என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை
    • எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்ச மாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

    இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது.

    இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.

    இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன.

    இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    • ரைட் படத்தின் மூலம் யுவினா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
    • ரைட் படம் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் 'ரைட்' என்ற படம் உருவாகி இருக்கிறது. 'வீரம்' படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    இப்படம் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.

    விழாவில் பேசிய யுவினா, "அஜித்துடன் நான் இணைந்து நடித்ததால் மட்டுமே எனக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. ரஜினியுடன் மீனா ஜோடியாக நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் நான் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்" என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரம் படத்தில் நடித்த குழந்தையா இவங்க என யுவினாவின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • அந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்தார்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. பல வீடுகள், குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியதால், பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், தெற்கு வங்காள மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை வரை பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

    பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் விமான நிலையை விமான நிறுவனத்தின் செயலி அல்லது வலைதளம் மூலம் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொடங்கியது.
    • இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.

    லக்னோ:

    இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.

    அவர் அணியை விட்டு வெளியேறி மும்பை திரும்பினார். இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • கடந்த 9 மாதங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.21 ஆயிரம் அதிகரித்தது.
    • தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும்

    சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 430-ம், சவரன் ரூ.83 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் 2 ஆவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.85,120 ஆக விற்பனையாகிறது.

    காலையில் ஏற்கனவே ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1120 அதிகரித்துள்ளது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    19-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,840

    18-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.81,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    19-09-2025- ஒரு கிராம் ரூ.143

    18-09-2025- ஒரு கிராம் ரூ.141

    • மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது.
    • இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் நிறுவனத்தின் முதல் ஓபன் இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS) நத்திங் இயர் (ஓபன்) அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்வ மாடல் காப்புரிமை நிலுவையில் உள்ள டயாபிராம், டைட்டானியம் கோட்டிங், அல்ட்ரா-லைட் டிரைவர் மற்றும் ஸ்டெப்டு டிசைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தனித்துவ வடிவம் ஆடியோ சிதைவை குறைத்து, லோ ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்துகிறது. இதன் இயர் ஹூக் நிக்கல்-டைட்டானியம் வயர் கொண்டுள்ளது. இது நெகிழ்வானதாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது.

    ஆட்டோமேடிக் பேஸ் என்ஹான்ஸ் அல்காரிதம் குறைந்த ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்தி சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஹெட்செட் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான அழைப்புகளை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது. இது 28 மில்லியனுக்கும் அதிகமான இரைச்சல் சூழ்நிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது 2 மணிநேரயிலான பிளேபேக்கை உறுதி செய்கிறது.

    நத்திங் இயர் (ஓபன்) வைட் நிறத்தில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 9,999 ஆகும். இது இப்போது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

    • கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
    • ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின.

    மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.

    'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    இதனையடுத்து ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின. பின்னர், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கையைவிட்டு சென்றுள்ளது.

    இந்த வரிசையில் தற்போது கைதி 2 படமும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

    அதே சமயம் கைதி 2 படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட படம்.
    • இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் 'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

    'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிகமாக கொடுத்தது. இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பீம்ஜி அண்ணா மற்றும் இயக்குநர், என்னை நம்பியவர்கள், என் சக நடிகர்கள் மிகவும் அன்பானவர்கள்.

    தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும். மிக முக்கியமாக, எனது பயணத்தை ஆதரித்த எனது அன்பான பார்வையாளர்களுக்கு... இது உங்கள் அனைவருக்கும் நன்றி.. என கூறியுள்ளார்.

    உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட 'ப்ளூ ஸ்டார்' படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 



    • இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி அளவில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் நிலவி, பின்பு வலுகுறையக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும்.

    இதனிடையே தமிழகத்தில் இன்று முதல் 25-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதற்கிடையே இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் 24- ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரங்களில் ஒன்று.

    குறிப்பாக பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உதவியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நாடியுள்ளார்.

    இதுகுறித்து அசிம் பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விப்ரோ நிறுவன வளாகத்தின் வழியே சில குறிப்பிட்ட வாகன இயக்கத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக என்பதை ஆராய விரும்புகிறேன்.

    ஒருவேளை அப்பாதையில் வாகனங்கள் பயணித்தால் பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார். 

    ×