search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் ரெசிப்பி"

    • சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
    • ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது.

    என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம். இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2

    டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    குடைமிளகாய் - 1 (நறுக்கியது)

    தக்காளி - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தக்காளி மற்றும் உப்பு போட்டு, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் ஜல்ப்ரேசி ரெடி. இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    • வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
    • எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    வெங்காயம்- 1

    தக்காளி-1

    சிக்கன் - கால் கிலோ

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    மல்லி தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    மொசரல்லா சீஸ்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.

    இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.

    • சுவையான ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் பூனாதான்.
    • இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

    வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு என்றால் அது சிக்கன் பூனாதான். இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும்.

    இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

    பூண்டு - 12 பற்கள்

    வரமிளகாய் - 10

    கிராம்பு - 4

    ஏலக்காய் - 4

    பட்டை - 2

    சீரகம் - 1 டீஸ்பூன்

    தயிர் - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

    • மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி.
    • மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

    கோடி வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- 500 கிராம்

    வெங்காயம்- 2 (நறுக்கியது)

    தக்காளி- 2 (நறுக்கியது)

    இஞ்சி-பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    தனியா- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கொத்து

    முந்திரி பருப்பு- 10

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    லவங்கம்- 3

    பட்டை - 2

    ஏலக்காய்- 2

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கொஞ்சம் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தற்போது இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நுறுக்கி எண்ணெய்யில் போட வேண்டும். வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்ததாகத் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் சிக்கனை போட்டு அனைத்தையும் கலந்து வறுக்க வேண்டும். தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். வேண்டும் என்றால் சிக்கனை வேக வைக்க சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்.

    மற்றொரு பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும். சிக்கனில் முந்திரி பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். எண்ணெய்யில் சிக்கன் நன்கு வறுபட்டால் சுவையான கோடி வேப்புடு தயார்.

    • இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு.
    • ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

    சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி. சில ரெஸ்டாரன்டுகள் அவர்களின் வாடிக்கையாளர்களின் பிரத்தியேக அனுபவத்திற்காக இன்னும் ஒரு படி மேலே சென்று சிக்கன் துண்டுகளை மசாலாவில் ஊற வைத்து (ஸ்கியூவர்) குச்சியில் சொருகி சுட்டு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளர்களே சிக்கனை சுட்டு சாப்பிடுவதற்கு பல வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    இதை வெகு சுலபமாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். சிக்கனை ஊற வைப்பதற்கு தேவையான மசாலாவை செய்து சிக்கனை அதில் போட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும். இதை வெகு எளிதாக ஒரு வாணலியில் வைத்தே வேக வைத்து விடலாம். மேலும் சிக்கன் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.

    தேவையான பொருட்கள்:

    போன்லெஸ் சிக்கன்- 1/2 கிலோ

    பெரிய வெங்காயம்- 2

    பச்சை குடை மிளகாய்- 1

    மஞ்சள் குடை மிளகாய்- 1

    கேரட்- 1

    பெரிய வெள்ளரிக்காய்- 1

    எலுமிச்சம் பழம்- 1/2

    இஞ்சி, பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    தயிர்- 4 ஸ்பூன்

    வெண்ணெய்- ஒரு ஸ்பூன்

    சீரக தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலா- ஒரு ஸ்பூன்

    மிளகு தூள்- 1/2 ஸ்பூன்

    மல்லி தூள்- 1/4 ஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சிக்கன் துண்டுகலுக்கு ஏற்றவாறு நறுக்கி, அடுத்து ஒரு பவுலில் கெட்டி தயிர், மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகள், வெங்காயம், குடை மிளகாய், மற்றும் மிளகு தூளை தூவி நன்கு சிக்கன் துண்டுகளில் மசாலா ஒட்டுமாறு கலந்து விடவும்.

    அதன்பிறகு அந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டு அதை நன்கு இறுக்கமாக மூடி அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஊற விடவும்.

    சிக்கனை மசாலாவுடன் எவ்வளவு நேரம் நாம் ஊறவிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் சுவை நன்றாக இருக்கும். 2 மணி நேரத்திற்கு பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் ஒரு கரித்துண்டை அடுப்பில் காட்டி அதனை ஒரு கிண்ணத்தை வைத்து அதனை சிக்கன் கலந்து வைத்துள்ள பவுலின் நடுவில் வைத்து அதில் கால் டீஸ்பூன் நெய்விட வேண்டும். அப்போது புகை கிளம்பும் உடனே அதனை மூடிகொண்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

    அடுத்து ஒரு ஸ்கியூவரை எடுத்து அதில் நாம் மூடிபோட்டு வைத்துள்ள சிக்கன் துண்டை சொருகி அதற்கு அடுத்து ஒரு வெங்காயம் அதன் பின்பு ஒரு பச்சை குடை மிளகாய் மற்றும் மஞ்சள் குடை மிளகாயை சொருகி கொள்ளவும். மீண்டும் இதேபோன்று ஒரு ஸ்கியூவரில் அளவிற்கேற்ப சிக்கன், வெங்காயம், மற்றும் குடை மிளகாய் துண்டுகளை சொருகி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இரும்பு ஸ்கியூவருக்கு பதிலாக மர ஸ்கியூவரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    இப்பொழுது ஒரு வாணலியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெயை ஊற்றி உருகியதும் அதில் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் ஸ்கியூவரை வைக்க வேண்டும். ஸ்கியூவரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் அனைத்தும் சமமாக வெந்து இருக்கும்.

    இதை ஓனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு ஃப்ரீஹீட் செய்து இந்த சிக்கன் துண்டுகளோடு இருக்கும் ஸ்கியூவர்களை ஒரு தட்டில் வைத்து அதை ஓனில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும். 10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக எடுத்து ஸ்கியூவரை திருப்பி வைத்து மீண்டும் அதே ஓனில் வைத்து சுமார் 12-ல்ருந்து 15 நிமிடம் வரை அதை வேக விட்டு வெளியே எடுக்கவும்.

    அதன்பிறகு இதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சிறிது கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

    ×