search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patients"

    தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யாதீர்கள் என்று டாக்டர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை கூறி உள்ளார். #VenkaiahNaidu
    புதுச்சேரி:

    ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    இன்று ஜிப்மர் நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் இருந்து சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடித்து பணியாற்ற தயாராவது மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களது கடுமையான படிப்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஒவ்வொருவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

    அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி கடந்த சில ஆண்டுகளில் இந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியர்களையும், மாணவர்களின் வெற்றிக்காக தன்னலமின்றி பாடுபட்ட அவர்களது பெருமைக்குரிய பெற்றோர்களையும் நான் பாராட்டுகிறேன்.

    அன்பார்ந்த மாணவர்களே, இந்த நாட்டில், உயர்தரமான கல்வியைப் பெறும் குறிப்பிட்ட சில மாணவர்களாக நீங்கள் திகழ்வது உங்களது பாக்கியம்.

    மருத்துவக் கல்வியின் சிறப்பான அடிப்படை முறைகள் உங்களுக்கு கிடைத்திருக்கும் என நான் நம்புகிறேன். அத்துடன் உங்களது விருப்பத்துக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து நிபுணர்களாவதற்கு நீங்கள் ஆயத்தமாகியிருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.



    நாட்டில் 3-வது சிறந்த மருத்துவக்கல்லூரியாக ஜிப்மர் மருத்துவக்கல்லூரி திகழ்கிறது. தன்வந்தரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவனை பின்னர் ஜிப்மர் என பெயர் பெற்றது. புதுவை மட்டுமின்றி தமிழகம், கேரளா, ஆந்திரா என பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுகின்றனர்.

    நிறுவனங்கள், சாலைகள் ஆகியவற்றுக்கு தலைவர் பெயர் வைப்பது நினைவு கூர்வதற்குத்தான் ஆனால் ஜிப்மர் மருத்துமவனை பண்டித ஜவகர்லால்நேரு பெயரை தாங்கியுள்ளது. ஆனால் அதை யாரும் கூறாமல் ஜிப்மர் என கூறுகின்றனர். அதேபோல எம்.ஜி. ரோடு, எஸ்பி ரோடு என தலைவர்களின் பெயரை நினைவுகூராமல் அழைக்கின்றனர். முழுமையாக தலைவர்களின் பெயரோடு அழைக்க வேண்டும். மதம், மொழி, கலாச்சாரம் என பலவற்றால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை உணர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 3 தாரக மந்திரங்களை கொண்டு செயல்படுகிறார். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற 3 தாரக மந்திரங்களை மாணவர்களாக நீங்களும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

    மாணவர்கள் தங்களின் வாழ்நாளில் பெற்றோரை, பிறந்த மண்ணை, தாய்மொழியை, குருவை ஒரு போதும் கைவிடக் கூடாது. படித்து முடித்தவுடன் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் அங்கெல்லாம் சம்பாதித்து மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்புங்கள்.

    ஜிப்மர் மருத்துவமனை 90 சதவீத நோயாளிகளுக்கு இலவச மருத்துவத்தை அளித்து வருகிறது. இங்கு அதிநவீன சிகிச்சை செய்யப்படுகிறது. சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது. ஜிப்மர் கிளை காரைக்கால், ஏனாமில் தொடங்கப்பட்டுள்ளது.

    நமது மருத்துவத்தில் உணவே மருந்தாகும். ஆனால் இன்றைய காலத்தில் பீட்சா, பர்கர் என மக்கள் பலவகை உணவுக்கு மாறிவிட்டனர். நோயாளிகளிடம் இந்திய உணவை உண்ணும்படி சொல்லுங்கள். தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளிடம் பரிந்துரை செய்யாதீர்கள்.

    தற்போது மருத்துவமனையில் எந்திரங்கள்தான் அதிகமாக உள்ளது. அதை கைவிட்டு நோயாளிகளிடம் நேரடியாக பேசுங்கள். இயற்கையோடு இணைந்த வாழ்வுதான் நோயற்ற வாழ்வைத்தரும். எனவே அதிகளவில் மரம் நடுங்கள்.

    புதுவை கவர்னர் வாய்க்கால்களை தூர்வாரியுள்ளார். அவர் மட்டுமின்றி மக்களும் தாமாக முன்வந்து இதை செய்ய வேண்டும். தேர்தலுக்கு பிறகு அரசியல் கிடையாது. நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகிறோம். இதே வளர்ச்சிப் பாதையில் நாடு சென்றால் 3-வது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும்.

    பரந்து விரிந்த, பெருமளவிலான மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில், சுகாதார சேவைகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆரம்ப சுகாதார மையமாக இருந்தாலும் சரி, அல்லது, உயர் சிறப்பு மருத்துவமனைகளான உங்களது ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, இன்னும் அதிக மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    உலகம் முழுவதும் இன்னும் தரமான மருத்துவ சேவை கிடைக்கவில்லை. நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர்சிகிச்சையும் கிடைக்கவில்லை.

    எனவே, ஒவ்வொருவருக்கும், சிறப்பான, தரமான, மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மிகவும் சிறப்பு மிக்க பிரதமரின் “ஜன் ஆரோக்யா திட்டத்தை” தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், இதுவரை நாம் கண்டிராத மாபெரும் சுகாதார திட்டமாகும். இந்தத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தினால், இந்தியா வின் மருத்துவ சேவையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

    குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்குவதற்கான இந்த உன்னதமான முன்முயற்சி யில், உங்களைப் போன்றவர்கள் மிக முக்கிய பங்குவகிக்க வேண்டும்.

    நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு குறைந்த செலவில் உயர் சிறப்பு மருத்துவ சேவை வழங்குவதில், ஜிப்மர் நிறுவனம் நீண்டகாலமாக முன்னணி நிறுவனமாக திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார். #VenkaiahNaidu
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஹெல்மெட் அணிந்தபடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். #Hyderabad
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஓஸ்மானியா என்ற மிகப்பழமையான மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மீதும் விழுந்து காயம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கூரை இடிந்து விழுந்து காயம் ஏற்படாமல் இருக்கும்வண்ணம் தலைகளில் ஹெல்மெட் அணிந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வினோத போராட்டத்தை மேற்கொண்டனர்.



    ஐதராபாத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடத்தைப் புதுப்பிக்கக் கோரி மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சிகிச்சை அளித்து வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னதாக வெளி நோயாளிகளை மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள், கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #Hyderabad
    போடி பஸ் நிலையத்தில் பயணிகளை மன நோயாளிகள் மிரட்டி வருகிறார்கள்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி நகராட்சி பஸ் நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இங்கு நிரந்தரமாக 15 மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் தங்கி உள்ளனர். பயணிகள் நிற்கும், இளைப்பாறும் இடத்தில் அவர்கள் படுத்துக்கொண்டும், அதே இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்தும் வருகின்றனர்.

    இதனால் பயணிகள் நிற்கும் இடத்தில் துர்நாற்றம் வீசி மழைக்கு கூட ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மனநோயாளிகள் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை கம்பால் துரத்தி தாக்கி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்குள் வருவதற்கே பயணிகள் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் மது அருந்தி அதே இடத்தில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு பஸ் நிலையத்தில் மனநோயாளிகளாக சுற்றி திரிந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்கள் கர்ப்பம் அடைந்து உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், மனநோயாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களை கோடாங்கிபட்டியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் பருவ நிலை மாற்றம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல்:

    தென் மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து திண்டுக்கல் நகரில் அவ்வப்போது மழை வருவது போல அறிகுறி தென்பட்டு பின்னர் ஏமாற்றி சென்றது. ஒரு சில நாட்கள் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.

    ஆடி மாதம் முடிந்த பிறகும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இது போன்ற மாறுபட்ட பருவ நிலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வயிற்றுக் கோளாறு, உஷ்ணம், சளி, தோல் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. குடிநீர் வினியோகமும் சீராக இல்லாததால் பொதுமக்கள் சுகாதாரமற்ற தண்ணீரையை குடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

    இது போன்ற காரணங்களால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களாக நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. நீண்ட வரிசையில் பெயர் பதிவதற்கும், மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும் அவர்கள் காத்து கிடக்கின்றனர்.

    திண்டுக்கல் நகர் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருந்தும் அதிக அளவு நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதால் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு பொது மருத்துவமனை ஆகும். இங்கு 3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 நர்சுகள், 750 உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். தினமும் 13 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    இங்கிருக்கும் சிகிச்சை கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டுள்ளன. 2 பிரம்மாண்ட டவர் கட்டி டங்களும் உள்ளன.

    டவர்-1 பொது சிகிச்சைக்காகவும், மருந்து- சிகிச்சை, பரிசோதனைக்காகவும், டவர்-2 கட்டிடம் அறுவை சிகிச்சைக்காகவும் உள் நோயாளிகளுக்காகவும் செயல்பட்டு வருகிறது.

    பொதுமருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு தசை, இணைப்பு திசு, காது, மூக்கு, தொண்டை, பிரச்சினைகள், புற்று நோய், நாளமில்லா சுரப்பிகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை, குடல் நோய்கள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள் உள்பட அனைத்து நோய்களுக்கும் தனித்தனி சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    தினமும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் உள்ளிட்ட ஸ்கேன் எடுக்க தினமும் நீண்ட வரிசையில் நோயாளிகள் கூட்டம் காணப்படுகிறது. மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் எடுக்க குறைந்தது 4-5 மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கிறார்கள்.

    இதனால் நோயாளிகள் மிகவும் சோர்ந்து விடுகிறார்கள். ஆங்காங்கே நோயாளிகள் கவலையுடன் அமர்ந்து இருப்பது பரிதாபமாக உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் நோயாளிகளிடம் சரிவர பதில் கூறாமல் காத்திருக்க வைக்கின்றனர்.

    இதுகுறித்து சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் ஒருவர் கூறியதாவது:-

    எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க காலையிலேயே வந்து விட்டேன். மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வைக்கிறார்கள். இங்கு ஸ்கேன் எடுக்க 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

    நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க கூடுதல் எந்திரங்கள் அரசு அமைத்து தர வேண்டும். நோயாளிகளை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்க கூடாது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×