search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death toll"

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #VenezuelaProtests #NicolasMaduro
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மதுரோவுக்கு எதிராக, ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.



    நேற்று மதுரோவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிபர் மதுரோ பதவி விலகவேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. #VenezuelaProtests #NicolasMaduro

    கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது. #Dengue #Swineflu
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல், டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவாரூரை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 26). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 22-ந் தேதி ஹரிஹரன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டெங்கு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மல்லிகா(45). வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    மேல்சிசிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கருப்ப சாமி(வயது 68). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 16-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சரஸ்வதி (60). பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி முதல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் பரிதாபமாக இறந்தார்.

    இதன்மூலம் கோவையில் டெங்கு, வைரஸ், பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 42 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 63 பேர் என மொத்தம் 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Dengue #Swineflu

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.

    பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தனர். நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பு மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டது.

    என்றாலும் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை தெரசா மற்றும் கர்ப்பிணி பெண் என 6 பேர் பலியானார்கள். இது மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பன்றி காய்ச்சல் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அங்கு நோய் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேர் ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில், ராணித்தோட்டம், தடி டெப்போ பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலம் (வயது70) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கமலம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நோய் அறிகுறி உள்ளவர் களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இது தவிர துப்புரவு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.  #SwineFlu



    கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்த கஜா புயல், தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயல்-மழைக்கு 49 பேர் பலி ஆனார்கள். #GajaCyclone #Gajastorm
    சென்னை:

    தமிழகத்துக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த கஜா புயல் காவிரி டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டுவிட்டது. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன.



    கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. பல இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

    சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பல ஊர்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். நாகை மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் நாசமாயின.

    புயல் கரையை கடந்தபோது, நாகப்பட்டினம், காரைக்கால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. பல படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தும், சில படகுகள் தூக்கி வீசப்பட்டும் நாசமாயின.

    புயல்-மழையால் நாகை மாவட்டத்தில் மிக அதிக அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

    புயல்-மழையின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் தமிழகம் முழுவதும் 49 பேர் பலியாகி உள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    மேலும் பலர் காயம் அடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

    புயல்-மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் உடனடியாக முடுக்கி விடப்பட்டன. சாய்ந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். #GajaCyclone #Gajastorm

    தமிழகத்தில் பல மாவட்டங்களை பதம்பார்த்த கஜா புயல் பாதிப்பினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை இன்று பிற்பகல் நிலவரப்படி 23 ஆக உயர்ந்துள்ளது. #GajaCyclone #Gajastorm
    சென்னை:

    கஜா புயல் வியாழக்கிழமை மாலை தமிழக கடலோரப் பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நகரும் வேகம் அதிகரிக்காததால் வியாழக்கிழமை நள்ளிரவுதான் கரையைக் கடக்கும் என்று தெரிய வந்தது.

    அதன்படி நேற்று இரவு 11 மணி அளவில் கஜா புயலின் முன் பகுதி தமிழக கடலோரத்தை தொட்டது. நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோ‌ஷமான வேகத்துடன் கரையைக் கடக்க தொடங்கியது. வேதாரண்யத்துக்கும் நாகைக்கும் இடையே புயல் கரையை கடந்தது.

    புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் - நாகை இடையே 12.30 மணி முதல் 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது. புயலின் மையப் பகுதியான கண் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

    இன்று அதிகாலை 3 மணிக்குத்தான் புயலின் மையப் பகுதி கடலோரத்தில் இருந்து கடந்தது. புயலின் கடைசி பகுதி கரையைக் கடப்பதற்கு காலை 6 மணி வரை ஆனது. இந்த இடைப்பட்ட சுமார் 5.30 மணி நேரத்தில் சூறாவளி காற்று தாக்கு பிடிக்க முடியாதபடி இருந்தது.



    கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

    குறிப்பாக நாகை மாவட்டம் கஜா புயலால் கடும் நாசத்தை சந்தித்துள்ளது. அங்கு மின்சாரம் சீராகி, மக்களின் இயல்பு நிலை திரும்ப குறைந்தது 2 நாட்களாகும் என்று கூறப்படுகிறது.

    கஜா புயலின் சீற்றத்துக்கு 18 பேர் பலியாகி விட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மேல்மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அய்யம்மாள் (32) இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர்.

    நள்ளிரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அய்யம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந்த்(40), டிரைவர். இவர் நேற்று இரவு பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தபோது வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், தனது வீட்டின் அருகே உள்ள வடிகால் வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அவர் வீட்டின் அருகே மின்சார பெட்டி இருந்தது. அதில் வயர் ஒன்று அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது ஆனந்த் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொல்லையில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு படுத்திருந்த சதீஷ் (22), ரமேஷ் (21), தினேஷ் (19) மற்றும் இவர்களின் உறவினர் அய்யாதுரை (19) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். 4 பேர் உடலையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வடமனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி மகள் பிரியதர்ஷினி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தனர். இரவு 7 மணி முதல் கஜா புயல் காரணமாக மழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவில் பலத்த மழை கொட்டியது.

    இதன் காரணமாக குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இடி பாடுகளுக்குள் அனைவரும் சிக்கினர். சுவர் மேல் விழுந்ததில் துளசியின் 2-வது மகள் பிரியாமணி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 50), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    அறந்தாங்கி பகுதியில் ‘கஜா’ புயலால் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் காசிநாதன் வசித்த கூரை வீட்டின் அருகே இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்து அமுக்கியது.

    இதில் வீட்டிற்கு இருந்த காசிநாதன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 36). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ரெங்கநாதன் வேலை முடிந்து நெய்வேலியில் இருந்து பாப்பன் குப்பத்துக்கு தனது மோட் டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மருங்கூர் அருகே வந்தபோது கஜா புயல் காற்றால் சாலையோரம் இருந்த வேப்பமரம் ஒன்று ரெங்கநாதன் மீது சாய்ந்து விழுந்தது. இதில் ரெங்கநாதன் மோட்டார் சைக்கிளுடன் வேப்ப மரத்தின் இடிபாடுக்குள் சிக்கி கொண்டார். சிறிது நேரத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சிவகங்கை நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 56). இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை முத்து முருகன் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது பலத்த புயல் மற்றும் மழை காரணமாக பக்கத்து வீட்டின் சிலாப்பு இடிந்து அவர் மீது விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த முத்துமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கஜா புயலால் ஏற்பட்ட இடி மின்னல் மழைக்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் இரவில் கஜா புயல் சீற்றத்தால் மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில், ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேராவூரணியை அடுத்த தென்னமங்குடியை சேர்ந்தவர் வள்ளி (65). இவர் அப்பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு கஜா புயல் காற்றால் கூரை வீடு சரிந்து அவர் மீது விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணி கிராமத்தை சேர்ந்தவர் வினாயகம். இவரது மனைவி கனகவள்ளி (வயது 48).

    நேற்றிரவு கஜா புயல் காரணமாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வீட்டு அருகே உள்ள மரம் முறிந்து விழுந்ததில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்கிடையே சிக்கி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மனைவி பரமேஸ்வரி (வயது 26). இவர் நேற்று இரவு வீட்டின் மாடி அறையில் குடும்பத்தினருடன் தூங்கினார். இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

    இன்று காலை மாடியின் கைப்பிடிச்சுவரை பிடித்தவாறு கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பரமேஸ்வரி மீள முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு மரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னாத்தாள் (வயது 70). இவர் இன்று காலை வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் சின்னாத்தாள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெக்கூரை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52), விவசாயி.

    நேற்று நள்ளிரவு கஜா புயலால் அப்பகுதியில் ஏராளமான மரங்கள் விழுந்ததால் பழனிவேல் வீட்டில் இருந்தார்.

    இன்று காலை அவர் தன் வீட்டின் முன்னால் மரங்கள் விழுந்து கிடப்பதையும் கூரை வீடுகள் சேதமாகி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, கருப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி எலிசபெத் ராணி (வயது 35). நெற்குப்பை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார்.

    திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மழைநீர் வீட்டுக்குள் ஒழுகும் என்று கருதிய எலிசபெத்ராணி, இன்று அதிகாலை அருகே உள்ள பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது வீசிய சூறாவளி காற்றில் சாலையோரம் இருந்த மரக்கிளை முறிந்து எலிசபெத் ராணி மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி பண்டாரஓடையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 72). இவர் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று இரவு புயல் காரணமாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டின் முன்பு நின்ற தென்னை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம கிருஷ்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவலின்படி மேலும் 5 பேர் உயிரிழந்ததால் கஜா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

    கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone #Gajastorm
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன 630 பேரை இழந்த உறவினர்கள் தவித்து வருகின்றனர். #CaliforniaFire #Californiawildfires
    நியூயார்க்:

    அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.



    இந்த தீயில் சுமார் 8 ஆயிரம் வசிப்பிடங்கள் நாசமாகின. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அப்பகுதிகளில் கடும் புகை மூட்டமாக உள்ளது. இதனால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் கருகிய நிலையில் நேற்று மேலும் 10 பிரேதங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தீ சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த 500-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 130 பேர் காணாமல் போனதாக புகார் குவிந்தது.

    அவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் அடைக்கலம் அடைந்துள்ளனரா? அல்லது, காட்டுத்தீயில் சிக்கிக் கருகி விட்டார்களா? என்னும் பீதி அமெரிக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #CaliforniaFire #Californiawildfires
        
    கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மீண்டும் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. #GuatemalaVolcano
    கவுதமாலா சிட்டி:

    மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின. ஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.



    கடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மீட்பு பணியின்போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. #GuatemalaVolcano 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் என்பவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

    இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

    தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று பிற்பகலில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 

    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

    நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இன்று செல்வசேகர் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

    தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 

    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

    இந்நிலையில், நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளர்.
    கியூபாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. #CubaFlightCrash
    ஹவானா:

    கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த விமான விபத்தில் 110 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் மற்றும் தலைக்காயங்களுடன் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டு ஹவானாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரில் கிரேட்டர் லாண்ட்லோவ் (வயது 23) என்பவர்  இன்று உயிரிழந்தார். இதன்மூலம், பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்துக்குள்ளான விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CubaFlightCrash
    ×