search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழம்பு ரெசிப்பி"

    • உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து எடை குறையும்.
    • குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் எலும்புகள் வலுவடையும்.

    கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    வெங்காயம் - 2

    உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    அரைப்பதற்கு

    வெங்காயம் - 1

    தக்காளி - 3

    வரமிளகாய் - 6

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி - 1 நீளத்துண்டு

    பூண்டு - 7 பல்லு

    தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கசகசா - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மிக்சியில் வெங்காயம், தக்காளி, மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், கசகசா, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகுகொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும். வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்

    இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி. இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

    • அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையை தரக்கூடியது காளான்.
    • காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

    சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைத் தரக்கூடியது தான் காளான். அத்தகைய காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும். இப்போது பசலைக்கீரை காளான் குழம்பின் செய்முறையை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 15

    வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 1/2 கப்

    அரைப்பதற்கு

    பசலைக் கீரை - 1 கட்டு (கழுவி நறுக்கியது)

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை - 1

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 4

    அன்னாசிப்பூ - 1

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, தட்டு கொண்டு மூடி 7-8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி.

    ×