search icon
என் மலர்tooltip icon

    சிரியா

    • சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது
    • கடந்த மாதம் 28-ந்தேதி சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது

    இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயம் அடைந்ததாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.

    கடற்கரை பிராந்தியமான லடாகியாவில், மத்திய தரைக்கடலில் பறந்து கொண்டிருந்த விமானங்கள், குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயம் அடைந்தனர் என்றார்.

    அதன்பின் ஹமா பிராந்தியத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகம், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய போர் கண்காணிப்பாளர் ஆகியவை 2-வது வான் தாக்குதல், அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்து நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி வடக்கு சிரியாவின் அலெப்போவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், விமான ஓடுதளம் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடநத் சில வருடமாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா நாட்டின் படைகள் அல்லது ஈரான் தொடர்புடைய குழுக்கள் மீது நடத்தப்படுகிறது. சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை தடுத்து நிறுவத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.

    • ஈரானும், லெபனானும் சிரியாவில் கிளர்ச்சிகாரர்களுக்கு ஆயுத உதவிகள் செய்கின்றன
    • அலெப்போவில் விமான சேவைகள் முடங்கி உள்ளது

    மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல்.

    பெரும்பாலும் யூதர்கள் வாழும் இஸ்ரேல் நாட்டை, தங்களுடையது என கூறி பல வருடங்களாக பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு சில அரேபிய நாடுகளும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளும் ஆதரவு தருவது தொடர்கிறது.

    தனது நாட்டின் மீது ராணுவ மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் பாலஸ்தீனமோ அதன் ஆதரவு நாடுகளோ ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், அண்டை நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் கிடைப்பதை தடுக்கும் விதமாகவும் இஸ்ரேல், அண்டை நாடுகளின் மீது சில முன்னெச்சரிக்கை தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துவது வழக்கம்.

    பாலஸ்தீனத்திற்கு உதவும் வகையில் ஈரானின் ஆதரவுடன் அதன் தலைநகர் டெஹ்ரானிலிருந்தும், லெபனான் நாட்டிலிருந்து அந்நாட்டில் இயங்கும் ஹெஸ்பொல்லா அமைப்பினரிடமிருந்தும் சிரியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் அனுப்பப்படுவது அடிக்கடி நடைபெறும். இதனை தடுக்கும் விதமாக இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர விமான நிலையங்கள் மீதும், அந்நாட்டு துறைமுகங்கள் மீதும் சமீபகாலங்களில் பலமுறை தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது.

    இன்று காலை 04:30 மணியளவில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகர விமான நிலையத்தின் மீது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா அறிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் விமான நிலையத்தின் ஓடுதளம் சேதமடைந்தது. இதனால் விமான சேவைகளும் அங்கு பெரிதும் தடைபட்டிருக்கிறது.

    ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இவ்வருடம் ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரேல் இந்த விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்ததும் அப்போதும் தற்காலிகமாக விமான சேவைகள் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    இத்தாக்குதலுக்காக சிரியா இஸ்ரேலை குற்றம் சாட்டினாலும், இஸ்ரேல் இது குறித்து எதுவும் கருத்து கூறவில்லை.

    • குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதுகிறது.
    • சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறி வைத்து துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள்.

    அங்காரா:

    சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு அவ்வப்போது துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதுகிறது. துருக்கிக்கு இவர்கள் பெரும் தலைவலியாக இருந்து வருகிறார்கள். இதனால் இவர்களை ஒடுக்க துருக்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறி வைத்து துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    கிளர்ச்சியாளர்கள் வடக்கு சிரியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இதை முறியடிக்கும் வகையில் அவர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் துருக்கி பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    • சிரியாவின் கிழக்கு பகுதியில் ராணுவ வீரர்களுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது
    • 2019லிருந்து பெருமளவிற்கு சிரியாவில் அமைதி திரும்பி விட்டது

    மேற்கு ஆசியாவில் உள்ள நாடு சிரியா.

    சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவி வந்த ஒரு ஸ்திரமற்ற அரசியலினால் 2011-லிருந்து ஐ.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. சிரியாவில் இந்த அமைப்பினருக்கெதிராக அமெரிக்கா களமிறங்கியதை தொடர்ந்து 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் இந்த அமைப்பு பெருமளவு அழிக்கப்பட்டது.

    2019-ல் அந்த அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இதன் ஆதிக்கம் சிரியாவில் முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

    ஆனாலும் சிறிய அளவில் அதன் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் சிரியா நாட்டு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து சிரியாவின் கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து சிரியா- ஈராக் எல்லைக்கருகே உள்ள டெய்ர் எல்-ஜவுர் (Deir el-Zour) பிராந்தியத்திலுள்ள கிழக்கு சிரியாவின் மயதீன் (Mayadeen) நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது இப்பேருந்தை வழிமறித்து திடீரென சூழ்ந்து கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பல் அதன் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும், சிரியாவில் இயங்கி வரும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த மனித உரிமைகளுக்கான அமைப்பு தெரிவிக்கிறது.

    சிரியாவின் ராணுவமோ, அரசாங்கமோ இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • குடியிருப்புகள் மீதும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.
    • தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு மேலும் பல பயங்கரவாத அமைப்புகளும் செயல் பட்டு வருகின்றது.

    இந்த குழுக்களை சேர்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்க சிரியா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியாவில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. குடியிருப்புகள் மீதும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.

    இதில் தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி பொதுமக்களும் உயிர் இழந்து வருகின்றனர்.

    இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் படையினர் வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக ஏவுகணை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலில் சிரியா படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இஸ்ரேல் படையின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சிரியா தெரிவித்துள்ளது.

    • சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதேபோல், அமெரிக்காவும், இஸ்ரேலும் சிரியாவில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அப்போது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில் கார் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடிகுண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய விமானங்கள் இடைமறிக்கின்றன
    • இரண்டு வாரங்களுக்கு முன் ஆளில்லா விமானத்தை இடைமறித்து அச்சுறுத்தியது

    சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய போர் விமானம் பறந்த நிலையில், தற்போது MC-12 என்ற இரண்டு என்ஜின் கொண்ட போர் விமானத்தின் அருகில் பறந்து அச்சுறுத்தியுள்ளது. இந்த விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அமெரிக்க போர் விமானத்தில் 4 பேர் இருந்துள்ளனர். ரஷிய போர் விமானம் நெருங்கி பறந்தபோது, திடீரென அமெரிக்க விமானம் குலுங்கியதாக தகவல் உள்ளாகியுள்ளது. இருந்தாலும், விமானம் விபத்தில் இருந்து தப்பியது.

    இந்த விவரங்களை மட்டுமே தெரிவித்த அமெரிக்கா, மேற்கொண்டு இதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஈரான், சிரியா அரசுகளுடன் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை வளர்த்துக் கொண்டு வரும் ரஷியா, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சிரியா எல்லையில் தனது அதிகாரித்தை அதிகரித்துள்ளது.

    ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஆளில்லா மற்றும் போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தபோது, ரஷியா அரசுக்கும் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை.

    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இவர்களை அழிக்க சிரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளிநாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தலைவர்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

    இதையடுத்து சிரியாவில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் உசாமா அல்-முல்காஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இவரை கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அல்-முல்காஜிரை தேடி அமெரிக்காவின் 3 எம்.கியூ.-9 ஆளில்லா விமானம் சிரியா வானில் வட்டமிட்டது. அப்போது வடமேற்கு சிரியாவில் உள்ள அலெப்பா பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அவர் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை.

    • ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இட்லிப்:

    சிரியாவில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷியா இருந்து வருகிறது.

    இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் பகுதியில் இயங்கிவரும் காய்கறி சந்தையில் ரஷிய படையினர் அதிரடி வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். ஜெட் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    இந்த திடீர் தாக்குதலில் காய்கறி சந்தைக்கு வந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க குவிந்து இருந்தனர். இவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டமாஸ்கஸ் தெரிவித்து உள்ளது. ஆனால் இது குறித்து சிரியாவோ, ரஷியாவோ எந்த கருத்தையும் கூறவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு சிரியாவில் நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    அந்த நகரை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டன. இதுகுறித்து சிரியா ராணுவ வட்டாரம் கூறும்போது, இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம், சிரியா தலைநகர் டமாஸ்கர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கோவன் குன்றுகளில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் சிலவற்றை சிரியாவின் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு சிரியா வீரர் காயம் அடைந்தார் என்று தெரிவித்து உள்ளது.

    • அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.
    • ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவராக அப்த்-அல் ஹாடி மக்மூத் அல்-ஹாஜி அலி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்குள்ள அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் சென்று தாக்குதல் நடத்தினர்.

    இதில் ஐ.எஸ். தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியாவில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடுவதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார் என்று அமெரிக்க மத்திய படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளை ஐஎஸ் அமைப்பினர் கடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐஎஸ் தலைவருடன் அந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ×