோகேஷ் கனகராஜ் தனது நான்காவது படத்திலேயே கமல்ஹாசனை இயக்கியுள்ளார். 

    பான் இந்தியா திரைப்படமான ‘விக்ரம்’ ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் காதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ‘விக்ரம்’ படத்திற்கான புரமோஷனுக்காக கமல்ஹாசன் பல இடங்களுக்கு பறந்து கொண்டிருக்கிறார். அதன்படி, மலேசியாவிற்கு புரமோஷனுக்காக சென்ற கமல், மலேசியா எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். கமலை சந்தித்தது குறித்து மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    மலேசிய எதிர்க்கட்சி தலைவருடன் கமல்
    மலேசிய எதிர்க்கட்சி தலைவருடன் கமல்

    அந்த பதிவில், “ சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனை நான் சந்தித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் இந்திய வரலாறு மற்றும் நல்லாட்சி குறித்து நீளமான விவாதம் நடந்தது. மலேசியா தலைநகரில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சியில் நான் கலந்து கொள்வேன்” என்று  குறிப்பிட்டுள்ளார். 
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல், நடிகர் விஜய்யுடன் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரமோஷனுக்காக உலகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றி வருகிறார்.

    விஜய்
    விஜய்

    இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது, செய்தியாளர் ஒருவர், 'விக்ரம்' படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'விக்ரம் 3' படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறினார். அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

    ஏற்கெனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிலால் விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அடிப்படையில் கூட்டம் அமைகிறது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்ய கட்சியை தொடங்கிய கமல் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலை அடுத்தடுத்து சந்தித்தார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அக்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவியது.

    பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.

    இந்த நிலையில் கட்சியை பலப்படுத்த கமல் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் 12 சார்பு அணிகள் உள்ளன. மாணவர், மருத்துவர், விவசாயம், ஆதிதிராவிடர் என பல்வேறு அணிகள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக ஆதிதிராவிடர் அணியின் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மவுரியா தலைமையில் நடந்தது.

    இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மற்ற 11 அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    11 வாரத்தில் இக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இறுதியாக அனைத்து அணி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்துகிறார்.

    2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அடிப்படையில் இக்கூட்டம் அமைகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்து உள்ள நிலையில் அணி நிர்வாகிகைள அழைத்து கமல் பேச இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு நாங்களே மாற்று என்கிற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் ஆரம்பத்தில் அரசியலில் அதிரடி காட்டினார். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் வெற்றியின் விளிம்பு வரை சென்று கோட்டை விட்டார். அரசியல் களத்தில் வெற்றி என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல அல்ல என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்துள்ளார். ஆனால் கமல் கட்சியில் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகள் பலர், வேறு மாதிரி கணக்கு போட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில் தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிச்சயம் உடனே சிவப்பு கம்பளத்தை விரித்து விடுவார்கள் என்று கனவு கண்டனர். அந்த கனவு பலிக்காததால் கமல்ஹாசன் கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். மாநில நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளில் போய் தஞ்சம் புகுந்தனர்.

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கோட்டை விட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை ஈட்டாததால் கட்சிக்குள் கடும் புகைச்சல் ஏற்பட்டது.

    இதனால் “எங்கே போகும் இந்த பாதை...” என்கிற மனநிலைக்கு கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.

    இப்படி தொடர் தோல்விகளால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலரும் விலகி ஓடி இருக்கும் நிலையில் மிச்சம் மீதி இருக்கும் கட்சியினரும் இங்கேயே இருக்கலாமா? இல்லையென்றால் வேறு கட்சிகளில் போய் சேர்ந்து விடலாமா? என்கிற எண்ணத்திலேயே காலத்தை தள்ளிக்கொண்டு சோர்ந்து போய் காணப்படுகிறார்கள்.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இதுபோன்று நிர்வாகிகள் பலர் ஓட்டம் பிடித்ததால் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு புதிய வியூகம் ஒன்றை வகுத்தார்.

    இதன்படி மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து கட்சியை வழி நடத்தி செல்ல ஆட்கள் தேவை என்கிற விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இதனை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இதனால் காலியாக உள்ள மாவட்ட செயலாளர் பணி இடங்களுக்கு ஆட்களை தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இப்படி கட்சியின் கூடாரம் காலியாகி கொண்டிருக்கும் நிலையில் நிதி நெருக்கடியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெரிய தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும்பாலான கட்சிகள் நிதி வசூல் செய்தே கட்சியை வழி நடத்தி வருகின்றன. ஆனால் கட்சி தொடங்கியதுமே கமல்ஹாசன், அது போன்று நாமும் செயல்படக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகள் சிலரோ நாமும் நன்கொடை என்ற பெயரில் பெரிய அளவில் நிதி வசூலில் இறங்கினால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.

    ஆனால் கமல்ஹாசனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அப்படி செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் என்றும், மாற்றத்துக்கான கோஷத்தை நம்மால் எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் கண்டித்துள்ளார்.

    கட்சிக்கு வரும் பணத்துக்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும் அதுதான் நேர்மையான அரசியலாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்தே மக்களிடம் வெளிப்படையாக வங்கி கணக்கை தெரிவித்து நிதி திரட்டலாம் என்று திட்டமிடப்பட்டது.

    இதன்படி கட்சிக்கு நிதி தாருங்கள் என்று கமல்ஹாசனே வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டார்.

    மக்களிடம் நிதி திரட்டி கட்சியை வழி நடத்த திட்டமிட்ட மக்கள் நீதி மய்யத்தின் இந்த வியூகமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, எங்கள் தலைவரை பொருத்தவரையில் எதிலும் நியாயமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். இதன் காரணமாகவே கட்சிக்கு யாரிடமும் நிதி வசூலில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி விட்டார். தனது வருமானத்தை வைத்தே அவர் கட்சியை நடத்தி வருகிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வலுவான கட்சியாக மாற்ற கமல்ஹாசனும், கட்சி நிர்வாகிகளும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடித்தளம் இல்லை.

    அதே நேரத்தில் நகர்புறங்களிலும் வலுவான அடித்தளம் அமையவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    தொடர் தோல்விகள், கட்சியினர் ஓட்டம், கட்சி நிதி நெருக்கடி என தள்ளாடிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தூக்கி நிறுத்துவதற்கு கமல்ஹாசன் நிறைய திட்டங்களை கைவசம் வைத்துள்ளார் என்றும் அதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப கமல்ஹாசன், கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


    “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
    மதுரை:

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை வரவேற்று மதுரையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

    இதுதொடர்பாக மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு-மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன், மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் அந்த போஸ்டரை மாநகரம் முழுவதும் ஒட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து மேற்கண்ட 2 கட்சி நிர்வாகிகள் மீதும் திடீர்நகர், தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 அதிகரித்துவிட்டு, இப்போது அதற்கும் குறைவாகவே விலையைக்  குறைத்துள்ளனர். இது நிச்சயம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது.

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நிலையில் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை இனிமேல் உயராது என்ற உறுதிமொழிதான் உண்மையான தீர்வைத் தரும்.

    அதேபோல, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு மட்டும் சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

    2015-ல் ரூ.435-க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது ரூ.1,000-ஐத் தாண்டிவிட்டது. அனைத்து குடும்பங்களுக்கும்  சிலிண்டர் விலையைக் குறைத்தால்தான் நிம்மதியாய் சமைக்க முடியும். 

    எரிபொருட்கள் விலையைக் குறைக்காவிட்டால், பணவீக்கம், விலைவாசி உயர்வை மறைக்க  மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×