search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padayatra"

    • சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து நடைபயணத்தை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
    • நடைபயண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி சென்றனர்.

    சென்னை:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் 3,570 கி.மீ தொலைவுக்கு மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

    இந்த நிலையில் இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (25-ந்தேதி) நடைபயணம் சென்னை - ஸ்ரீபெரும்புதூர் வரை நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.

    அதன்படி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருந்து இன்று காங்கிரஸ் நடைபயணம் தொடங்கியது. நடைபயணத்தை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய்சிங், ஜார்ஜ் ராபின்சன் ஆகியோர் பங்கேற்று பலூன்களை பறக்க விட்டனர்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குமரி அனந்தன், ஸ்ரீவல்ல பிரசாத், திருநாவுக்கரசர் மற்றும் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் ரஞ்சன்குமார், திரவியம் கோபன்னா, தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நடைபயண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி சென்றனர்.

    75 கி.மீ. தூரம் கொண்ட நடைபயணம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் முடிவடைகிறது.

      திருவனந்தபுரம்:

      காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேச ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

      குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பாதயாத்திரை சென்ற அவர், கடந்த 11-ந் தேதி கேரள மாநிலம் சென்றார். அங்கு தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ராகுல் காந்தி பாதயாத்திரை சென்று வருகிறார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

      பாதயாத்திரையின்போது 2 முறை ஒவ்வொரு நாள் ஓய்வு எடுத்த ராகுல் காந்தி, 17-வது நாளாக இன்று காலை தனது பாதயாத்திரையை தொடர்ந்தார். திருச்சூர் மாவட்டம் திரூர் பகுதியில் இருந்து காலை 6.30 மணிக்கு அவர் பாதயாத்திரையை தொடங்கினார்.

      பல்வேறு தரப்பு மக்களும் ராகுல் காந்தியை பூக்கள் தூவி வரவேற்றனர். பகல் 10 மணிக்கு வடக்கஞ்சேரி தூய சவேரியார் ஆலயத்தில் அவர் பாதயாத்திரையை முடித்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார்.

      மாலை 4.45 மணிக்கு அங்கிருந்து அவர் பாதயாத்திரை தொடங்குகிறார். இரவு 7 மணிக்கு வெட்டிக்கட்டிரி பகுதியில் பாதயாத்திரையை முடிக்கும் அவர் செருத்துருத்தி தனியார் பொறியியல் கல்லூரியில் தங்குகிறார்.

      • 100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசினார்.
      • குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளனர்.

      நாகர்கோவில்:

      கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

      கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அவர் பாத யாத்திரை மேற்கொண்டார். 55 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்து நேற்று கேரளா எல்லை பகுதிக்கு ராகுல் காந்தி சென்றார்.

      இன்று காலை ராகுல் காந்தி குமரி மாவட்ட எல்லையான செருவார கோணத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டபோது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரை கண்டுகளித்தனர்.

      சாலையின் இரு புறமும் நின்று கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீராங்கனைகள், பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருடனும் ராகுல் காந்தி செல்பி எடுத்து மகிழ்ந்தார். தொண்டர்களையும் அவர் உற்சாகப்படுத்தினார். தினமும் ஓய்வு நேரங்களில் ஒவ்வொரு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

      விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவப் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் ராகுல் காந்தியிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவரும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பினரிடமும் உறுதி அளித்து உள்ளார்.

      100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசினார். இது பார்ப்பவர்களை கவரும் வகையில் இருந்தது. பாத யாத்திரையின்போது சாலையோர டீக்கடை ஒன்றிலும் டீ குடித்து அசத்தினார். இளநீர் பருகியும் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார்.

      குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளனர். மாவட்ட எல்லையான தலச்சன்விளையில் குமரி மாவட்ட பாத யாத்திரையை நிறைவு செய்து பேசிய ராகுல் காந்தி தமிழக மக்கள் மீது தனக்கு தனி ஈடுபாடு உண்டு என்றும், உங்களை விட்டு பிரிந்து செல்வது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் பேசியது தொண்டர்களை மட்டுமின்றி பொது மக்களையும் கவர்ந்தது.

      ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையானது 2024 பாராளுமன்ற தேர்தலை நோக்கியே மேற்கொண்டு உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்து வருகிறது. பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் கூட்டணியான தி.மு.க. வசம் உள்ளது.

      2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒரு உத்தியோகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

      • ராகுலும் தனது பயண பாதையில் ரோட்டோரத்தில் தன்னை பார்க்க கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி மகிழ தவறவில்லை.
      • ராகுல் காந்தி மாணவிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பந்தை எடுத்து வீசினார்.

      காங்கிரசின் கோட்டையிலே ஒய்யலாலா.... என்று ஆடிப்பாடி, உற்சாகத்துடன் ராகுலுடன் நாலு நாட்கள் நடந்து கேரளாவுக்கு வழியனுப்பி வைத்தார்கள் காங்கிரசார்.

      கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டையாகத்தான் இருந்தது ஒரு காலத்தில் என்பது உண்மை தான். எல்லா இடங்களையும் போல் இந்த இடத்தையும் கோட்டை விட்டது உண்மை.

      எல்லா மாநிலங்களையும் போல் இங்கும் விழுந்த ஓட்டையை தனது யாத்திரையால் மாற்றிவிட முடியும் என்று ராகுல் கருதுகிறார்.

      அதனால்தான் கன்னியாகுமரி மக்கள் 'அப்பச்சி' என்று என்றும் கொண்டாடும் காமராஜரின் மண்ணில் இருந்து பேசுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

      வரும் காலம் மாற்றமா? ஏமாற்றமா? என்பதை காலம் தான் கணிக்கும். ஆனால் மறையாத பல நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்து சென்றுள்ளார்.

      நேரு, இந்திரா, ராஜீவ் என்று மூன்று தலைவர்களின் வரிசையில் அந்த குடும்பத்தின் வாரிசான ராகுலை இந்த காலத்தில் தங்கள் கிராமத்தில் பார்த்த சந்தோச நினைவுகள் பலரது முகங்களில் நிழலாடுகிறது.

      ராகுலும் தனது பயண பாதையில் ரோட்டோரத்தில் தன்னை பார்க்க கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி மகிழ தவறவில்லை. நாட்டில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை நேரில் பார்க்கவே இந்த யாத்திரை என்றார். அதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

      4-வது நாளான நேற்று மதியம் முளகுமூடு, கல்லுவிளை என்ற இடத்தில் சிலம்ப கலைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரியவர் ஒருவர் மிகப்பெரிய 'பக்கோடா மீசையுடன்' நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ராகுலுக்கு ஆச்சரியம். அருகே வரும்படி கைகாட்டி அழைத்தார். அவரது மீசையை ஆச்சரியமாக பார்த்த ராகுலிடம் அவர் 'நான் ஆசானாக்கும்...' என்றார் மலையாளம் கலந்த தமிழில்!

      அதை கேட்டதும் இந்த வயதிலுமா? என்று ஆச்சரியத்துடன் பார்த்த ராகுல் முன்னிலையில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சிலம்பத்தை சுற்றி ராகுலை வியக்க வைத்துவிட்டார்.

      'உங்கள் கூட என்னால் வேகமாக நடக்கவும் முடியும் என்றவர் மீசையை தடவியபடி சிறிது தூரம் ராகுலுடன் நடக்கவும் செய்தார்.

      அவரை பாராட்டிவிட்டு அங்கிருந்து நடையை கட்டிய ராகுல் காட்டாத்துறை என்ற இடத்தில் சென்றபோது தி பாக்கிய நாத் பப்ளிக் பள்ளி என்ற பள்ளிக்கூடத்தில் மாணவிகள் கூடை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

      அவர்கள் வியர்க்க விறுவிறுக்க பள்ளி வாசலுக்கு வந்து ராகுலை பார்த்து கொண்டிருந்தார்கள். உடனே யாத்திரை அணி வகுப்பில் இருந்து விலகி தட தடவென்று பள்ளி வளாகத்துக்குள் சென்றுவிட்டார். அவரை பார்த்ததும் மாணவிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

      அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். அதில் ஒரு குறும்புக்கார மாணவி டெல்பா என்பவர் 'அங்கிள், பிளீஸ் கம் ஆன்ட் ஜாயின் மீ என்று ஆங்கிலத்தில் பேசி ஆர்வமாக அழைத்ததும்' நான் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா? ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முக்கியம். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

      மாணவிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பந்தை எடுத்து வீசினார். அதை தொடர்ந்து எங்களோடு ஒரு செல்பியாவது எடுங்கள் என்றதும் அவரும் போஸ் கொடுத்தார். அனைவரும் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

      மாணவிகள் டெல்பா, அகான்சியா ஆகியோர் கூறியதாவது:-

      நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தோம்.

      எங்களை பார்த்து ராகுல் வந்ததை நம்பவே முடியவில்லை. எங்களோடு கைகுலுக்கியபடி 'டீமில் இருக்கிறீர்களா' என்று கேட்டார். நாங்கள் ஆமாம் என்றதும் மிக்க மகிழ்ச்சி என்றார். அதோடு நன்றாக விளையாடுங்கள், வெற்றி பெறுங்கள். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வாழ்த்துக்கள் என்றார்.

      எங்கள் மைதானத்துக்குள் அழைத்தோம். ஆனால் வர இயலாதது பற்றி சொன்னார். சிறந்த விளையாட்டு வீரர்களாகவும், நாட்டுக்கு நல்ல குடிமக்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

      ராகுல் எங்களோடு இருந்தது ஓரிரு நிமிடங்கள் தான். ஆனால் எங்களுக்கு மறக்க முடியாத நினைவுகள்.

      இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

      • ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை தொடங்குகிறார்.
      • நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

      சென்னை :

      காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார்.

      சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் இரவு தங்கும் ராகுல் காந்தி, நாளை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

      பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பி வருகிறார். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

      • காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி வகித்து வருகிறார்.
      • செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது.

      புதுடெல்லி:

      காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதற்கிடையே, செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் பாதயாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது.

      இந்நிலையில், பாதயாத்திரை பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாலும், சில மாநிலங்கள் தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகளை முடிக்காததாலும் தலைவர் தேர்தல் ஒரு மாதம் தள்ளி போகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

      அதன்படி, அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. வரும் 28-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, தேர்தல் தேதியை முடிவு செய்கிறது.

      • 28-ந் தேதி கொடி ஏற்றத்திற்காக கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
      • மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

      கடலூர்:

      நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

      இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயபக்தியுடன் பாதயாத்திரை சென்று வருவதும், பலர் அன்னை மரியாவின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய தேரை இழுத்து செல்வதையும் பலர் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது. மேலும் கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் சார்பில் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் துரைராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாதயாத்திரைக்கு செல்லக்கூடிய மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பாதயாத்திரை செல்லக்கூடிய மக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்பாக செல்வதற்கு கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

      • சுதந்திரதினபவள விழாவையொட்டி வாடிப்பட்டியில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர்.
      • வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது.

      வாடிப்பட்டி

      வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திரதினபவள விழாவையொட்டி பாதயாத்திரை நடந்தது.

      மாவட்டத்தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரதலைவர் முருகானந்தம், மாவட்டத்துணைத்தலைவர் செல்வக் குமார், துரைப்பாண்டி, வட்டாரத்தலைவர் பழனிவேல், ராயல், காந்தி சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஊடகபிரிவு தொகுதிதலைவர் வையாபுரி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது தொடங்கி வைத்தார்.

      வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது. இதில் மனிதஉரிமை மாவட்டத்தலைவர் ஜெயமணி, ஒ.பி.சி.அணி மாவட்டத் தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் திலகராஜ், அமைப்புசாரா தொழிலாளர் அணிமாநிலதலைவர் மகேஸ்வரன், சோனைமுத்து, வரிசைமுகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

      இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.

      • காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது
      • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

      குடியாத்தம்:

      வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 60 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தற்போது நடைபெற்று வரும் பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத போக்கினை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறது.

      இரண்டாம் நாள் பாதயாத்திரை நேற்று தொடங்கி குடியாத்தம் வழியாக பாக்கம், ராமாலை, பரதராமி சென்றடைந்தது வழிநெடுகிலும் பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

      நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் முத்து மகாதேவன், ஆடிட்டர் கிருபானந்தம், நயீம் பரவேஸ் ஆகியோர் பேசினர்.

      குடியாத்தம் நகர தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, நகர மன்ற உறுப்பினர் விஜயன், வட்டாரத் தலைவர் வீராங்கன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், யுவராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விக்ரம் உள்பட ஏராளமானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

      • பாதயாத்திரையை மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
      • பாதயாத்திரை கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு துவங்கி பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம், முத்துக் கிருஷ்ணாபுரம், பஜார் வழியாக மீண்டும் மணிக்கண்டில் நிறைவடைந்தது.

      கடையநல்லூர்:

      கடையநல்லூரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டும், விலைவாசி உயர்வை கண்டித்து பொதுமக்களிடம் விளக்கும் விதமாக பாதயாத்திரையை மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

      நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் ஹிதாயத் துல்லா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் சட்டநாதன், மாநில பேச்சாளர் பால்துரை, இடைகால் சிவராமகிருஷ்ணன், சண்முகவேலு, யூசுப், மஸ்தான், டாக்டர் சங்கரகுமார், நகர தலைவர் சமுத்திரம், வக்கீல் எஸ்.ஆர்.ரமேஷ், சுரேஷ், தேவேந்திரன், பிரபாகரன், கணேசன், பாக்கியராஜ், திருவெற்றியூர் கதிரவன், மாரிமுத்து, கரடிகுளம் அண்ணாமலை, திருமலை யப்பன், செல்ல பாண்டியன், மாடசாமி, ரவி, குருநாதன், செந்தூர்பாண்டியன், சோனா, அப்துல் ஹமீது, சேகு உதுமான், தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன், மகளிரணி சேர்மக்கனி, தங்கம், புஷ்பா உட்பட பலர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு பாதயாத்திரை சென்றனர்.

      சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

      பாதயாத்திரை கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு துவங்கி பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம், முத்துக் கிருஷ்ணாபுரம், பஜார் வழியாக மீண்டும் மணிக்கண்டில் நிறைவடைந்தது.

      • வேலூர் கோட்டை முன்பு நாளை நிறைவு
      • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

      வேலூர்:

      வேலூர் மாநகர காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை இன்று நடந்தது. வேலூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பத்தில் பாதயாத்திரை தொடங்கியது.

      மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். பாதயாத்திரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரகு, மண்டல தலைவர் கப்பல் மணி, தங்கமணி புருஷோத்தமன், துளசிராமன், பாலகிருஷ்ணன், திருமால், ஜார்ஜ், கணேஷ், இ.பி.காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

      வேலூர் சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை, பாகாயம், தொரப்பாடி வழியாக பாதயாத்திரை சென்றனர். வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பு நாளை பாதயாத்திரை நிறைவடைகிறது.

      பா.ஜ.க. ஆட்சியினால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

      பெட்ரோல் விலை வேலையில்லா திண்டாட்டம் பொருளாதார பேரழிவு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கிற பா.ஜ.க.வே வெளியேறு என்று கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

      • இந்த யாத்திரை அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது.
      • 150 நாட்களில் இந்த யாத்திரை நிறைவு அடையும்.

      புதுடெல்லி :

      அடுத்த பாராளுமன்ற தேர்தல், 2024-ம் ஆண்டு நடக்க உள்ளது. அதற்குள் காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் 'பாரத் ஜோடோ யாத்திரை "(ஐக்கிய இந்தியா யாத்திரை) என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி மக்களை சந்திக்க முடிவு செய்தது.

      இந்த யாத்திரை அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

      இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று மேலும் கூறியதாவது:-

      இதே நாளில் 80 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியின் தலைமையிலும், உத்வேகத்திலும் இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. அதன்பின்னர் 5 ஆண்டுகள் கழித்து நாடு சுதந்திரம் பெற்றது.

      இன்று இந்திய தேசிய காங்கிரஸ், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை அடுத்த மாதம் 7-ந் தேதி தொடங்குகிறது.

      இது 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய பாத யாத்திரை ஆகும். இது 3,500 கி.மீ. தொலைவிலானது. 150 நாட்களில் இந்த யாத்திரை நிறைவு அடையும்.

      பயம், மதவெறி, பாரபட்சம், வாழ்வாதாரத்தை அழிக்கும் பொருளாதாரம், பெருகிவரும் வேலையின்மை, வளர்ந்து வரும் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு மாற்றாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்குமாறு, ஒரு மாபெரும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் அனைவரையும் காங்கிரஸ் கட்சி அழைக்கிறது.

      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

      ×