search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aleppo Airport"

    • ஈரானும், லெபனானும் சிரியாவில் கிளர்ச்சிகாரர்களுக்கு ஆயுத உதவிகள் செய்கின்றன
    • அலெப்போவில் விமான சேவைகள் முடங்கி உள்ளது

    மத்திய கிழக்கு ஆசியாவில் மத்திய தரைக்கடல் பகுதியின் அருகே உள்ள நாடு இஸ்ரேல்.

    பெரும்பாலும் யூதர்கள் வாழும் இஸ்ரேல் நாட்டை, தங்களுடையது என கூறி பல வருடங்களாக பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு சில அரேபிய நாடுகளும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உட்பட சில மேற்கத்திய நாடுகளும் ஆதரவு தருவது தொடர்கிறது.

    தனது நாட்டின் மீது ராணுவ மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் பாலஸ்தீனமோ அதன் ஆதரவு நாடுகளோ ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், அண்டை நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் கிடைப்பதை தடுக்கும் விதமாகவும் இஸ்ரேல், அண்டை நாடுகளின் மீது சில முன்னெச்சரிக்கை தாக்குதல் நடவடிக்கைகளை நடத்துவது வழக்கம்.

    பாலஸ்தீனத்திற்கு உதவும் வகையில் ஈரானின் ஆதரவுடன் அதன் தலைநகர் டெஹ்ரானிலிருந்தும், லெபனான் நாட்டிலிருந்து அந்நாட்டில் இயங்கும் ஹெஸ்பொல்லா அமைப்பினரிடமிருந்தும் சிரியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் அனுப்பப்படுவது அடிக்கடி நடைபெறும். இதனை தடுக்கும் விதமாக இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர விமான நிலையங்கள் மீதும், அந்நாட்டு துறைமுகங்கள் மீதும் சமீபகாலங்களில் பலமுறை தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது.

    இன்று காலை 04:30 மணியளவில் வடக்கு சிரியாவின் அலெப்போ நகர விமான நிலையத்தின் மீது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா அறிவித்திருக்கிறது. இத்தாக்குதலில் விமான நிலையத்தின் ஓடுதளம் சேதமடைந்தது. இதனால் விமான சேவைகளும் அங்கு பெரிதும் தடைபட்டிருக்கிறது.

    ஆனால், உயிரிழப்பு ஏதும் இல்லை.

    இவ்வருடம் ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரேல் இந்த விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்ததும் அப்போதும் தற்காலிகமாக விமான சேவைகள் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    இத்தாக்குதலுக்காக சிரியா இஸ்ரேலை குற்றம் சாட்டினாலும், இஸ்ரேல் இது குறித்து எதுவும் கருத்து கூறவில்லை.

    • நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் அலெப்போ விமான நிலையம் முக்கிய வழித்தடமாக உள்ளது.
    • இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் காரணமாக அலெப்போ விமான நிலையத்தில், நிவாரண பொருட்களை ஏற்றி வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    டமாஸ்கஸ்:

    இஸ்ரேல்-சிரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது.

    இஸ்ரேலிய போர் விமானங்கள், சிரியாவில் அலெப்போ விமான நிலையத்தில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் விமான நிலையத்தின் சில பகுதிகள் கடும் சேதமடைந்தன.

    இந்த தாக்குதலில் 3 பேர் பலியானதாக போர் கண்காணிப்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் கடந்த மாதம் 6-ந் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் அலெப்போ விமான நிலையம் முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேலிய வான்வழி தாக்குதல் காரணமாக அலெப்போ விமான நிலையத்தில், நிவாரண பொருட்களை ஏற்றி வரும் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிரியா பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, அலெப்போ சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து லதாகியாவின் மேற்கு மத்திய தரைக்கடலில் இருந்து இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன. அங்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் விமான நிலையம் மூடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களுடன் கடந்த மாதத்தில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் அலெப்போவில் தரையிறங்கின. தற்போதைய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்யும் வரை அலெப்போ விமான நிலையத்தில் நிவாரண விமானங்கள் தரையிறங்குவது சாத்தியமில்லை என்றும் உதவி பொருட்களுடன் வரும் விமானங்கள் டமாஸ்கஸ் மற்றும் லதாகியா விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×