என் மலர்
இந்தியா
- திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பத்மகுமார் 2 முறை ஆஜரானார்.
- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
- ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
- காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.
ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.
சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
- ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கின்றனர்.
2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
டாப் 10 நகரங்கள் பட்டியலில், 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 27,000 பேர் வசிக்கும் மும்பை நகரம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் காங்கோவின் Kasai-Oriental, Beni, பாகிஸ்தான் தலைநகர் கராச்சி, சூரத், ஹாங்காங்கின் Tamar, காங்கோவின் Kinshasa, சோமாலியா தலைநகர் Muqdisho அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேநேரம் இந்திய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட 10 நகரங்களின் பட்டியலில் முறையே, மும்பை, சூரத், அகமதாபாத், பெங்களூரு, கல்யாண், அலிகார், பிரயாக்ராஜ், ஸ்ரீநகர், புது டெல்லி, கான்பூர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 146 கோடி பேருடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
- இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள், மற்றும் வியாபாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று கைது செய்துள்ளது.
புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றத்தின் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவின் பேரில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையால் 4 பேரும் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதில் மருத்துவர்கள் 3 பேரை ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து வைத்திருந்த நிலையில் அவர்கள் என்ஐஏ காவலுக்கு மாற்றப்பட்டனர்.
முன்னதாக டெல்லியில் வெடித்த காரின் உரிமையாளர் அமீர் ரஷித் அலி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கிய ஜஸிர் பிலால் என்பவர்கள் ஏற்கெனவே என்ஐஏவால் கைதுசெய்யப்பட்டனர். V
- இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
- 2008ல் அகமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள், மற்றும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அல் பலாஹ் பல்கலைக்கழக குழும தலைவர் ஜாவத் அகமது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 13 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
யுஜிசி அங்கீகாரத்தை பொய்யாக கோரியதாகவும், பல்கலைக்கழக அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த சூழலில் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பயங்கரவாதி பட்டம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
2008ல் அகமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி மிர்சா ஷதாப் பெய்க், அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் 2007ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.
உத்தரபிரதேசத்தில் அசாம்ஹர் மாவட்டம் பரிடி கிராமத்தை சேர்ந்த இவர் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கியவர் என்பதும் 2008ஆம் ஆண்டு முதல் பல சதித் திட்டங்களைத் தீட்டி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கிய மிர்சா ஷதாப் பெய்க், தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை உருவாக்க ஐஎம் பயங்கரவாதிகள் ரியாஸ் மற்றும் யாஸின் பட்கலுக்கு பெய்க் உதவியதும், புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
டெல்லியில் ஜாகிர் நகரில் பெய்க் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அடையாள அட்டைகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பட்லா ஹவுசில் நடத்தப்பட்ட என்கவுன்டரின் போது, 2008 தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மிர்சா ஷதாப் பெய்க் மற்றும் முகமது காலித் ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த சூழலில் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள பெய்க் பயின்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு மருத்துவர் உமர் தற்போது டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது சம்பவத்தின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.
- இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் இன்று மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்சி மாநாடு கடைசியாக 2023-ல் நடைபெற்றது.
- சிஎஸ்சி மாநாட்டில் வங்கதேச என்எஸ்ஏ கலீலுர் ரஹ்மான் கலந்துகொண்டார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் 7வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அண்டை நாடுகளான மாலத்தீவு, மொரிஷியஸ், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்துகொண்டன.
இந்த மாநாட்டில் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், "இந்தியப் பெருங்கடல் நம்மால் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாரம்பரியமாகும். கடல்சார் புவியியலால் இணைக்கப்பட்ட நாம்தான் அதன் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். அது நம் கடமையாகும்" எனப் பேசினார்.
இந்தியாவின் ஒன்பது எல்லை நாடுகளைத் தாண்டி இப்பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சீஷெல்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் பங்கேற்றன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், உறுப்பு நாடுகளிடையே கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் சிஸ்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் 6வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு கடந்த 2023 டிசம்பரில் மொரிசியஸில் நடைபெற்றது. இந்நிலையில் இம்முறை இந்தியாவில் நடைபெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடுபோல துணை பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இம்மாநாடு கடந்தாண்டு காணொலி வாயிலாக நடைபெற்றது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ள நிலையில், வங்கசேத பாதுகாப்பு ஆலோசகர் கலீலுர் ரஹ்மான் இந்தியா வந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றது கவனம் ஈர்த்துள்ளது. முன்னதாக நேற்று அஜித் தோவலும், ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- ரோமன் பாக் பிராண்ட் கைக்கடிகாரத்தை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
- 43 மி.மீ. அளவுள்ள துருப்பிடிக்காத எக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே தான் அணியும் ஆடையின் மூலமாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆவார். குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின் போது அவர் அணியும் ஆடை அனைவரையும் கவரும். மேலும் அதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகும்.
அந்த வகையில் பிரதமர் மோடி தற்போது அணிந்துள்ள கைக்கடிகாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. நம்நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூறும் வகையில் அவரது கைக்கடிகாரம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அதனை போற்றும் வகையில் 1947-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு அவரது கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் நடுவே இந்தியாவின் சுதந்திர பயணத்தை குறிக்கும் மற்றும் நாட்டின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான புலியின் உருவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை கொண்ட அந்த ரோமன் பாக் பிராண்ட் கைக்கடிகாரத்தை ஜெய்ப்பூரை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இது, 43 மி.மீ. அளவுள்ள துருப்பிடிக்காத எக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு ரூபாய் நாணயம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அச்சிடப்பட்ட கடைசி நாணயம் என்பதால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கைக்கடிகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
- விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
பீகார் மாநில சட்டசபை தோ்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பா.ஜ.க. 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ் தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டீரிய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
ஐக்கிய ஜனதா தளத்தை விட பா.ஜ.க. அதிக தொகுதி களில் வென்றாலும் நிதிஷ் குமாா் முதல்-மந்திரியாகத் தொடா்வார் என்று கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.
இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடை பெற்றது. கட்சியின் சட்ட சபை குழு தலைவராக நிதிஷ் குமாா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
பின்னா், தேசிய ஜன நாயக கூட்டணி புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெற்றது. அதில், பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அதன் பிறகு கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று கவர்னர் ஆரிப் முகமது கானை சந்தித்த நிதிஷ் குமாா், தனது ராஜினாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க் களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா்.
அதன்படி, நடப்பு சட்டசபை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதிஷ் குமாருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தாா்.
இதைத்தொடர்ந்து பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
முதலமைச்சராக 10-வது தடவையாக 74 வயது நிதிஷ்குமார் பதவி ஏற்றார். விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனர்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய், இதன் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
அதன்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது.
கடந்த செப்டம்பர் 11-ந்தேதி விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில்,
* ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதை சட்டப்பேரவைக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
* ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தால் அதை கட்டாயமாக சட்டமன்றத்திற்கு தகுந்த காரணங்களை சொல்லி திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் ஒரு மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.
* ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை எங்களால் ஏற்க முடியாது.
* தமிழ்நாடு வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த அத்தகைய உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
* ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
* ஆளுநருக்கு மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியாது வேண்டுமென்றால் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தல் வேண்டுமானால் கொடுக்க முடியும்.
* ஒரு நியாயமான காலத்திற்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள தான் முடியும் என்று தீர்ப்பளித்தது.
இதன் மூலம் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தி இருக்கிறது.
- நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
- நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் நேற்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் கர்நாடகாவில் நேற்று இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கர்நாடகா துணை முதல்-மந்திரியும், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே.சிவகுமார் பங்கேற்று பேசினார்.
அப்போது டி.கே. சிவகுமார் பேசுகையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு மற்ற தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் டி.கே.சிவகுமார் கூறுகையில், நான் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. டெல்லி மேலிடம் ஆர்வம் காட்டிய எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை என்னிடம் கேட்டுள்ளனர். ஆர்வம் காட்டாத எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை அனுப்புகிறேன். சிலர் ஆர்வம் காட்டியுள்ளனர், சிலர் ஆர்வம் காட்டவில்லை, சிலர் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டெல்லி மேலிடம் ஒரு பதிலைக் கொடுக்கும்.
எனது பதவிக் காலத்தில் குறைந்தது 100 காங்கிரஸின் அலுவலகங்களையாவது கட்டுவேன். நான் அங்கே இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அது முக்கியமல்ல என்றார்.
இதனிடையே, தனது பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்களிடையே பேசிய டி.கே. சிவகுமார்,
* நான் இங்கு (கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ) நிரந்தரமாக இருக்க முடியாது. நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.
* நான் 5.5 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன், மார்ச் மாதத்தில், நான் 6 ஆண்டுகளை நிறைவு செய்வேன்.
* மற்றவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும், ஆனால் கவலைப்பட வேண்டாம், நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன். நான் முன்னணியில் இருப்பேன்.
* நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல.
* கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையை இழக்காதீர்கள்.
* நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
* நமக்கு அதிகாரம் கிடைக்கும், கவலைப்படாதீர்கள். ஆனால் அதை அடைய நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.
2020-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றதுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முதலில் திட்டமிட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






