search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heart disease"

    ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

    நமது உடலை நிதானப்படுத்தவும், புத்துணர்ச்சி பெறவும் தூக்கம் சிறந்த வழிமுறையாகும்.

    சரியான அளவில் தூங்கினால் உடல் மற்றும் மன அழுத்தங்கள் நீங்குகிறது. மேலும் இருதய சிக்கல் உள்பட பல்வேறு நோய்களை உருவாக்கும் ஆபத்தையும் குறைக்கிறது.

    ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பாக 43 முதல் 79 வயது வரை உள்ள 88 ஆயிரம் பேரிடம் இருந்து தகவல்களை பெற்று ஆய்வு செய்தது. இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்க சென்றவர்களைவிட இரவு 11 மணிக்கு பிறகு தூங்குபவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்தது.

    தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் தினமும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

    மிக சமீபத்திய கண்டுபிடிப்பின்படி தூக்கம் தொடங்குவதற்கும் இருதய பாதிப்புக்கும் இடையேயான சாத்தியமான தொடர்பை பரிந்துரைக்கிறது. டாக்டர் டேவிட் பிளான்ஸ் கூறும் போது, ‘‘24 மணிநேர சுழற்சியில் தூங்குவதற்கான உகந்த நேரத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. நள்ளிரவுக்கு பிறகு தூங்குவது மிகவும் ஆபத்தானது. இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்கி விட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம். இது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

    அதே நேரத்தில் இரவு 10, 11 மணிதான் தூங்குவதற்கு சிறந்த நேரம் என்பது அனைவருக்கும் பொருந்தாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர் ஆஸ்டர் சி.எம்.ஐ. மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சஞ்சய்பட் இதுதொடர்பாக கூறியதாவது:-

    தூங்குவதற்கு சரியான நேரம் என்று எதுவும் இல்லை. சரியாக 8 மணி நேரம் இடைவிடாத தூக்கம் ஆரோக்கியமான இதயத்துக்கும், உடல் ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் இன்றியமையாதது.

    நன்றாக தூங்குவதற்காக மது அல்லது மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம்.
    இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

    இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

    இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

    இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

    இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

    இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்பவை கரோனரி தமனிகள்.

    இதயத் துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

    இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

    இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.

    இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

    நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

    உங்கள் கையை பொத்திக்கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

    இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.

    இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை உருவாக்கும்.

    இதயத்துடிப்பு உருவாக்கும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

    இதேபெயரில் இதய சிகிச்சை கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    மாரடைப்பு வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாரடைப்பு வருவதற்கான காரணங்களையும் அறிகுறியையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
     
    சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து  விடுகிறது.  இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
     
    உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம் போன்றவற்றால்கூட ரத்த நாளத்தின் உட்சுவர் பாதிக்கப்படுகிறது. உட்சுவர் கரடுமுரடாகி, அதன் மீது ரத்தத்தில் மிதக்கும் கொழுப்புத் திவலைகள்  படிந்துகொண்டே வரும். ரத்த ஓட்டத்துக்கான பாதை குறுகலாகி, ரத்த ஓட்டம் தடைபடும். பிறகு இதய நாளத்தில் விறைப்பு அல்லது உறைகட்டி  ஏற்பட்டால், ரத்த ஓட்டம் முழுவதுமாகத் தடைபடும். இதயத் தசைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால், அவை செயலிழக்கின்றன.
     
    புகைபிடித்தல், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கு அதிகமானக் கடின உழைப்பு போன்றவற்றால், இது ஏற்படலாம். அடைப்பு அதிகமாகும்போது, இறுக்கம் அல்லது தீவிர மாரடைப்பு ஏற்படுகிறது.
     
    அறிகுறிகள்:
     
    ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு அவருடைய ரத்த நாளங்களில் 50 சதவிகிதம் அடைப்பு இருந்தால்கூட இதயத்துக்குத் தேவையான சுத்த ரத்தம் கிடைத்துவிடுகிறது. அதனால் அவருக்கு எந்த விதமான அறிகுறியும் தெரியாது.
     
    கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை. அப்போது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறி தோன்றும். ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான ரத்தமும்  பிராண வாயுவும் கிடைக்கும். நெஞ்சு வலியும் மறைந்துவிடும்.
     
    மாரடைப்புக்கு ஆரம்ப அறிகுறியே மார்பு இறுக்கம்தான். மார்பு இறுக்கம் மார்பின் நடுப்பகுதியில் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம்  தோன்றும். இரு தோள்களில் முக்கியமாக இடது தோளில் ஆரம்பித்து கைகள், கழுத்து, தாடை, முதுகு போன்ற பகுதிகளுக்கும்  வலி பரவலாம். சில சமயங்களில் குறிப்பிட்டப் பகுதியில் மட்டுமே வலி தோன்றலாம். பொதுவாக நோயாளிகள் இதை வாயுக்  கோளாறு என்று அசட்டையாக இருந்துவிடுவார்கள். இந்த மார்பு இறுக்கத்தால் இதயத் தசைகள் சேதம் அடைவதில்லை. ஆனால் எந்த நேரத்திலும் ரத்த நாளங்கள் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம். சாதாரண மார்பு இறுக்கமா அல்லது மாரடைப்பு என்று மருத்துவரால்தான் கண்டறிய இயலும்.
     
    கடுமையான மார்பு இறுக்கம் போன்ற வலி 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். மார்பு வலியுடன் உடல் எங்கும் திடீர் வியர்வை, மூச்சுத்திணறல், வாந்தி, பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம், வேகமான நாடித்துடிப்பு ஆகியனவும் ஏற்படலாம். அறிகுறிகளே  இல்லாமல் மாரடைப்பு போன்றவையும் ஏற்படுவதும் உண்டு.
    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. இதயநோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    எல்லா நெஞ்சு வலிக்கும் பயப்பட வேண்டாம். எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பு இல்லை. நெஞ்சை சுற்றிலும் நுரையீரல், வயிறு, உணவுக் குழல் உள்ளது. மேலும் அதை சுற்றி தசைகள் இருக்கிறது. அதில் வலி ஏற்பட்டாலோ அது நெஞ்சு வலி மாதிரியாகத்தான் இருக்கும். இதில் சில விஷயங்களை வைத்துத் தான் இந்த வலி இருதயத்திலிருந்து வருகிறதா, இல்லை நுறையீரல், உணவுக் குழலிருந்து வருகிறதா என்று கண்டுபிடிப்போம்.

    எந்தமாதிரியான வலி இருதய வலி என்றால் ஒரு யானை நெஞ்சின்மேல் நிற்கும் மாதிரியான வலி, தேவையில்லாமல் மூச்சுத்திணறல், தேவையில்லாமல் அதிக வியர்வை இருந்தாலோ அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

    யாரை தாக்கும்?

    மனச்சோர்வு, உடற்சோர்வு, மூச்சுத்திணறல் இதெல்லாம் ஏற்பட்டால் இருதய நல மருத்துவரிடம் பரிசோதனை செய்யுங்கள். இப்பொழுது இருக்கிற காலக்கட்டத்தில் சிறிய வயதினருக்குக் கூட மாரடைப்பு வருகிறது என்கிறார்கள். அது உண்மைதான். ஏனெனில் இந்த உலகில் தொழில் ரீதியான போட்டிகள், மனஅழுத்தம் மற்றும் தீய பழக்கங்கள் (மது, புகைப்பழக்கம்) அதிகரித்து இருப்பதே ஒரு முக்கிய காரணம். சிறிய வயதினருக்கும், பெரியவர்களுக்கும் வரும் மாரடைப்பில் வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். சிறிய வயதினருக்கு வரும் இதயப்பிரச்சனையில் அந்த நேரத்தில் ஏற்படுகிற இரத்த உறைவு (Blood Clots) ஒரு நாள் இல்லை இரண்டு நாளில் ஏற்பட்டதாக இருக்கும். 50-60 வயது உள்ளவர்களுக்கு பார்த்தோம் என்றால் கொலஸ்ட்ராலினால் வரும். இது ஒருநாள் இரண்டு நாளில் வருவது இல்லை.

    ECG எடுத்த பிறகு 2 விதமான சிகிச்சைகள் உள்ளன. உடனே மருந்து கொடுத்து கரைக்கலாம் அல்லது ஆஞ்சியோகிராம் பார்த்துவிட்டு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யலாம். நோயாளியை Cathlab அறுவை சிகிச்சை அரங்குக்கு கூட்டி கொண்டு சென்று பலூன் மூலமா அந்த அடைப்பினை எடுத்துவிட்டு இரத்த ஓட்டத்தைச் சரி செய்துவிடலாம். இதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டும். இதை சரிசெய்து விட்டால் ரத்த ஓட்டம் சீராகும். இதனால் அவரது ஆயுள் காலத்திற்கும் எந்தவிதப் பிரச்சனையும் வராது.

    ஒருவேளை தாமதமாக மருத்துவமனைக்கு வந்தால் அதாவது ஒரு 6 (or) 12 மணி நேரம் அல்லது ஒரு நாள் கழித்தோ தாமதமாக சிகிச்சையைத் தொடங்கினால் அந்த இரத்த ஓட்டம் இல்லாத தசைகள் செயலிழந்து விடும். ஒருமுறை செயலிழந்த தசைகள் திருப்பி செயல்பாட்டிற்கு வராது. அந்த சமயத்தில் அந்த மாரடைப்பு வந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் இதய வலுவல் ஏற்படலாம். இவர்கள் காலம் முழுவதும் நடக்கும் போது மூச்சு வாங்குவதோ இல்லை. நெஞ்சுவலி வந்தோ கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருப்பதற்கே தாமதிக்காத சிக்சைகள் உடனடியாக செய்யப்படவேண்டும் என்கிறோம்.

    இருதய நோய் வரும்முன் கண்டுபிடிக்கும் முறைகள்

    முன்கூட்டியே கண்டுபிடிக்கிறதுக்கு இரத்தப் பரிசோதனை செய்து கொலஸ்ட்ரால் அளவினைக் கண்டறிந்தும், டிரெட்மில்லில் நடக்கும் போது ECG பார்த்து கண்டு பிடிக்கலாம். அல்லது இதயத்திற்கான எக்கோ பரிசோதனையின் மூலமோ கண்டறியலாம். இந்த மாதிரி கண்டுபிடிக்கும் போது ஒரு இரத்தக்குழாய் மட்டும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் பலூன் ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்து சரிசெய்யலாம். சில சமயம் நிறைய இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் ஒவ்வொரு இரத்தக்குழாய்க்கும் போய் பலூன் வைத்து பண்ண முடியாது. அவர்களுக்குத்தான் பைபாஸ் சிகிச்சை அவசியமாகிறது. பைபாஸ் சிகிச்சையில் அடைப்பு இருக்கிற இரத்த குழாய்களை அப்படியே வைத்துவிட்டு புதிய ரத்தக் குழாய்களை எடுத்து அடைப்பு இருக்கிற மீதிப் பகுதியில் போய் இணைத்து விடவேண்டும். இதுதான் பைபாஸ்.

    இதயத்தில் வலி என்றவுடன் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதே சாலச்சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு சோர்ந்து போகாமல் தினமும் நடைபயிற்சி, மருத்துவர் பரிந்துரை செய்த உடற்பயிற்சிகள் செய்தல் மற்றும் கொழுப்பு உணவுகள், எண்ணை பலகாரங்கள் தவிர்த்தல், ஆரோக்கியமான, சத்தான ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளுதல், மருந்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்வது. மருத்துவர் பரிந்துரைத்த காலகட்டங்களில் தவறாது பரிசோதனைகள் செய்து கொள்வது இவற்றினால் நீடித்த ஆயுள்காலம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

    நாராயணா இருதய மையம், பாளையங்கோட்டை
    மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும்.
    நம் நாட்டில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 முதல் 50 வயதுக்கு உட்பட்ட 4 பேர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். 25 சதவீத மாரடைப்பு மரணங்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 900 பேர் இதய நோயால் உயிரிழக்கிறார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டு தோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதய குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம். என்ஜினைச் சீராக பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

    இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மன அழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மன அழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மன அழுத்தத்தின் விளைவாக உயரும் ரத்த அழுத்தம் மாரடைப்புக்கு கம்பளம் விரிப்பது போலத்தான். மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மனஅழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    மூலைக்கு மூலை துரித உணவு கடைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக் காலத்தில், சமச்சீரான உணவுப் பழக்கத்தை நம்மில் பலரும் முற்றிலும் மறந்து விட்டோம். குறிப்பாக இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் 'நவநாகரிக உணவு' என்ற பெயரில் பீட்சாக்களையும், பர்கர்களையும், நூடுல்சையும் சாப்பிடவே அதிகம் விரும்புகிறார்கள்.

    'உணவே மருந்து' என்ற அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொடுக்கவும் பெற்றோர் மறந்து விட்டார்கள். விளைவு? உடல் பருமன். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து மாரடைப்பு ஏற்பட காரணமாகிறது. உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவு பழக்கத்தை கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    இதயத்தின் முக்கிய எதிரி புகை என்பதில் சந்தேகம் தேவை இல்லை. குறிப்பாக, இந்தக் காலத்தில் கல்லூரி இளைஞர்கள் மட்டுமில்லை, பள்ளி சிறுவர்கள்கூட புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருவதை பார்க்க முடிகிறது. எவ்வளவு காலத்துக்கு புகை பிடிக்கிறோமோ, இதயத்துக்கு அவ்வளவு ஆபத்து அதிகரிக்கும். எனவே, புகையை விட்டொழிக்க வேண்டும். புகையிலை சார்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது.
    அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    குறைவான நேரம் தூங்குவது பல நோய்களுக்கு வித்திடும் என்று நமக்குத் தெரியும். அதேபோல அதிக நேரம் தூங்குவதும் அபாயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்கவேண்டும். இல்லாவிட்டால் இதய நோய் பிரச்சினைகளும், பக்கவாதப் பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 35 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 632 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்.

    கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல் கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற மாணவரான சுங்ஷி வாக்கன், ‘‘தூங்கும் நேரத்தை ஆறு மணி முதல் எட்டு மணி வரை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டோம். அந்த நேரத்தைக் கடந்து அதிகம் தூங்குபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

    இந்த ஆய்வின் முடிவில், பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை கடந்து 8 முதல் 9 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் 9 முதல் 10 மணி நேரம் தூங்குபவர் களுக்கு இதய நோய் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

    10 மணி நேரத்துக்கும் மேலாகத் தூங்குபவர் களுக்கு இதய நோய் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்கும். அதுபோல் 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ‘கும்பகர்ணர்கள்’ விழித்துக்கொள்ள வேண்டிய வேளை இது.

    வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள், சிகிச்சை முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கம், இதர காரணிகளால் வயது வித்தியாசமின்றி மனித குலத்தை அச்சுறுத்துவது மாரடைப்பு நோய். மருத்துவ வளர்ச்சியால் இந்த நோய்க்கு உயர் சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை என்பதே உண்மை.

    இந்த நோய் பற்றியும், அதன் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறை பற்றியும் விளக்குகிறார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு நிபுணர் சிதம்பரம்.

    ரத்த நாளங்கள் இதயத்திற்கு வேண்டிய ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன. இதயம், இடைவிடாது துடிப்பதற்கு வேண்டிய சக்தியை ரத்தநாளங்கள் மூலமே பெறுகிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால், இதய தசைகளுக்கு தேவையான ரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.

    நெஞ்சுவலி என்பது நீண்டகாலமாக இருக்கக்கூடிய நிலையான வலி என்றும் புதிய அல்லது சிறிது சிறிதாக அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையற்ற வலி என்றும் கூறலாம். மூன்றாவது வலியாக ரத்தநாளத்தை சுற்றியுள்ள தசையில் ஏற்படும் திடீர் சுருக்கத்தால் தோன்றும் மாறுபட்ட நெஞ்சுவலி ஆகும். ரத்த நாளத்தில் தோன்றும் ரத்த உறைகட்டிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

    முதல்வகை மருந்துகளின் மூலம் குணப்படுத்தலாம். 2-வது வகை வலி ஏற்பட்டால் ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும். மாறுபட்ட நெஞ்சுவலியின் அறிகுறிகள். உணர்ச்சி வயப்பட்ட அழுத்தம், குளிர் தாக்குதல், புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் கூட ஏற்படலாம். இந்த வலி சிறிது நேரமே இருப்பதோடு பொதுவாக உறக்கம் கலையும் விதத்தில் இரவு நேரத்தில் ஏற்படும். ரத்த ஒட்டம் தடைபடும் போது ஒழுங்கற்ற நாடித்துடிப்பும் ஏற்படலாம்.

    மாரடைப்பு நிகழ்கின்ற நேரத்தில் ரத்த ஓட்டத்தில் எந்தவிதமான அறிகுறியை கூட காட்டாமலும் இருக்க வாய்ப்பு உண்டு. இதில் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்படைவதால் வலியை உணரும் தன்மை குறைந்திருக்கும். சில சமயம் இருதயம் பாதிப்படைகின்ற போது உடல் அசதியும், படுக்கும் போது மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

    ரத்த நாளத்தில் நிரந்தரமாகவோ, 30 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரையோ அடைப்பு நீடித்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும் போது, பொதுவாக 15 நிமிடங்கள் வரை கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தும், சில நேரத்தில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் அமைதியாகவும் வரவும் வாய்ப்புண்டு. உடைந்த அல்லது விரிசலான ரத்த நாள கொழுப்பு கட்டிகள் இருக்கும் இடத்தில் ரத்த உறைவு, அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு வருகிறது. இந்த உறைக்கட்டியை கரைக்கும் மருந்துகளை மாரடைப்பு நோய் சிகிச்சை முறையின்போது பயன்படுத்துகிறோம்.

    இந்த நோயால் இருதய தசைகள் மீண்டும் செயல்படமுடியாத அளவுக்கு சேதமடைதல், நாடிதுடிப்புகளில் பாதிப்பு ஏற்படுவதாலும் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் மரணத்திலிருந்து உயிர் பிழைத்து வருகிறார்கள்.

    கடுமையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய நெஞ்சுவலி, இடது தோளுக்கும், இடது பக்க முதுகுக்கும் சில சமயம் இடது தாடைக்கும் பரவும், வயிற்றின் மேல்பகுதியில் வலி, மூச்சுத்திணறல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி, அதிகமாக வியர்த்தல், அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும்.

    இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். முடிந்தால் மென்று சாப்பிடுகிற ஆஸ்ப்ரின் மாத்திரையையும், சப்பி சாப்பிடுகிற சார்பிட்ரேட் மாத்திரையையும் உடனே சாப்பிடவேண்டும்.

    நம்முடன் இருக்கும் நபருக்கு மூச்சு நின்றுவிட்டால், உடனே இருதய நுரையீரல் முதலுதவி செய்யவேண்டும். மூச்சுநின்ற சில விநாடிகள் மட்டுமே ஒருவர் உயிர்த்திருக்க முடியும். எனவே, இந்த குறுகிய நேரத்திற்குள் இதை செய்யவேண்டும். எனவே, அனைவரும் இதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    மாரடைப்பு ஏற்பட்ட ஒருமணி நேரத்திற்குள் மருத்துவ உதவி பெறுவது மிக, மிக அவசியம். அவ்வாறு செய்தால் உயிரைக்காப்பாற்றலாம்.

    இவ்வாறு டாக்டர் சிதம்பரம் கூறினார்.

    டாக்டர் சிதம்பரம்
    தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கும் இதயம் நமக்கு உணர்த்துவது நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், பிறருக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவசியத்தையும் என்றும் கூறலாம்.
    இதயம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அன்பு, காதல், பாசம் மற்றும் உறவுகள். தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கும் இதயம் நமக்கு உணர்த்துவது நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், பிறருக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவசியத்தையும் என்றும் கூறலாம். மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்பது, தனதளவிலும், தன் குடும்ப அளவிலும், தன் சமுதாய அளவிலும் மற்றும் உலகளவில் அல்லது எதிர்கால சந்ததியர்க்கு என்ற அளவிலும் விரிந்து செயல்படுவதே சிறப்பு. அந்த வகையில் இதயத்தை சிறப்பாய் காக்கும் நம் கடமையும் மேற்கண்ட வகையில் விரிந்து இருக்க வேண்டும்.

    தன்னளவில் செய்ய வேண்டியவை

    தொடர்ந்து இயங்கும் என்ஜினை எண்ணெய் போட்டு முறையாய் பராமரிப்பது போல் நம் உணவுமுறை இருக்க வேண்டும். பதப்படுத்திய உணவு, அதிகளவில் செறிவுள்ள கொழுப்பு உணவு, மாட்டிறைச்சி போன்றவகைகளை தவிர்த்து அதிகளவில் இயற்கையான பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் கோழி இறைச்சி போன்றவைகளை உண்ண வேண்டும். புகை மற்றும் மதுவை தவிர்த்து துரித நடைபயிற்சியை மேற்கொண்டு, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

    தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியவை

    குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையை கடைபிடிக்க உதவ வேண்டும். குடும்பத்தில் பாசம், வாழ்க்கை துணையின் மேல் அக்கரை, குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களையும் பழக்க வழக்கங்களையும் போதித்தல், குடும்பத்துடன் ஓய்வாக இருக்க நேரம் ஒதுக்குதல் போன்றவை குடும்பத்தின் ஆரோக்கியம் மட்டுமின்றி முழுமையான உடல் நலத்திற்கே நல்லது.

    சமுதாய அளவிலான கடமைகள்

    புகை பிடித்தல் என்பது தன்னை மட்டுமின்றி சுற்றியுள்ள மனிதர்களையும் பாதிக்கக்கூடியது. முன்பெல்லாம் விளம்பரங்களில் ‘புகை பிடித்தல் உயிரை குடிக்கும்’, புகை பிடிக்காதீர்கள் என்று மட்டுமே கூறப்படுவதுண்டு. ஆனால் தற்போது ‘இந்த இடத்தில் புகை பிடிக்கக்கூடாது’ என்றும் ‘புகை பிடித்தலை அனுமதிக்காதீர்’ என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இது வரவேற்க வேண்டிய சிறந்த மாற்றம். இன்று மக்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் தருவது வாகனம் ஓட்டுவது. பொறுப்பற்ற ஓட்டுனர்களால் இது ஏற்படுகிறது எனவே பொறுப்பாகவும், விதிகளை கடைபிடித்தும், சாலையில் விட்டுக்கொடுத்தும் பதட்டமின்றி வண்டி ஓட்டுவது தனக்கும் சமுதாயத்திற்கும் நலமளிக்கும் செயலாகும்.

    எதிர்காலத்திற்கான கடமை

    ஒவ்வொரு மனிதரும் தன்னளவிலும், தன் குடும்பத்திலும், தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திலும் மேற்கூறிய முறைகளில் மாற்றங்களை கடைபிடித்தால் அதுவே ஒரு சமுதாயத்தின் நாகரிகமாகவும் பண்பாடாகவும் மாறி விடும். மக்களின் இதயம் மட்டுமின்றி வாழ்க்கையும் கூட ‘டிக் டிக்’ என்பதற்கு பதில் தித்திப்பாக செயல்பட துவங்கி விடும். இந்த நல்ல மாற்றம் ஒன்றே ஆரோக்கிய முதலீடாகி எதிர்கால சந்ததியினர் அதன் பலனை அனுபவிக்க வழிவகுக்கும்.மேற்கண்ட கடமைகள் இதய நலனுக்கு மட்டுமல்ல முழுமையான நலனுக்குமாகும்.

    டாக்டர் ஜேக்கப் ஜேம்ஸ்ராஜ்

    மூத்த இதய அறுவை சிகிச்சை வல்லுநர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்

    சென்னை. 
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் வருவதற்கான காரணத்தையும், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பார்க்கலாம்.
    இதய நோய் ஏற்பட பல்வேறு அபாய காரணிகள் உள்ளன. இதய நோய் உருவான பெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடித்தல், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், குடும்ப பரம்பரை, உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை மற்றும் கொழுப்பு அதிகமாதல் போன்றவையே அபாய காரணிகளாகின்றன. கொழுப்புப் பொருள், கொலஸ்டிரால் மற்றும் பிற பொருட்கள் ரத்தநாளச் சுவற்றில் படிவதே தமனிக் குழாய் ஒடுங்குவதற்கும் மெல்லியதாவதற்கும் காரணமாகிறது.

    இதுகுறித்து பிரசாந்த், சிறப்பு மருத்துவ மனையின் இதயவியல் சிறப்பு மருத்துவர் கே.சந்திரசேகரன் கூறியதாவது:-

    இதய நோய், பக்க வாதம், இதய செயலிழப்பு போன்றவைக்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு முக்கிய அபாய காரணியாகும். நல்ல கொழுப்பை உயர்த்த உதவும் ஈஸ்டரோஜன் பெண்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.

    ஆனால் மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு பெண்களும் ஆண்களை போன்றே பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் நீரிழிவு அல்லது கொலஸ் டிரால், எல்டிஎல் கொலஸ் டிரால் அளவு அதிகமாகும். மேலும் குடும்ப பரம்பரை காரணமாக இதய நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    புகைப்பிடிப்பது ரத்த நாள உள்சுவரைச் சிதைத்து, தமனிகளில் கொழுப்பு படிவதை அதிகரிக்கச் செய்கிறது. நிகோடின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தை உயர்த்தச் செய்கிறது.

    நெஞ்சுவலி அல்லது அசவுகர்யம் (எரிச்சல், அழுத்தம், இறுக்கம் அல்லது கனம்), தொண்டை, வாய், தோள் அல்லது முதுகு, முழங்கை, மணிக்கட்டில் அசவுகர்யம், சுவாச குறைபாடு, குமட்டல், வியர்த்தல் போன்றவை இதய அடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

    சரிவிகித உணவை உட்கொள்ளுதல், போதிய உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருதல், நீரிழிவை கட்டுக்குள் வைத்திருத்தல், எடையைசரியாக பராமரித்தல் போன்றவை இதயநோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இதய நோய் ஏற்படுவதற்கு வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்.
    இந்தியாவில் ஆண்டுதோறும் இதய நோய்களால் 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் மாரடைப்புக்கு ஆளாவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைமுறையும், உணவு பழக்கவழக்கங்களும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இளம் பருவத்தினர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    ஆரோக்கியமான உடல் எடையை தீர்மானிப்பதில் கொழுப்பு, குளுக்கோஸ், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு இருக்கின்றன. அவை சீராக இருப்பதற்கு சத்தான தானிய உணவு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.

    இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ செய்து வருவது அவசியமானது. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வது ரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு போன்ற பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாக்கும். இதயத்திற்கும் நலம் சேர்க்கும்.

    புகைப்பழக்கம் இதய நோய் பாதிப்பை மூன்று மடங்கு அதிகப்படுத்திவிடும்.

    மாரடைப்பு ஏற்படுவதற்கு மரபணு ரீதியிலும் தொடர்பு இருக்கிறது. தந்தையோ அல்லது சகோதரரோ 55 வயதுக்குள் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அது முதல் தலைமுறையை சேர்ந்த ஆணுக்கு 50 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

    மன அழுத்தத்திற்கும், மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும் திடீரென்று மன அழுத்தம் அதிகரிக்கும்போது இதய நோய் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.

    ரத்த அழுத்தத்தையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் அடிக்கடி சரிபார்த்து வர வேண்டும். அவ்வாறு சரிபார்த்து அவைகளை சீராக வைத்துக்கொள்வது இதய நோய் பாதிப்பிலிருந்து விடுவிக்க வழிவகை செய்யும்.
    இதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. #Milk #Heart #Dairy
    சென்னை:

    இதய நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அதற்கு ஒரு அருமருந்தாக பால் பொருட்கள் திகழ்கின்றன என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    மனிதர்கள் தங்களது அன்றாட உணவில் ஒரு டம்ளர் பால், ஒரு கப் தயிர் அல்லது ஒரு துண்டு பாலாடை கட்டி, எப்போதாவது வெண்ணை அல்லது நெய்யை சேர்த்துக் கொண்டால் போதுமானது.

    உணவில் அன்றாடம் பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 கண்டங்களில் உள்ள 21 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1 லட்சத்து 36 ஆயித்து 384 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களிடம் 9 வருடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதில் பாலில் உள்ள கொழுப்பு சத்து மனிதர்களை இதய நோய்களில் இருந்து காப்பாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 22 சதவீதம் இதய நோய்களில் இருந்தும், 34 சதவீதம் பக்கவாதம் நோயில் இருந்தும் காக்கும் திறன் கொண்டது.

    இந்த ஆய்வறிக்கை சமீபத்தில் ‘லேன்செட்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவில் தான் பெருமளவில் இதய நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


    கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஒருவித இதயநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

    1990-ம் ஆண்டில் 2 கோடியே 50 லட்சம் பேர் இதய மற்றும் பக்கவாதத்தால் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டுவரை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 45 லட்சமானது.

    இதய நோய் தாக்குதல்களால் கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா, இமாச்சல பிரதேசம், மராட்டியம், கோவா மற்றும் மேற்கு வங்காளத்தில் மரண விகிதம் அதிகமாக உள்ளது.

    எனவே இதய நோயில் இருந்து தப்பிக்க பால் பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Milk #Heart #Dairy
    இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் தூங்குவதாலும் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
    லண்டன்:

    ஜெர்மனியின் முனிச் நகரில் இதய நோய் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட 11 ஆய்வுகள் மூலம் குறைவாக தூங்குவதால் இதயநோய் வருவது போன்று தொடர்ந்து அதிகமாக தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், எந்த காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதை கண்டறிய இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய ஆய்வின்படி, குறைவாக தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாக தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் அதாவது 3 மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 
    ×