search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayudha pooja"

    • சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
    • பயணிகள் பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ளும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சென்னை:

    ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, சென்னையின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் ஆகியவை தாம்பரம் மெப்ஸ் (MEPZ) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் (மா.போ.க. பூவிருந்தவல்லி பணிமனை அருகில்) பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்) கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    மேற்குறிப்பிட்டுள்ள 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளையும், பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளையும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்.

    இவ்வாகு அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். #Ayudhapooja #BanwarilalPurohit #Greeting
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றி பெற்றதை அடையாளப்படுத்தும் நாளாக ஆயுதபூஜை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த உவகையோடும், மகிழ்ச்சி பெருக்கோடும் கொண்டாடப்படுகிறது. இந்த மங்களகரமான திருநாளில் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிலில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற வகையில் இந்த பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாம் உண்மையும், நற்பண்புகளும், நேர்மையும் நிலைநிறுத்தி இதுவரை இல்லாத அளவில் நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Ayudhapooja #BanwarilalPurohit #Greeting
    ஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து உள்ளது. ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    தமிழ்நாடு முழுவதும் நாளை(வியாழக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தும் உபயோக பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்வது வழக்கம். பின்னர் சிறப்பு பூஜை செய்து சாமியை வழிபட்டு, வாகனங்களுக்கு சந்தனம் வைத்து மாலை அணிவிப்பார்கள். இந்த பூஜையில் வாழைக்கன்று, மா இலை, பூக்கள் மற்றும் கரும்பு இடம் பிடிக்கும்.

    நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், ஆயுத பூஜைக்கு தேவையான கரும்பு, வாழைக்கன்று மற்றும் பூக்களை விளைவிக்க முடியாது. இதனால் ஆண்டுதோறும் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு அவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஊட்டி மலைப்பிரதேசமாக இருப்பதால், கரும்பு, வாழைக்கன்று உள்ளிட்டவைகளை சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கொண்டு வர கூடுதல் செலவாகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் டீசல், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு செல்வதால், லாரிகளில் பொருட்களை கொண்டு வருவதற்கான வாடகை அதிகரித்து உள்ளது.

    இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விலை மேலும் உயர்ந்து இருக்கிறது. ஊட்டி நகரில் கடந்த ஆண்டு ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆயுத பூஜையையொட்டி ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து 4 லாரிகளில் கரும்புகள் ஏற்றப்பட்டு நேற்று ஊட்டிக்கு கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊட்டி நகரின் சுற்றுப்புற பகுதிகளுக்கு சரக்கு வாகனங்களில் கரும்புகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்பட்டன.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டு போதிய அளவு பருவமழை பெய்ததால் கரும்பு வரத்து அதிகரித்து உள்ளது. ஒரு கரும்பு ரூ.50 முதல் ரூ.60 வரைக்கும், ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஊட்டியில் கரும்பு விலை உயர்ந்து இருக்கிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் கரும்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கரும்பு விற்பனை களை கட்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 
    நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    காவேரிப்பட்டணம்:

    நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் வணிக பெருமக்கள் தங்களது தொழிலகங்களுக்கும், மாணவ, மாணவியர் தங்களது கல்வி புத்தகங்களுக்கும், மகளிர் தங்களது வீடுகளிலும் வெகுவிமர்சையாகபூஜை செய்வர். இப்பூஜையில் கலந்துகொள்வோருக்கு பூஜை செய்த பொரியை அன்பளிப்பாக வழங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். 

    இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக வேண்டி காவேரிப்பட்டணம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக பொரி உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது சீசன் களைகட்டியுள்ளதால் இரவு, பகலாக வேலை நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள், மின் கட்டணம், ஆட்கள் கூலி ஆகியவை உயர்ந்துள்ளதால் கடந்தாண்டு ரூபாய் 330-க்கு விற்கப்பட்ட 50 படி கொண்ட மூட்டை இந்த ஆண்டு சுமார் 380 முதல் 400வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு 30முதல்50 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நாளை ஆயுத பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுவதையொட்டி கோவை மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
    கோவை:

    ஆயுத பூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கடை, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தது. வாழைக்கன்று, பொரி, கடலை ஆகியவற்றின் விற்பனை இன்று அதிகமாக இருந்தது.

    இதனை வாங்கி செல்ல மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயுத பூஜையையொட்டி கோவையில் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.கோவையில் இன்று ஒரு கிலோ அரளிப்பூ ரூ. 400-க்கு விற்பனையானது. செவந்தி பூ ரூ. 200 முதல் 240-க்கும், ரோஜா ரூ. 240-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், ஒரு தாமரை ரூ. 30-க்கும் விற்பனையானது. வாழை இலை ஒரு செட் ரூ. 40-க்கும், பூசணி ஒரு கிலோ ரூ. 30-க்கும், ஒரு தேங்காய் ரூ. 30-க்கும், வெற்றிலை ஒரு கவுலி ரூ. 60-க்கும் விற்பனையானது.

    பொரி ஒரு பக்கா ரூ. 20-க்கும், பொரி கடலை ஒரு கிலோ ரூ. 100-க்கும், நிலக்கடலை ரூ. 110-க்கும், அவல் ரூ. 40-க்கும் நெல் பொரி ஒரு லிட்டர் ரூ. 10-க்கும், ஆப்பிள் ஒரு கிலோ ரூ. 110-க்கும் சாத்துக்குடி ரூ. 45-க்கும், கொய்யா ரூ. 70-க்கும், ஆரஞ்சு ரூ.60-க்கும், மாதுளை ரூ. 110-க்கும், திராட்சை ரூ. 75-க்கும் விற்பனையானது.

    வாழைப்பழம் ஒரு டஜன் ரூ. 60-க்கும், கரும்பு ஒரு கட்டு ரூ. 750-க்கும் விற்பனையானது.

    ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    திண்டுக்கல்:

    ஆயுத பூஜை நாளை கொண்டாட உள்ளதால் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    வரத்து அதிகரித்தபோதும் தேவை கூடுதலாக உள்ளதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருந்தபோதும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.700, முல்லை ரூ.600, ஜாதிப்பூ ரூ.300, செண்டுமல்லி ரூ.120, காக்கரட்டான் ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.400, துளசி ரூ.50 என்ற விலையில் விற்பனையானது.

    குறிப்பாக மல்லிகை, சம்பங்கி, துளசி தேவை அதிகரித்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு 10 டன் சம்பங்கி வந்து இறங்கி உள்ளது. நாளை கோவில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூ மாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #ADMK #Edappadipalaniswami #Ayudhapooja
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நவராத்திரி விழாவையும், வெற்றித் திருநாளாம் விஜயதசமி திருநாளையும் நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாட்களில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருள வேண்டி, நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின், முதல் மூன்று நாட்கள் வீரமிகு துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வம் பொழியும் லட்சுமி தேவியையும், நிறைவாக மூன்று நாட்கள் கல்வி தரும் சரஸ்வதி தேவியையும், மக்கள் பக்தியுடன் போற்றி வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமாகும்.

    “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில் சார்ந்த கருவிகளை இறைபொருட்களாக பாவித்து, தொழில் பெருக அதற்கு பூஜை செய்து, வாழ்வில் வளம்பெற தெய்வத்தை வணங்கிடும் நன்னாள் “ஆயுத பூஜை” திருநாளாகும்.

    விஜயதசமி திருநாளன்று தொடங்கப்படும் செயல்கள் யாவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதன்முதலாக கல்வியை தொடங்குதல், புதிய தொழில்களை ஆரம்பித்தல் போன்ற புதிய முயற்சிகளை துவக்கி, விஜயதசமி திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த சிறப்புமிக்க திருநாளில், அன்னையின் அருளால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, நலமுடனும், வளமுடனும் வாழ்ந்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ADMK #Edappadipalaniswami #Ayudhapooja
    வத்தலக்குண்டுவில் கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த வாழைத்தார் விற்பனை ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டுவில் ஆயுதபூஜையை முன்னிட்டு வாழைத்தார் மற்றும் வாழை இலை அதிக அளவில் விற்பனைக்கு வந்தது.

    வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் வாழைத்தார் கமி‌ஷன் மண்டி உள்ளது. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் இங்கு வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வியாபாரிகள் மூலம் வாங்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக மந்தமாக இருந்த வாழைத்தார் விற்பனை ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று சூடுபிடிக்கத் தொடங்கியது.

    விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வத்தலக்குண்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதனை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதே போல் வத்தலக்குண்டு - மதுரை ரோட்டில் தினசரி வாழை இலை மார்க்கெட் உள்ளது. இங்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவில் வாழை இலை கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் எதிர்பார்த்த விலையை விட கூடுதல் விலை கிடைத்தது.

    ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் வீடுகளிலும், அவலலுகங்களிலும், கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக வாழை இலை மற்றும் வாழைப் பழங்களின் தேவை அதிகரிப்பால் விற்பனையும் சூடுபிடித்தது.

    திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட மாவட்டங்களின் பல்வேறு பகுதகளில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    ×