search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Landslide"

    • அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • காணாமல் போன 5 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

    உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாகாண தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும். தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த சிச்சுவானின் பெரும்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகிறது. 

    • பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர்.
    • இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.

    லாச்சுங்:

    சிக்கிம் மாநிலத்தில் உள்ள லாச்சுங் மற்றும் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதி சிறந்த சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ரோடுகள் சேதமாகி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா வந்த சுமார் 500 பேர் சுங்தாங் பகுதியில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த இந்திய ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று 54 குழந்தைகள் உள்பட அனைவரையும் பத்திரமாகமீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட 500 பேரையும் தாங்கள் தங்கி இருந்த 3 ராணுவ முகாம்களுக்கு அழைத்துசென்று தங்க வைத்தனர். அவர்களுக்கு சூடான உணவு, காபி மற்றும் குளிரை தாங்கும் உடைகளை வழங்கப்பட்டது.

    • பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது.
    • வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர், முள்ளி, வெள்ளியங்காடு மார்க்கமான கோவை மூன்றாவது மாற்று பாதை உள்ளது.

    இவ்வழித்தடத்தில் கெத்தை ஏழாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது. மேலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் மஞ்சூரில் இருந்து கோவை சென்ற பேருந்தும் கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்த பேருந்துகளும் பள்ளி பேருந்து தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் என பல வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுகளையும் மரத்தையும் அப்புறப்படுத்தினார்கள் பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

    • வீடு இடிந்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 19 வயதான அர்ஷாத் என்பவர் பரிதாபமா உயிரிழந்தார்.
    • இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ரஷீத் (17) உள்பட இருவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம், தகுரியா என்ற பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பெரிய பாறாங்கல் மலையிலிருந்து உருண்டு வீட்டின் மீது விழுந்தது.

    இதில் வீடு இடிந்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 19 வயதான அர்ஷாத் என்பவர் பரிதாபமா உயிரிழந்தார். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ரஷீத் (17) உள்பட இருவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இந்த கிராமம் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால், நிலச்சரிவின்போது கற்பாறைகள் கீழே உருண்டு விழும் அபாயம் இருப்பதாகவும், மக்களின் பாதுகாப்பிற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே டோர்காம் நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த 20 லாரிகள் மண்ணுக்குள் புதைந்தன.

    இந்த நிலச்சரிவில் சிக்கி ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சில லாரிகளில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

    • காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகினர்.
    • கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

    கின்ஷாசா:

    காங்கோ நாட்டின் மசிசி மாகாணத்தின் பொலொவா கிராமத்தில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடி வருகிறோம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் மசிசி மாகாணத்தின் பிஹாம்ப்வே கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கவுகாத்தி:

    அருணாசலபிரதேசத்தின் தவாங் பகுதியில் மராட்டியம் மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவவீரரான தாகலே உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று ராணுவவீரர் தாகலேவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மீட்புகுழுவினரின் தீவிர போராட்டத்தின் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு தாகலே சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக தவாங்கில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பலியான ராணுவவீரர் தாகலேவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    • சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. நிலச்சரிவினால் அடித்து வரப்பட்ட சேறு மற்றும் குப்பைகளால் பல வீடுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

    ரியாவு தீவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என கூறுகின்றனர்.

    தற்போது அங்கு வானிலை சீரற்ற நிலையில் இருப்பதால் மீட்பு பணிகளும் சவாலாக உள்ளன. நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்துவதற்காக தேசிய பேரிடர் பாதுகாப்பு நிறுவனம் நாளை ஹெலிகாப்டரை அனுப்பவுள்ளது.

    அண்டை நாடான மலேசியாவிலும் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் இறந்துள்ளனர். கடந்த வாரம் 41,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 13 குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • நிலச்சரிவால் 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. ராம்பன்-சங்கல்தான் கூல் சாலையில் உள்ள துக்கர் தல்வாவில் சுமார் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 13 குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ராணுவத்தினர் உணவு வழங்கினார்கள். மேலும் போர்வை, பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.

    நிலச்சரிவால் 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் வழித்தடம், குடிநீர் குழாயும் சேதம் அடைந்துள்ளது.

    • வெள்ளம், நிலச்சரிவுகளை தடுக்க ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
    • அரியலூர் மாவட்ட வன அலுவலர் பேசினார்.

    அரியலூர்

    உலக ஈர நிலங்கள் நாளை முன்னிட்டு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி வன மண்டலம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட வன அலுவலர் குகணேஷ் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது,

    ஈர நிலங்கள் நமக்கு எண்ணில் அடங்காத பலன்களைத் தருகின்றன. கடல் அலைகளின் கோரத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, பல்வேறு வகையான பறவைகளின் வாழிடம், சுற்றுச்சூழலில் உள்ள மாசுகளை உறிஞ்சிக் கொள்ளுதல், மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துதல், வாடும் பயிருக்கு உயிர் நீராகச் செயல்படுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், நீர்வாழ் உயிரினங்களுக்கு உயிர் சூழலியல் இடமாகச் செயல்படுதல் உள்ளிட்டவை ஆகும்.

    இத்தகைய நிலங்களின் தேவை என்ன என்பதை உணராத பொதுமக்கள் பல நேரங்களில் தங்களின் தேவைகளுக்காக இதனை ஆக்கிரமிக்கும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்த நிலங்களின் தேவை என்ன என்பதையும் இத்தகைய நிலங்களால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும், ஈரநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஆண்டு தோறும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    எனவே வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் தடுக்க ஈர நிலங்களை பாதுகாப்பதே மிகச் சிறந்த தீர்வாகும் என்றார்.

    பின்னர் அவர் இது தொடர்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் சு.ஜெயா, பள்ளி ஆய்வாளர் பழனிசாமி, வனச்சரக அலுவலர் முத்துமணி, வனவர் பாண்டியன் மற்றும் வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதே போல் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடப்பட்டது. 

    • மண் மற்றும் பாறைகள் சரிந்து கோத்தகிரி-மசக்கல் சாலையில் வந்து விழுந்தது.
    • அதிகாரிகள் விரைந்து வந்து மண் மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. தற்போது மழை குறைந்து கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. கடும் குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் சாலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர்.

    இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் மக்கள் மலை காய்கறி பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். கேரட், முட்டைக்கோஸ், மேரக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் பாறைகள் சரிந்து கோத்தகிரி-மசக்கல் சாலையில் வந்து விழுந்தது. இதனால் அந்த சாலை முழுவதும் மண்ணும், பாறாங்கற்களுமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலையே தெரியாத அளவுக்கு மண் மூடி காணப்பட்டது.

    இன்று காலை அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மண் மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டு, அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக தான் ஏராளமான கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் கல்லூரி மற்றும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
    • மண்ணுக்குள் புதைந்துள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது.

    கோலாலம்பூர்:

    மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர்.

    இதற்கிடையே, இன்று அதிகாலை இந்தப் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 79 பேர் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர்.

    நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் மீட்கப்பட்டனர். மாயமானோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    ×