search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக மாநாடு"

    • கூட்டத்தில் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமைகளை நிச்சயம் மீட்டெடுப்போம்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சி பெயர், சின்னம் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    அடுத்த கட்டமாக கட்சியை நடத்துவது எப்படி? என்பது தொடர்பாக அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.

    இதையொட்டி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று நடந்தது.

    அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்பு குழு என்பது தற்காலிக அமைப்பு தான். எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை.

    கோர்ட்டு தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும். விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. தேர்தலை சந்திக்க கீழ் மட்டம் வரை நமது கட்டமைப்பு பலமாக உள்ளதா? என் பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமைகளை நிச்சயம் மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
    • தி.நகர் தொகுதியில் இன்பதுரை, வால்பாறை தொகுதியில் நாஞ்சில் அன்பழகன் பேசுகிறார்கள்.

    சென்னை:

    மதுரையில் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற அந்த மாநாடு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.

    அந்த வெற்றியுடன் அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி தயார்படுத்த தொடங்கி உள்ளார். இதற்காக வருகிற 10-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.

    இதற்கிடையே மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கிய அம்சங்களை மக்களுக்கு விளக்குவதற்கு தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். வருகிற 15, 16, 17 மற்றும் 19-ந்தேதிகளில் அ.தி.மு.க. பேச்சாளர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரையும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு 15.9.2023, 16.9.2023, 17.9.2023 மற்றும் 19.9.2023 ஆகிய 4 நாட்கள், 'பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளன.

    கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15.9.2023 அன்று அண்ணா சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளார்.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விவரம் வருமாறு:-

    தாம்பரம் தொகுதியில் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கும் பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். பொன்னேரி தொகுதியில் தமிழ்மகன் உசேன், வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விசுவநாதன், எழும்பூர் தொகுதியில் பொன்னையன், நா.பாலகங்கா பேசுகிறார்கள்.

    பர்கூர் தொகுதியில் தம்பித்துரை, ஆவடி குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் செங்கோட்டையன், குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் வேலுமணி, ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி தொகுதியில் செம்மலை, கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம், மதுரை தெற்கு தொகுதியில் செல்லூர் ராஜு, அவினாசி தொகுதியில் தனபால், தர்மபுரி தொகுதியில் கே.பி. அன்பழகன் பேசுகிறார்கள்.

    தஞ்சை தொகுதியில் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணியன், காஞ்சிபுரம் தொகுதியில் கோகுல இந்திரா, கரூர் தொகுதியில் கரூர் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி, ராணிப்பேட்டை தொகுதியில் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மேலூர் தொகுதியில் ராஜன் செல்லப்பா பேசுகிறார்கள்.

    சிங்காநல்லூர் தொகுதியில் வைகைசெல்வன், கடலூர் தொகுதியில் எம்.சி.சம்பத், ஆந்திராவில் டி.கே.என்.சின்னையா, மயிலாப்பூர் தொகுதியில் நடிகை பசி சத்யா பேசுகிறார்கள்.

    அதுபோல 16, 17 மற்றும் 19-ந்தேதிகளில் பேசுவோர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. 17-ந்தேதி பல்லாவரம் தொகுதியில் வளர்மதி, திண்டிவனம் தொகுதியில் சி.வி.சண்முகம், அம்பாசமுத்திரம் தொகுதியில் கருப்பசாமி பாண்டியன், அருப்புக்கோட்டை தொகுதியில் மா.பா.பாண்டியராஜன், வேளச்சேரியில் நிர்மலா பெரியசாமி, காட்பாடியில் கவிஞர் முத்துலிங்கம், கவுண்டன்பாளையத்தில் நடிகர் சுந்தரராஜன், கீழ்வேலூர் தொகுதியில் பாத்திமா பாபு பேசுகிறார்கள்.

    19-ந்தேதி பூந்தமல்லி தொகுதியில் பெஞ்சமின், செய்யூர் தொகுதியில் டாக்டர் வேணுகோபால், துறைமுகம் தொகுதியில் பாலகங்கா, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன், தி.நகர் தொகுதியில் இன்பதுரை, வால்பாறை தொகுதியில் நாஞ்சில் அன்பழகன் பேசுகிறார்கள்.

    • பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது.
    • அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள்.

    மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

    ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

    மதியம் கடும்பசியால் சாம்பார், புளிசாதங்கள் பறந்தோட, பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருப்பதாவது:-

    அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிதுப்படுத்தி பேசுகிறார்கள்.

    மாநாட்டின் வெற்றியை யாரும் குறை சொல்ல முடியாததால், புளியோதரையின் தோல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிது படுத்துகிறார்கள் என்ற ஆர்.பி. உதயகுமார் விளக்கமும் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

    • போதுமான அளவில் சமைத்த நிலையிலும் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லை
    • சாப்பாடு பூசணம் பூத்து வீணாகிய வேதனை

    மதுரையில் நேற்று அதிமுக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் காலையில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் பட்டினியாக கிடந்து விடக்கூடாது என்பதால் மூன்று கூடங்கள் அமைத்து, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்காரர்களுடன் சாம்பார் சாதம், புளி சாதம் செய்து தொண்டர்களுக்கு வழங்கிட மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

    ஆனால், நிர்வாகிகளின் அலட்சியத்தால் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது. பல தொண்டர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு கிடைக்காமல் ஒருபுறம் அல்லாட, மறுபுறம் இதுபோன்ற நடந்ததுதான் வேதனையிலும் வேதனை என ஒரு தொண்டர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

    மதியம் கடும்பசியால் சாம்பார், புளிசாதங்கள் பறந்தோட, பல தொண்டர்களை சாம்பாரை மட்டும் குடித்த வேதனையும் நடந்துள்ளது. இதற்கிடையே மூன்று கூடங்களில் ஏராளமான உணவுகள் (சுமார் 40 அண்டா) கொட்டப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அதிமுக தொண்டர் ஒருவர் மனக்குமுறலுடன் தெரிவிக்கையில் ''மேலிடம் நல்ல சாப்பாடு போடச் சொன்ன பிறகும், மாஸ்டர்கள் சரியில்லாமல் போனதால், சாப்பிடு சரியில்லை. சாப்பாட்டில் பூசணம் பூத்துள்ளது, 100 அண்டா சோறு அப்படியே உள்ளது. யார் சாப்பிடுவார்கள். வாயில் வைத்தால் ஒன்றுமே இல்லை'' என்றார்

    தலைமை சரியாக செயல்பட சொன்ன பிறகும், நிர்வாகிகளின் மோசமான செயல்பாடுகளால், உணவுகள் இருந்தும், தொண்டர்கள் சாப்பிட முடியாது நிலை ஏற்பட்டது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய்
    • மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதிமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக,

    விழுப்புரம் மாவட்டம், வல்லம் வடக்கு ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலாளரும், நெகனூர் வடகொல்லை கிளைக் கழகச் செயலாளருமான பொன்னுசாமி; திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்கு ஒன்றியம், மண்டல நாயனகுண்டா ஊராட்சி, பத்திரிகானூர் கிளைக் கழகச் செயலாளர் சென்னையன்; கோவை மாநகர் மாவட்டம், காந்திபுரம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் ஊ. கதிரேசன்; கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பெரியநெகமம் பேரூராட்சி, 13-ஆவது வார்டு கழக அவைத் தலைவர் பழனிச்சாமி; கோவை புறநகர் வடக்கு மாவட்டம், நரசிம்ம நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து;

    தென்காசி வடக்கு மாவட்டம், குருவிகுளம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வாசுதேவன்; விருதுநகர் கிழக்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம், லட்சுமியாபுரம் கிளைக் கழகத்தைச் சேர்ந்த கடற்கரை; புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அன்னவாசல் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு 10-ஆவது வார்டு உறுப்பினரும், அன்னவாசல் நிலவள வங்கி தலைவருமான சாம்பசிவம்;

    ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும்; வாகனங்களில் செல்லும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டும், ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

    கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சாலைகளில் பயணம் செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது நான் வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற விரும்பத்தகாத விபத்துகள் நடைபெற்று, கழக உடன்பிறப்புகள் உயிரிழப்பதும், காயங்கள் அடைவதும், மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

    கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பொன்னுசாமி, சென்னையன், கதிரேசன், பழனிச்சாமி, மாரிமுத்து, வாசுதேவன், கடற்கரை மற்றும் சாம்பசிவம் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அவர்களது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் தலா 1,50,000/- ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • தமிழகத்தை 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.
    • அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது என்றார் எடப்பாடி பழனிசாமி.

    மதுரை:

    மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:

    தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தான். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான்.

    தொண்டன் உழைப்பால் உருவானது அ.தி.மு.க. அ.தி.மு.க.வின் தொண்டன் என்பதே பெருமைதான். அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது. நாட்டுக்கு நன்மை செய்யும் கட்சியாக உள்ளது.

    எந்தக் கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

    அ.தி.மு.க. ஆட்சியில், புயல் வேகத்தை விட வேகமாக செயல்பட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டோம். மக்களை கட்டிக்காத்த அரசு என விவசாயிகள் பாராட்டினார்கள். அ.தி.மு.க. ஆட்சியை பொற்கால ஆட்சி என மக்கள் பாராட்டினார்கள்.

    மதுரை மண் ராசியான மண். மதுரையில் எதை தொடங்கினாலும், தொட்டது துலங்கும். இந்த மண்ணில் துவங்கியது அனைத்தும் வெற்றிதான். வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏரி, குளங்கள் தூர்வாரி தண்ணீரை சேமித்தோம்.

    தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் விவசாயிகளை அ.தி.மு.க. தான் காத்தது. விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்தோம். தி.மு.க.வுக்கு பொய்தான் மூலதனம்.

    கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது திமுக., தான். இதனால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில், ஓட்டுகளை பெறுவதற்காக, அவர்களை ஏமாற்றி கச்சத்தீவை மீட்போம் என்ற பொய்யான செய்தியை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

    நீட் தேர்வில் தி.மு.க. அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி இன்று போராட்டம் நடத்துகிறார். 2010ம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். தி.மு.க.வை சேர்ந்த காந்தி செல்வன் இணை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. இது ஆவணம். மறைக்க முடியாது. இதை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். எவ்வளவு ஏமாற்று வேலையை தி.மு.க. செய்கிறது.

    2021 சட்டசபை பொதுத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி போன்றோர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நீட் ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும் என கூறினர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டாகியும் நீட் தேர்வு ரத்துக்கு என்ன முயற்சி எடுத்தீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். மாணவர்களை ஏமாற்றாதீர்கள். நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதை தடுக்க போராடுவது அ.தி.மு.க. இவர்களாக கொண்டு வந்துவிட்டு அதை ரத்து செய்வதற்கு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் நாடகமாடுகின்றனர் என தெரிவித்தார்.

    மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது

    • தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது.
    • தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது.

    மதுரை:

    மாநாட்டு திடலில் நேற்று இரவு முதல் தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. தொண்டர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் உணவை வாங்கி சென்றனர்.

    தொண்டர்களுக்காக புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என விதவிதமான உணவு வகைகள் தொடர்ச்சியாக தயார் செய்யப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ச்சியாக தொண்டர்கள் வந்துகொண்டே இருந்தபோதும் உணவு பரிமாறும் குழுவினர் உணவுகளை பரிமாறிக்கொண்டே இருந்தனர். இந்த ஏற்பாடுகளை பார்த்து தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் உணவுகளை வாங்கி சென்று சாப்பிட்டனர்.

    தொண்டர்கள் பலர் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து சமையல் பணிகளும், உணவு பரிமாறும் பணிகளும் நடந்து கொண்டே இருந்தது.

    • மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர்.
    • மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    மதுரை:

    மதுரை ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் பிரமாண்டமாக நடந்த அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டிற்கு அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன.

    மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலத்தில் இருந்து இன்று காலையில் ஏராளமான தொண்டர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் புறப்பட்டு வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநாட்டு பந்தலில் அமர குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால், அந்த நேரத்திற்கு தகுந்தவாறும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்க வேண்டும் என்பதாலும் காலையில் ஏராளமான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தனர். இதனால் ரிங் ரோடு திருமங்கலம் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கம்பம், தேனி, கோவை, கிருஷ்aணகிரி, சேலம், நாகர்கோவில், நெல்லை, சங்கரன்கோவில், ராஜபாளையம் போன்ற ஊர்களில் இருந்து வந்த வாகனங்கள் ஒரே நேரத்தில் திருமங்கலம், மாட்டுத்தாவணி ரிங் ரோட்டில் அணிவகுத்து சென்றன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து வாகனங்கள் வந்துகொண்டே இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு வாகனங்கள் நின்று, நின்று சென்றன. வாகனங்களின் அணிவகுப்பை பார்த்து உற்சாகம் அடைந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களில் இருந்து இறங்கி நின்று செல்பி எடுத்தும், ரீல்ஸ் செய்தும் மகிழ்ந்தனர்.

    மாநாட்டு திடல் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இன்றும் ஒரே நேரத்தில் அணிவகுத்து வந்ததால் வாகனங்களை காத்திருந்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரிங் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

    • எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார்.
    • அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.

    மதுரை:

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில்தான் கருணாநிதிக்கு எதிராக பேசினார். இதுவே அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    அக்டோபர் மாதம் 8-ந்தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு அவர் பேசியது தான் புயலைக் கிளப்பியது. அ.தி.மு.க. ஆரம்பிப்பதற்கு திருக்கழுக்குன்றம் கூட்டம்தான் திருப்புமுனையாக அமைந்தது.

    இதன் சென்டிமெண்டாக இன்று மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் ஏற்றப்பட்ட அ.தி.மு.க. கொடி மற்றும் கொடிக்கம்பம் திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அ.தி.மு.க. கொடி சென்றிருப்பது, தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.
    • மாலையில் 10 நிமிடம் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு இன்று காலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியினர் குவிந்துள்ளனர்.

    அ.தி.மு.க. மாநில மாநாட்டை இதுவரை நடத்திடாத வகையில் மிக பிரமாண்டமாகவும், எழுச்சியோடும் நடத்த கட்சி நிர்வாகிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி, மாநாட்டுக்கு கட்சியினரை அழைத்து வருவது வரை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளை வழங்கினார்.

    மாநாட்டின் தொடக்கமாக திடலின் நுழைவு வாயில் பகுதியில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டை குறிக்கும் வகையில் 51 அடி உயரத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கொடியேற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி காலை 8.00 மணிக்கு அவர் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் இருந்து புறப்பட்டார்.

    வழிநெடுகிலும் திரண்டிருந்த தொண்டர்கள் அவரை கும்பிட்டவாறு உற்சாகமாக வரவேற்றனர். அதனை புன்னகையுடன் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சுமார் 45 நிமிட பயணத்துக்கு பிறகு அவர் மாநாட்டு திடலை வந்தடைந்தார்.

    காலை 8.45 மணிக்கு கட்சியின் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு பூ மழை பொழிந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் அருகே மைதானத்தில் நேற்று மாலை ஹெலிகாப்டர் வந்து நிறுத்தப்பட்டது.

    அதன்படி இன்று காலை மாநாட்டு திடலில் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றியபோது சுமார் 10 நிமிடங்கள் வரை வானத்தில் வட்டமடித்த ஹெலிகாப்டர் மழை சாரல் போன்று பூக்களை தூவியது.

    இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல், மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாலையிலும் 10 நிமிடம் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. கரை வேட்டியுடன் தொண்டர்கள் திரண்டதால் மாநாட்டு திடல் முழுவதுமே பளிச்சென காணப்பட்டது.
    • அ.தி.மு.க.வினர் வாகனங்களில் சாரை சாரையாக வலையங்குளம் நோக்கி சென்றனர்.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. பொன் விழா மாநாடு இன்று எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டனர். காலை 7 மணி முதலே பாரம்பரிய வெள்ளை வேட்டி சட்டையில் அ.தி.மு.க. மாநாட்டு திடலில் தொண்டர்கள் குவிந்தனர்.

    அ.தி.மு.க. கரை வேட்டியுடன் தொண்டர்கள் திரண்டதால் மாநாட்டு திடல் முழுவதுமே பளிச்சென காணப்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு கொடியேற்றிய இடத்தில் தலைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு தொண்டர்கள் நின்றிருந்தனர்.

    அ.தி.மு.க. கரை வைத்த சேலை அணிந்த மகளிர் அணியினரும் மாநாட்டு திடலில் திரளாக குழுமியிருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்தாலும் கரை வைத்த வேட்டி அணிந்து வருவதிலேயே தொண்டர்கள் ஆர்வம் காட்டினார்.

    மாநாட்டு பந்தலில் தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் அதிகாலையிலேயே ஓட்டல்கள், டீ கடைகளை அ.தி.மு.க.வினர் முழுவதுமாக ஆக்கிரமித்தனர். அனைத்துக் கடைகளிலும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக பேசியபடி சாலையில் செல்வோருக்கு இரட்டை விரலை காட்டியபடி கெத்து காட்டியபடி இருந்தனர்.

    மதுரை எங்கும் அ.தி.மு.க.வினரின் கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்களே காணப்பட்டன. பல இடங்களில் நீண்ட வரிசையில் அ.தி.மு.க.வினரின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    ஆரப்பாளையம், காளவாசல், சிம்மக்கல், தெற்கு வாசல், கீழவாசல், கோரிப்பாளையம், அவுட்போஸ்ட், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் வாகனங்களில் சாரை சாரையாக வலையங்குளம் நோக்கி சென்றனர்.

    மேலும் ரிங் ரோடு பகுதியில் எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க.வினரே காணப்பட்டனர். கம்பம், தேனி பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து திருமங்கலம் நான்கு வழிச்சாலை வழியாக வலையங்குளத்திற்கு திருப்பி விடப்பட்டதால் அ.தி.மு.க. கொடி மற்றும் மாநாட்டு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. வாகனங்களில் சென்ற தொண்டர்கள் உற்சாகமாக இரட்டை விரலை அசைத்துக் காட்டியபடி சென்றனர். இதனால் மதுரை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் முழுவதிலும் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்த தொண்டர்களால் உற்சாகம் கரை புரண்டது.

    • மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • கூலி வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மாநாட்டில் குவிந்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை வலையங்குளம் பகுதியில் எழுச்சியோடு நடைபெற்று வரும் அ.தி.மு.க. மாநாடு அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுநோக்க செய்துள்ளது. இப்படியொரு மாநாட்டை அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் முதல் மூத்த நிர்வாகிகள் வரை யாரும் பார்த்ததில்லை என்று கூறும் அளவிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாநாட்டிற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை அழைத்து வருவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் செய்திருந்தனர். அதன்படி நேற்று மாலை முதல் இன்று காலை வரை பஸ், வேன்களில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்தூர், பேரையூர், கள்ளிக்குடி, செக்கானூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடு மாநாட்டுக்கு திரண்டு வந்தனர்.

    இதனால் மேற்கண்ட கிராமங்கள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கூலி வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மாநாட்டில் குவிந்துள்ளனர். விடிய விடிய பரபரப்பாக காணப்பட்ட சாலைகள் இன்று காலை மேற்கண்ட இடங்களில் காலியாக கிடந்தது.

    ×