search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooking"

    • இளநீர் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
    • சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.

    1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

    2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது, உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

    3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

    4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.

    5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

    6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

    8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

    9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

    10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

    11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

    12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

    14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

    15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

    17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

    • அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையை தரக்கூடியது காளான்.
    • காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

    சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைத் தரக்கூடியது தான் காளான். அத்தகைய காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும். இப்போது பசலைக்கீரை காளான் குழம்பின் செய்முறையை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 15

    வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 1/2 கப்

    அரைப்பதற்கு

    பசலைக் கீரை - 1 கட்டு (கழுவி நறுக்கியது)

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை - 1

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 4

    அன்னாசிப்பூ - 1

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, தட்டு கொண்டு மூடி 7-8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி.

    • சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
    • ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது.

    என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம். இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2

    டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    குடைமிளகாய் - 1 (நறுக்கியது)

    தக்காளி - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தக்காளி மற்றும் உப்பு போட்டு, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் ஜல்ப்ரேசி ரெடி. இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    • சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
    • குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும்.

    சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ஒரு வித்தியாசமான உணவு. இதில், வேகவைத்த நூடுல்சுடன் சிக்கன் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. பொதுவாக நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. நூடுல்சை பொரிப்பதால் கிடைக்கும் மொறுமொறுப்பான சுவை அவர்களை மேலும் கவரும். சைவ உணவு பிரியர்கள், கட்லெட் வடிவத்தில் வேகவைத்த உருளைக்கிழங்குடன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிடலாம்.

    சுவையான சிற்றுண்டியாக அமையக்கூடிய சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த நூடுல்ஸ் (உப்பு சேர்த்து) - 2 கப்

    வேகவைத்த சிக்கன்- ஒரு கப் (துண்டு போட்டு உப்பு சேர்க்கப்பட்டது)

    ரொட்டித்தூள் - அரை கப்

    சீஸ்- ஒரு கப்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    நறுக்கிய இஞ்சி- ஒரு ஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்

    பூண்டு- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி, புதினா இலைகள்- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- ஒரு ஸ்பூன்

    கருப்பு மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா- ஒரு ஸ்பூன்

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    முட்டை-1

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்-தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் 2 கப் வேகவைத்த நூடுல்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், துருவிய மற்றும் வேகவைத்த சிக்கன், ரொட்டித் துண்டுகள், சீஸ், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுதையும் பயன்படுத்தலாம்).

    வெங்காயம், சிறிது பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகுத்தூள், சாட் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோயா சாஸ் மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்க வேண்டும்.

    இப்போது இந்த கலவையில் இருந்து கட்லெட்டுகளை உருவாக்கலாம். உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, நீங்கள் விரும்பும் அளவுக்கு கட்லெட்டுகளை உருவாக்கலாம்.

    பின்னர், உடைத்து ஊற்றிய முட்டையில் கட்லெட்டுகளை நனைத்து அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவ வேண்டும். அதன் பின் கட்லெட்டை மிதமான தீயில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ரெடி. சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு இது சுவையாக இருக்கும். பார்ட்டிகளில் பரிமாறுவதற்கு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் மிகவும் ஏற்றது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும். குழந்தைகளின் டிபன் பாக்சில் கொடுத்து அனுப்புவதற்கு நல்ல உணவாக இருக்கும்.

    • மாதக்கணக்கில் கெட்டுப்போகாது.
    • இனிப்பான மாங்காய் ஊறுகாய்

    மாதக்கணக்கில் கெடாத சுவை மிகுந்த இனிப்பான மாங்காய் ஊறுகாய் எவ்வாறு செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய (அல்லது) பொடியாக நறுக்கிய மாங்காய் – 1 கப்

    மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

    சர்க்கரை – 1 கப்

    கசகசா தூள் – 1 ஸ்பூன்

    வறுத்த சீரகம் (எண்ணெய் சேர்க்காமல்) – 2 ஸ்பூன்

    உப்பு – 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மாங்காயை துருவிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளித்து பின்னர் துருவிய மாங்காயை சேர்க்க வேண்டும். மாங்காய் நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் மிளகாய்தூள், வறுத்த சீரகம் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்க வேண்டும். அப்போது சர்க்கரையுடன் மாங்காய் கலந்து ஜாம் பதத்திற்கு வந்தவுடன் இறக்கலாம்.


    மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் இந்த இனிப்பு மாங்காய் ஊறுகாயை பூரி, உப்புமா மற்றும் சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

    • மெக்சிகன் ரைஸ் இனிமேல் வீட்டிலேயே ஈஸியா பண்ணலாம்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

    மெக்சிகன் ரைஸ் இனிமேல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈஸியா பண்ணலாம். வாங்க எப்படி பண்றதுனு பாப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பாசுமதி ரைஸ்- 500 கிராம்

    வெண்ணெய்- 3 ஸ்பூன்

    குடைமிளகாய்- 2

    வெங்காயத்தாள்- ஒரு கப்

    இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    சீரகம்- ஒரு தேக்கரண்டி

    தக்காளி பேஸ்ட் - ஒரு கப்

    மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    பாசுமதி அரிசியில் சிறிது வெண்ணை கலந்து தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாவை நீல வாக்கில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    பின்பு வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதில் தக்காளி பேஸ்டை போட்டு நன்கு வதக்க வேண்டும். எல்லாம் நன்கு வதங்கியதும் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து வேக வைக்க வேண்டும். சாதம் வெந்தவுடன் வெங்காயத்தாள் தூவி இறக்கினால் மெக்சிகன் ரைஸ் தயார்.




     


    • காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.
    • சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.

    நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நாம் உணவருந்தும்போது சில தவறுகளை நமக்கு தெரியாமலே செய்கிறோம். சில உணவுகளுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்க் கூடாது. எனவே தான் உடலில் சில உபாதைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. நாம் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ளாத போதும் நம் உடல் பலவீனமாகின்றன.

    எனவே தான் காலை உணவை 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மதிய உணவுகளை 1 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே நமது உணவுலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உணவுகளில் சிலவற்றை சேர்த்து சாப்பிட கூடாது.

    * பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ள ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.

    * தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக்கூடாது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக்கூடும்.

    * முருங்கை, முள்ளங்கி மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக்கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும்.

    * எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

    * வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.

    * பழங்களை தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

    * வெண்ணெயுடன் காய்கறிகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அது செரிமான கோளாறை ஏற்படுத்திவிடும்.

    * மேலும் கோதுமையை, நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக்கூடாது.

    * மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் 'வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

    * தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.

    * பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாது.

     * பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால் மீன் வெப்பமூட்டும் தன்மைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது ரத்த சம்மந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.

    * பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

    * சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.

    * இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து சாப்பிடுவது தவறு. ஏனென்றால் அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.

    * பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையை சேர்த்து சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.

    * பழங்கள் சாப்பிடும் போது உருளைக்கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மாவு வகை உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    * ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

    * நெய்யுடன் தேனை கலந்து சாப்பிட கூடாது. ஒரே நேரத்திலும் சாப்பிட கூடாது. ஏனெனினில் இரண்டும் சேர்ந்தால் நஞ்சாகி விடும்.

    * மோர், தயிர், பால் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிட கூடாது.

    * பழங்களை எப்பொழுதும் கடித்து சாப்பிட வேண்டும். அதனை உணவுடன் சேர்த்து சாப்பிடுவது கூடாது.

    * காய்கறிகளுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட கூடாது.

    * காலையில் வெறும் வயிற்றில் பால் காபி, டீ குடிக்க கூடாது.

    * கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிட கூடாது.

    * சைவ உணவுகளை சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.

    * மீன் சாப்பிடும்போது தயிர் சாப்பிட கூடாது.

    * முள்ளங்கி கீரை வகைகள் சாப்பிடும்போது பால் குடிக்க கூடாது.

    மேற்கூறிய உணவு முறைகளை பின்பற்றுவதனால் பல்வேறு நோய்கள் மற்றும் உணவினால் வரும் நஞ்சு நிலைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    • இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.
    • நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை நிறைவு செய்வார்கள்.

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இப்படி நோன்பு இருப்பவர்கள் மாலையில் தொழுகையை நிறைவு செய்த பிறகு நோன்பை நிறைவு செய்யும் வகையில் நோன்பு கஞ்சி அருந்தி நிறைவு செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சி என்பது அனைத்து பள்ளிவாசல்களிலும் கிடைக்கும். முஸ்லிம்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக விளங்கும் நோன்பு கஞ்சியை வீட்டில் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரி- கால் கிலோ

    பாசிப்பருப்பு- 50 கிராம்

    பட்டை- 2

    ஏலக்காய்- 4

    கிராம்பு- 4

    பிரியாணி இலை- 1

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    நெய்- ஒரு குழி கரண்டி

    கொத்தமல்லி, புதினா- ஒரு கைப்பிடி

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    கேரட்- 1

    பச்சை மிளகாய்- 3

    சின்னவெங்காயம்- ஒரு கைப்பிடி

    பூண்டு- 5 பல்

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    தக்காளி- 4 (நறுக்கியது)

    தேங்காய்ப்பால்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இவை இரண்டும் நன்றாக சூடான பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

    வெந்தயம் சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் ஒன்று இரண்டாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து, மூன்று பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய கேரட்டையும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கேரட்டிற்கு பதிலாக கொத்துக்கறி வாங்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பை இதனுடன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு இதில் 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும்.

    ஐந்து விசில் வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து விசில் வந்த பிறகு அதை அணைத்து விடலாம். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் பால் சேர்த்து ஒருமுறை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும்.

    அவ்வளவுதான் மிகவும் சுவையான நோம்பு கஞ்சி தயாராகிவிட்டது. சைவம், அசைவம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் தான் சைவமாக இருந்தால் கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் அசைவமாக இருந்தால் மட்டனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.
    • வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம்.

    ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட்- 3

    பால் - ஒரு லிட்டர்

    பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- 100 கிராம்

    மில்க்மெய்டு- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தவுடன் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறினால் அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு குல்பி மோல்டு அல்லது சிறிய கிண்ணங்கள் அல்லது, டம்ளர் ஆகியவற்றை ஊற்றி அதனை ஒரு அலுமினிய பேப்பர் கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் 6 மணிநேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்து பரிமாறலாம்.

    • விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது  குறித்து இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 3

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    சர்க்கரை- 250 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பால் பவுடர்- 100 கிராம்

    மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.

    பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    • உடல் எடை குறைப்பவர்களுக்கு பசலக்கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.
    • தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும். காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. நிறைய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு, இந்த கீரைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. மேலும், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

    மேலும், உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுத்து நிறுத்துகின்றன.. எனவே, டயட் இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது, சேர்த்து இந்த கீரையை, உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பாலக்கீரையை பயன்படுத்தி ஆந்திரா ஸ்பெஷல் உல்லிக்காரம் செய்து பார்க்கலாம். இதனை சூடான சாதத்திலும், சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

     தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை- ஒரு கட்டு

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 20 பல்

    வெங்காயம்- 2

    உப்பு- தேவையான அளவு

    சீரகம்- கால் டீஸ்பூன்

    காய்ந்தமிளகாய்- தாளிக்க

    கடுகு- கால் டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் பசக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளிக்க வேண்டும். அது பொறிந்ததும் காய்ந்தமிளகாய், பூண்டு. கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு மசாலாவில் வெட்டி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்றாக மசாலா வாசனை போகும் வரையிலும், எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பாலக்கீரை உல்லிக்காரம் தயார். சூடான சாதத்தில் இதனை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அதுதாங்க அமிர்தம்.

    • வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...?
    • பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    வழக்கமான சிக்கன், மட்டன் பிரியாணியை ருசித்திருப்பீர்கள், வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...? இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சீரகச் சம்பா அரிசி- 1 கிலோ

    மட்டன் (வெள்ளாட்டுக்கறி)-1 கிலோ

    வெங்காயம்- 200 கிராம்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50 கிராம்

    புதினா-1 கைப்பிடி

    கொத்தமல்லி-1 கைப்பிடி

    பச்சைமிளகாய்-12

    தேங்காய்ப் பால்-1கப்

    பாதம்-50 கிராம்

    பிஸ்தா-25 கிராம்

    முந்திரி-25 கிராம்

    கசகசா-10 கிராம்

    பட்டை-2 துண்டு

    கிராம்பு-6

    சோம்பு-2 ஸ்பூன்

    ஏலக்காய்-3

    எலுமிச்சை- 1/2

    நெய்- 50

    தேங்காய் எண்ணெய்- 50 மி.லி.

    உப்பு- தேவையான அளவு

    உலர் திராட்சை - 2 ஸ்பூன்

    தயிர்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தை கழுவி, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைத்தொடர்ந்து, ஊறவைத்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    அதன்பின் குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    அதன்பிறகு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரையே ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்கின்ற அளவுக்கு ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதி வந்தவுடன், அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்து, 90 சதவீதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடியிட்டு, 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கினால், கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    ×