search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pradosham"

    • நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.
    • நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    "பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்" என்று சொல்வார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான மிகச் சிறப்பான நாளைய தினத்தில் "சூரிய பகவான்" மற்றும் "சிவபெருமானை" போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.

    சூரிய பகவான் மந்திரம்: ஆம் ஹுராம் ஹிரீம் ஹுராம் சஹ் சூரியாய் நமஹ

    சிவ பெருமான் மந்திரம்: ஓம் நமோ பகவதே ருத்ராய

    பிரதோஷ நேரமான மாலை வேலையில் கோவிலுக்கு சென்று முதலில் சூரிய பகவானை தரிசித்து, அவருக்கு நெய் தீபமேற்றி மந்திரத்தை 10 முறை உச்சரித்து வணங்க வேண்டும். இதனால் சூரிய தோஷம் நீங்கும்.


    பிரதோஷ நேர பூஜையின் போது சிவபெருமானை வேண்டி மந்திரத்தை 9 முறை கூறி வணங்க வேண்டும். இம்மந்திரங்களை நாளை கூறி வழிபடுவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் உடல், மனம், ஆன்மா தூய்மை பெற்று ஆன்மிகச் சிந்தனை நமக்குள் நிறையும். அதோடு நமது கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் பெருகும். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி.

    பொதுவாக பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகு காலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே நாளை ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

    நாளை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    முடிந்தால் வில்வமும், செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம், பெருகும்; நிலைக்கும் என்பது ஐதீகம்.

    • மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
    • இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 9-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்கள் மூலம் தாணிப்பாறைக்கு வந்தனர்.

    அங்கு வனத்துறை கேட் பகுதியில் காத்திருந்தனர். இன்று பங்குனி மாத சனிப்பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் கேரி பேக் போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு போதை வஸ்து பொருட்கள், மது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என தீவிர சோதனை செய்து அனுப்பினர்.

    வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலையேறி சென்றனர். மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர். நாளை மறுநாள் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர். சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவக் குழுவினர் இல்லாத நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த அமாவாசையின்போது சதுரகிரியிலும், வெள்ளிங்கிரி மலையிலும் பக்தர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே மருத்துவக்குழுவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம்
    • சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம்

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிரா மணி பழக்ககாரன்காடு சோழீஸ்வரர் கோவில் உள்ளது.

    பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நடைபெறும்.

    மேலும் சங்கடகர சதுர்த்தி, சஷ்டி கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் பெறும்.

    இந்த நிலையில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் தேவூர் சென்றாயனூர், பெரமாச்சி பாளையம், காணியாளம்பட்டி வெள்ளாள பாளையம், சுண்ணாம்புக்க ரட்டூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர், குள்ளம்பட்டி மயிலம்பட்டி, காணியாளம்பட்டி, எடப்பாடி, கொட்டாயூர், வட்ராம்பா ளையம், பூமணியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

    • அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சக்திமலை முருகன் கோவிலில் பிரதோஷ நாளான நேற்று லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பூஜை மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்திதேவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அருகம்புல் சாற்றி மலர் அலங்காரம் செய்து அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோத்தகிரி கடை வீதி மாரியம்மன் கோவிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கும் பிரதோஷ சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    • சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • சனிப்பிரதோஷ முதல் தொடங்கி அனுஷ்டிக்க வேண்டும்.
    • 6 நாட்கள் சுப்பிரமணியரை நினைத்து அனுஷ்டிப்பது கந்தசஷ்டி விரதம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத முதல் சோமவாரம் தொடங்கி சோமவாரம்தோறும் சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாகும். அதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் ஒரு பொழுது போசனஞ் செய்யக் கடவர். அதுவும் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே பதினைந்து நாழிகையின் பின் போசனஞ் செய்யக் கடவர்.

    இவ்விரதம் வாழ்நாள் முழுவதும், பன்னிரண்டு வருஷகாலமாயினும், மூன்று வருஷ காலமாயினும், ஒரு வருஷ காலமாயினும் அனுட்டித்தல் வேண்டும். பன்னிரெண்டு மாதத்திலும் அனுட்டிக்க இயலாதவர் கார்த்திகை மாதத்தில் மாத்திரமேனும் அனுட்டிக்கக் கடவர். (உபவாசம் -உணவின்றியிருத்தல்.)

    திருவாதிரை விரதம்

    மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்திலே சபாநாயகரைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் செய்தல் வேண்டும். இவ்விரதம் சிதம்பரத்தில் இருந்து அனுட்டிப்பது உத்தமோத்தமம்.

    உமாமகேஸ்வர விரதம்

    கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலே உமாமகேஸ்வர மூர்த்தியைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாம். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்யக் கடவர். இரவிலே பணிகாரம் பழம் உட்கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்

    மாசி மாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்ததி திதியிலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இதில் உபவாசஞ் செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவ பூசை செய்தல் வேண்டும். நான்கு யாமப் ப+சையும் அவ்வக் காலத்தில் செய்வது உத்தமம். ஒரு காலத்தில் சேர்த்துச் செய்வது மத்திமம்.

    பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும், சிவராத்திரி நானள்கு யாமப் ப+சையிலே சூரிய தேவர் முதலிய பரிவாரங்களுக்குஞ் சோமஸ்கந்தமூர்த்தி முதலிய மூர்த்திகளுக்கும் பூசை செய்ய வேண்டுவதில்லை. பரார்த்தத்திலே மகாலிங்க முதலிய மூல மூர்த்திகளுக்கும் ஆன்மார்த்தத்திலே மகாலிங்கத்திற்கும் மாத்திரம் பூசை செய்யக் கடவர். பரார்த்தம், ஆன்மார்த்தம் என்னும் இரண்டினும் விநாயகக் கடவுளுக்கு மாத்திரம் நான்கு யாமமும் பூசை செய்யலாம்.

    சண்டேஸ்வர பூசை நான்கு யாமமும் செய்தல் வேண்டும். சிவ பூசை செய்பவர் நித்திரையின்றி ஸ்ரீபஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் பண்ணல் வேண்டும். இதில் உபவாசம் உத்தமம், நீரேனும் பாலேனும் உண்ணல் மத்திமம், பழம் உண்பது அதமம், தோசை முதலிய பணிகாரம் உண்பது அதமாதமம், சிவராத்திரி தினத்திலே இராத்திரியில் பதினான்கு நாழிகைக்கு மேல் ஒரு முகூர்த்தம் இலிங்கோற்பவ காலமாகும்.

    நான்கு யாமமும் நித்திரையழிக்க இயலாதவர் லிங்கோற்பவ காலம் நீங்கும் வரையுமாயினும் நித்திரையழித்தல் வேண்டும். இக்காலத்திலே சிவதரிசனஞ் செய்வது உத்தமோத்தம புண்ணியம். இச்சிவராத்திரி விரதஞ் சைவசமயிகள் யாவராலும் அவசியம் அனுட்டிக்கத்தக்கது.

    கேதார கவுரி விரதம்

    புரட்டாதி மாதத்திலே சுக்கிலபட்ச அட்டமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியீறாகிய இருபத்தொரு நாளாயினும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் சதுர்தசியீறாகிய ஏழு நாளாயினும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினுங் கேதாரநாதரைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம்.

    இதில் இருபத்தோர் இழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு போசனஞ் செய்து இறுதி நாளாகிய சதுர்த்தசியிலே கும்பஸ்தாபனம் பண்ணிப் பூசை செய்து, உபவசித்தல் வேண்டும். உபவசிக்க இயலாதவர்கள் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பில்லாப் பணிகாரம் உட்கொள்ளக் கடவர்.

    பிரதோஷ விரதம்

    சுக்கில பட்சம் கிருஷ்ணபட்சம் எனும் இரண்டு பட்சத்துக்கும் வருகின்ற திரியோதசி திதியிலே சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே சிவபெருமானைக் குறித்து அனுட்டிக்கும் விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாதங்களுள் ஒன்றிலே சனிப் பிரதோஷ முதலாகத் தொடங்கி அநுட்டித்தல் வேண்டும்.

    பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்நானஞ்செய்து சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு பிரதோஷ காலங்கழிந்த பின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்தில் போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகனமேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டும் செய்யலாகாது.

    பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின் கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்திற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையே சிவ திரிசனத்துக்கு உத்தமகாலம்.

    சுக்கிரவார விரதம்

    சித்திரை மாதத்து சுக்கிலபட்சத்து முதற்சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்ழிதூறும் பார்வதி தேவியாரைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுது பகலிலே போசனஞ் செய்தல் வேண்டும்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாதி மாதத்து சுக்கிலபட்ச பிரதமை முதல் நவமியீறாகிய முதல் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதமாகும். இதிலே முதலெட்டு நாளும் பணிகாரம் பழம் முதலியவை உட்கொண்டு மகாநவமியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    விநாயக சதுர்த்தி

    ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ஷத்து சதுர்த்தியிலே விநாயகக்கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் ஒரு பொழுதில் பகலிலே போசனஞ் செய்து இரவிலே பழமேனும் பலகாரமேனும் உட்கொள்ளல் வேண்டும். இத்தினத்திலே சந்திரனைப் பார்க்கலாகாது.

    விநாயக சஷ்டி விரதம்

    கார்த்திகை மாத்தது கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்கிலபட்ச சஷ்டியீறாகிய இருபத்தொரு நாளும் விநாயகக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் இருபத்தோரிழையாலாகிய காப்பை ஆடவர்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொண்டு முதலிருபது நாளும் ஒவ்வொரு பொழுது போசனஞ் செய்து இறுதி நாளாகிய சஷ்டியில் உபவாசஞ் செய்தல் வேண்டும்.

    கார்த்திகை விரதம்

    கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரம் முதலாகத் தொடங்கி கார்த்திகை நட்சத்திரந்தோறும் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அனுட்டிக்கும் விரதம் ஆகும். இதில் உபவாசம் உத்தமம். அது கூடாதவர் பழம் முதலியன இரவில் உட்கொள்ளக்கடவர். இவ்விரதம் பன்னிரெண்டு வருஷகாலம் அனுட்டித்தல் வேண்டும்.

    கந்த சஷ்டி விரதம்

    ஐப்பசி மாதத்துச் சுக்கிலபட்சத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் சுப்பிரமணியக் கடவுளை குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். இதில் ஆறு நாளும் உபவாசம் செய்வது உத்தமம். அது கூடாதவர் முதலைந்து நாட்களும் ஒவ்வொரு பொழுது உண்டு சஷ்டியில் உபவாசஞ் செய்யக்கடவர். இவ்விரதம் ஆறு வருஷ காலம் அனுட்டித்தல் வேண்டும். மாதந்தோறும் சுக்கிலபட்ஷ சஷ்டியிலே குப்பிரமணியக் கடவுளை வழிபட்டு, மா, பழம், பால், பானகம், மிளகு என்பவைகளுள் இயன்றது ஒன்று உட்கொண்டு வருவது உத்தமம்.

    • பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம்.
    • நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகும்.

    சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையம் அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ் சோழ நல்லூர் என்ற பெயர் மருவி பொழிச்சலூர் கிராமத்தில் தொண்டை வள நாட்டு நவ கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு சுற்றுலா தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம் ஆகும்.

    இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி தவம் புரிய வந்த பொது இங்கு தங்கி இந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜை செய்து இவருக்கு இறைவன் காட்சி அளித்து அருள் தந்ததால் இறைவன் அகத்தீஸ்வரர் ஆகவும் இறைவி ஆனந்தவல்லி ஆகவும் காட்சி அளிக்கின்றனர்.

    சனி பகவான் பாவத்தை போக்கி கொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி சிவ பெருமானை வழிபட்டு தான் பிறர்க்கு செய்த பாவத்தை போக்கி கொண்டதால் இவ்வாலயத்தில் சனி பகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியே எழுந்தருளியுள்ளார்.

    இதனால் இவ்வாலயம் தொண்டை வள நாட்டு நவகிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஸ்தலமாக பொழிசை வட திருநள்ளார் என அழைக்கபடுகிறது.

    மேலும் இதில் ஒரு சிறப்பு உள்ளது. இது ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது . ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு உண்டான, ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டதாகும்.

    பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர் களத்தில் கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் உள்ள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

    இந்த ஆலயத்தில் ஈசன் கிழக்கு புறம் பார்த்து இருப்பதும், அம்மன் தெற்கு புறம் பார்த்து இருப்பதும் வடக்கு புற ராஜ கோபுர வாசல் அமைப்பு கொண்டு கட்ட பெற்றதாகும். பரம்பரையாக வேளாளர் மரபில் இருந்து தனியார் நிர்வாகத்தின் மூலம் நிர்வகிக்கும் ஆலயம் ஆகும்.

    இவ்வாலயத்தில் மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்திரா, மஹா சிவராத்திரி, சனி பெயர்ச்சி, கார்த்திகை தீபம், சங்காபிசேகம், வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய திருகல்யாணம், ராகு கால பூஜை, பிரதோஷம் மிக சிறப்பான விசேஷ தினங்கள் ஆகும்.

    எனவே பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தில் தாங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த உங்கள் பாவங்களை போக்கி கொள்ளவும், ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும், இவ்வாலயத்தில் வந்து முறைப்படி கேட்டு தெரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட எல்லா தோஷங்களுக்கும், பாவங்கள் நீங்கிடவும், வளமுடன் வாழ இங்கு பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகவும், தொண்டை நாட்டு நவகிரக சுற்றுலா ஸ்தலமாகவும் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகின்றது.

    சர்ப்ப தோஷம் விலக

    ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 -ம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது சர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும், புனுகு பூச வேண்டும், நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும், பால் பாயாசம், பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.

    யாருக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

    லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.

    இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

    பிடித்த வாழ்க்கைத் துணை அமைய

    திருமணத்தடை அகல வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும். புனுகு பூசச் செய்து, தாமரை மலரை அணிவிக்க வேண்டும். அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்.

    படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

    மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர திருமணத்தடை நீங்கிவிடும்.

    • பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி.
    • மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும்.

    திருக்காளத்தி என்று இத்தலத்துக்கு பெயர் வந்தது மிகவும் சுவை ததும்பும் வரலாறு ஆகும். இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அருகே சிலந்தி ஒன்று வலையைப் பின்னி இருந்தது. இது சிவலிங்கத்திற்கு ஒரு பந்தலைப் போல காட்சியளித்தது.

    தீப்பட்டு அந்த பந்தலானது அறுந்துப் போகாத வகையில் அவ்வப்போது பந்தலினை அந்த சிலந்தி புதுப்பித்துக் கொண்டே அந்த சிலந்தி செய்து வந்தது.

    ஆனாலும் ஒரு சமயத்தில் சிலந்தி அமைத்திருந்த பந்தல் தீக்கு இரையாகியது. ஆனாலும் சிலந்தி அதிலிருந்து மீண்டது. பிறகு முக்தி பெற்றது.

    அதே காலக்கட்டத்தில் காளன் என்கிற நாகம் ஒன்று இருந்தது. இது யாரையும் கடிப்பது கிடையாது. இது நதமது நஞ்சினை வீணாகாது காத்து அதனை நாகமணியாக திரளச் செய்தது. இந்த நாகமணியை சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்துத் திருப்பணியை மேற்கொண்டு வந்தது.

    அங்கே அந்தி என்கின்ற சிவகணத் தலைவர் ஒருவன் யானையாக அவதாரம் செய்திருந்தான். இந்த யானை பொன் முகலியை கொண்டு வந்து திருக்காளத்தியப்பனுக்கு தம்முடைய துதிக்கையினால் திருமஞ்சனம் செய்து வந்தது. அதோடு பூவையும் சூட்டி மகிழ்ந்துது வந்தது. இது தூய வழிபாட்டு முறையாக காளன் என்கிற பாம்பிற்கு தோன்றவில்லை.

    இதனால் நாகத்திற்கு கோபம் உண்டானது. ஒருநாள் யானையின் துதிக்கையில் நுழைந்து அதற்கு துன்பத்தினை தந்தது. இதனால் கோபம் கொண்ட யானை பாம்பினை சுற்றி தரையிலே அடித்துக் கொன்றது. ஆனால் பாம்பு அதனை தீண்டியபோது இருந்த விஷமானது யானையையும் கொன்று போட்டது. இதையடுத்து அந்த யானை, பாம்பு இரண்டும் முக்தி அடைந்து பெருமை பெற்றன.

    சிலந்தி, யானை, பாம்பு ஆகிய மூன்றும் முக்தி பெற்ற தலம் என்பதினால் இது சீகாளத்தித் தலமானது சீ என்பது சிலந்தியையும் காளன் என்பது பாம்பையும், அந்தி என்பது யானையையும் குறித்து வரும் சொல்லாகும். இத்தலத்தின் பெயர் இவ்வகையிலேயே உருவானது. இதனால் இந்த தலத்தினை வணங்குகின்றவர்கள் வீடுபேற்றினை அடைவார்கள்.

    கோவில் அமைப்பு

    ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றது. இவற்றிலே கோவில் வரலாறு மற்றும் திருப்பணி செய்யப்பட்ட செய்திகளை காணலாம்.

    இங்குள்ள வாயில் மாடத்திலே கணபதியும், முருகனும் காட்சி தருகின்றார்கள். இதனையடுத்து விசுவநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும் காணப்படுகின்றது.

    இதனையடுத்து தேவிமாடம் ஒன்று காணப்படுகின்றது.இங்குள்ள மற்றொரு முக்கியமான சந்நிதி பால கணகம்பாள் சந்நிதியாகும். பாலா என்பது அம்பிகையின் பெயராகும். பூதகணங்களின் தலைவியாக விளங்குபவள் காளி ஆவாள். இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்தே பாலகணகம்பாள் என்று அழைக்கப்பட்டது.

    இவர் வாயிலிலேயே கொலுவீற்றிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இதற்கு காரணம் இவள் ஆவுடையாரிடம் கோபம் கொண்டு இவ்வாறு தவமியற்றுகின்றாள் என்று கூறுவார்கள்.

    இதையடுத்து பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது. மேற்கு பகுதி இக்கோவிலிலே முடிகின்றது. இதனை அடுத்து மண்டபம் காணப்படுகின்றது.

    தெற்குப்புற பெருவழியில் ஒரு மேடைக் கோவில் உள்ளது. இந்த மேடைக் கோவிலில் சிவலிங்கம், கணபதி, பைரவர் உள்ளனர். இவை வலதுபுறமாக அமைந்துள்ளது.

    இடதுபுறமாக சுவற்றிலே துளை போட்டுள்ளனர். அந்த துளையில் நாம் பார்க்கின்றபோது நந்தி பெருமானை பார்க்க முடிகின்றது. இதற்கு பிறகு மேடைக் கோவிலில் நாம் சோமநாதர் மற்றும் மீனாட்சியம்மை சந்நிதிகளை பார்க்கலாம்.

    இதற்கு அடுத்தப்படியாக மயில்வாகனன் காணப்படுகின்றார். பிறகு நாம் பொன்முகலியை அடையக்கூடிய வாயிற்படியை பார்க்கலாம். இங்கு தமிழிலே அர்ச்சனை நடைபெறுகின்றது.

    ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த கோவிலுக்கு பல அறப்பணிகளைச் செய்துள்ளார். இவருடைய சிலையானது இங்கே வைக்கப்பட்டுள்ளது.

    இவருடைய இச்சந்நிதியை அடுத்து நாம் காண்பது சூரியநாராயண சுவாமி கோவில் ஆகும். இங்கு தலவிருட்சம் உள்ள பகுதியாக இது விளங்குகின்றது.

    இங்கு பாம்புப பிரதிஷ்டைகள் அதிகம் உள்ளன. இங்கு மகிழமரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கல்லால மரமும், வில்வ மரமும் ஆகும்.

    இதனையடுத்து நாம் பார்த்தால் பொன் முகலியாறு ஓடுவதைக் காணலாம். இது மற்றொரு பாலாறு எனக் கூறப்படுகின்றது. இந்த ஆற்றங்கரையில்தான் கண்ணப்பர் நடந்து வந்து இறைவனை வணங்கியதாக கூறுகின்றார்கள்.

    பொன்முகலி ஆற்றங்கரைக்கு நாம் வந்து விட்டால் கண்ணப்பரை வணங்காமல் போகக்கூடாது. இந்த பொன்முகலி ஆறே புனிதக் கங்கையாக ஆகியது. இங்கு பல ஈஸ்வர அருளாளர்கள் நீராடி மகிழ்ந்து பக்திப் பரவசத்திலே ஆழ்நடதுள்ளார்கள் எனக் கூறுவது பொருந்தும்.

    இந்த ஆற்று நீரினை எடுத்துத் தலையிலே தெளித்துக் கொள்வதால் நாம் புண்ணியம் அடைந்தவர்கள் ஆகின்றோம். ஈஸ்வரனின் பேரருளைப் பெற்றவர்கள் ஆகின்றோம்.

    இங்குள்ள மேற்கு வாயிலில் நாம் 101 லிங்கங்கள் இருப்பதினைக் காண முடியும். லிங்கத்தினை வழிபட்டு 108 அர்ச்சனைகளை செய்ய முடியாதவர்கள் இங்கு வந்து இந்த லிங்கங்களை வணங்கினால் அந்தப் பலனை நிச்சயமாக அடைந்தவர்கள் ஆகின்றனர்.

    இந்தக் கோவிலின் கிழக்குப் பகுதியிலே கொடிமரமும் பலிபீட லிங்கமும் உள்ளன. இங்கு விளக்குத் தூண் ஒன்று இருக்கின்றது. இது கொடி மரத்தினையும் விட மிகவும் உயரமாகக் காணப்படுகின்றது.

    இங்கு ஒரு மேடை உள்ளது. எட்டுத் திசை யானைகள், பைரவர்கள், திக்குப் பாலகர்கள் ஆகியோரை இந்த மேடையிலே காணலாம். இந்த எட்டுத் திசைகளிலும் நந்தித் தேவர் இருப்பார். இவரை வணங்கிய பின்னரே நாம் காளத்தியப்பரை வணங்க வேண்டும்.

    நந்தி பெருமானை திசைக் காவலர்களே சுமக்கின்றார்கள். எனவே இவரோடு நாம் இவர்களையும் சேர்த்து வணங்குதல் வேண்டும். இந்தத் திருத்தலமானது யோகத்திற்குரிய சிறப்புத் தலமாக பேசப்படுகின்றது. இங்கு ஆங்காங்கே பல மாடங்கள் இருக்கின்றன. இவ்விடங்களில் பெரிய யானைலிங்கங்களை காணலாம்.

    கருவறையில் உள்ள சிவலிங்கமே காளத்திப்பர் எனப்படுகின்றர். இந்தக் கருவறையின் வாயிலிலே நாம் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். இந்தக் கோவிலுக்கு காளிதேவியின் அருள் அதிகமாகவே உள்ளது. இவை பழைமை, சிறப்பு, தலைமை, சித்தி முதலிய பெருமையை பெற்று விளக்குகின்றன.

    இங்கு மேலும் மணிகண்டேசர் கோவில் தனியாக உள்ளது. இங்கு இறந்தவர்களை எழுப்பி அவர்கள் காதுகளிலே மந்திரம் ஓதி அனுப்புகின்றார் இவர். இங்குள்ள பொன் முகலியாறு மணிக் கங்கை யெனவும், மணிகர்ணிகை எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் உட்கோவிலான காசி விஸ்வநாதர் சந்நிதி பூட்டியே உள்ளது.

    கண்ணப்பர் ஈஸ்வரருக்குக் கண்களைத் தந்த இடம் இந்த மலையின் உச்சியிலே உள்ளது. கண்ணப்பர் ஆலயத்தினை யடுத்து நாம் சித்தீஸ்வரம் காணுகின்றோம்.இதனையடுத்து ஒற்றை மண்டபக் கோவில் காணப்படுகின்றது.

    இங்குள்ள யோக மூர்த்தம் அய்யப்பனின் உருவத்தினை போன்று விளங்குகின்றது. மேலும் தட்சிணாமூர்த்தி செங்கல்வராயர் சந்நிதிகள் உள்ளன.

    இங்கு செப்பு நந்தி, சலவைக் கல் நந்தி ஆகியன உள்ளன.இங்குள்ள நந்திகள் முகம் பன்றியைப் போல காணப்படுகின்றது. இது பல்லவர்களின் சின்னமாகிய பன்றியை உணர்த்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. இங்கு பஞ்சமுகமான லிங்கம் உள்ளது.

    இங்கு நமது மனத்தினை கவர்வது காளத்தியார் மூர்த்தம் ஆகும். இங்குள்ள பாணம் மிகவும் முக்கியமானது ஆகும். இது உலோகத்தினால் ஆன கலசத்தினைக் கொண்டு விளங்குகின்றது.

    இங்கு கணபதி, பெருமாள், சப்தமுனிவர், சனிபகவான் போன்றோர் ஸ்தாபித்த பல லிங்கங்கள் உள்ளன. கனகதுர்க்க, கார்த்தியாயினி, உடுப்பி பாலசுப்பிரமணியம் ஆலயங்களும் உள்ளன.

    இக்கோவில் ஆதிசங்கரர் விஜயம் செய்த தலமாகும். இங்கு காணப்படுகின்ற சண்டிகேசுவரர் சந்நிதி மிகவும் வெளிச்சமாகக் காணப்படுகின்றது.

    தேவாரம், திருவாசகம், கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், திருவருட்பா, திருப்புகழ், ஞானப்பூங்கோதையார் துதி போன்ற பாடல்கள் பெற்றது இத்திருத்தலம்.

    • திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல.
    • சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

    கடல் நஞ்சினை ஈசன் வாங்கி உண்ட திருப்பதி என்று காவிரிக்கரையின் தென்கரைத் தலமான திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில், ஆலந்துறை) குறிப்பிடப்படுகிறது.

    திருநீலக்குடி என்னும் தேவாரத் தலத்திறைவரும், அப்பருக்குக் கட்டமுதளித்த திருப்பைஞ்ஞீலி தலத்திறைவரும் `திருநீலகண்டேஸ்வரர்' என வழங்கப் பெறுகின்றனர்.

    அதுபோல இலுப்பை பட்டு என வழங்கும் திருப்பழ மண்ணிப் படிக்கரையில் பஞ்சபாண்டவருள் முதல்வரான தருமனும், துணைவி திரவுபதியும் போற்றி வணங்கிய வடிவம் நீலகண்டேஸ்வரர் என்று கூறப்பெறுகின்றது.

    திரு அம்பர் மாகாளம் என்ற ஊரில் உறை இறைவந் `காள கண்டேஸ்வரர்' எனப் பெறுகின்றார்.

    பள்ளிகொண்ட பரமர்

    திருமாலை தவிர வேறு தெய்வ வடிவங்களைப் படைப்பது மரபல்ல. ஆனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளி என்னும் ஊரில் சிவன் சயனக்கோல கதை வடிவச் சிற்பம் காணப்பெறுகின்றது.

    தாயார் மங்களேஸ்வரியின் மடியின் மேல் தலை வைத்து வானோக்கியவாறு சிவன், விஷம் அருந்தியபின் இருந்த சயன வடிவ தோற்றம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தாரமங்கலதக் கோயில்

    பிரதோஷ நாட்களில் மாலை நேரத்தில் சூரிய பூஜையும் நடைபெறும் அற்புதக் திருக்கோயில் தாரமங்கலம் என்னும் ஊரில் அமையப் பெற்றுள்ளது. மேற்கு பார்த்த இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூன்று நந்தியின் கொம்புகள் வழியே சூரிய ஒளியானது கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழும் வண்ணம் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பிரதோஷ பூஜையுடன் சூரிய பூஜையினையும் ஒருங்கே தரிசித்துப் பேறு பெற விரும்புவோர் செல்ல வேண்டிய ஊர் தாரமங்கல்ம் ஆகும்.

    பிற கோயில்கள்

    பிரதோஷ நாயகரான திருநீலகண்டரைப் போற்றும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள காரமடையில் கலைச்சிறப்பு வாய்ந்த நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான பத்மநாபபுரத்தில் `நீலகண்டசுவாமி கோயில்' அமையப் பெற்றுள்ளது.

    திருநீலகண்டப் பதிகம்

    பிரதோஷ காலத்தில் படிக்க வேண்டிய செய்வினை

    கோளாறுகளை நீக்கும் திருஞான சம்பந்தரின் திருநீலகண்டப் பதிகம்

    அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லுமஃதறிவீர்

    உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமென்றே

    கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடி யோம்

    செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    காவினையிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

    ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென றிருபொழுதும்

    பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாமடி யோம்

    தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    மூலைத்தட மூழ்கிய போகங் களுமற்றெவையு மெல்லாம்

    விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

    இலைத்தலைத் சூலமுந் தண்டு முழவு மிவை யுடையீர்

    சிலைத்தெமைத் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

    விண்ணுலக காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

    புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படம் புண்ணியரே

    கண்ணிம யாதன மூன்றுடை யீரங் கழலடைந்தோம்

    திண்ணிட தீவினை தீண்டப்பெ றாதிருநீலக்கண்டம்

    மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்

    பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

    பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

    சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

    உருகி மலர்க்கொடு வந்துமை யேந்துதுநாமடியோம்

    செருவி லரக்கனைச் சீரிலடர்த்தருள் செய்தவரே

    திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாது செய்து

    தோற்ற முடைய அடியு முடியும் தொடர்வரியூர்

    தோற்றினுந் தோற்றந் தொழுது வணங்குதும் நாமடியோம்

    சீற்றம தாம்பினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்

    சாக்கியப் பட்டுஞ்சமணுரு வாகி யுடையழிந்தும்

    பாக்கியமின்றி யிருதலைப் போகமும் பற்றும் விட்டார்

    பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

    தீக்குழித் தீவினை தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

    பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வம் கழலடைவான்

    இறந்த பிறவியுண்டாகி லிமையவர் கோனடிக்கண்

    திறம்பயின் ஞானசம் பந்தன் செந்தமிழ் பத்தும்வல்லார்

    நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

    • உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
    • நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.

    * விடியற்காலை எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து நெற்றியில் சைவச் சின்னங்களை தரித்துக் கொள்ள வேண்டும்.

    * முழு உபாவாசம் இருந்து, படுக்கையில் படுக்காமல், சிவபுராணம், சிவநாமாவளிகளை படித்துக்கொண்டு சிவசிந்தனையோடு இருக்க வேண்டும்.

    * மாலையில் சூரியன் அஸ்தமானமாக நான்கு நாழிகைக்கு முன்பு மீண்டும் குளித்து தூய ஆடையுடுத்தி நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.

    * இல்லத்தில் சிவலிங்கமும், நந்தியும் கற்படிமமாகவோ, விக்ரகமாகவோ இருப்பின் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, வில்வ தளத்தால் அர்ச்சனை, ஆராதனை செய்ய வேண்டும்.

    * மாலை பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் நடைபெறும் மஹன்யாச ருத்ர ஜபத்துடன் கூடிய அபிஷேகத்தை கண் குளிரக் காண வேண்டும்.

    * நந்திதேவருக்கு அருகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.

    * மாவினால் அகல் செய்து, தூய்மையன பசு நெய்விட்டு விளக்கெரிக்க வேண்டும்.

    கார அரிசியில் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு நிவேதனமாக வைக்க வேண்டும்.

    * தீபாராதனை வேளையில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானைக் கண்டு `ஹர ஹர' என்று கூறி வணங்க வேண்டும்.

    * பிரதோஷ நாளில் ஆலயத்தை வலம் வரும் போது அப்ரதட்சிணமாக வரவேண்டும்.

    * பின்னர் சிவபெருமான் உமாதேவியாருடன் ரிஷபாரூடராய், பிரதோஷ நாயகராய், பிரதோஷ காலத்தில் (மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை) ஆலயத்தை வலம் வரும் பொழுது கண்டு தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.

    * சிவ ஆலயங்களில் வேத பாராயணத்துடன் முதலிலும், திருமுறை பாராயணத்துடன் இரண்டாவதும், நாதஸ்வர மங்கல இசையுடன் மூன்றாவதுமான மூன்று முறை ஆலய வலம் நடைபெறும். இரண்டாவது வலம் வரும்போது இறைவனையும், இறைவியையும் ஈசான திக்கில் இருந்தளருச் செய்வார்கள். அப்போது காண்பிக்கப்படும் கற்பூர ஆரத்தியைக் கண்டு தரிசிப்போர்க்கு மிகுந்த பலன் உண்டு என்று கூறப்படுகிறது.

    * சிவ தரிசனம் முடிந்ததும் இருவருக்காவது அன்னமிட்டு, அதன் பிறகு உண்பதே சிறப்பு என்று கூறப்படுகிறது.

    * நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்தபின் அருகம்புல், பூ சாத்திய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்து கொள்வது நமக்கு நன்மை தரும்.

    * உற்சவருக்கு அபிஷேக நேரத்தில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவைகளைக் கொடுக்கலாம். பூஜை நடக்கும் போதும், `சொர்ண அபிஷேகம்' செய்யும்போதும் நம்மிடம் உள்ள தங்க நகைகளைக் கொடுத்து உற்சவருக்கு சாத்தச் சொல்லி தீபாராதனை முடிந்தபின் அந்த நகைகளை வாங்கி அணிவது மிகவும் நல்லது.

    * நந்தீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்யும் போது பச்சரிசியுடன் வெல்லம் கலந்து நந்தி தேவருக்கு முன் வைத்து நைவேத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

    * நந்தி தேவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு மூலவருக்கு தீபாராதனை நடைபெறும். அப்போது நந்திதேவரின் பின்பக்கத்திலிருந்து இரண்டு கொம்புகளின் இடையில் தீபாரதனையைப் பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும்.

    * மூலவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு நந்தீஸ்வரர் காதில் யாரும் கேட்காதபடி தன்னுடைய குறைகளையும், வேண்டுதலையும் அவரிடத்தில் கூற வேண்டும். இப்படி நந்தி காதில் 12 பிரதோஷ பூஜை அன்று கூறியதையே கூறி வந்தால் 13-வது பிரதோஷ பூஜை அன்று செல்லும் போது அன்று செல்லும் போது கூறிய விஷயம் நிறைவேறிவிடும்.

    நந்தியின் காதில் வேண்டாதவற்றைக் கூறுதல் கொடிய பாவச் செயல் ஆகும். பக்தர்கள் அவ்வாறு செய்வதனைத் தவிர்க்கவும்.

    * நந்தி பகவானைத் தொடாமல் தூரத்தில் நின்று அடுத்தவர் காதில் விழாமல் கூற வேண்டும்.

    * உற்சவருக்கு நைவேத்தியம், தீபாராதனை இவைகள் முடிந்த பின் தான் நம்மிடமுள்ள பால், வெல்லம் கலந்த அரிசி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றைத் தர ரேண்டும். இப்படித் தருவதாலும், அல்லது மற்றவர்கள் கொடுப்பதை வாங்கி உண்பதினாலும் நம்முடைய தோஷம், துன்பம், பாவம் நீங்க நன்மை பெறலாம்.

    * உற்சவர் உள்வீதி உலா வரும்போது ஒவ்வொரு திசைகளிலும் தீபாராதனை செய்யும்போதும் இறைவனை வணங்கி அவருடைய திருநாமங்களையும், சிவபுராண பாடல்களையும் சொல்லிக் கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ வரவேண்டும். இதனால் தோஷம், பாபம், கஷ்டம், நீங்கி நன்மை பெறுவதுடன் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் ஏற்படும்.

    * உற்சவர் உள்வீதி உலா முடிந்து நைவேத்தியம் செய்த பின்பு கோவிலின் உள்சென்று விடுவார். அப்போது நைவேத்தியம் செய்த சுண்டல், பொங்கல் போன்றவற்றைக் கொடுக்கவும் அல்லது கொடுப்பதை வாங்கி சாப்பிடுவதும் நல்லது. அது மட்டுமல்லாமல் உற்சவருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

    * பிரதோஷ நாளன்று கூடியவரை உப வாசம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால், பழம், மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷ பலன் முழுமையாகக்கிட்டும்.

    • வழிபாடு முடிந்தபின் அன்னதானம் செய்ய வேண்டும்.
    • வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.

    பிரதோஷ வழிபாட்டின் பயனாக வறுமை, பயம், மரண வேதனை முதலான பிரச்சினைகள் நீங்கும். அதுமட்டுமின்றி...

    1. இன்பம் கிடைக்கும்.

    2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.

    3. கடன் நீங்கித் தனம் நிறையப் பெறுவர்.

    4. வறுமை ஒழியும்.

    5. நோய் நீங்கி நலம் பெறுவர்.

    6. அறியாமை நீங்கும்.

    7. பாவம் தொலைந்து புண்ணியம் பெறுவார்கள்.

    8. தடைகள் நீங்கித் திருமணம் நடைபெறும்.

    9. சகல தோஷங்களும் நீங்கிச் சுகம் பெறுவர்.

    10. அனைத்துக்கும் மேலாக முக்தி அடையவர்.

    நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்கு

    புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்

    குலமுறை தழைத்தே ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர்

    சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே!

    பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாதவை

    ஜீரணமாகாமல் விஷமாக மாறுவதால் சாப்பிடுதலும் யோகத்தை பேணுவதால் உறக்கமும், நல்லொழுக்கம் இயலாததால் பிரயாணமும், உடலை நிலைப்படுத்த முடியாததால் எண்ணைக் குளியலும், சிவனை, விஷ்ணு வணங்கும் நேரமாதலால் விஷ்ணுவைக் கண்டு வணங்குதலும், ஆன்மஹானம் வேண்டுவதால் பஞ்சாட்சரம் அல்லாத மற்ற விருப்பம் வேண்டும் (காம்ய) ஜபம் செய்தலும், அகத்தூய்மை வேண்டுவதால் தவம் செய்தலும், ஒரு நிலைப்பட்ட மனம் தேவையாதலால் வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.

    பிரதோஷ நோன்பு

    பிரதோஷ நோன்பு இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்ட நஷ்டங்கள் உடனே தீரும். அன்று அதிகாலையில் குளித்து, தூய உடை அணிந்து, நோன்பு தொடங்க வேண்டும். பகல் முழுக்க எதுவும் சாப்பிடக் கூடாது. பசி தாங்காதவர்கள் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    மாலையில் பிரதோஷம் தொடங்கிய பின்பு சிவபூஜை பண்ண வேண்டும். வெல்லப் பொங்கல் படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலையால் அர்ச்சனை பண்ண வேண்டும்.

    வழிபாடு முடிந்தபின், இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பின்தான் சாப்பிட வேண்டும். அன்னதானம் செய்யாவிட்டால் நோன்பு இருந்தும் பலன் இல்லை. சிவனே பிச்சாண்டிதானே! மாலையில் கோவிலுக்கு போய் வழிபாடு செய்வதும் நல்லது. அப்போது வெல்லப்பொங்கல் செய்து எடுத்து போக வேண்டும். முடியாவிட்டால் கார அரிசியில் வெல்லம் கலந்து நந்திக்கு படைக்க வேண்டும். அன்னதானம் செய்வது முக்கியம்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக நடைபெறும் பிரதோஷ வழிபாடு அன்று வரும் பக்தர்களின் கூட்டத்தை விட நேற்று அதிகமாக இருந்தது. நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டை பூங்காவில் அமர்ந்தும் பொழுது போக்கினர். ஏராளமான பக்தர்கள் வருகையால் கோவில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×