என் மலர்tooltip icon

    இந்தியா

    • நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
    • நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் நேற்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கர்நாடகாவில் நேற்று இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கர்நாடகா துணை முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே.சிவகுமார் பங்கேற்று பேசினார்.

    அப்போது டி.கே. சிவகுமார் பேசுகையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு மற்ற தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும் டி.கே.சிவகுமார் கூறுகையில், நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. டெல்லி மேலிடம் ஆர்வம் காட்டிய எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை என்னிடம் கேட்டுள்ளனர். ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அனுப்புகிறேன். சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர், சிலர் ஆர்வம் காட்டவில்லை, சிலர் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டெல்லி மேலிடம் ஒரு பதிலைக் கொடுக்கும்.

    எனது பதவிக் காலத்தில் குறைந்தது 100 காங்கிரஸின் அலுவலகங்களையாவது கட்டுவேன். நான் அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது முக்கியமல்ல என்றார்.

    இதனிடையே, தனது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்களிடையே பேசிய டி.கே. சிவகுமார்,

    * நான் இங்கு (கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ) நிரந்தரமாக இருக்க முடியாது. நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.

    * நான் 5.5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன், மார்ச் மாதத்தில், நான் 6 ஆண்டுகளை நிறைவு செய்வேன்.

    * மற்றவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட வேண்டாம், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன். நான் முன்னணியில் இருப்பேன்.

    * நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.

    * கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள்.

    * நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

    * நமக்கு அதிகாரம் கிடைக்கும், கவலைப்படாதீர்கள். ஆனால் அதை அடைய நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

    2020-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றதுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முதலில் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
    • மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.

    செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

    அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள மசோதா மீது முடிவெடுக்கும் உச்சவரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு அளித்தது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,

    * மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    * சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்கக்கூடாது.

    * மசோதா பற்றிய வேறுபாடுகளை தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.

    * மசோதாவிற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது.

    * அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.

    * மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்.

    * ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம்.

    * மத்திய அரசு கூறுவதுபோல் மசோதா தொடர்பாக ஆளுநருக்கு 4-வது வாய்ப்பு இல்லை.

    * மசோதாக்களை முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று அதிரடி தீர்ப்பளித்தது.

    • ஸ்பாட் புக்கிங் பிரிவுக்காக நிலக்கல் பகுதியில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், 3-வது நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்து உள்ளது. தினந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவில் பக்தர்கள் வருவதால் சில கட்டுப்பாடுகளை விதிக்க சபரிமலை தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்துக்கு சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    கூட்டம் காரணமாக நேற்று முன்தினம் 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங் மூலம் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் அவர்கள் மறுநாளில்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

    அதேபோல் ஸ்பாட் புக்கிங் பிரிவுக்காக நிலக்கல் பகுதியில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

    ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடைப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர்.

    இவ்வாறு கோவில் தேவஸ்வம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கோவில் அருகில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய தமிழகத்தில் இருந்து 200 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    • நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.
    • பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    பாட்னா:

    243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டசபையில் 202 இடங்களைப்பெற்று ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கியமாக, பா.ஜ.க. 89, ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடந்தது. இதில் 22 எம்.எல்.சி.க்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சட்டசபை கட்சித்தலைவராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை விஜய் சவுத்ரி மற்றும் உமேஷ் குஷ்வாகா ஆகியோர் முன் மொழிந்தனர். பிஜேந்திர யாதவ் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

    பின்னர் பேசிய நிதிஷ்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைக்குமாறு எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்களை கேட்டுக்கொண்டார்.

    ஐக்கிய ஜனதாதளத்தின் சட்டசபைக்குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

    மாநிலத்தின் முதல்-மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் நேற்று நடந்தது.

    இதில் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார்.

    பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலுக்கான மேலிட பார்வையாளராக உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா நியமிக்கப்பட்டு இருந்தார்.

    மேலும் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் இணை பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத்தும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    பா.ஜ.க. சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாம்ராட் சவுத்ரி, முந்தைய ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
    • வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும்.

    மும்பை:

    குடும்ப நலக்கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், "நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டல் விடுத்தார். எனவே மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நலக்கோர்ட்டில் மனு செய்தேன். ஆனால் எனது மனுவை குடும்ப நலக்கோர்ட்டு நிராகரித்து விட்டது.

    இந்து திருமண சட்டத்தின்படி பிரிந்து செல்வது, சந்தேகம், மிரட்டல், தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற காரணங்களுக்காக விவாகரத்து பெற முடியும். அதன் அடிப்படையில் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், நீதிபதி கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் மனைவியிடம் இருந்து கணவருக்கு அதிரடியாக விவாகரத்து வழங்கியது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    தம்பதியினர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு அல்லது சமரசம் ஏற்பட எந்த சாத்தியமும் இல்லை.

    மனுதாரர் தனக்கு நேர்ந்த பல கொடுமையான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். ஆனால் குடும்நல கோர்ட்டு அவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

    குடும்ப உறவில் ஒரு துணைவரின் தற்கொலை மிரட்டல் என்பது மற்றொருவரை சித்ரவதை செய்வதற்கு சமமாகும். இதை சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

    வார்த்தைகள், சைகைகள் அல்லது அசைவுகள் மூலம் இதுபோன்ற மிரட்டல் மீண்டும் மீண்டும் விடுக்கப்படும்போது, துணைவரால் அமைதியான சூழலில் திருமண உறவில் தொடர முடியாது. அத்தகைய திருமண உறவை தொடர வலியுறுத்துவது, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுமையை அனுபவிக்க கூறுவதுபோல் ஆகிவிடும். எனவே இந்த வழக்கில் கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. மேலும் வழக்கில் இறுதி தீர்வுக்காக அவர் மனைவிக்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும். மேலும் 2 வீடுகளின் உரிமையை அந்த பெண்ணுக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.
    • அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார்.

    'பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை' என்ற சினிமா வரிகள் மகத்துவமானது. அதே தந்தைக்குதான் தெரியும் அந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று.

    ஆமாம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது.

    அதற்காக நாம் பெண் குழந்தைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வெளியிடத்திற்கோ அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பித்தான் ஆக வேண்டும்.

    ஆனால் ஆந்திராவில் ஒரு தாய், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து தனது மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த கொடுமை நடந்துள்ளது. கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக்கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளார்.

    அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. கணவர் இறந்துவிட்டதால் மகள் மவுனிகாவுடன் வசித்து வந்தார். மவுனிகா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.

    நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா பருவவயதை எட்டினார். இதனால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே மகளை அடைத்து வைத்துள்ளார். ஒரு நாள் இல்லை, 2 நாள் இல்லை. 3 ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார் அந்த தாய்.

    ஓய்வூதியம் மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி, வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். மகளை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்தார்.

    அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை அறிந்த அந்தப்பகுதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு நேரில் சென்று கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. அப்போது அதிகாரி ஒருவர் வீட்டை அளக்க சர்வேயர் வந்துள்ளேன் என்று சொன்னதும் பாக்கியலட்சுமி கதவை திறந்துள்ளார். உடனே போலீசாரும், அதிகாரிகளும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் தாயாருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது.
    • 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.

    இந்தநிலையில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசுக்கு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான தமிழக அரசின் பரிந்துரையை தெரிவித்து வந்த கடிதங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    அந்த ஆய்வில் சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன.

    கோவையில் 34 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள சாலைப்போக்குவரத்தின் பயண நேரம் மெட்ரோ ரெயிலின் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது. மேலும் மக்கள்தொகையை கணக்கிடும்போது சென்னை 1- ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை விட 4 லட்சம் பேர் மட்டுமே அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தின் அடிப்படையில் மக்கள் மெட்ரோவுக்கு மாற வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

    மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது. மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் 2011- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே.

    இந்த காரணங்கள் தவிர மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பல கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பல கட்டிடங்கள் மிக விலை உயர்ந்ததாக இருக்கலாம். இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். கோவையின் மக்கள்தொகை 15.84 லட்சம் உள்ளது. எனவே 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23ம் தேதி வரை ஜி20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.

    இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.

    உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

    இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    • 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
    • ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது.

    புதுடெல்லி:

    சிலியின் முன்னாள் அதிபரும், மனித உரிமைகளுக்கான உலகளாவிய வழக்கறிஞருமான மிச்செல் பச்லெட்டுக்கு அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார் என டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.

    மனித உரிமை, அமைதி, சமத்துவம் ஆகிய துறைகளில் முன்னாள் சிலி அதிபர் மைக்கேல் பேச்லெட் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபையின் முதல் பெண் இயக்குநர், மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபையின் உயர் தூதர், சிலி நாட்டின் அதிபராக 2 முறை பணியாற்றியது போன்ற பணிகளுக்காகவும் அவர் இந்த விருதைப் பெறுகிறார்.

    ரூ.25 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டது இந்த விருது. 1986-ம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்திரா காந்தி விருதை மிச்செல் பச்லெட்டுக்கு வழங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வெரோனிகா மைக்கேல் பேச்லெட் ஜெரியா என்ற முழு பெயர் கொண்ட பேச்லெட் அமைதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பிற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில், அவர் ஐ.நா.பெண்களின் நிறுவன இயக்குநராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், மற்றும் சிலியின் முதல் பெண் அதிபராக இரு முறை பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுமி கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவில் உள்ள சோரோட் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பேபி(வயது68) மற்றும் அவரது பேத்தியான 9 வயது சிறுமி த்ரிஷானா ஆகிய இருவரின் மீதும் அந்த வழியாக அதிவேகமாக சென்ற கார் மோதியது.

    இதில் மூதாட்டி பேபி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த கார் 10 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பான வழக்கில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எந்த காப்பீட்டு தொகையும் கிடைக்கவில்லை.

    கார் மோதியதில் காயமடைந்த சிறுமி தற்போது வரை கோமா நிலையிலேயே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆகவே இந்த வழக்கை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

    அந்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தேசிய காப்பீட்டு நிறுவனம் ரூ1.15கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை சிறுமியின் வங்கி கணக்கில் செலுத்தவும், அதில் ரூ.25 லட்சத்தை அவளது மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக எடுக்கலாம் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்.
    • விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலையிலும், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். அவரை கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் வைத்து அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அன்மோல் பிஷ்னோயை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது.

    அன்மோல் பிஷ்னோய் மற்றும் இந்தியாவால் தேடப்படும் 2 குற்றவாளிகள் உள்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 200 இந்தியர்களுடன் விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. இவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.

    அந்த விமானம் இன்று டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

    பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அன்மோல் பிஷ்னோயை விசாரிக்க 15 நாட்கள் காவல் வழங்கும்படி என்ஐஏ கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில், அன்மோல் பிஷ்னோவுக்கு 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    • அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர்.
    • ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.

    இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×