search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student death"

    • பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர்.
    • 3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் அஸ்வின்(வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். அவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (14). இவர் அரசு பள்ளியில் 8- ம் வகுப்பு பயின்று வந்தார்.

    ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் மாரி முத்து (13). இந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று மாலை தங்கள் பெற்றோர்களிடம் விளையாட செல்கிறோம் என்று கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து பெற்றோர்கள் அவர்களை தேட தொடங்கினர்.

    பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போது இரவு 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் 3 பேரின் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    செருப்பு கிடந்த இடத்திற்கு அருகே கிணறு ஒன்றும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் பிரத்யேக டார்ச் லைட் அடித்து பார்த்தனர். ஆனால் அங்கு ஏதும் தென்படவில்லை.

    பின்னர் அந்த நள்ளிரவிலும் கயிற்றின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில் கிணற்றின் ஆழப்பகுதியில் சிறுவர்களின் உடல் தட்டுப்பட்டது, இதன் பின்னர் மேலும் சில வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவர்களின் உடல்களை இறந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். சிறுவர்களின் உடல்களை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர்.

    இது குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த சிறுவர்கள் குளிக்கும் போது அஸ்வின் என்ற சிறுவனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவர் மூழ்க, நண்பனை காப்பாற்றும் முயற்சியில் மற்ற 2 சிறுவர்களும் இறங்கி இருக்கலாம். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறினர்.

    உடல்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
    • போலீசார் தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை மதுரவாயல் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே மாணவன் ஜீவா உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

    தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (வயது 20) மற்றும் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த சரவண குமார் (18) ஆகிய இருவரும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து மனோஜ் மற்றும் சரவண குமார் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோபி செட்டிபாளையம் சென்று தனது நண்பர்களை சந்தித்து விட்டு திரும்பி புளியம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் வேட சின்னனூர் என்ற இடத்தில் இருவரும் எல்.பி.பி கால்வாயில் இறங்கி குளிக்க சென்றனர்.

    அப்போது மனோஜ் மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரும் வாய்க்காலில் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க சென்றபோது திடீரென இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அதைப் பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.

    அதில் சரவணகுமார் என்பவரை காப்பாற்றி விட்டனர். மேலும் மனோஜ் என்பவர் நீரின் ஆழமான பகுதியில் மூழ்கி விட்டதால் மனோஜ் நீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தனி பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த மனோஜின் பிரேதத்தை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரபி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
    • ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.

    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.

    அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.

    இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.

    இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.

    தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (வயது21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் வீடு எடுத்து தங்கி தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வினய்குமார் உடன் படிக்கும் தனது நண்பர்களான ரேவனு, திவ்ய தேஜாவுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    கல்லூரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய சாலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த வினய் குமார் மீது திடீரென இடி தாக்கியது. இதில் வினய் குமார், மற்றும் உடன் இருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வினய்குமாரை மீட்டு அருகில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினய்குமார் பரிதாபமாக இறந்தார். இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் இடி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நண்பர்கள் 3 பேரும் குளித்துக்கொண்டிருக்கும்போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார்.
    • பொதுமக்கள் மாணவர் மோகனசுந்தரத்தை இறந்த நிலையில் மீட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த, கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டம். இவரது மகன் மோகனசுந்தரம் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார்.

    பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் மோகனசுந்தரம் தனது நண்பர்கள் 2 பேருடன் அருகில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார்.

    நண்பர்கள் 3 பேரும் குளித்துக் கொண்டிருக்கும் போது மோகனசுந்தரம் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றார். நண்பர்கள் 2 பேரும் கரையோரமாக குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் மோகனசுந்தரம் வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 2 பேரும் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏரியில் இறங்கி தேடினர். பின்னர் மாணவர் மோகனசுந்ரத்தை இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து அவரது பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் மாணவர் மோகனசுந்தரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
    • உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.

    இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

    • தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார்.
    • தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது.

    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது கணவர் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இந்த தம்பதியின் மகள் லியோரா ஸ்ரீ (வயது 10) இவர் மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தினமும் தாய் கீர்த்தனா தான் மகளை மொபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல அவர் மகளை மொபட்டில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றார்.

    கோவிலம்பாக்கம் ரோட்டில் சென்றபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதில் கீர்த்தனா சென்ற மொபட்டும் சிக்கி நிலை தடுமாறியது. இதனால் மொபட் சரிந்ததால் அதன் பின்னால் பயணம் செய்த லியோராஸ்ரீ தவறி கீழே ரோட்டில் விழுந்தார்.

    அந்த சமயம் பின்னால் வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவி லியோராஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    தன் கண் முன் மகள் இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர்கள் கண்களை குளமாக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவிலம்பாக்கம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவதாகவும் லாரிகள் போன்ற வாகனங்கள் தாறுமாறாக ஓடுவதால் இதுபோன்று விபத்துக்கள் நடந்து வருவதாகவும், இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தாயுடன் பள்ளிக்கு சென்றபோது மாணவி விபத்தில் உயிர் இழந்த சம்பவம் கோலிலம்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

    தெலுங்கானா மாநிலம், கங்காதர மண்டலம், வெங்காய பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்தி (வயது 17). இவர் நியல கொண்ட பள்ளியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் படித்து வந்தார்.

    கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.

    கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

    அப்போது பிரதீப்தாவும் சக மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியை மீட்டு கரீம் நகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரதீப்தி பரிதாபமாக இறந்தார்.

    கல்லூரியில் நடனம் ஆடிய போது மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.
    • கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாட்களில் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கன மழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்யும் என கருதப்படுவதால் அந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பருவமழை வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.

    கனமழை மற்றும் காற்றின் காரணமாக ஆலப்புழாவில் 36 வீடுகளும், பத்தனம் திட்டாவில் 3 வீடுகளும் இடிந்தன. அங்கு வசித்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதால், எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலை பகுதிகளில் மக்கள் குளிக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே காசர்கோடு அருகே மழைக்கு மரம் சாய்ந்ததில் மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். காசர்கோடு மாவட்டம் புத்திகே அருகே உள்ள அங்காடி மோகர் பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மனைவி பாத்திமா சைனப். இவர்களுது மகள் ஆயிஷாத் மின்கா (வயது 11). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு நின்ற ஒரு மரம் காற்றில் முறிந்து விழுந்தது. அதன் கிளை ஆயிஷாத் மின்கா மீது விழுந்தது. இதனை கண்ட சக மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கு நின்றவர்கள் மரக்கிளைகளை அகற்றி ஆயிஷாத் மின்காவை மீட்டனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆயிஷாத் மின்கா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழை குறித்து மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடுக்கி, பத்தனம் திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் கூடுதலாக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
    • மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன்.

    மூத்த மகன் ஜீவந்த் (வயது25) கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தார்.

    இளநிலை படிப்பு முடித்தவுடன், எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விரும்பினார். அந்த படிப்பினை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என ஜீவந்த் நினைத்தார்.

    அவரது விருப்பத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் புகழ் பெற்ற ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அங்கு இடமும் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் தனது ஒரு வருட படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்றார்.

    அங்கு பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி அவர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு படிக்க சென்றார்.

    அங்கு புத்தகங்களை எடுத்து படித்து கொண்டு, பாடத்திற்கு தேவையான குறிப்புகளையும் எடுத்துள்ளார். இரவு 9.30 மணியளவில் அவரது நண்பர்கள் ஜீவந்த்துக்கு போன் செய்து, நாங்கள் சாப்பிட போகிறோம். நீயும் சாப்பிட வா என அழைத்தனர்.

    அதற்கு அவர், நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவர்களும் சென்று விட்டனர்.

    இரவு 11 மணியை கடந்தும் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பயந்து போன நண்பர்கள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அவர்களும் மாணவர் காணாமல் போனது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தினர். போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினர்.

    இந்த நிலையில் 21-ந் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசாருக்கு பர்மிங்காம் கால்வாயில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டதாகவும், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் யார் என விசாரித்தனர்.

    அப்போது அவர் காணாமல் போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவையில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்தனர்.

    இதனை கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மகன் இறந்த செய்தி கேட்டு கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்ததும் ஜீவந்த்தின் உறவினர்கள் அவரது வீட்டில் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அந்த வீடே சோகமயமாக காட்சி அளிக்கிறது.

    இது தொடர்பாக இங்கிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறியதாக தெரிவித்தனர்.

    மேலும் இரவு 11 மணிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் போலீசிடம் தெரிவித்தனர்.

    நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறிய ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் கிடந்தார் என்பது போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

    எப்படி அவர் அங்கு வந்தார், தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரும் அவருடன் வந்தனரா? என்றும் விசாரிக்கின்றனர்.

    மேலும் அவரிடம் யாராவது தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கால்வாயில் தூக்கி வீசினரா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

    இருந்த போதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

    இதற்கிடையே கோவை என்ஜீனியரிங் மாணவர் லண்டனில் உயிரிழந்தது பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் ஜீவந்த் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இறந்த ஜீவந்த்தின் சகோதரர் ரோகன் கூறியதாவது:-

    எனது சகோதரர் நன்றாக படிக்கக்கூடியவர். தினமும் பெற்றோரிடமும் என்னிடமும் போனில் பேசிவிடுவார். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் கூட அவர் எங்களிடம் போனில் பேசினார்.

    ஆனால் அடுத்த நாளே அவர் பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டதும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது. இது எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். தனது வேலையை மட்டும் பார்ப்பார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் பர்மிங்காம் கால்வாய் பகுதிக்கு எதற்காக சென்றார். எப்படி அடிபட்டு கிடந்தார் என்பது தெரியவில்லை.

    அவரை யாரும் தாக்கினரா என்பதும் தெரியவில்லை. எனது சகோதரர் சாவில் மர்மம் இருக்கிறது. அது என்ன என்பதை போலீசார் கண்டுபிடித்து உண்மையை வெளியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது இந்திய தூதரகம் மூலம் இறந்த எங்கள் சகோதரரின் உடலை மீட்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்பில் இருந்து தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×