search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property tax hike"

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #BJP #LaGanesan #PropertyTax
    மதுரை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன் எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறவினருக்கு ராணுவ விமானம் வழங்கியது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.

    தமிழகத்தில் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவரை காப்பாற்றும் நோக்கத்தில் தனது காரில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் மந்திரியின் செயல்பாடு கூட தவறு என்ற கோணத்தில் பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம் மீனவர்கள் விவகாரத்தில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.


    தமிழக கவர்னர் ஆய்வுப்பணி நடத்துவதை தவறு என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க.வினர் இதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த வி‌ஷயம் தேவையற்ற முறையில் பெரிதுபடுத்தப்படுகிறது.

    கவர்னர் ஆய்வை எதிர்த்து மு.க.ஸ்டாலின், அவரிடம் ஏன் கோரிக்கை மனுவை கொடுக்கிறார்? தமிழக அரசை கலைக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை.

    மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதாவை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை ஆதரிக்கிறோம். என்னுடைய பார்வையில் அரசு நன்றாகத்தான் செயல்படுகிறது. ஒருசில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

    லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை என்ற சட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது பெருமையான வி‌ஷயமாகும்.

    சொத்து வரி உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதால் தேர்தல் கூட்டணி வருமா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan #PropertyTax
    தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விஜயகாந்த் வலியுறுதியுள்ளார். #DMDK #Vijayakanth #PropertyTax
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற அதிமுக அரசு சொத்து வரியை 50 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவிகிதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை இந்த என்கவுண்டர் எடப்பாடி அரசு ஏற்படுத்தி உள்ளது.

    சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு, வாடகையை உயர்த்தும் சூழ்நிலை ஏற்படும். இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.

    மேலும் வாடகை உயர்வால் வணிகர்கள் தாங்கள் வணிகம் செய்யும் பொருளின் மீது கூடுதல் விலையை ஏற்றி, விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும், நுகர்வோரும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய நெருக்கடியான சூழலை உருவாக்க காரணம் என்ன?

    கையாலாகாத அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெற வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை இன்னமும் பெற முடியாத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுபடுத்த முடியாத நிலையிலும், ஆளும் அ.தி.மு.க. அரசு சொத்துவரியை மட்டும் உயர்த்தி வாடகைதாரர்கள், வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் வண்ணம் மக்களை சொல்லொணாத் துயரத்தில் இந்த நிர்வாகத் திறமையற்ற அ.தி.மு.க. அரசு தள்ளியிருக்கிறது.

    மக்கள் விலைவாசி உயர்வால் ஒருபுறம் தவித்துக் கொண்டிருக்க, அதைப்பற்றியெல்லாம் துளி கூட பொருட்படுத்தாமல் பேருந்து கட்டணத்தை ஒரே நாளில் வானளவு உயர்த்தி ஏழை-எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்த, இடையில் வந்த எடப்பாடி அரசு சொத்துவரி உயர்வு மூலம் பொதுமக்களின் தலையில் மீண்டும் பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்து தாங்க முடியாத சுமையை உருவாக்கி உள்ளது.


    சொத்துவரி உயர்வை சிறிது, சிறிதாக உயர்த்தி இருந்தால் மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வரி உயர்வை எதிர்கொள்ள தயாராவார்கள். ஆனால் அதனையெல்லாம் விடுத்து, பேருந்து கட்டணத்தை ஒரே நாளில் உயர்த்தியது போல சொத்துவரியையும் 100 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியது பெரும் கண்டனத்திற்கு உரியது.

    மேலும் இங்கு உள்ளாட்சி அமைப்புகளினுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் அந்தந்த இருப்பிடத்திற்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர்கள். ஆனால் இங்கு இன்னும் உள்ளாட்சி தேர்தலே நடத்தப்படாத நிலையில், அதிகாரம் உள்ளவர்களே இல்லாது மக்களுக்கு நெருக்கடியான துன்பத்தை தருக்கின்ற எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாது.

    எனவே அதிகாரமே இல்லாது அவசரகால நெருக்கடியில் சொத்து வரியை 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மக்களை நெருக்குகின்ற சொத்து வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    தவறும் பட்சத்தில் மக்களுக்கான களத்தில், போராட்டம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தே.மு.தி.க. இறங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே, ஏற்கனவே பல நெருக்கடியில் உள்ள தமிழக மக்களை மேலும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்காமல் உடனடியாக சொத்துவரியை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK #Vijayakanth #ChennaiCorporation #PropertyTax
    சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்திய அ.தி.மு.க. அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

    எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், வருகிற 27.7.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, துறையூர் நகராட்சி ஆகிய நகராட்சி அலுவலகங்கள் முன்பு (காவல்துறை அனுமதிக்கும் இடம்) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், முன்னாள், இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

    மக்களை வாட்டி வதைக்கும் சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்திய கம்யூனிஸ்டு அறிவித்துள்ளது.
    மன்னார்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    தமிழகம் முழுவதும் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவீதமும், வாடகைக்கு விடப்படும் குடியிருப்புகள் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு விடப்படும் கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதமும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், சிறு, குறு, நடுத்தர வணிகர்களையும் பாதிக்கக்கூடிய செயலாகும்,

    கடந்த 9-ந் தேதி வரை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் வீட்டு வரி உயர்வு குறித்து எந்தவிதமான முன் அறிவிப்பும் வெளியிடப்படாமல் திடீரென இந்த வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் 2 ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி போயுள்ளது, இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் கருத்து கூறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் நிர்வாக உத்தரவில் வீட்டு வரி உயர்த்தியுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும்.

    இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் கருத்து கேட்க போவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது, இந்த வீட்டுவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

    எனவே மக்களை மேலும் வாட்டி வதைக்கும் இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி நாளை (26-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×