என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி"

    • நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது.
    • ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கோவை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அத்துடன் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. வழக்கமாக காலை 7 மணிக்கெல்லாம் தெளிவான வானம் காணப்படும். ஆனால் 3 தினங்களாக காலை 10 மணி வரை பனிமூட்டமாகவே இருக்கிறது. 10 மணிக்கு பிறகு தான் தெளிவான வானம் தெரிகிறது. மேலும் மாலை 4 மணிக்கெல்லாம் இருள் சூழ தொடங்கி விடுகிறது.

    மாநகர பகுதிகளான ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம், அவினாசி சாலை, பீளமேடு, சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. வானமும் மேகமூட்டமாகவே உள்ளது

    பனிமூட்டத்தால் அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.

    அதிகாலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்திலும் குளிர் காணப்படுகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.

    வால்பாறை பகுதி முழுவதும் அதிகாலை முதல் கடும் பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

    நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட பருவமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. பனிமூட்டத்தால் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது.

    கடும் குளிர், பனிமூட்டம் காணப்படுவதால் அதிகாலையில் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கம்பளி போர்த்திய ஆடைகள் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கமாக 8 மணிக்கு வேலைக்கு செல்வர். தற்போது நிலவும் பனிமூட்டத்தால் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு தான் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேயிலை மற்றும் மலைக்காய்கறிகள் விவசாயமும் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் வெளியில் வருவதில்லை. வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்து விட்டது.

    ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் குளிர் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றன. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்றும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் காலை நேரங்களில் ஏற்காடு காபி தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காடு மலைப் பாதையிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே ஊர்ந்து செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வரை கடும் பனிமூட்டம் இருந்தது. இன்று காலை முதல் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையுடன் குளிரும் சேர்ந்து வாட்டி வதைக்கிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்பட்டாலும், கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

    • தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    • கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

    கேரட்... இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும்.

    இது அனைவரும் அறிந்ததே...!

    ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது.

    அதுபற்றி தெரியுமா...?

    ஆம்...அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை.

    டெல்லியில் இருந்து விதைகள்

    இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு அடுத்ததாக பிரதான சாகுபடியாக கேரட் உள்ளது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

    இதற்கான விதைகள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.

    அத்துடன் தோட்டக்கலைத்துறை மூலம் தயாரிக்கப்பட்ட மண்ணுயிர் உரம் இடப்பட்டது. இந்த பணியில் பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் தோட்டக்கலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். இவை வடமாநிலங்களில் பல்வேறு உணவு வகைகள், கேக் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிற கேரட் விளைவிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், கருப்பு கேரட் விதைத்து, அதன் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. வளர்ந்த பிறகு, அதில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளது. சோப்பு தயாரிப்பில் இயற்கை வர்ணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.

    • கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
    • உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    * கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.

    * மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்

    * அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்

    * குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்

    * காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.

    • தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
    • குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    கோவை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவி வந்தது. நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியை ஓட்டிய இடங்களில் மழை கொட்டியது.

    இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும், கடும் குளிரால் வெளியில் வர முடியாமல் விடுதிகள், லாட்ஜ்களிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    • தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலநிலை முற்றிலும் மாறி காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், மிதமான மழையும் பெய்த வண்ணம் இருக்கிறது. மழையால் மாவட்டம் முழுவதுமே மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது.

    இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

    அதிகபட்சமாக மாவட்டத்தில் கொடநாட்டில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடியது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மேலும் வாட்ஸ் அப் எண்ணான 9488700588க்கும் தகவல் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு-0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநகரை பொறுத்தவரை நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, சத்தி சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி நின்றது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கொடநாடு-53, பார்சன்வேலி-26, கோத்தகிரி-23, கெத்தை-22, மசினகுடி-20, ஊட்டி-18.6, நடுவட்டம்-15, போர்த்தி மந்து-10, குன்னூர்-10.

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.
    • விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் ஊட்டி பஸ் நிலையம், பிங்கா் போஸ்ட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பணி முடிந்து வீடு திரும்பியவா்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவா்கள் அவதிக்கு உள்ளாகினர்.

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் மாலை நேரங்களில் மிதமான குளிருடன் கூடிய காலநிலை நிலவியது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட்புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இது மாலை நேரம் வரை தொடர்ந்து நீடித்தது. இதன்காரணமாக அந்த பகுதியில் கடுங்குளிர் நிலவியது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    விடுமுறை தினமான இன்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மற்ற சுற்றுலா தலங்கள் வழக்கம் போல திறந்து இருந்தன. அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து, தங்கள் பொழுதை கழித்தனர்.

    • மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அதனை தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், ஓட்டுப்பட்டறை, அருவங்காடு, கொலகொம்பை, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மழையுடன் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி சென்றனர். விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.

    இதேபோல் கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இரவிலும் மழைநீடித்தது அங்குள்ள முக்கிய சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள உப்பட்டி, பொன்னானி, நெலாக்கோட்டை, பிதர்காடு, பாட்டவயல் அம்பலமூலா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இந்த மழைக்கு அய்யன்கொல்லியில் இருந்து காரக்கொல்லி வழியாக கையுன்னி செல்லும் சாலையில் மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் மரம் விழுந்ததால் போக்குவரத்தும் தடைபட்டது. தகவல் அறிந்ததும் மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்தனர். கனமழையால் பொன்னானி, சோலாடி ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
    • கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் ஒற்றை காட்டு யானை கடந்த 2 மாதங்களாக முகாமிட்டு உள்ளது. இந்த யானை மேல் கூடலூர், கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், செம்பாலா, கோத்தர் வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலா வருகிறது.

    பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் ஓய்வெடுக்கும் யானை மாலை நேரத்துக்கு பிறகு கூடலூருக்குள் வந்து விடுகிறது. பின்னர் அங்குள்ள வீடுகளை முற்றுகையிடுவது, பயிர்களை தின்று சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தினமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை நடுக்கூடலூர் மெயின் ரோட்டில் வலம் வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் பதுங்கினர்.

    இதேபோல மாக்கமூலாவில் 3 காட்டு யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. பின்னர் கூடலூர்-முதுமலை எல்லையோர கிராமங்களான தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், தேன்வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் இடம்பெயர்ந்து அங்கு விளைந்து நிற்கும் பயிர்களை தின்று நாசம் செய்துவிட்டு சென்றது.

    குனில் வயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் ருக்குமணி என்பவரின் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து, சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் கிடைக்குமா? என துதிக்கை விட்டு தேடிப்பார்த்தது.

    அப்போது வீட்டில் இருந்த ருக்குமணி அச்சத்தில் சத்தம் போட்டார். தொடர்ந்து காட்டு யானைகள் அங்குள்ள வயல்களுக்கு புறப்பட்டு சென்றன. பின்னர் விளைநிலம் வழியாக காட்டு யானைகள் மாக்கமூலா பகுதிக்கு சென்றன.

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் கார்குடி வனச்சரகர் பாலாஜி, வனவர் தங்கராஜ், வனக்காப்பாளர் வினித் உள்ளிட்ட ஊழியர்கள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
    • வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்தன.

    அதன்பின்னர் சற்று மழை ஓய்ந்திருந்தது. கடந்தவாரம் முதல் மீண்டும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் முதல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.

    நேற்று ஊட்டி, மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழையாக தொடங்கி, பலத்த மழையாக வெளுத்து வாங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இன்று காலையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தொழிலாளர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி பள்ளிக்கு சென்றதை காண முடிந்தது. ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இரவில் மட்டும் அல்லாமல் பகலிலேயே குளிர் காணப்பட்டதால் நேற்று விடுமுறை தினம் என்றாலும் பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மழை காரணமாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

    கோவை மாவட்டத்தில் காலை முதல் மிதமான வெயில் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறி லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவில் காந்திபுரம், அண்ணாசிலை, ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை உள்ளது. காலையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    • நீலகிரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • நீலகிரிக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதேபோல், கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மசாவட்டங்களுக்கும் இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் 4 தாலூக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

    அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழைக்கு பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மண்சரிவுகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.

    சில வாரங்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் ஆந்திர கடலோர பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 253 பகுதிகள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை கண்காணிப்பதற்கு என மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 430 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ள முகாம்களுக்கு சென்று தங்குமாறும் அறிவுறுத்தி வருகிறது.

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மழையில் மண்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள பொக்லைன் எந்திரங்கள், மின்சார வாகனங்கள், மணல் மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் உள்ளனர். மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க 1077 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மழை பாதிப்புகள் ஏதாவது இருந்தால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மாவட்டத்தில் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் பேரிடர் உபகரணங்களுடன் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றனர்.

    ×