search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer"

    • ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.

    108 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. மேலும் வட மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவில் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தூங்க முடியவில்லை. வீட்டிற்கு வெளியே காற்று இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது.

    பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏ.சி. வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். கடன் வசதி இருப்பதால் முன் தொகையை செலுத்தி ஏ.சி. வாங்குகின்றனர்.

    ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் தூக்கம் இல்லாமல் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் ஏ.சி. வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு செல்கின்றனர்.

    சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள், கிராமங்கள் நகரப்பகுதியிலும் ஏ.சி. விற்பனை 'களை' கட்டி உள்ளது.

    ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை கூறி ஏ.சி. விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக

    கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி வாங்கும் கூட்டம் போல தற்போது ஏ.சி. வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர்.

    சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது. வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கக்கூடும் என்பதால் அதனை சமாளிக்க ஏ.சி. வாங்குவதில் தீவிரம் காட்டுகின்றனர்.

    ஏ.சி. விற்பனை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொறுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது.

    • விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
    • சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.

    இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

    மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

    எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது
    • வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    • சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
    • யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்கப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

    மேலும் வண்ணத்துப்பூச்சி, பூங்கா மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் ஆகியவையும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை பாதுகாக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்களான தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அவைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள்.

    பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி சணல் கோணி மூலம் கட்டப்பட்டு அவைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டா மிருகத்திற்கு ஷவர் குளியல் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் ஏற்பாடு செய்து உள்ளனர். நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடி ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர். அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி வரிக்குதிரை போன்றவைகளுக்கு மதியம் 11 மணி 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்சி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோடை வெயிலில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்கும் பணியில் வண்டலூர் பூங்கா நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
    • கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர்.

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் உச்சத்தை தொடும் நிலையில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு பயப்பட வேண்டியதில்லை. பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் போதும், வெப்ப அலையில் இருந்து எளிதாக தப்பலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் எத்தனை பேரால் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்க முடியும்? அவரச வேலை, சொந்த வேலை, அலுவலக வேலை, தொழில் நிமித்தம் என ஏதாவது ஒரு காரணத்துக்காக பலர் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் வெப்ப அலையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்வியும் அவர்களின் மனதிற்குள் எழாமல் இல்லை.

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வழக்கமாக வெயில் உச்சம் தொடும். ஒவ்வொரு ஆண்டும் மே 4-ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். ஆனால் அதற்கு முன்பே வெப்ப அலை தாக்கும் என்ற எச்சரிக்கையானது, பொதுமக்களை அச்சப்படத்தான் வைக்கிறது.

    வெப்ப அலை என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

    ஒரு மாநிலத்தில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது வெப்பநிலை 113 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும். அல்லது வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் பதிவாகி 2 நகரங்களில் வழக்கத்தை விட 8 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தாலும் வெப்ப அலை உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    மேலும் சமவெளிப் பகுதியில், குறைந்தது 2 நாட்களுக்கு 104 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 86 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது 'வெப்ப அலை' நிகழ்வு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலைகளால் தமிழகம் பல்வேறு காலகட்டங்களில் பலவித பாதிப்புகளை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தான் வெப்ப அலை கடுமையாக தாக்கியது.

    வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும்போதும், தீவிரமடையும்போதும் கூடவே வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பெய்வது குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து நிலம் விரைவில் வறண்டு போகும். இதனால் நிலம் வேகமாக வெப்பமடைந்து காற்றை சூடாக மாற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

    இதுபோன்ற வெப்ப அலை காலகட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள், உடல் நலக்குறைபாடு கொண்ட நோயாளிகள் ஆகியோரே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெப்ப அலையின்போது கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் விஷயத்தில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செலுத்த வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா கண்டம் முழுவதும் 24 கோடி குழந்தைகள் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. வெப்ப அலையின்போது நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் பூஞ்சை தொற்றுகள், சொறி, படர் தாமரை போன்ற தோல் நோய்கள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தை பராமரித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    கோடை காலங்களில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு நீர் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, நமக்கு கிடைக்கும் நீர் மாசடைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகக் கல் வரும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

    அதே நேரத்தில் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலையில் இருந்து தப்பிக்க முதலில் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துகளுடன் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் முதல் 15 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வெயிலில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளை வெப்பம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு பருத்தி துணியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும். தினமும் 2 முறை அவர்களை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பகல் நேரத்தில், குறிப்பாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வெயிலுக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது இரும்பு சத்தும் உடலில் குறையும். இதனை தவிர்க்க பேரீச்சை மற்றும் சாத்துக்குடி பழங்களை சாப்பிட வேண்டும். பேரீச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்கள் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். பேரீச்சை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர். இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரை லஸ்சியாகவும் செய்து சாப்பிடலாம். புதினா இலையில் இயற்கையாகவே ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். புதினா சாறு குடிப்பது கோடையில் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவும்.

    தர்பூசணியில் லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றி உள்ளது. இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது. தர்பூசணியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் அதில் குளிர்ச்சி தன்மையும், 92 சதவீதம் தண்ணீரும் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    மேலும் எலுமிச்சையில் வைட்டமின் 'சி' உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் கோடைக்காலத்தில் எலுமிச்சை பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். வியர்வையால் குழந்தைகள் உடலில் உள்ள தாது உப்புகள் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் ஏற்படும் தாது உப்புக்களின் பற்றாக்குறையை போக்க எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கொடுக்கலாம். 

    தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் சாப்பிடலாம். பெரும்பாலும் ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    முதியவர்கள் பகல் நேரத்தில் வெயிலில் வெளியே செல்லும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

     

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடித்தால் வாந்தி வரும் என்பதற்காக பலர் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பிரசவத்தின் போது பிரச்சனை உருவாகி குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் எப்போதும் குழந்தைக்கு தேவையான அளவு நீர் இருக்க வேண்டும் என்பதால் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    வெப்ப அலையின்போது புரதச்சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீர் தெளித்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.
    • தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் 1ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்தாண்டு கோடைகால பருவமழை தற்போது வரை இயல்பைவிட 83 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

    தமிழகத்தில் வழக்கமாக கோடை காலத்தில் 54.7 மி.மீ மழை பதிவாக வேண்டும்.

    தற்போது வரை 9.5 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

    இதுவரை 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு கோடை மழை கூட பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

     வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

     இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

     

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது.
    • ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் வெயிலின் அளவு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் காலையிலேயே வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு பிறகும் நீடிக்கிறது. ஆனால் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. இதனால் மதிய நேரத்தில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 109 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோட்டில் தான் அதிக வெயில் வாட்டி வருகிறது. மேலும் இந்திய அளவில் வெப்பநிலை பதிவில் முக்கிய இடம் பிடித்து வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெயில் தாக்கம் மிகவும் அதிகளவில் வாட்டி வதைக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் ஈரோட்டில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கம் காரணமாக மதிய நேரங்களில் முக்கியமான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

    வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். வெயில் காரணமாக வெளியே செல்லும் பெண்கள் முகத்தில் துணியும் அணிந்த படியும், குடை பிடித்து கொண்டும் சென்று வருகின்றனர்.


    ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் பழங்கள் விற்பனை கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் ரோட்டோரங்களில் ஜூஸ் கடைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சாத்துக்குடி, மொலாம் பழம், தர்பூசணி ஆகிய பழ வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஈரோட்டில் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ரோடுகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் ஈரோட்டில் பல பகுதிகளில் கடை மற்றும் வீடுகள் முன்பு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் ஈரோடு மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் அதிகபடியான வெயில் வாட்டி வருவதால் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடை வீதி பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள் பந்தல்கள் அமைத்துள்ளனர். மேலும் ஈரோடு திருவேங்கடம் வீதியில் தென்னங்கீற்று பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோட்டில் பல பகுதிகளில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி மற்றும் பல அரசு அலுவகங்களிலும் தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதில் தண்ணீர் குடித்து விட்டு செல்கிறார்கள்.

    மேலும் ஈரோட்டில் மூலப்பட்டறை வ.உ.சி.பார்க் ரோடு, கருங்கல்பாளையம், பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் முன்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கடை வைத்து இருப்பவர்கள் தண்ணீர் கேன் வைத்து உள்ளனர். மேலும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கு கேன்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறார்கள்.

    • தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
    • மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வருகின்றன.

    இதுபோக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, கீரை வகைகள், பழங்கள் வருகிறது. அந்த வகையில், தினமும் 700-க்கும் மேற்பட்ட லாரிகளில் 7 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பால் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

    எனவே, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி மற்றும் பழங்களின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் 850 பழக்கடைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

    கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் பழங்களின் விலை அதிகரித்து வருகின்றது. பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் தேவை காரணமாக பழங்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களின் விலை ரூ.25 வரையிலும், திராட்சை, அன்னாசி, கிர்ணி போன்ற பழங்களின் விலை ரூ.10-ம் உயர்ந்துள்ளது. தர்பூசணி விலை ரூ.5 அதிகரித்துள்ளது.

    அதேநேரம், மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.260 வரை விற்பனையான மாதுளை தற்போது ரூ.240-க்கு விற்பனையாகிறது. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியிருப்பதால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையான மாம்பழம், தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் மாம்பழம் விலை குறையவே வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது
    • சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தை சேலம் பிடித்துள்ளது. ஏப்ரல் 23 அன்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் சேலம் மாவட்டத்தில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆம்லெட் போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இருவர் முயன்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 5 டிகிரி வரை வெப்ப அலை அதிகரித்து வெயில் உக்கிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்கிவிடலாம், ஆனால் ஒரு மழைக்கு நம்மால் தாங்க முடியாது' என்ற பேச்சு இருந்து வருகிறது. ஆனால் எவ்வளவு மழையை தாங்கிவிடலாம் போல, ஆனால் இப்போது அடிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை என்று சொல்லும் நிலை வந்துவிட்டது. அந்தளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வதுதான் ஒரே வழி. அதற்கு பல தரப்பில் இருந்து அறிவுரைகள், பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் வானிலை ஆய்வு மையமும் கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? எதை செய்ய வேண்டும்? எதனை செய்யக் கூடாது? என்ற வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    * தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவு அடிக்கடி குடிக்க வேண்டும்.

    * லேசான, வெளிர் நிறம் மற்றும் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி எடுத்துச் செல்வது அவசியம்.

    * பயணத்தின் போது தண்ணீர் பாட்டில்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.

    * மயக்கம் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.


     

    * சர்க்கரை-உப்பு கரைசல், வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்சி, வடிகஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இவைகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.

    * வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ விட்டுவிடக்கூடாது.

    * வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்கலாம்.

    * குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம். ஈரமான ஆடைகளை பயன்படுத்தலாம்.

    இதுமட்டுமல்லாமல், வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நபருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபருக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

    அதன்படி, வெப்பத்தின் தாக்கத்தால் சோர்வடையும் நபரை நிழலின் கீழ் படுக்க வைக்கவேண்டும். ஈரத்துணியால் அவரை துடைத்து கழுவ வேண்டும். சாதாரண வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரை தலையில் ஊற்றலாம். அவருடைய உடல் வெப்பநிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை - உப்பு கரைசல், எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை வழங்கலாம். அதன் பின்னர் அருகில் உள்ள சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    ×