search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HC madurai bench"

    • மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் கோர்ட்டை நாடலாம்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டில் போலி டாக்டர் ராஜலட்சுமி என்பவருக்கு உதவியதாக என் மீது தொண்டி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் என் மீது பழி வாங்கும் நோக்கத்தில், டி.எஸ்.பி. தூண்டுதலின்படி போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    எனவே டி.எஸ்.பி. புகழேந்தி, தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி திருவாடானை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு எனது புகாரினை விசாரித்து முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

    ஆனால் அந்த உத்தரவை தொண்டி போலீசார் முறையாக செயல்படுத்தவில்லை. எனவே திருவாடானை கோர்ட்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி சத்தி குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரரின் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும் படி கீழ் கோர்ட் பிறப்பித்த உத்தரவை போலீசார் பின்பற்றவில்லை. மனித உரிமை மீறலில் ஈடுபடும் போலீசார் மீதான புகார்கள் குறித்து மாவட்ட நீதிபதியே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் மனித உரிமை விதிகளும் தெரிவிக்கின்றன.

    சிறை குறிப்பை பார்க்கும் போது காவல்துறைக்கு எதிராக குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் மனுதாரர் புகாரை விசாரித்ததில் உண்மை தன்மை இல்லை என கூறி முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுதாரர் விவகாரத்தில் லலிதா குமாரி வழக்கின் தீர்ப்பை பின்பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனுதாரர் இந்த கோர்ட்டை நாடலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    • கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
    • காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அய்யனார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா, எம்.வேப்பங்குளம் கிராமத்தில் ஊர் பொது சாவடியின் முன்பாக இடத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு முன்பு உள்ள மந்தைக்கு செல்லும் தெருவின் இரு புறங்களிலும் பல வீடுகள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலமானது பொது பாதையாகவும், அறுவடை காலங்களில் பயிர்களை தூற்றும் களமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சிலர் கோவில் கமிட்டி என்கிற பெயரில் தன்னிச்சையாக செயல்பட்டு சட்ட விதிமுறைகளை பின்பற்றாமலும், உரிய அனுமதி ஏதும் பெறாமலும், திட்ட அங்கீகாரம் ஏதுமின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த காளியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் கோவில் முன்புறம் உள்ள தெருவினை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து ஏற்கனவே ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கோவில் கட்டுமான பணி நடைபெறாது என உறுதி அளிக்கப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் புதிய கோவில் கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே கோவில் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கட்டுமான பணிகள் நடைபெறாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் எப்படி மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கியது? இதற்கு யார் அனுமதி வழங்கியது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் விசாரணையின் முடிவில், கோவில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், யாரிடம் அனுமதி பெற்று கட்டுமான பணி மீண்டும் தொடங்கப்பட்டது என்பது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • தசரா திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர்.
    • முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    மதுரை:

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள்.

    கோவில் பாரம்பரியத்தின்படி, பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன் போன்ற பல வேஷங்களை அணிந்து யாசகம் பெற்று காணிக்கைகளை அம்மனுக்கு கொடுப்பார்கள்.

    இத்திருவிழாவின் 9-வது நாள் விரதமிருந்து பெண்கள், குழந்தைகள் அதிகளவில் கலந்து கொண்டு கோவிலிலேயே தங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.

    ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக் கூடாது. மேலும் குறவன் குறத்தி சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடனங்கள் நாடகங்கள் உள்ளிட்டவை நடைபெறக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் தசரா திருவிழாவில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமான வகையில் சினிமா பாடல்கள் மற்றும் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசரனைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த வருடம் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.

    இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோர்ட்டு விரிவான உத்தரவு பிறத்துள்ளது. எனவே அதனை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தென் மாவட்டங்களில் இது போன்ற ஆடல், பாடல் கரகாட்டங்கள் எல்லாம் ரசிக்க கூடிய வகையில் பொழுது போக்குக்கான ஒன்றாக தானே இருக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இதில் நாங்கள் புதிய உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் மனுதாரர் அவமதிப்பு வழக்கு தொடரலாம் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்.

    மதுரை:

    மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.

    இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி, 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? மாநாட்டில் எவ்வித வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதால்  மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
    • வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.

    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.

    விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை சவுந்தரராஜன், தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

    மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து இருந்தார் அதன் பெயரில் அவரும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.

    அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதாடினார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
    • வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பெரியதுரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்ற துணைத்தலைவரும் பல்வேறு பணிகளை செய்யாமலே செய்ததாக கணக்கு காட்டி பல லட்ச ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    ஊராட்சி நிதியை முறைகேடு செய்ததற்கு தகுந்த ஆதாரங்களோடு கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனரிடம் மனு அளித்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணத்தை முறைகேடு செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    எனவே, பொதுமக்களின் வரிப்பணத்தையும், ஊராட்சி நிதியையும் கையாடல் செய்து தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் இருவரையும் தகுதிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

    • வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது.
    • போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தொண்டியில் போலி பெண் டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணுக்கு நான் உதவியதாக கூறி, அப்போதைய தொண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, என்னை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்.

    மேலும் அந்த போலி டாக்டரை பாலியல் ரீதியாக நான் துன்புறுத்தியதாகவும் பொய் புகார் பெற்று வழக்குபதிவு செய்தார். என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் அதிகாரி புகழேந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், போலி டாக்டரின் ஆஸ்பத்திரிக்கு நிதி உதவி செய்ததாக மனுதாரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் போலீசார் கோர்ட்டில் சமர்ப்பிக்கவில்லை, நிரூபிக்கவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் மனுதாரருக்கு எதிராக பதிவான முதல் தகவல் அறிக்கையிலும் வலுவான குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. எனவே மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் மனுவில் கூறியிருந்தார்.
    • மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.

    எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் திராகி, அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்.
    • வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், வரதராஜன் கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோருக்கும் பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே கடந்த 2013ல் சிவில் பிரச்சினை இருந்தது.

    இந்த விவகாரத்தில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டர் செல்வம், காவல் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசியுள்ளார். இதற்கு 4 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அப்போது நடந்த இரட்டை கொலையில் 4 பேரையும் சேர்த்துள்ளார். இதனால் வரதராஜன், கடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் 92 நாட்களும், பரமசிவம் 53 நாளும் சிறையில் இருந்துள்ளார். இதற்காக இழப்பீடும், இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கையும் கோரி 4 பேரும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு செய்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் இறந்ததால், அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது:-

    மனுதாரர்கள் 4 பேரும் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர். இன்ஸ்பெக்டர் இறந்ததால் எப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் கேள்வியாக உள்ளது. எனவே, அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும்.

    வரதராஜன் கடலை முத்து மற்றும் யேசுதாசன் ஆகியோர் நாளொன்றுக்கு ரூ. 7500 வீதம் தலா ரு. 6.90 லட்சமும். பரமசிவம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500ம் இழப்பீடு பெற தகுதி உள்ளது.

    இதை உள்துறை செயலர் மற்றும் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதி பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
    • ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒருவிதமான பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. தற்போது இந்த ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேசமுடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும். எனவே, சென்னையிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    முடிவில், நிபந்தனை ஜாமினில் உள்ள எஸ்.ஜி.சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி நீதிபதி செய்து உத்தரவிட்டார்.

    • அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது.
    • விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் மீனாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்னுடைய கணவர் பெயரையும் போலீசார் சேர்த்தனர்.

    சமீபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த என் கணவரை, இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 6-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர். இதுவரை அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. எனது கணவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் மீதான வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் அளித்து கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மனுதாரர் கணவரை போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் என வாதாடினார்.

    அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள மனுதாரர் கணவர் விசாரணைக்கு மட்டுமே போலீசார் அழைத்து சென்றுள்ளனர். விரைவில் விடுவிக்கப்படுவார் என்றார்.

    விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தும், அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர்.

    போலீசாரின் இந்த நடவடிக்கையானது, கோர்ட்டுக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இதற்கிடையே மனுதாரரின் கணவருக்கு ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன் பட்டியை சேர்ந்த வக்கீல் சண்முக சுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.

    இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    ×