search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா நாளை தொடங்குகிறது

    • இந்த திருவிழா வருகிற 6-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 5-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நாளை (புதன்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சித்திரை சபை மண்டபத்தில் உள்ள நடராஜமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து 18 ஊர் பிடாகைகள், வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவ பிரசாத், தெற்கு மண்மடம் நித்திய காரிய யோகஸ்தானிகர் திலீப் நம்பூதிரி, மற்றும் பக்தர்கள் முன்னிலையில் திருவிழா நோட்டீசுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோட்டார் இடலாக்குடி ருத்ரபதி விநாயகர் கோவிலில் இருந்து மரபுப்படி பட்டாரியார் சமுதாயத்தினர் கொடிப்பட்டத்தை மேளம், தாளம், வெடி முழக்கத்துடன், முத்துக்குடை ஏந்தி ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் கோவில் நுழைவு வாயில் முன்பு ஊர் மக்கள் சார்பில் கொடிப்பட்டத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றது. தொடர்ந்து கொடிப்பட்டம் 4 ரத வீதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    தொடர்நது நாளை காலை 9.15 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்கு மண் மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து திருமுறை பெட்டக ஊர்வலம் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் கோவில் கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி மெல்லிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் 3-ம் நாள் திருவிழாவான 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழாவான 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாள், மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் நிகழ்ச்சியும், 7-ம் திருவிழாவான 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 9-ம் திருவிழாவான 5-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

    இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×