என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
    • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்களிடம் இருந்து "விசில்" பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது. சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் "விசில்" சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!" என பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் (TNCA) விளக்கம் அளித்தது. அதன்படி, "சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசிலுக்கு தடை என்ற தகவலை மட்டும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்," என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.
    • கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது.

    பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்

    இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

    • வழக்​க​மான நாட்​களில் 20 பூக்​கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்​பனை​யாகும்.
    • தாஜ்ம​கால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்​டர் கிடைத்​துள்​ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 4,000 ஏக்கரில் பசுமைக் குடில்களில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாஜ்மகால் (அடர் சிவப்பு) நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினத்துக்காக, வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ரோஜா ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவிலான போட்டி காரணமாக ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. மேலும், விமானக் கட்டணம் உயர்வால் விவசாயிகள் ஏற்றுமதியை தவிர்த்து, உள்நாட்டு வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றனர்.

    வரும் 14-ம் தேதி காதலர் தினக்கொண்டாட்டத்துக்காக ஓசூர் பகுதி ரோஜாவுக்கான உள்நாட்டுவர்த்தகம் களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல நகரங்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆர்டர் அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினசரி 10 லட்சம் மலர்களை அனுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்து ரோஜா உற்பத்தியாளர் சதீஷ் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

    கார்ப்பரேட் நிறுவனங்கள் ரோஜா பூக்களை கொள்முதல் செய்கின்றனர். தேவை அதிகரித்துள்ள நிலையில், சாகுபடி பரப்பு குறைந்ததால் உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமான நாட்களில் 20 பூக்கள் கொண்ட கட்டு ரூ.150-க்கு விற்பனையாகும்.

    ஆனால், தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். உள்நாட்டு வர்த்தகத்துக்கு தினசரி 2 லட்சம் ரோஜா மலர்களை விற்பனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது தினமும் 10 லட்சம் மலர்கள் அனுப்பி வருகிறோம். குறிப்பாக, தாஜ்மகால் ரோஜாவுக்கு 80 சதவீதம் ஆர்டர் கிடைத்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டில் வரவேற்பும், விலையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன.
    • திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில், 2022-23ஆம் ஆண்டில் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக இழப்பை சந்தித்த மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்றும், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பு மட்டும் ரூ.16,048 கோடி என்றும் பதினாறாம் நிதி ஆணையத்தின் முதன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டுள்ளன என்பதற்கு இது தான் சான்று ஆகும்.

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 102 பொதுத்துறை நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் மட்டும் தான் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 54 நிறுவனங்கள் லாபத்திலும், 35 நிறுவனங்கள் நஷ்டத்திலும் இயங்கி வருகின்றன. இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவதற்கு எதுவும் இல்லை. மது வணிகம் செய்யும் டாஸ்மாக், உழவர்களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறித்து 1000%க்கும் மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சிப்காட் போன்ற நிறுவனங்கள் தான் இலாபத்தில் இயங்கி வருகின்றன. இந்த 54 நிறுவனங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டில் ஈட்டிய இலாபம் வெறும் ரூ.2560 கோடி மட்டும் தான்.

    அதே நேரத்தில் நஷ்டத்தில் இயங்கும் 35 நிறுவனங்கள் அதே ஆண்டில் ஏற்படுத்திய இழப்பு ரூ.16,048 கோடி ஆகும். அந்த ஆண்டில் மேலும் 11 நிறுவனங்களின் இழப்பு குறித்த முழுமையான தகவல்கள் நிதி ஆணையத்திற்கு அளிக்கப்படவில்லை. அந்தத் தொகையும் சேர்ந்திருந்தால், ரூ.18,814 கோடி இழப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இராஜஸ்தான் மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தைத் தமிழ்நாடு பிடித்திருக்கும்.

    2022-23ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியமாக ரூ.26,867 கோடி வழங்கியது. அந்த மானியம் மட்டும் வழங்கப்படவில்லை என்றால், பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.52,915 கோடியாக அதிகரித்திருக்கும். அத்தகைய சூழலில் பொதுத்துறை நிறுவனங்கள் இழப்பில் ரூ.32,430 கோடியுடன் முதலிடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்தை தமிழகம் பிடித்திருக்கும்.

    இழப்பை எதிர்கொண்ட நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது மின்சார வாரியம் ஆகும். 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியம் ரூ.9192 கோடி இழப்பை சந்தித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2021-22ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.9000 கோடி ஆகும். 2022-23ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதன்படி 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு அந்த நிறுவனம் சீரழிந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 கட்டங்களாக இதுவரை ரூ.45,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் திமுக ஆட்சியாளர்களின் ஊழல் தான்.

    இந்தியாவிலேயே அதிக பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். ஒரு மாநிலம் அதன் அனைத்துத் தேவைகளுக்கும் வரி வருவாயை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரம் பறிக்கப்பட்டு விட்ட நிலையில், வரி அல்லாத வருவாயை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.

    மாநிலங்களின் வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதற்கான ஒரே வழி பொதுத்துறை நிறுவனங்களை இலாபத்தில் இயக்குவதும், கனிமவளங்கள் விற்பனையை முறைப்படுத்துவதன் மூலம் அதிக வருவாய் ஈட்டுவது தான். ஆனால், இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஆற்று மணல், கருங்கல் ஜல்லி போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றாலும், அதில் நடைபெறும் வரலாறு காணாத ஊழல்கள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஆட்சியாளர்களின் பைகளுக்கு செல்கின்றன. அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழக அரசின் வரி அல்லாத மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    2025-26ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பு ரூ.4 லட்சத்து, 30,434 கோடி ஆகும். ஆனால், தமிழக அரசின் வரி அல்லாத வருவாய் நடப்பாண்டில் வெறும் ரூ.28,818.58 கோடி மட்டும் தான். இது தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 6.69% மட்டும் தான். ஒரு மாநிலத்தின் நிதிநிலை வலிமையாக இருக்க வேண்டும் என்றால், அதன் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 20% அளவுக்கு வரி அல்லாத வருவாய் இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசின் ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். இதற்கு காரணமான திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டப் போவது உறுதி என்று கூறியுள்ளார்.

    • பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார்.
    • பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார்.

    கோவிலில் உள்ள அவரது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் காணிக்கையாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார்.

    இந்த காசு மாலை நேற்று காலை பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது. 

    • 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார்.

    இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    காலை உணவில் இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவையும், மதியம் கலவை சாதம், ரசம், சாம்பார், கூட்டு, பொரியல். இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவு கலன்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு துறை செயலாளர் சத்தியபிரதா சாகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • கடந்த வார இறுதியில் தங்கம் ஒரு கிராம் ரூ.14,420-க்கும் சவரன் ரூ.1,15,360-க்கும் விற்பனையானது.
    • தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த வார இறுதியில் தங்கம் ஒரு கிராம் ரூ.14,420-க்கும் சவரன் ரூ.1,15,360-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    04-02-2026- ஒரு கிராம் ரூ.320

    • அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது
    • திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் இ.பி.எஸ் கோரிக்கை வைத்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தொடர் கோரிக்கையால் பிரதமர் மோடி ட்ரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்தார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி தொடர் கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால் திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருக்கப்போகின்றனர். மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அடையாறு: சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் 1 முதல் 7 வது அவென்யூ, 1 முதல் 31 வது குறுக்குத் தெரு, கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, CPWD குவார்ட்டர்ஸ், ஆர்பிஐ குவார்ட்டர்ஸ், தாமோதரபுரம், ஊரூர்குப்பம், திருவள்ளுவர் நகர், ஓடைமா நகர், கலாஷேத்ரா TM தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி, கக்கன் காலனி, லட்சுமிபுரம், எம்ஜி சாலை, சிவகாமிபுரம், மாளவியா அவென்யூ, ராதாகிருஷ்ணன் நகர், மருதீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மீகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாட தெரு, கலாசேத்ரா சாலை, வால்மீகி தெரு, வேம்புலியம்மன் டீச்சர் தெரு, சி. காலனி, ஜெயராம் தெரு, எல்பி சாலை, சுப்பிரமணியன் காலனி, எஸ்பிஐ காலனி, கற்பகம் கார்டன், பத்மநாபா நகர் 4 மற்றும் 5 வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்தினம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஸ்வரா நகர், அருணாச்சலபுரம், ராமசாமி கார்டன், பெசன்ட் அவென்யூ, அடையாறு பாலம் சாலை, ஆர்.எஸ்.காம்பவுண்ட்.

    பூந்தமல்லி: சேனீர்குப்பம், கரையாஞ்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணஞ்சாவடி.

    ஐயப்பன்தாங்கல்: அன்னை இந்திரா நகர், புஷ்பா நகர், விஜயலட்சுமி நகர், பாவேந்தர் நகர், ராம்தாஸ் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர்.

    கல்மண்டபம்: கேஎல்எம் சாலை, உசைன் மேஸ்திரி தெரு, ஃபக்கீர் தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, தம்பு லேன், மார்க்கெட் லேன், ஜிஎம் பேட்டை, லோட்டஸ் ராமசாமி தெரு, ஏஜே காலனி 1 முதல் 5வது தெருக்கள், கிரேஸ் கார்டன், மேற்கு கேஎல்எம் சாலை, ஜீவரத்தினம் குவார்ட்டர்ஸ், கிழக்கு திருவால் தெரு, இந்திரா நகர், குவார்ட்டர்ஸ் நகர், பஜார் தெரு, NRT சாலை, சல்மா அபார்ட்மெண்ட்.

    ராயபுரம்: எம்சி ரோடு, கல்லறை சாலை, பிவி கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டி அப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்காரா கார்டன், மீனாட்சி அம்மன் பேட்டை, தோபி கானா தெரு, கல்முந்த நாடார் தெரு, வி. 4வது தெரு, அம்மன் கோவில் தெரு 1 முதல் 8வது தெரு, ராஜகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன், நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    • அதிமுகவை ஊழல் சக்தி என்று விஜய் விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது;

    திமுகவை தீயசக்தி என்று தொடர்ந்து விமர்சித்து வரும் விஜய் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிமுகவை விஜய் நேரடியாக தாக்கி பேசியதால் அதிமுக தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    அவ்வ்கையில் தூத்துக்குடியில் அதிமுக கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "விஜயினுடையது வெற்றிக்கழகம் இல்லை வெற்றுக்கழகம் தான். அதிமுக தான் வெற்றிக்கழகம்

    மெர்சல் பட பிரச்சனைக்காக விஜய் என்னிடம் வந்தார். மெர்சல் பட பிரச்சனைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது. வாழ்நாள் முழுக்க நன்றிக்கடனாக இருப்பேன் என்று கூறிய விஜய் தற்போது அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார்

    • திருமண நிகழ்வில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்திருந்தார்
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.

    உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

    ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோ ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை YSR காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

     

    ×