search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snack Recipe"

    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம்.
    • எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

    கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு- 1 கப்

    நிலக்கடலை - 1/4

    தேங்காய்த்துருவல் - 1/2 கப்

    வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.

    பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும்சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


    • அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
    • மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.

    அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ

    மிளகாய்த் தூள் 12 கிராம்

    மஞ்சள் தூள் - 4 கிராம்

    உப்பு -தேவைக்கு ஏற்ப

    நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்

    நறுக்கிய பூண்டு - 20 கிராம்

    நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

    எலுமிச்சைச் சாறு- 5மி.லி.

    எண்ணெய் - கால் லிட்டர்

    அரைக்க

    துருவிய தேங்காய் 25 கிராம்

    லவங்கப்பட்டை 2 கிராம்

    கிராம்பு, கசகசா - 10 கிராம்

    வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்

    செய்முறை:

    முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.

    • குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்

    உருளைக்கிழங்கில் சமைக்கும் அனைத்து ரெசிபிகளையும் நாம் விரும்பி சாப்பிடுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ரெசிபி மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட பெஸ்ட் ஸ்நாக் ரெசிபியாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்நாக்கை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த ஸ்நாக் ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 3

    சில்லி ஃப்ளேக்ஸ்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா அரை ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

    உப்பு- சுவைக்கேற்பவாறு

    மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    தனியா தூள்- கால் ஸ்பூன்,

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ், சாட் மசாலா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வடை போல் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இரண்டு பிரட்டை எடுத்து தோசைக்கல்லில் சேர்த்து டோஸ்ட் செய்ய வேண்டும். இந்த பிரட் பொன்னிறமாக மாறும் அளவு டோஸ்ட் செய்து எடுத்து ஆற விடவும். பின்னர் இந்த பிரட்டை துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துகளை ஒரு தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும்.

    வேறொரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயாரித்த வடையை இதனுள் சேர்த்து எடுத்து பின் இதை பிரட் துகளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இந்த ஸ்நாக் சாப்பிடுவதற்கு மொறு மொறுவென இருக்கும்.

    • சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
    • குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும்.

    சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ஒரு வித்தியாசமான உணவு. இதில், வேகவைத்த நூடுல்சுடன் சிக்கன் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. பொதுவாக நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. நூடுல்சை பொரிப்பதால் கிடைக்கும் மொறுமொறுப்பான சுவை அவர்களை மேலும் கவரும். சைவ உணவு பிரியர்கள், கட்லெட் வடிவத்தில் வேகவைத்த உருளைக்கிழங்குடன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிடலாம்.

    சுவையான சிற்றுண்டியாக அமையக்கூடிய சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த நூடுல்ஸ் (உப்பு சேர்த்து) - 2 கப்

    வேகவைத்த சிக்கன்- ஒரு கப் (துண்டு போட்டு உப்பு சேர்க்கப்பட்டது)

    ரொட்டித்தூள் - அரை கப்

    சீஸ்- ஒரு கப்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    நறுக்கிய இஞ்சி- ஒரு ஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்

    பூண்டு- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி, புதினா இலைகள்- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- ஒரு ஸ்பூன்

    கருப்பு மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா- ஒரு ஸ்பூன்

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    முட்டை-1

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்-தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் 2 கப் வேகவைத்த நூடுல்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், துருவிய மற்றும் வேகவைத்த சிக்கன், ரொட்டித் துண்டுகள், சீஸ், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுதையும் பயன்படுத்தலாம்).

    வெங்காயம், சிறிது பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகுத்தூள், சாட் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோயா சாஸ் மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்க வேண்டும்.

    இப்போது இந்த கலவையில் இருந்து கட்லெட்டுகளை உருவாக்கலாம். உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, நீங்கள் விரும்பும் அளவுக்கு கட்லெட்டுகளை உருவாக்கலாம்.

    பின்னர், உடைத்து ஊற்றிய முட்டையில் கட்லெட்டுகளை நனைத்து அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவ வேண்டும். அதன் பின் கட்லெட்டை மிதமான தீயில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ரெடி. சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு இது சுவையாக இருக்கும். பார்ட்டிகளில் பரிமாறுவதற்கு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் மிகவும் ஏற்றது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும். குழந்தைகளின் டிபன் பாக்சில் கொடுத்து அனுப்புவதற்கு நல்ல உணவாக இருக்கும்.

    • நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
    • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும்.

    நண்டு சப்பிடுவதால், வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்படவும், கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது. இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும். நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

    காயங்கள் விரைந்து குணமாகவும், நண்டு உணவுகள் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்வை என்றும், இது புதிய திசுக்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 1

    இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    கரம்மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்

    மைதா மாவு- ஒரு ஸ்பூன்

    பிரெட் தூள்- தேவையான அளவு

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை, எண்ணெய்- தேவையான அளவு,

    உப்பு- தேவையான அளவு.

    செய்முறை

    முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நண்டுகளை போட்டு வேக வைக்க வேண்டும்.

    நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கரம்மசாலாதூள், மஞ்சள்தூள், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ வைக்கலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் தூள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், ஒரு லாலிபாப்பை எடுத்து, முட்டையில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நண்டு லாலிபாப் தயார்.

    • ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை.
    • `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம்.

    இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவுகளில், `சேனா போடா' எனப்படும் ஒருவகை இனிப்பு தனித்துவமான சுவை கொண்டதாகும். `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம். இது ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை. இந்த அற்புதமான சுவை நிறைந்த இனிப்பை நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்-கால் கிலோ

    சர்க்கரை- 1 கப்

    ரவை- 2 ஸ்பூன்

    நெய்- 2 ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா நட்ஸ்- 2 ஸ்பூன்

    திராட்சை- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பன்னீரை எடுத்து கைகளாலேயே நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே ரவை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, நெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து, பன்னீர் மற்றும் ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்தால், நல்ல கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதை அப்படியே நன்றாக சில நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருங்கள்.

    அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள கலவையில், காய்ந்த திராட்சை மற்றும் நட்ஸ்களைப் போட்டு கலக்கி விடவும். இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடலாம். அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அப்படியே சமமாகப் பரப்பி விடுங்கள்.

    இதை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் எளிதாக இருக்கும். இல்லை அடுப்புதான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவு ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடுங்கள்.

    பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள். மேல் பகுதி பொன் நிறமாக மாறியதும் நடுவில் ஏதேனும் குச்சியை வைத்து உள்ளே வெந்துவிட்டதா என குத்திப் பாருங்கள்.

    எல்லாம் சரியாக வெந்ததும் வெளியே எடுத்து, அந்த பாத்திரத்தில் இருந்து சேனா போடாவை வெளியே அகற்றி, அப்படியே சூடாக வெட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இதனுடன் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால், நீங்கள் சொர்க்கத்திற்கே சென்றது போல உணர்வீர்கள். நிச்சயம் இந்த உணவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

    • சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக். இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ஸ்பெயினில் உள்ள ஆடு மேய்பவர்களே. `சூறா' இன ஆடுகளின் கொம்புகளின் வடிவத்தில் இருப்பதால், இந்த இனிப்பிற்கு `சூறோஸ்' என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்.

    நெய்- 2 தேக்கரண்டி.

    சக்கரை- 2 தேக்கரண்டி.

    உப்பு- கால் தேக்கரண்டி.

    மைதா மாவு- 125 கிராம்

    சக்கரை- கால் கப்.

    ஏலக்காய் தூள்- கால் தேக்கரண்டி.

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு 250 கிராம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி சக்கரை, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை இறக்கி விட்டு அதில் ஒரு கப் மைதா மாவு சேர்க்க வேண்டும். மாவை சேர்த்தவுடன் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும்.

    இப்போது மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதை கைகளால் நன்றாக பிசைய வேண்டும். இப்போது மாவு தயார்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி தயாராக வைத்திருக்கும் மாவை பைப்பிங் பேக்கில் போட்டு சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். நன்றாக கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் அதனை எடுத்து விட வேண்டும்.

    சக்கரையை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பவுடர் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஒரு பவுலில் கால் கப் சக்கரை, அத்துடன் கால் தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துவிட்டு இரண்டையும் நன்றாக கலந்துவிட்டு பொரித்து வைத்திருக்கும் சூறோசை அதில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூறோஸ் தயார். இதை நியூட்ரெல்லா அல்லது கட்டியான சாக்லேட் சாசுடன் பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும். இனி சூறோஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்க, விரும்பி சாப்பிடுவார்கள்.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக் மிகவும் பிடிக்கும்.
    • சோராஃபளியின் மீது மசாலா பொடி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு - 1 கப்

    உளுந்தமாவு- அரை கப்

    பேக்கிங் பவுடர் - கால் டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்

    புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1 அங்குலத் துண்டு

    பச்சை மிளகாய்- 5

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    சிட்ரிக் அமிலம் - அரை சிட்டிகை

    உப்பு - தேவைக்கு

    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

    பிளாக் சால்ட் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அகலமான பாத்திரத்தில் கடலைமாவு ஒரு கப் மற்றும் உளுந்தமாவை கொட்டி சலித்து எடுக்கவும். பின்பு அந்த மாவில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

    அதன்பிறகு தயாரித்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கெட்டியான பதத்துக்கு பிசையவும். பின்னர் அதை மூடி அப்படியே வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அந்த மாவை எடுத்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மென்மையாகும் வரை நன்றாகப் பிசையவும். பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உருண்டைகளை எண்ணெய்யில் தோய்த்து எடுத்து வைக்கவும். பின்பு ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அந்த சப்பாத்திகளை மெல்லிய ரிப்பன்களாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு ரிப்பன்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

     மசாலா பொடி:

    ஒரு சிறிய கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூளுடன் கால் டேபிள் ஸ்பூன் பிளாக் சால்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    சட்னி:

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், பிளாக் சால்ட், உப்பு, ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைப்பதால் சட்னி நீண்டநேரம் நிறம் மாறாமல் இருக்கும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கடலை மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். இந்த கலவை கெட்டியாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதில் ஐஸ்கட்டிகள் மற்றும் தயாரித்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து கலக்கவும்.

     பரிமாறும் முறை:

    மொறுமொறுப்பான சோராஃபளியின் மீது மசாலா பொடியை பரவலாகத் தூவி, சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

    • வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
    • எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    வெங்காயம்- 1

    தக்காளி-1

    சிக்கன் - கால் கிலோ

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    மல்லி தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    மொசரல்லா சீஸ்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.

    இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.

    • வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வைத்து மோதகம்.
    • மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமானது.

    விநாயகர் சதுர்த்தி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை. இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். பூரணங்களை உள்ளே வைக்கும் வித்தியாச வித்தியாசமாக செய்து சாப்பிட்டு இருப்போம். மேல் இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவில் கூட வித்தியாசமாக செய்து சாப்பிடுவோம்.

    என்றைக்காவது ஒரு நாள் காய்கறியோடு சேர்த்து இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள் தான் செய்து இருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமாக இன்றைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படி மோதகம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    இந்த மோதகம் மிகவும் ருசியானது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒரு மோதகம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி மாவு- 2 கப்

    பீட்ரூட்- 1

    வெல்லம்- கால் கிலோ

    கடலைப்பருப்பு- ஒரு கப்

    தேங்காய் துருவல்- 1 கப்

    ஏலக்காய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பீட்ருட்டை தோலை நீக்கி விட்டு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள பீட்ருட் விழுதை வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய பீட்ருட் சாறை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கடலைப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ருட் சாரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    பீட்ருட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விட வேண்டும். மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில்

    வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து தெளித்து நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். குக்கரில் வேகவைத்த கடலைப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு மோதக அச்சில் பீட்ருட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து அதற்குள் இந்த கடலைப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூட வேண்டும். அனைத்து மோதகமும் செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ருட் மோதகம் தயார்.

    ×