search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suchindram temple"

    • தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.
    • அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.

    விழாவையொட்டி தினமும் காலை மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் அறம் வளர்த்தநாயகியும் விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.

    பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது தேரின் மேல் வானத்தில் 3 கருடர்கள் வட்டமிட்டு பறந்தன.

    விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர் கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுவாமி பத்மேந்திரா, இணை ஆணையர் ஞான சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. தேரோட்ட விழாவில் புதுமணத் தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர் சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர் திருவிழாவையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும் இரவில் ஆராட்டும் நடக்கிறது.

    • இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இசை, பக்தி மெல்லிசை, சொல்லரங்கம், பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் கைலாசப்பர்வத வாகன நிகழ்ச்சியும், 8-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வந்த போது பேரம்பலம் திருக்கோவில் முன்பு நடராஜ பெருமான் ஆனந்தத் திருநடனம் ஆடினார். இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர்.

    மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவரும் நிகழ்ச்சியும், சுவாமியும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகியும், விநாயகரும் கோவிலில் இருந்து தட்டு வாகனங்களில் புறப்பட்டு தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும் அம்பாளும், அம்மன் தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளுவார்கள்.

    அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவார்கள். நான்கு ரதி வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக உலா வரும் தேர் பின்பு வெடி முழக்கத்துடன் நிலைக்கு வந்து சேரும். அதன் பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வருவார்கள்.

    இன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், திருவாதிரை களி திருவிழாவும் நடைபெறுகிறது.

    விழாவையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபடுகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் துப்புரவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுசீந்திரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்திஇசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்தநிைலயில், 5-ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன், கருட வாகனத்தில் பெருமாள் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுடன் வேளிமலை முருகன், மருங்கூர் சுப்பிரமணிய சாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்தனர். பிறகு வீரமார்த்தாண்ட கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர். அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியும் வானத்தில் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கினர். இந்த கருட தரிசனம் நிகழ்ச்சியை காண திரண்டிருந்த திரளான பக்தர்கள் பார்த்து வணங்கினர்.

    விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது.
    • இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, அலங்கார தீபாராதனை, பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் 3-ம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும், இரவு 11 மணிக்கு சாமி கற்பக விருட்ச வாகனத்தில் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வடக்கு தெருவில் கொட்டாரம் வாசலில் வைத்து கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை முருகன் ஆகிய மூவரும் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் விழாவை காண வருகின்றனர்.

    உமா மகேஸ்வரர், விஷ்ணு, அம்பாள் ஆகியோர் அமர்ந்திருக்கும் வாகனங்களை விநாயகரும், சுப்ரமணியரும் மூன்று முறை சுற்றி வலம் வந்து ஆசி பெறுவார்கள். பின்னர் இரு புறமாக கிழக்கே பார்த்து அனைவரும் சேர்ந்து நின்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அப்போது தீபாராதனை நடைபெறும். இந்த காட்சி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இங்கு நடக்கிறது. இந்த தரிசனத்தை "மக்கள் மார் சந்திப்பு" என்றும் "மக்கள் மார் சுற்று" என்றும் கூறுவர்.

    இக்காட்சியைக் காண திரளான பக்தர்கள் இன்று இரவு சுசீந்திரத்தில் கூடுவர். பின்னர் 7 நாட்கள் விநாயகரும், சுப்பிரமணியரும் தாய் தந்தையரின் திருத்தலத்தில் தங்கி அவர்களோடு விதவிதமான வாகனங்களில் வீதியுலா வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை சபை மண்டபத்தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகைகள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிரசாத், தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளம், தாளம், வெடி முழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    தொடர்நது நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

    இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 6-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் 10 நாட்கள் நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28 -ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, மெல்லிசை கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் 5-ந் தேதி தேரோட்டமும், அன்று நள்ளிரவு சப்தா வர்ண நிகழ்ச்சியும், 6-ந் தேதி மார்கழி திருவாதிரையையொட்டி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.

    இந்த திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நேற்று காலை 8 மணிக்கு தாணுமாலய சாமி சன்னதி அருகே உள்ள முருகன் சன்னதி எதிரே நடந்தது. நிகழ்ச்சியில் மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு பந்தல் கால் நாட்டப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் பரமேஸ்வரன் சர்மா, தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

    • ஆஞ்சநேயருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது.
    • ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி 22 -ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.

    23-ந்தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பல சாறு, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், மாதுளைச் சாறு உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகமும் நடைபெறுகிறது.

    நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு புஷ்பாபிஷேகமும், 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது, பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம் ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • மார்கழி திருவிழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டமும், அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், 6-ந் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். முன்னதாக வருகிற 26-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மார்கழி திருவிழாவையொட்டி இதற்கான கால்நாட்டு விழா வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு தாணுமாலய சாமி கோவிலின் அருகே உள்ள முருகன் சன்னதி முன்பு கால்நாட்டு வைபவம் தொடங்குகிறது. தொடர்ந்து மேளதாளத்துடன் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் கோவில் முன்பு கால் நாட்டு வைபவம் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்கம் ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
    • ஸ்ரீபலி விழா நாளை தொடங்கி டிசம்பர் 15-ந்தேதி வரை நடக்கிறது.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்கம் ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத மாணிக்க ஸ்ரீபலி விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி தினமும் காலை 10.15 மணிக்கு தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனசாத்து, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு கோவில் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றுதல், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு கோவில் திருசுற்றில் ஞானபிரகாசராய் விளங்கும் தாணுமாலய சாமி ரிஷப வாகனத்திலும், தீப பிரகாசமாய் திகழும் திருவேங்கட விண்ண வரம் பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் கோவிலை 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

    இதுபோல் சுசீந்திரம் தெப்பத்தெரு அரசடி விநாயகர் கோவில், சன்னதிதெரு குலசேகர விநாயகர் கோவில், ஆசிராமம் அஞ்சனம் எழுதிய கண்டன்சாஸ்தா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.

    • 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது.

    புகழ்பெற்ற சுசீந்திரம் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 18 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசும், அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து சுசீந்திரம் தெற்கு மண்மடத்தைச் சேர்ந்தவரும், சுசீந்திரம் கோவில் நித்திய யோகஸ்தானியருமான திலீப் நம்பூதிரி (வயது 53) கூறியதாவது:-

    நாங்கள்தான் கோவில் திருவிழாக்களின்போது கொடியேற்றுவோம். யாருடைய அனுமதியும் இன்றி நாங்கள் கோவிலுக்குள் சென்றுவர எங்களுக்கு உரிமை உண்டு. கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஊர்மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இதனால் உருவாகும் தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். களபபூஜை நடத்துவது ஊர் மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறோம். அதேபோல்தான் கும்பாபிஷேகத்தையும் நடத்த வேண்டும். எனவே அரசு எவ்வளவு சீக்கிரமாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமோ? அவ்வளவு சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

    சுசீந்திரம் கோவில் வட்டப்பள்ளி ஸ்தானிகரும், ஆயுர்வேத டாக்டருமான சிவபிரசாத் (45) கூறியதாவது:-

    கோவில்களை பொறுத்தவரையில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சாதாரணமாக கும்பாபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும்போது மொத்தத்தில் கோவில் புதுப்பிக்கப்படுகிறது.

    கோவிலில் உள்ள இடர்பாடுகள், பழுதுபார்க்கும் பணிகள், சுத்தப்படுத்த வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும். இந்த பணி என்பது நமது வீட்டை எவ்வாறு பராமரிப்பு செய்வோமோ அதுபோன்றதுதான் கோவில் கும்பாபிஷேகப்பணியும். 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளை கடந்து அதிகமாக 6 ஆண்டுகளும் ஆகிவிட்டது.

    கடந்த திருவிழாவின்போதே அதிகாரிகள் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்கள். கோவில்கள் ஒவ்வொரு ஊருக்கும் பலன் தரக்கூடியதாகும். கும்பாபிஷேகம் செய்யும்போது ஊருக்கும், மக்களுக்கும் புண்ணியங்களும், நன்மைகளும் கிடைக்கும். எனவே எவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசீந்திரம் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் ஆகிய கோவில்கள் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களாகும். இதற்காக திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும்.

    சுசீந்திரம்தாணுமாலயன்சாமி கோவில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக மாடர்ன் டைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைக்கும் பணி ரூ.76 லட்சத்திலும், உபசன்னதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் பணி ரூ.21 லட்சத்திலும், மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல் பணி ரூ.62 லட்சத்திலும், கருங்கல்லால் ஆன கட்டமைப்புகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, வரிவாளம் அமைக்கும் பணி ரூ.39 லட்சத்திலும், விமானங்களில் வர்ணம் பூசுதல் பணி ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், ராஜகோபுரத்தில் திருப்பணி ரூ.30 லட்சத்திலும், மின் இணைப்பு பணி ரூ.25 லட்சத்திலும் என மொத்தம் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியம் நன்றாக உள்ளது. சுசீந்திரம் உள்ளிட்ட 3 கோவில்களில் கும்பாபிஷேகப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த கோவிலில் மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள்.
    • இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். அதனால்தான் தாணுமாலயன் கோவில் (தாணு என்றால் சிவன், மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா) என்ற பெயருடன் இந்த கோவில் அழைக்கப்படுகிறது.

    இந்திரன் சாபம் நீங்கியது

    இந்திரன் தனது சாபம் நீங்க மும்மூர்த்திகளையும் ஒருசேர பூஜித்து வணங்கிய இடமே (அறிவுக்கானகம் என்று போற்றப்பட்ட ஞானாரண்யம் என்ற பகுதிதான்) சுசீந்திரம் என்பது புராண வரலாறு. அதனால் இந்திரன் இந்த கோவிலுக்கு அர்த்தசாமத்தில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அத்திரி மகரிஷி முனிவருக்கும், அவரது மனைவி அனுசூயாவிற்கும் மும்மூர்த்திகளும் ஒரே லிங்க உருவில் இங்கு காட்சி அளித்ததாக தல வரலாறு கூறுகிறது.

    இறைவன் மீது அளவற்ற பற்றுக்கொண்ட அறம்வளர்த்தாள் என்ற பெண்ணை இறைவன் உயிரோடு ஆட்கொண்ட இடம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் என்றும் தலப்புராணம் கூறுகிறது. அதன்காரணமாக அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

    சன்னதிகள்

    இந்த கோவிலின் பிரதான சன்னதியாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் இணைந்த தாணுமாலய சாமி சன்னதி அமைந்துள்ளது. இதுதவிர கொன்றையடி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம் வளர்த்த நாயகி சன்னதி, கால பைரவர் சன்னதி, கங்காளநாதர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, சேரவாதல் சாஸ்தா சன்னதி, ராமர் சன்னதி, முருகன் சன்னதி, பஞ்சபாண்டவர் சன்னதி, நீலகண்ட விநாயகர் சன்னதி, நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது), இந்திர விநாயகர் சன்னதி, உதயமார்த்தாண்ட விநாயகர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, ஸ்ரீசக்கரம் சன்னதி, விக்னேஸ்வரி (பெண் கணபதி- முகம் விநாயகர் உருவிலும், உடல் பெண் தோற்றத்திலும் காட்சி தரும்) சன்னதி, மன்னருக்கு தலைவலியை போக்கிய ஜூர தேவமூர்த்தி சன்னதி (3 தலை, 3 கால், 4 கைகளைக் கொண்ட சாமி சிலையுடன் கூடியது), நந்தீஸ்வர் சன்னதி போன்ற சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன. இத்தகைய சிறப்புகள் மிகுந்த இந்த கோவிலுக்கு தினமும் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    பழம்பெருமை மிக்க இந்த கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு சிலை கடுசர்க்கரை மருந்தால் ஆனது. இதனால் விஷ்ணுவின் திருமேனி எப்போதும் வெள்ளி கவசம் தாங்கி இருக்கும். எனவே விஷ்ணுவுக்கு அபிஷேகம் கிடையாது. இதனால் அவர் அலங்காரப்பிரியராகவும், சிவன் அபிஷேகப் பிரியராகவும் இங்கு காட்சி தருகின்றனர். இங்குள்ள உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ நாட்களில் மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    ராஜகோபுரம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் முகப்பில் உள்ள ராஜ கோபுரம் 135 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. கோபுரம் 10 அடி உயர கருங்கல் பீடத்தில் 7 நிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் உள்புறத்தில் மர வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. உட்புற சுவர்களில் மூலிகைச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணங்களில் ஆன ராமாயணம், மகாபாரத இதிகாச ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் ராமாயணம், மகாபாரதம், சிவபுராண கதாபாத்திரங்களின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் கடுசர்க்கரை, நவபாஷாண மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதாகும். கோவிலில் உள்ள நந்தி சிலை முழுக்க, முழுக்க கடற்சங்கை மாவாக்கி அதில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை மாக்காளை என்றும், பிரமாண்டமாக காட்சி தருவதால் மகாக்காளை என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 22 அடி உயரம் ஆஞ்சநேயரின் சிலையுடன் கூடிய சன்னதி இந்த கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சிலை பாதத்தின் கீழே உள்ள 4 அடி பூமிக்குள் பதித்து வைக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரிவது 18 அடி உயரங்கொண்ட ஆஞ்சநேயர் மட்டும்தான். பாதத்தில் இருந்து உச்சிவரை எந்தவித பிடிப்பும் இல்லாமல் இந்த சிலை நிற்கிறது. சுசீந்திரம் கோவிலில் மண்ணிலிருந்து கிடைத்த மாணிக்கமாக திகழ்கிறார் மாருதி. கோவிலின் தின வழிபாடுகளிலும், காணிக்கை வசூலிலும் இந்த கோவிலில் முதலிடம் வகிப்பவர் இவரே என கோவில் பணியாளர்கள் பெருமையோடு கூறுகிறார்கள். கோவிலின் அலங்கார மண்டபத்தில் 36 இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லும் கவிபாடும் என்பதற்கேற்ப இந்த தூண்களை தட்டினால் இசை ஒலி எழும்பும். கை தாளத்துக்கு ஏற்ப நாதஓசை எழும்பும் வகையில் இசைத்தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற வியக்க வைக்கும் சுற்றுப்பிரகார மண்டபத்தைக் கொண்டது இக்கோவில். 2 பெரிய கொடிமரங்கள் இந்த கோவிலில் அமைந்துள்ளன.

    மார்கழி திருவிழா தேரோட்டம், சித்திரை திருவிழா தெப்போற்சவம், ஆவணி மாத தேர்திருவிழா, மாசித்திருக்கல்யாண திருவிழா, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசை திதியில் வரும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா ஆகியவை இந்த கோவிலின் முக்கிய விழாக்களாகும். இந்த விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலில் தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மற்ற சன்னதிகளும், 1 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதியும் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு ஆஞ்சநேயர் சன்னதி நடைதிறக்கப்படும். மற்ற சன்னதிகள் மாலை 5 மணிக்கு திறக்கப்படும். இரவு 8 மணிக்கு அனைத்து சன்னதிகளும் நடை அடைக்கப்படும்.காலை, மாலை 6.30 மணிக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

    • மன்னர் பயன்படுத்திய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் ஆட்சி காலத்தில் இந்த விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    அந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகளை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

    அப்போது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் உடைவாளும் கொண்டு செல்லப்படும். சாமி சிலைகள் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெறும். பாரம்பரிய முறைப்படி பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும் சுவாமி சிலைகள் ஊர்வலம் புறப்படும் இடத்தில் இருந்து கேரள மாநில எல்லை வரை பொது மக்கள் திரண்டு நின்று பூப்பந்தல் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்தும். மின் விளக்குகளால் அலங்கரித்தும் வரவேற்பு கொடுப்பார்கள்.

    தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும். இதில் தமிழக-கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த சாமி சிலைகள் ஊர்வ லத்தில் யானையும் பயன் படுத்தப்படும்.

    பின்னர் சாமி சிலை களை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. இந்த ஆண்டு நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி நேற்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலத்துடன் புறப்பட்டு குமாரகோவில் முருகன் கோவில் வந்தடைந்தது. பின்னர் இன்று காலை பூஜைகள் முடிந்து முன்னுதித்த நங்கை அம்மனுடன் குமாரகோவில் முருகனும் பல்லக்கில் பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து கேரள அரசின் பாரம்பரிய மரியாதையுடன் கேரள போலீசார்அணிவகுப்பு மரியாதையுடன் பத்மனாபபுரம் அரண்மனை முன்பு வந்தடைந்தது. அப்போது அங்கு பூசாரிகள் மூலம் பிடிகாணிக்கை வழங்கபட்டது. பின்னர் அரண்மனையில் உள்ள உப்பரி மாளிகையில் பாதுகாக்கப்பட்ட மன்னர் பயன்படுத்திய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பூஜைகளுக்கு பின்னர் அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் உடைவாளை எடுத்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அந்த உடைவாளை அவர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார். அவர் குமரி மாவட்ட இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினார். பின்னர் இது அரண்மனை ஊழியர் சுதர்சனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து அரண்மனை ஊழியர் உடைவாளுடன் முன் சென்றார். யானையில் சரஸ்வதி அம்மன், 2 பல்லக்கில் முன்னுதித்த நங்கையம்மன், முருகன் ஆகியோர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் கேரளா பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமாரகுருபரன், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தாசில்தார் வினோத், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், நகர தி.மு.க. செயலாளர் சுபிகான், மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவர் குமரி ரமேஷ், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், மத்திய அரசு வக்கீல் வேல்தாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலமாக சென்ற சுவாமிகளை வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வழிபட்டனர். இன்று கேரளபுரம் திருவிதாங்கோடு வழியாக ஊர்வலம் குழித்துறை செல்கிறது. அங்கு தங்கிவிட்டு நாளை காலை சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு தமிழக எல்லையான களியக்காவிளை செல்கிறது. அங்கு கேரள மாநில அரசு முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டு நெய்யாற்றின் கரையில் தங்க வைக்கபடுகிறது. தொடர்ந்து புறப்பட்டு திருவனந்தபுரம் ஆரிய சாலையில் வந்தடைகிறது.

    அங்கு 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்கிறது. 10 நாள்கள் பூஜை முடிந்து அங்கிருந்து சாமி சிலைகள் மீண்டும் புறப்பட்டு குமரி வந்தடைகிறது.

    ×